நீல.பத்மநாபனோடு ஒரு நேர்காணல் – பகுதி 4

கமல் ஹாசன்: திருவனந்தபுரம் நகரத்தைப் பற்றிய பள்ளிகொண்டபுரம் முக்கியமான பதிவு. நீங்க நடந்து போன பாதையைப் பற்றியது ..

நீல.பத்மநாபன்: இப்படி அந்த மூலை முடுக்குகள் அங்கே இங்கேல்லாம் மனதில் நடந்து இந்த ஊரைப் பற்றிப் பதிவு செய்யணும்னு நினைச்சேன்.. இன்னொண்ணு காலப் பிரக்ஞை. …. திணை கோட்பாடு எல்லாம் அப்புறம் தான் படிக்கறேன்.. தொடங்கின காலத்திலே இருந்தே காலமும் வெளியும் ரொம்பவும் உறுத்தக்க் கூட்டிய விஷயம்… இப்பக்கூட நினைக்கிறேன்.. இப்ப பேசுறபோது காலம் ஆகிக்கிட்டு இருக்கு..ஒரு கதாபாத்திரம் வந்தா திடீர்னு பத்து இருபது வருஷம் கழித்துக் காலத்தில் போனது எல்லாம் எனக்கு கிடையாது. ஒவ்வொரு கணமும் முக்கியம்.. என் முதல் கதையில் இருந்து இப்போ. இலையுதிர் காலம் வரை எது படித்தாலும், காலம் – வெளி .. time and space உணர்வு இருந்திட்டு தான் இருக்கும்.. இது உள்மனதில் எப்பவும் இருக்கும்.. நடக்கக் கூடிய காலம்.. எங்கே நடக்குதுங்கறது .. படிக்கற உங்களுக்கு தெரியலேன்னாலும் என்னை அப்படியே உறுத்தும் அதே பிரக்ஞையோடு நான் எழுதிக்கிட்டே போவேன்.. அப்படித்தான் பள்ளிகொண்டபுரம்.. நாற்பத்தெட்டு மணி நேரத்தில் நடக்கிறது.

இரா.முருகன்: நாற்பத்தெட்டு மணி நேரம்.. அனந்தன் நாயரோட ஐம்பதாவது பிறந்த நாள்லே ஆரம்பமாகிற நாவல்..

கமல்: அதைப் பற்றி நானும் இவரும் (இரா.மு) காலையிலே பேசிக்கிட்டு இருந்தோம்.. அதிலே இன்னொன்னு.. மாக்ஸ் ஒபலஸ்னு (Max Ophüls) ஒரு ஜெர்மனி நாட்டு சினிமா இயக்குனர். திரைப்படத்தை முற்றாக எழுதி இயக்குகிறவர் அவர். வழக்கமாக திரைப்பட்ம் எடுக்கும்போது, காட்சிப் படுத்துவதாக வரும் shot.. ஷாட்டோட நீளத்தை வெட்டிக் குறுக்கி நேரத்தை செதுக்கிடுவோம் இல்லையா? மாக்ஸ் ஒபல்ஸ் அதெல்லாம் பண்ணவே மாட்டார் ஒரே ஷாட்லே காட்சி தொடர்ந்து காலத்திலே நீண்டு போகும்…அவரோட பாதிப்பு எனக்கு உண்டு குணாவிலே எல்லாம் ..நீளமா நீட்டி நீட்டி ஷாட் வரும். என்ன பார்க்கறோமோ அது தான் காலம்.. ரௌண்ட்னு ஒரு படம்.. இதே மாதிரி.. சுத்திச் சுத்தி வந்துட்டு இருக்கும்.. (இப்படி படத்தை உருவாக்கறது).அது ரொம்ப கஷ்டம்

நீல: ஒரு நாள் முடிச்சு.. கோவிலுக்குப் போய்ட்டு வந்து.. இறக்கறது.. அந்தக் கால கட்டத்தில் இருக்கப்பட்ட, மனதில் வரும் பழைய காலத்தில் இருந்து சந்திக்க கூடிய ஆட்கள்..இதெல்லாம் அதிலே பதிவு பண்ணியிருக்கும்… நாவலின் முதல் பகுதியில் அனந்தன் நாயர் வாழ்ந்த வாழ்க்கை சொல்லப்படுகிறது. கிடத்தட்ட அந்த காலகட்டத்திலே பள்ளிக்கூடத்தில் என் கூட படிச்ச பையன் ஒருவன் இருந்தான்.. அதை நான் இப்ப சொல்லணும்.. நாயர் பையன்.. அவன் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. அவன் அப்பா டிரைவராக இருந்தார். ஆஜானுபாகு. தண்ணி எல்லாம் போடுவார்.. ஒரு நாளக்கு அவரும் பிள்ளைகளும் வீட்டுக்கு வந்தபோது அந்த அம்மா, அவரோட் மனைவி வீட்டில் இல்லை. கேட்டபோது யார் கூடவோ போய்ட்டாங்கன்னு தெரிஞ்சது. அது அன்னிக்கு ஒரு பெரிய பேச்சு.. நான் பள்ளி மாணவன். ஐயோ கிருஷ்னன் குட்டியோட அம்மா போய்ட்டா.. பாட்டிதான் இருக்கா.. வயசான பாட்டி.. இப்படி எல்லோரும் சொன்னாங்க. அவனையும் அவன் சகோதரியையும் வள்ர்த்தியது அந்தப் பாட்டி. அது என் மனசுக்குல்லே எங்கேயோ கிடந்திருக்கு.. இந்த நாவல் எழுதினது எழுபதுகளிலே.. அதுக்கு முப்பது நாற்பது வருஷம் முந்திய சம்பவங்கள் இதெல்லாம். எழுதி எழுதி வந்தபோது நான் நினைச்சேன்.. இது எங்கே இருந்து வந்தது… இந்த மாதிரி மனைவி விட்டுட்டுப் போனது.. இந்த மன தத்தளிப்பு, தர்ம சங்கடம் எல்லாம் மன அவசமாக வந்தது.. ஏன்னா அந்தப் பையனோட மனம் எனக்கு தெரியும்.. கடைசியிலே அந்த அம்மா கூட சேர்ந்துடுவான்.. பொண்ணு சேர மாட்டா..நாங்க ஆச்சரியப் பட்டோம்.. என்னது இது.. நோய்ப் படுக்கையில் கிடந்த அப்பாவை விட்டுட்டு இப்படி போய் சேர்ந்துட்டானே.. அதை எல்லாம் துருவித்தான் காரணங்கள் இங்கே நாவலில் வருது ..இதெல்லாம் நினைச்சுப் பார்க்கும்போது வர்ற விஷயம்.. எழுதும்போது அதெல்லாம் வராது.. எந்தவிதமான முன்னேற்பாடும் கிடையாது.. நாவல் எழுதி எழுதி வரும்போது கொஞ்சம் ஏக தேசமா மனதில் ஒரு scketch இருக்குமே தவிர முழுக்க முழுக்க இவ்வளவுதான்னு போட்டுட்டு எழுத மாட்டேன்.. அப்படி செஞ்சா எனக்கும் சுவாரசியம் இல்லே. படிக்கற உங்களுக்கும் இருக்காது..

கமல்: ஒரு கேள்வி அதாவது இப்போ writing courses.. எழுத்துக்கான பயிற்சி அமெரிக்காவிலே. முழுத் திட்டம்னு அதை சொல்றங்க எங்கே போகிறாய் எதுக்காக போகிறாய் எங்கே தொடக்கம், எது முடிவு.. நடுவிலே என்னென்ன வரும் இதெல்லாம் வச்சுக்க்கணும்கிறாங்க.. எனக்கு ஒண்ணு தெரியுது கவிதைல்லாம் அப்படி எழுதினா வரவே வராது போகிற போக்குலே எழுதணும்.

நீல: வராது அது மனித மனம் சொல்லககூடியது. இப்படித்தான் நடக்கும்னு யாரும் ஆர்டர் பண்ண முடியாது ஆசைப்படலாம். நடக்கணும்கிறது அப்படி அந்தப் பக்கம் போனால், நடக்கறது இப்படி இந்தப் பக்கம் போயிடுவோம்.

கமல் நீங்க உங்க நாவல்லே அது போக்கிலே போய்ட்டே இருப்பீங்க இல்லியா

நீல நான் எப்பவுமே அப்படித் தான்.. கதாபாத்திரங்களில் கூடு பாய்தல்

கம்ல சாவா வாழ்வா முடிவு எல்லாம் நீங்க பண்றது இல்லே?

நீல எல்லாம் கூடு விட்டுப் கூடு பாயறதுதான்..என் மனைவி இப்படி போனா எப்படி இருக்கும்.. திரவியம் காரக்டர்லேயும் அதேதான். என் அக்கா தங்கைகு இது போல அவஸ்தை வந்தால் எபபடி இருக்கும்.. இது எல்லாம் நான் அனுபவிக்கறேன்

கமல் நடிப்பும் அதே தானே.. அது என் கதை இல்லே. எனக்கு அவனைப் பார்த்து கேலியாகவும் இருக்கலாம்.. ஆனா நடிக்கும்போது அவனாக மாறும்போது கூடு விட்டுக் கூடு பாயறோம்

நீல:அதுனாலே தான் அந்த தத்ரூபம்கறது .. எனக்கு சில வேடிக்கையான சம்பவங்கள் எல்லாம் உண்டு. உறவுகள் பத்தி பேசும்போது சொல்றேன்

கமல்: நான் சுந்தர ராமசாமி கிட்டே கேட்கும்போது ’நான் நிறைய திட்டம் போடுவேன்.. யார் எப்படி இருக்காங்க.. தாடி வச்சிருப்பாங்களா தாடி என்ன நிறம் நீளம் என்ன உயரம் என்ன.. சாக்கடை எங்கே இருக்கு. பக்கத்து வீடு எதிர் வீடு எல்லாம் எனக்கு தெரியணும் அந்த திட்டம் போட்டுட்டு அதுக்கு அப்புறம் வேறே திட்டங்கள் எல்லாம் கிடையாது’ன்னு சொன்னார் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.. அந்தத் திட்டம் வரைக்கும் கேட்கும்போது மேலைக் கல்வி western teaching-ல் இருக்கற மூன்றங்கக் கட்டுமான்ம் – three acts structure நினைவு வந்தது ..அரிஸ்டாடில் சொன்னது அதுதான் அப்படி இருக்கணும்கிறாங்க எனக்கு அதுலே கொஞ்சம் ஒப்புதல் இல்லே. இப்ப நீங்க சொன்னது நம்பிக்கையா இருக்கு

நீல: எனக்கும் உங்க கருத்துதான். எழுத்தாளன் முழுத் திட்டம் தீட்டி எழுதறது ஒரு பத்திரிகையாளர் தன்மை. அப்படி எழுதினால், பத்திரிகை எழுத்து தான் வரும். creative writing வராது. படைப்பிலக்கியம்.. ஆக்கபூர்வமான கற்பனை வளத்தோடு எழுதும்போது கற்பனை தான் அங்கே பிரதானம். இயல்பியல் யதார்த்த வாழ்க்கையைத் தான் நீங்க எழுதறீங்க. வாழ்க்கையாக இருந்தாலும் கூட அது இப்படி நடக்கணும்னு கேட்டாலும் கூட உங்க கற்பனையில் நடக்கப்பட்ட மாதிரி தான் நீங்க அதை கையாளறீங்க. அங்கே தான் உங்க craft.. கலைத்தன்மை வருது எல்லாமே முன்கூட்டியே திட்டம் போட்டு எழுதியாச்சுன்னா அது பாட்டுக்கு சிவனேன்னு போயிட்டு இருக்கும்..

கமல் படிக்கற்வனுக்கும் எழுதறவனுக்கும் (அணுகுமுறை) வித்யாசம இருக்கு படிக்கறவங்க எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி தானே நாம போய்ட்டு இருக்கோம்

நீல: எனக்கே சுவாரசியம் இல்லாம இருந்தால் வாசகனுக்கு எப்படி? இன்னும் மோசமாக இருக்கும்

இரா:ஒரு நாவலை நாம் எழுதும்போது ஒரு கள ஆய்வோ மற்ற வகை ஆய்வோ செய்து அடிப்படையான தகல்வகளை திரட்டின பிறகு தானே எழுதப் போறோம் அந்த மாதிரித்தானே இருக்கும்? நீங்க சொல்றது நாவல் எந்தப் போக்குலே போகுதோ … அது கற்பனையைப் பொறுத்தது. நான் அதைக் கேட்கலே. அந்த நாவல்லே வர்ற பாத்திரங்களுக்கான ஆய்வு .. அவர்களோட மொழிநடை …அவர்கள் கலாசாரம் பண்பாடு .. பின்னணி .. இதை எல்லாத்தையும் பற்றி நாம் ஆராய்நதிருப்போம் இல்லையா?

கமல் அந்த ஆராய்ச்சி எப்படி இருக்கும்?

நீல அது உங்க பாணி என்றால் அதை நான் எதிர்க்கலே

இரா இது என்னோட பாணின்னு சொல்லவில்லை.

நீல நீங்க சொல்லக்கூடிய பாணி. அதுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கலே எல்லா மனிதனுக்கு உள்ளும் படிச்சவன் படிக்காதவன் சாதா கூலி ஆள் இப்படி எல்லோருக்கும் அவங்க அவங்க மனசுக்குள்ளே மகோன்னதமான உலகங்கள் இயங்கிட்டு இருக்கு. அதை எழுதவே ஒரு ஆயுசு போதாது சார்.

இரா இதைப் பற்றி..இப்பத்தான் நாங்க வரும்போது பேசிட்டு வந்தோம் மனசுக்குள்ளே உலகங்கள்.. எழுத ஆயுசு போதாது.. இதே தான்.

கமல் பிரமாதமான கருத்து.. வெவ்வேறு எழுத்தாளர் கருத்து.. உங்க கூட ஒத்துப் போறது மட்டுமில்லே என்னோட கருத்தும் தான். அந்த நம்பிக்கையை ஊட்டிக் கொள்ளத்தான் உங்க கூட பேசறேன்.. சுயநலமான யாத்திரை இதுன்னு வச்சுக்குங்க .. அப்புறம் இந்த மேதைமை .. இது எல்லோருக்கும் இருக்கு ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி எழுதுவார்

நீல அதேதான். சிலர் கள ஆய்வுல்லாம் செய்வாங்க. பார்த்தா அவங்களும் அந்த எழுத்துப் பாணிதான் அங்கே கொண்டு போய் புகுத்தி இருப்பாங்க கதையின் களம் ..atmosphere மாறினால் மட்டும் விஷயமில்லை

கமல் கிட்டத்தட்ட சுந்தர ராமசாமி சொன்னதும் அப்படித்தான் .. ’நிறைய இருக்குங்க என் வாழ்க்கை அனுபவமே நிறைய இருக்குங்க.. எழுதி மாளாது’ம்பாரு இந்த மாளாதுங்கறது என்னன்னா, நேரம் இல்லேஙகறாரு

இரா: என்னப் ப்த்தியே நான் நிறைய எழுத வேண்டி இருக்கு என்னை சார்ந்தவர்களைப் பத்தியும் எழுத் வேண்டியிருக்கு

கமல்: உஙக்ளைப் பத்தி நீங்க சொல்றது தான் உங்க நட்பும் உங்க உரையாடலும் உங்க எழுத்தும். அதையும் சொல்லி முடிக்கப் போறதில்லே டைம் இல்லே

நீல: உங்களைப் பத்தி சொல்றதுன்னா … நீஙக் ஒரு சமூக ஜீவி தான் அது உங்களை பத்தி இல்லே சமூகத்தைப் பற்றித்தான் உங்க எழுத்தில் சொல்றீங்க. நீங்க எங்கே இருந்து வந்தாலும் உங்க உணர்வுகளை சொல்லும் போது என் உணர்வுகளை சொல்றீங்க. அவர் உணர்வுகளை சொல்றீங்க… அப்படித்தான்.. உறவுகள் நாவலை படிச்சு நிறையப் பேர் சொன்னாங்க எங்க அப்பா ஆஸ்பத்திரியிலே கிடந்தா எப்படி இருப்பாங்க அதே உணர்வுகளைத்தான் சொல்றீங்கன்னு.. எங்க அப்பா கிடந்தது எல்லாம் எனக்கு அப்படியே ஞாபக்ம் வருதும்பாங்க நான், எங்க அப்பா ஆஸ்பத்திரியில் கிடக்கும்போது பக்கத்திலே இருந்த எனக்கு ஏற்ப்ட்ட உணர்வுகளைத்தான் பதிவு பண்ணினேன்.. இந்த உணர்வு தான் எல்லோருக்கும் .. அப்பா மகனுக்குள் இருக்கக் கூடிய உறவை வேறே மொழியில் சொன்னாலும், அவங்களுக்கும் அப்படித்தான் தோணுது.. இது வந்து பொதுவான, அடிப்படை உணர்வுகள் ..

கமல் என்ன கோணத்தில் சொல்லணும்..angle decide பண்றதுங்கறது.. சினிமாவைப் பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு பார்வையாளரும் ஒரு கோணத்தைத் தீர்மானம் செஞ்சுடுவாங்க.. நான் இந்தக் கோணத்திலே வச்சாக்கூட மனசுக்குள்ளே அதை எதிர்க் கோணத்துலே இருந்து பார்க்கிறதுக்கான உத்தி அவங்க கிட்டே இருக்கு

இரா:உங்க point of view பார்வையாளனுடைய நோக்கு ஆக இருக்காது அப்படியா?

கமல்:என் பாயிண்ட் ஆப் வியூ எவ்வளவுதான் அழுத்தி நான் வச்சுட்டு இருந்தாலும் .. எதிர்க் கோணத்திலே .. மனசுக்குள்ளே இந்தப் பக்கத்துலே ஜன்னல் வழியா அவன் பாத்துட்டு இருப்பான். அதை பார்க்கிற தன்மை அவனுக்கு உண்டு அதனாலே தான் நமக்கு … அது ஏன்.அப்பிடி ஆச்சு அது பொய்யா இருக்கேன்னு நாம் கேட்கற கேள்வி கூட அதுனாலே தான்.

இரா. நேற்று திருவனந்தபுரம் புறப்பட்ட போது எங்க நண்பர் கிரேசி மோகன், ’நீல பத்மனாபனோடு நீள பத்மனாபனையும் பார்த்துட்டு வாங்க’ன்னார். சயனம் கொண்டு பாம்பணையில் கிடக்கும் நீள பத்மநாப சுவாமி.. அவரைப் பார்க்கக் .. கோவிலுக்குப் போயிருந்தேன்.. அங்கே, பள்ளிகொண்டபுரம் நாவலில் நீங்க சொல்ற மோகினி சிற்பம் எனக்கு பார்க்க கிடைக்கலே

நீல:இருக்கே. என்னோட வந்தா காணிச்சுத் தருவேன்.

இரா. நீங்க பள்ளிகொண்டபுரத்தில் ஊட்டுப்புரையைப் பற்றிச் சொல்லியிருக்கீங்க. அதிலே ஆதிசேஷய்யர் மகள் தான் கார்த்தியாயினின்னு சொல்லியிருக்கீர்கள். நம்பூத்ரிகள் வேறு ஜாதிப் பெண்களோடு தொடர்பு (பந்தம் புலர்த்துதல்) வைத்துக்கொண்டதாகத் தெரியும். தமிழ்நாட்டிலிருந்து மலையாள பூமி போன தமிழ்ப் பிராமணர்கள் (பட்டர்மார்) கூட பந்தம் புலர்த்தியிருக்காங்களா?

நீல: ஆமா இங்கே நிறைய இருந்ததே அது… அச்சிமார் உண்டு.. திருவனந்தபுரத்திலே இருந்தாங்க ’எண்டெ அச்சன் சாமியாணு அம்ம நாயராணு’ என்று சொல்லக் கூடிய எழுத்தாள நண்பர்கள் இருந்தாங்க.

கமல்:ஆமா மெட்றாஸ் வெஸ்டிஜெஸ்லேயே அதைப் பற்றி குறிப்புகள் உண்டு.

நீல அது வந்து எனக்கு ஒரு குறைவா தெரியலே. free sex வேணும்னு நான் சொல்லலே உலக வாழ்க்கையில் இந்த மாதிரி மன விழைவு இருக்கு பாருங்க.. சில தேவைகள் வருது. சிவசு எழுதியிருக்கார் இதைப் பற்றி.. பள்ளிகொண்டபுரம், அப்புறம்.. ‘இன்னொரு நாள்’னு ச்மீபத்தில் எழுதின கதை .. மனித மனத்தின் செயல்பாடு.. இந்த மாதிரி பல விதமாகவும் இருக்கலாம்.. நாம இதை காட்டுறது பூசி மெழுகித்தான்…idealism and realism .. ஆதர்சம், ஏக பத்னி விரதனா இருக்கணும் .. பொய் பேசக் கூடாது .. மெய் தான் பேசணும்.. சங்க இலக்கியத்திலே பாருங்க..பரத்தையை நாடிப் போகாமல் இருந்திருக்கானா? உண்மையான இலக்கியம் இதையும் சொல்றது தான்.. தாஸ்தாவெஸ்கி இதெல்லாம் எழுதியிருக்கார்.. இங்கே எழுத்தாளன் எழுதினால் அந்த எழுத்தை பாவமா நினைக்கறாங்க..எழுதறவனை பாவ ஜென்மமாக பார்க்கிறாங்க.. அசல் வாழ்க்கையிலே இது மாதிரி விஷயங்கள். அதுக்கெல்லாம் பல காரணங்கள் இருக்கலாம்.. இதுக்கெல்லாம் ஒவ்வொரு காரணமாக பார்க்கப் போகலாம்.. இதுலே விக்ரமன் தம்பியை நாடி கார்த்தியாயின் போறா என்றால், அனந்தன் நாயர் தான் காரணம்.. அப்படி பல பேர் சொல்றாங்க.. பல சூழ்நிலை வருது.. ஆணும் பெண்ணும் இந்த மாதிரி.. It is a fact

இரா: அனந்தன் நாயருக்குள்ளே தோற்கணும்னு வெறி.. ஒரு defeatism இருக்குன்னு நான் நினைக்கறேன்.. அவர் முதல் தடவையாக கார்த்தியாயினியைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கும்போது, இவ்வளவு பேரழகா.. நான் இதுக்கு தகுதி உடையவனான்னு யோசிக்க ஆரம்பிச்சுடறார்,, இந்தப் பெண்ணை நான் இழக்கணும்.. அந்தத் துயரத்திலும் பிரிவிலும் ஆற்றாமையிலும் தான் நம் வாழ்க்கையின் நியாயப் படுத்துத்லே இருக்க்குன்னு அவர் நினைக்கற மாதிரி எனக்கு தோண்றது

நீல: இதையும் சொல்லியிருக்காங்க.. வாழ்க்கையிலே இந்த சூழ்நிலை எப்படி வந்தது..வாழ்க்கையில் அவருக்கு வந்த கஷ்டங்கள் …நோய்க் கொடுமை.. வேலை விஷயங்கள் basic ஆக அவருடைய mental moulding .. மன வார்ப்பு எப்படி இருந்தது..அவருக்கு இந்த அம்மாவை பார்க்கும்போது முதல் ராத்திரியிலேயே இப்படி நீங்க சொன்னமாதிரி இருக்கறதா சில குறிப்புகள் இருக்கு .. நான் என்ன சொல்ல வரேன்னா இதெல்லாம் சாதாரண வாழ்க்கையிலே சர்வ சாதாரணமான விஷயங்கள்

கமல்:எல்லா கலாசாரத்திலேயும் அப்படித்தான். இப்ப நீங்க தாஸ்தாவ்ஸ்கின்னு சொன்னதினாலே கேக்கறேன்.. உங்களுக்கு அவரோட எழுத்தின் பாதிப்பு எப்படியானது?

நீல: என் வாசிப்பை பத்தி சொல்றேன்.. எனக்கு ரொம்ப இளமையான் வயசிலேயே திருவனந்தபுரம் பப்ளிக் லைபிரரி பரிச்சயம் ஆனது.. அங்கே ஏகப்பட்ட புத்தகம் புத்தகம் மேலே காதல்.. புரிஞ்சாலும் புரியாவிட்டாலும் எடுத்துட்டு வந்து ..தமிழ், மலையாளம், ஆங்கிலம் .கூட்டி வாசிக்கத்தன தெரியும். புரிஞ்சாலும் புரியாட்டாலும் cover to cover படிச்சுடுவேன்

கமல்: அங்கங்கே skip பண்ணிட்டு வந்து

நீல: ஆமா

கமல்:இது முக்கியமான செய்தி. ஆங்கிலம் நான் படிச்சது அப்படித்தான். சில வார்த்தைகளை பிற்பாடு துஷ்பிரயோகம் கூட செய்திருக்கேன் அப்போ.. யாராவது சொல்வாங்க. ’அதை அந்த மாதிரி சொல்லாதே’.. ’நான் புத்தகத்திலே படிச்சேன்’னு பதில் சொல்வேன்.. அவங்க சொல்வாங்க – ’வார்த்தை சரிதான்.. ஆனா இங்கே அது வராது’ . இப்படி.

நீல:இப்படி நிறைய படிச்சேன். அப்படித்தான் கநாசுவோட பொய்த்தேவு… சாகுந்தலம் தமிழ் மொழிபெயர்ப்பு.. சாகுந்தலத்திலேயே அருமையான கவிதை வனத்துரு தருக்காள் இளநீர் வார்க்குமுன் தானொரு துளிநீர் பருகாள் இதெல்லாம் அப்புறமாத்தான் தெரியுது..சும்மா படிச்சுட்டுப் போறது… கநாசு எவ்வளாவு பெரிய எழுத்தாளர்னு பின்னால் தான் தெரிஞ்சுது.. யூனிவர்சிடி காலேஜ்லே படிக்கும்போது ஒரு நிகழ்ச்சிக்கு .. பிரண்ட்ஸ்க்கு இடையில் ஒரு பரிசு தர வந்தார் ..அப்பத்தான் கநாசுவை தெரியும். அவரைத் தெரியாம பொய்த்தேவு படிச்சேன். தெரிஞ்சதும் இன்னொரு தடவை பொய்த்தேவு படிச்சேன் இன்னொரு meaning வருது

கமல்: நான் சொன்னேனே Crime and Punishment-ல் ஒரு குடிகாரன் வருவான் தன் கதையை சொல்வான்.. அந்தக் கதையை சொல்லும்போது அப்படியே ஒரு உலகம் விரியும்.. எனக்கே புரியுது நான் கல்யாணம் பன்ணாம பிரம்மசாரியா இருந்தாலும் அந்த உலகம் புரியும்.. ரொம்ப ஆச்சரியமா இருந்தது

நீல:ஆச்சரியமான உலகம். அதுலே பூசி மொழுகறது எல்லாம் கிடையாது மனித வாழ்க்கையிலே மனங்களை.. அன்னா கரினனா .. டால்ஸ்டாய் .. உலக வாழ்க்கையிலே இதெல்லாம் சர்வ சாதாரணமாகத்தான் நடக்குது. ஆனா இலக்கியத்திலே கையாளும் போது ரொம்ப பேர் அதை ஏத்துக்கறதில்லே

கமல்: அவங்க சொல்றது – ‘நாம் வழிகாட்டிகள்.. நாம் அப்படி எல்லாம் சொல்லக் கூடாது’

நீல: அதை சொல்றது மோசமானது இல்லை.. அப்படி இருந்தா இப்படி வருது… இலக்கிய.. வாசக அனுபவம் ஒரு தனி அனுபவம் ஒரு கலை உணர்வு அதை இப்படித்தான் நாம் define பண்ணலாம்னு சொல்ல முடியாது.. இந்த அனுபவத்துக்காகத் தான் எழுதறோம். நேர்மறையாகவும் எடுக்கலாம் எதிர்மறையாகவும் எடுக்கலாம்.. எடுக்கறவங்க மனத்தைப் பொறுத்திருக்கு.. மற்றதை எழுதினாலும் இதைச் சொல்லலாம் இப்படி எழுதினாலும் சொல்லலாம்..

கமல்: கடை வச்சிருக்கு.. குடிக்கறதும் குடிக்காததும் நீங்க செய்யற முடிவு. அதை ஒத்துக்க முடியுது. இதை ஏன் ஒத்துக்க முடியாது?

இரா: கநாசு பற்றி சொன்னீங்க .. கநாசுவை ஒரு படைப்பாளியாக இன்னொரு படைப்பாளி சொல்லி கேட்கறேன்.. அவரை ஒரு பட்டியல்காரராக பார்த்திருக்காங்க.. அப்பப்ப பட்டியலை மாத்துவார்னு சொல்வாங்க..உங்களுக்கு கநாசு மேலே ஒரு பெரிய மதிப்பு உண்டு இல்லையா

நீல: நீங்க மட்டும் இல்லை.. சமீபத்திலே இங்கே வந்த வளர்மதியும் கேட்டார்.. இப்ப வர்ற எழுத்தாளர்களிலே போன தலைமுறை எழுத்தாளார்களை பற்றியோ அவங்க சாதனை பற்றியோ அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது.. படிக்க மாட்டாங்கன்னு நினைக்கறேன்.. எல்லா எழுத்தாளனுக்கும் தான் எழுதினதுதான் எழுத்துன்னு தோணலாம்.. எனக்கும் தோணியிருக்கு.. ஆனா நான் ஒரு கண்ணி தான்.. எனக்கு முன்னும் உலகம் இருந்தது.. பின்னும் இருக்கும்..

கமல்: மரபுத் தொடர்ச்சி

நீல: ஆமா மரபுத் தொடர்ச்சி தான்.. நான் ஏன் supress பண்ணனும் எனக்குத் தெரியாது கநாசு அந்தக் காலத்திலே எழுதினார்.. மௌனி எழுதினார் தி.ஜானகிராமன் எழுதினார் .. அதுலே தான் நானும் வரேன்..(வட்டார வழக்கு) கொச்சை நாவல் பத்தியோ பிராந்திய நாவல் பத்தியோ யாரோ சொன்னாங்களாம் பத்மநாபன் பேர் இல்லைன்னா கூட நான் கவலைப் பட மாட்டேன்னு ..நான் தான் எழுதினேன் இவர் எங்கெ எழுதினார்னு கேட்டாக்கூட எனக்கு கவலை இல்லை .. ஏன்னா நாம் (அப்படி எழுதறதை) செஞ்சுக்கிட்டு இருக்கோம் .. அதுனாலே தான் கநாசு பண்ணினது முக்கியம்.. கநாசுக்கு இருந்த ஒரு peculiar தன்மை பற்றி சொல்றேன்..கநாசு நாவல்லே ‘வாழ்ந்தவர் கெட்டால்’னாலும் சரி, ‘பொய்த்தேவு’ன்னாலும் சரி ..ஜானகிராமன் கிட்டே இருந்த ஈர்ப்பு .. attraction .. கநாசு கிட்டே வரலே.. ஜானகிராமனை ஒப்புக்குவாங்க.. கநாசுவை ஒத்துக்க மாட்டாங்க.. ஜானகிராமன் கிட்டே அவர் எழுத்தில் ஒரு பாலுணர்வு sex மயக்கம்.,, குறையா சொல்லலே .. அதுவும் நமக்கெல்லாம் வாழ்க்கையில் வேண்டியது…

கமல்: ஆமா ஜானகிராம்ன் அதைக்கூட கொச்சையா சொல்லலே அவரோட நாவல்…

இரா: மோகமுள்?

கமல்: ’உறை அவிழ்த்த வீணையாய் மடியில் சாய்ந்தாள்’ம்பார். என்னென்னமோ வரும்.. form.. shape…

நீல: அம்மா வந்தாள்.. நல்லாத்தான் எழுதியிருந்தார்.. படிக்கும்போது கலை உணர்வு வரும்..மற்ற் வாசகர்களுக்கு அது போதும்..கநாசு கிட்டே அதுவும் கிடையாது

இரா: அதுக்கு மேலே போகணும்

நீல:அவரே சொல்லியிருக்கார்.. நான் கட்டுரைக் கதைதான் எழுதிட்டு இருக்கேன்னு சொல்வார்.. அவரு அதை சக்கையாகத் தள்ளுவார்.. அவருக்கு தனித்தன்மை இருந்தது.. அவரோட பொய்த்தேவு படிச்சா

இரா: பொய்த்தேவு படிச்சிருக்கேன்

நீல: வாழ்ந்தவர் கெட்டால்?

இரா: படிக்கலே பொய்த்தேவு தான் ஞாபகம் வருது..தாம்ஸ் வந்தார்னு கடைசியிலே எழுதினது படிச்சிருக்கேன்

நீல எல்லாமே அப்புறம் நடுத்தெரு..இலக்கிய வ்ட்டத்தில் வந்து புத்தகமானது அவரோட படைப்புகளோட தனித்தன்மை வந்து.நகுலன் கிட்டேயும் அதானே.. நிறைய பேரை அவர் நகுலன் encourage பண்ணியிருக்கார்… அவர் சோதனை பண்றார்னா அவரை ஒப்புக்குவாங்க.. .. கநாசு அப்படி இல்லே… உண்மையைச் சொல்வார் அதுனாலே ரொம்ப பேருக்கு எதிரி ஆகிட்டாரு .. ஜானகிராமனோட மோகமுள் பற்றி சொன்னீங்க.. அது craft-லேயும் கற்ப்னையிலும் சரி ந்ல்ல நாவல்.

கமல்: சினிமாவாக ஆக்கியிருக்காங்க

நீல: சரியாக வரலே

இரா: பள்ளிகொண்டபுரம் திருவனந்தபுரத்தை களமாக்கினது போல் மோகமுள் கும்பகோணத்தை களமாகக் கொண்டது. மோகமுள் கும்பகோணம் தவிர வேறு இடத்தில் நடக்கலாம் ஆனா பள்ளிகொண்டபுரம் திருவனந்தபுரத்தில் மட்டும் தான் நடக்க முடியும். ஏன்னா, அந்த நகரமே அந்த நாவலில் ஒரு முக்கியமான கேரக்டரா போயிருக்கு. இப்படி பௌதிகமான வெளி மனுஷனோட மன வெளியைப் பாதிக்கறது அபூர்வமானது. இந்த மாதிரி நடக்குமா?

கமல்: எது:

இரா: இப்படி ஒரு இடம்.. ஒரு நகரம் .. படைப்பை பாதிக்கறது

நீல: நீங்க சொன்னபோது நான் வேறே ஒண்ணு சொல்லணும். பள்ளிகொண்ட புரம் ஒற்றை இருப்பில் உட்கார்ந்து எழுதினது. மோகமுள்ளை திஜா சுதேசமித்திரன்லே தொடர்கதையா எழுதினார். அதுனாலே சில இடங்கள் நீர்த்துப் போயிருக்கலாம்..குறையாகச் சொல்லலே.

கமல்: ஆமா, அது ஒரு முறை … அவர் எழுதினது

நீல : Readability இருந்தது உண்மைதான் படிக்க ஒரு சுகம் இருந்தது. அது அதோட தனித்தன்மை. .. பள்ளிகொண்டபுரத்தை எடுத்தீங்கன்னா .. அப்படி இருக்காது.. கநாசு சொன்னது மாதிரி குறை வேணும்னா சொல்லலாம்..சில இடங்கள்லே crisp ஆகப் போயிருக்கலாம்.. சில இடத்திலே கதா காலட்சேபம்..கதாகாலட்சேபம் கேக்கறவங்களுக்கு melody பிடிக்காது.. melody கேக்கறவங்களுக்கு கதாகாலட்சேபம் பிடிக்காது.. என்னடா நீட்டி நீட்டிப் பாடிட்டு போகறான்.. எங்கே போய் நிக்கும்னு கேப்பாங்க.. ஒவ்வொருத்தரோட தனித் தன்மையோடு மனம் இயங்கும் . மோகமுள் நடக்கும் இடம் கும்பகோணமாக இருந்தாலும் கூட.. எனக்குத் தோணினது என்னன்னா.. மோகமுள்ளை ஒரே புத்தகமா உட்கார்ந்து எழுதியிருந்தா தனித்தன்மை வந்திருக்குமோ என்னமோ..ஆனா அம்மா வந்தாள் நாவலுக்கு அந்த குறை சொல்ல் முடியாது.

கமல் முடியாது தான்

நீல: தி.ஜானகிராமன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்.. கநாசு மாதிரி பிடித்த எழுத்தாளர் தான்

கமல்: இப்போ எங்களுக்கு தேவையான ஒரு விஷயம் கேட்கலாமா.. Rewriting எவ்வளவு பண்ணுவீங்க

நீல: நான் நிறைய பண்ணியிருக்கேன்.. முன்னாடி..இப்ப பண்றது இல்லே. தலைமுறைகள் எல்லாம் ரெண்டு மூணு தடவை எழுதியிருக்கேன்…

கமல்: முழுவதுமா

நீல: ஆமா, முழுவதும் எனக்கு வந்து மன இயக்கம் சித்தம் போக்கு சிவன் போக்கு.. விறுவிறுன்னு எழுதிட்டு போவேன் எனக்கே படிக்க க்‌ஷடமா இருக்கும்.. எழுத்தெல்லாம் எனக்கே மறுபடி படிக்கும்போது .. என்ன எழுதினேன்னு தெரியாது அந்த வேகத்திலே without editing எழுதிட்டே போவேன்.. திரவியத்தை எழுத்றதா இருந்தா அவனோட mental working மறந்து போயிடும்னு அவசரம் இப்படி…

கமல்: க்னவு மாதிரி.. அடுத்த நாள் யோசிச்சா விட்டுப் போயிடும்

நீல: இடையிலே பல விஷயங்கள் இருக்கு பாருங்க. ராத்திரி தான் எழுத்து.. வேலைக்கு போனா பகல்லே ஆபீஸ்.. குடும்ப விஷயம்.. ராத்திரி உக்காந்து எழுதி ஆரோக்கியம் பாதிக்கப் பட்டது.. எப்படியும் எழுதி முடிச்சுடணும்னு எழுதறது..இஞ்சினீயரிங்க் காலேஜ் படிக்கும் போது வீட்டுக்குப் பக்கம் நாடகக் கொட்டகை இருந்ததாலே படிக்கறது நாடகம் தீர்ந்து தான் படிப்பேன்.. சத்தம் இல்லாமல் அமைதியாக இருந்தால் தான் படிக்க முடியும். அது போல் எழுதறது.. அப்படி எழுதும்போது விறுவிறுனு நிறைய எழுதுவேன்.. சில நேரம் ரெண்டு மூணு draft எடுக்க வேண்டி வரும்.

கமல் அந்த draft-க்கு நீங்க திரும்பிப் போய் நடுவிலே நடுவிலே எடுப்பீங்களா அல்லது முழுதாகவே எடுப்பீங்களா

நீல: முழுசா எடுப்பேன்.. continuity இருந்தாகணும் முதல்லே இருந்தே எழுதுவேன்

இரா: தொழில்நுட்பம் நாம் பயன்படுத்தினால்,.. இதே நாவலை மடிக் கணினியில் எழுதக்கூடியதாக இருந்தா அந்த மாதிரி முழுவதும் மறுபடி எழுத எளிதாக இருக்கும் இல்லையா.. எல்லாத்தையும் களைஞ்சு தூக்கிப் போடாமல் என்ன வேணுமோ அதை வச்சுக்கலாம்.. என் நாவல்களை நான் கம்ப்யூட்டரிலே தான் எழுதறேன்

நீல: ஆமா டெக்னாலஜி இப்போ வந்துட்டுத்து.. அருந்ததி ராய் கூட சொனனாங்களே கம்ப்யூட்டர் இல்லாம இருந்தா என் நாவலை நான் எழுதியிருக்க மாட்டேன்னு.. கம்ப்யூட்டர்லே :அங்கங்கே எழுதி ஏத்தலாம்… கையாலே எழுதும்போது முடியாது..

கமல் ரொம்ப கொசகொசன்னு ஆயிடும்.. கோலம் மாதிரி..கழுதையை கழுவி ஊத்திட்டு புதுசா எழுதுன்னு போயிடுவோம்.

நீல ஐயோ பெரிய அவஸ்தை..கவலையா இருக்கும்..எழுதிய பிற்பாடு மொத்தமா எழுதின பிற்பாடு கூட திடீர்னு ஞாபகம் வரும்.. கூனாங்கண்ணி பாட்டா இந்த மாதிரி பேசினாரா இல்லியான்னு திருப்பிப் பார்த்து அங்கே கொண்டு போய் புகுத்தணும்.. அந்த கம்ப்யூட்டர் வேலையும் செஞ்சிருக்கேன்.. பெரிய் அவஸ்தை..easy இல்லையே எழுத இடம் இருக்காது

கமல்: கம்ப்யுட்டர் எழுத்தில் வசதி அதை நகர்த்தி வச்சுடலாம்..

இரா: காப்பி பண்ணிட்டு புதுசா எழுதலாமே

நீல எழுத்து பிரசவ வலி மாதிரிதான்.. Health affect பண்ணும் நம்ம blood pressure எடுத்துப் பார்த்தா ஒரேயடியாக ஏறி இருக்கும் வாழ்க்கையை … குடும்ப வாழ்க்கை மற்ற வாழ்க்கையை affect பண்ணிடும்… 24 மணி நேரம் மனசிலே எழுதற process தான் .. சதா பைத்தியம் மாதிரி திரவியம் ஸ்கூல் போயிருக்கான்.. டீச்சர் வந்திருக்கா .. அவன் அக்கா நாகம்மையை கொண்டு போய் விடறான் இப்படி மனசுலே ஓடிட்டே இருக்கும்

இரா:கம்ப்யூட்டர் background process மாதிரி

நீல: ஆமாம்.. இப்படி மனசைப் போட்டு படுத்தி..தேவையில்லாமே.. இப்பத்தான் நான் சொன்னேன். life long இப்படி எல்லாம் அவஸ்தைப்பட்டு பண்றோம். ஒண்ணுமே இல்லாமே எல்லாமே பேசாமப் பண்ணிட்டுப் போறாங்க (சிலர்).. உலக வாழ்க்கை அவ்வளவுதான்

கமல்: சிலபேர் சொல்வாங்க.. நான் ஒரு சிகரெட் பிடிச்சது கிடையாது கெட்ட பழக்கமே கிடையாது… இப்படி வந்துடுத்தே.. அவனைப் பாருங்க இப்படி இல்லையே-ன்னு..

நீல: ஆமா, சில நேரம் பலவீனமான தருணங்களிலே … .. இவ்வளவு அவஸ்தை எதுக்குன்னு தோணும்… பிறந்து வளந்த காலத்துலே இருந்து மனசுலே கிடந்த விஷய்ம் எல்லாம் இந்த நாவல்லே வந்திருக்கு.. உக்காந்து எழுதவே மூணு வருஷம் ஆச்சு.. எழுதின அப்புறம் போட ஆள் கிடையாது பாருங்க எவ்வளவு அவஸ்தை

கமல்:ஒருவேளை வாரப் பத்திரிகையிலே அடுத்த வாரம் வேணும் கொடுங்கன்னு கேட்கற மாதிரி இருந்திருந்தா வேறே மாதிரி இருந்திருக்குமா? இல்லே சண்டை போட்டிருப்பீங்களா?

நீல: இருந்திருக்கலாம். என்னோட way of writing ஒத்து வருமான்னு தெரியாது.. எனக்கு (மொத்தமாக எழுதிப் போகிற போது). முதல்லே இருக்கறதை கொஞ்சம் மாத்தணும்னு தோணும்

கமல் : முதல் அத்தியாயம் போய்ச் சேர்ந்து பிரசுரம் ஆகியிருக்கும்.. அப்புறம் மாத்தறது சாத்தியமில்லாம போயிருக்கும்..

நீல: ஆமா நம்ம scheme of things… அப்பப்ப நமக்கு இப்படி மாத்தணும்னா முழுத் திட்டம் போட முடியாதுங்கறதாலே அதெல்லாம் முடியாது

இரா: உங்க நாவல் தாமரையில் நாலைந்து மாதம் தொடர்ந்து வந்து படித்தது.. ஆடி ஆடி வந்து கொண்டிருந்தான் அவுரச்சன்.. மின் உலகம்?

நீல: அது ‘அனுபவங்கள்’. அது எப்படி தெரியுமா? மின்னுலகம் தீபம் – ஒரே இதழில் வந்தது… அனுபவங்கள் எங்கப்பா இறந்த நேரம். வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சி.. யாத்திரைன்னு நான் எழுதிய நாவல் .. நண்பன் இறந்து அவன் பிணத்தை நாலு பேர் தூக்கிப் போறாங்க.. அதை நான் கல்யாணம் கழிச்ச வருஷம் எழுதினேன். யாத்திரை ரெண்டாமத்து நாவல்.. மூணாமது நேற்று வந்தவன்.. நாலாவது நாவல் தலைமுறைகள்.. அது முதல்லே பேசப்பட்ட நாவல். உதயதாரகை romantic… டீச்சருக்கும் ஸ்டூடண்டுக்கும்…

கமல்? Almost, teen age-லே அவங்களுக்கு சக வயசு காரங்களோட ஈர்ப்பு தோணவே தோணாது.. ஏன்னா வளரணும்னு ஆசை இருக்கும் ..

இரா: கைக்கிளை, பெருந்திணை போலவா?

கமல்: அதை நோக்கித்தான் அவன் வளர்ச்சியே இருக்கறதாலே அதுதான் தன்னோட ஜோடின்னு தோணும்.. ஒரு உருவகம்.. குழந்தைகள் இன்னும் போடு இன்னும் போடுன்னு கேட்கற மாதிரி

நீல: ஆமா, உதயதாரகை நாவல்.. அப்புறம் தான் தலைமுறைகள்..பயணிகள்.. மின்னுலகம்.. எங்கப்பா இறந்தது பெரிய அதிர்ச்சி. அப்பாவை பொறுத்தவரை திடீர்னு மாரடைபு வந்ததாலே .. அறுபது அறுபத்திரெண்டில் அப்போ எல்லாம் அதுக்கு மருந்து கிடையாது நான் மூத்த மகன். உறவுகள் படிச்சாலே சில விஷயம் கிடைக்கும். சில விஷயங்கள்.. Promotiion ஆகி புனலூர்லே உத்தியோகம்…. அப்பா கூடவே உட்கார்ந்திருந்தேன். மெடிகல் காலேஜ் ஆஸ்பத்திரியிலே இறந்து போனார் . அவர் மேலே ஒரு பிரியம்.. He was very friendly with me .. .. அவர் இறந்த பிறகு தான் நான் தாடி வளர்க்க ஆரம்பிச்சேன்.. திகசியும் வல்லிக்கண்ணனும் அப்போ வந்திருக்காங்க.. திகசி தாமரை பத்திரிகை ஆசிரியராக இருந்தார் .. நீங்க அவசியம் நாவல் எழுதுங்க.. தாமரையிலே வரப் போறதுன்னு அறிவிப்பு போட்டுடறேன்னார்.. விடாப்பிடியா தொட்ர்ந்து தபால் அட்டையிலே எழுதி அனுப்பி எனக்கு அடிக்கடி நினைவு படுத்திட்டிருந்தார்.. அப்போ தான் அனுபவங்கள் நாவல் உருவானது.. நான் ஒரு நாவலும் வேறு யாரையும் வச்சு எழுத மாட்டேன். ஆனால், அனுபவங்களை dictate பண்ணி மனைவியை வச்சு எழுத வச்சேன்.. அந்த ஒரு நாவல் .. படுக்கையிலே கிடக்கேன்.. என்னெல்லாமோ நினைப்பு டாக்டர் கிட்டே போனேன்.. acidity… heart problem.. .. மன நிலை பாதிக்கப் படலே.. ஆனா அப்பா பத்தின நினைவுகள்.. depression.. அப்போ எனக்கு இருபத்தெட்டு .. முப்பது வயது ..அந்த நேரத்தில் தான் அனுபவங்கள் நாவல் அந்த ஒரு நாவல் தான் பத்திரிகைக்காக எழுதின நாவல். யாத்திரை, அனுபவங்கள், சமர் மூணையும் சேர்த்து புத்தகமா போட்டாங்க

இரா: உங்க அப்பாவோட மரணம் பாதிச்சது பற்றி சொன்னீங்க. நான் படிச்ச வரைக்கும் மன அவசங்களுக்கு உங்க எழுத்திலே முக்கிய இடம் இருக்கு. அவைதாம் நாவலையே வழி நடத்திப் போகுது. பள்ளிகொண்டபுரம் .. தலைமுறைகள்.. அந்த அனந்தன் நாயர் உற்சாகமான அனந்தன் நாயராக இருந்தா பள்ளிகொண்டபுரம் எப்படி போயிருக்கும்? இதை பள்ளிகொண்டபுரம் நாவல் அண்மைப் பதிப்புக்கு முன்னுரை எழுதிய சுகுமாரனும் கேட்டிருக்கார்.

நீல: என் கிட்டேயும் வேறு பலர் கேட்டிருக்காங்க. இன்னொண்ணும் கேட்கறாங்க.. பாருங்க.. எனக்கு பாட்டு கூட.. melody கேட்கறது சுகமான அனுபவம் .. தமிழ்நாட்டுலே ஒரு காலேஜ் இருக்கு.. ஐயப்பா காலேஜ்னோ என்னவோ பெயர்.. அங்கே சமாஜத்துலே பேச என்னைக் கூட்டிட்டு போனாங்க டீச்சர் தான் கூட்டிப் போனது.. அங்கே மாணவர்கள் மலையாளத்தில் பாடினாங்க.. வயலார் பாட்டு.. புஷ்ப பாதுகம் புறத்து வச்சு நீ..

இரா: சக்ரவர்த்தினி நினக்கு நானொரு சில்ப கோபுரம் துறன்னு..

நீல: ஆமா, எனக்கு அது மாதிரி பாட்டு கேட்டால் கண்ணு நிறைஞ்சிடும்.. பாருங்க.. அடுத்த பாட்டு தமிழ்லே பாடினாங்க.. முஸ்தபா முஸ்தபா உண்மையிலேயே எனக்கு.. முஸ்தபா பாடலை எல்லாம் குறை சொல்லலே.. உடனே நான் பக்கத்துலே இருந்த தமிழ் ஆசிரியை கிட்டே சொன்னேன்.. ஏம்மா மலையாளத்திலே நல்ல பாட்டா பாடிட்டு தமிழ்லே.. ஏன் சார் இந்தப் பாட்டுக்கு என்ன நல்லாத்தானே இருக்கு-ன்னாங்க .. அவங்க சொன்னதும் சரிதான்.. என் மன வார்ப்புக்கு, tragedy-யிலே ஒரு ஈடுபாடு உண்டு.. ஷேக்ஸ்பியர் .. அவர் ஹென்றி போர்த் எழுதினாலும் கூட, ஒதெல்லா, ஜூலியஸ் சீசர் … டிராஜடி தான் மாஸ்டர்பீஸ் ஆகியிருக்கு.. light-ஆக, நகைச்சுவையோடு நானும் சில சிறுகதைகள் எழுதியிருக்கேன்

இரா: ஆமா ஊமையன் துயரம் ஞாபகம் வருது… ரொம்ப சீரியஸா போய்ட்டு முடியும் போது தடால்னு அந்த ஆள் இன்னும் உயிரோடு தான் இருக்கார்னு முடியும்

கமல்: சாரோட படைப்புகளின் பின்புலத்தில் இருந்து நான் சொல்றேன்.. நகைச்சுவைங்கறது intellectual pursuit.. arithmetic அடிப்படை கூட நகைச்சுவைக்கு உண்டு.. … ஆனா tragedy உணர்வு பூர்வமானது.. அது எல்லோருக்கும் தெரிஞ்ச, அனுபவப் படுகிற விஷயம்.

நீல: அதுதான் நம்ம மனசை ரொம்ப பாதிக்குது.. மத்தது நாம சொல்ல வேண்டிய தேவை இல்லையே. சந்தோஷமா இருக்கக் கூடியவங்களை சங்கடப் படுத்த நாம எழுதலே தான்.. தலைமுறைகள் நாவலை பற்றி கூட சிலபேர் கேட்டாங்க.. ஏன் சார் கடைசியிலே கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாமில்லே.. ஏன் டிராஜடியா முடிச்சுட்டீங்க.. அப்படீன்னு.. கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு ஆசை தான்.. ஆனா அது நடக்கலியே நான் என்ன பண்றது!

(சிரிப்பு)

இரா: உங்க நாவல்கள் எல்லாத்திலேயும் பாத்திரங்கள் நிறைய பழஞ்சொல்.. பழமொழி பயன்படுத்தறாங்க.. அந்தக் கால சமுதாயத்தில் இப்படி இருந்ததா? படிக்கும்போது சுகமா இருக்கு. எங்கேயும் நெருடறது இல்லே .. அது உண்மைதான்

நீல: என்ன காரணம்னா நான் கூட்டுக் குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் சொன்னேனே என் பாட்டி.. பாட்டியோட கதை கேட்கறதிலே நான் ரொம்ப ஈடுபாடு உள்ளவன்.. அவங்க நெறைய பழமொழி சொல்வாங்க… தமிழிலும் மலையாளத்திலும் நிறைய உண்டு

இரா: ஆமா உங்க நாவல்லே படிச்சிருக்கேன்

கமல் :வீராசாமி செட்டியார் விநோதரச மஞ்சரியில் ப்ழமொழிகளைப் பற்றி வரும்..

நீல :ஆமா, வேலி சாடுன்ன பசுவினு கோலு கொண்டு மரணம்னு ஒரு பழமொழி. நான் எழுதி, கீழே விளக்கமும் கொடுத்திருக்கேன்..மரியாதைக்கு பேசாம இருக்கறவங்களுக்கு குழப்பம் இல்லை. சிலர் வேலி சாடற பசு மாதிரி போய் மூக்கை நுழைச்சு அவதிப்படறது பற்றி.. தமிழ்லே பழமொழி நானூறுன்னே பிற்கால இலக்கியம்

கமல்:நிறைய இருக்கு.. இன்னொன்னு எனக்கென்ன தோணுதுனா என் கருத்து. பழமொழி என்பது சிறுகதையின் மூதாதையார்.. ஏன்னா நம்ம மாதிரி கருத்துகளை பதிவு செய்யறது அந்தக் காலத்திலே எல்லோருக்கும் முடியாது.. இவர் மாதிரி எழுத இவரோட பாட்டி மாதிரியான பெண்மணிகளாலே அப்போ முடியாது.. அனுமதியும் இருந்திருக்காது..முழுக்கதையை தலைப்பு போல ரொம்ப வேகமாகச் சொல்ல அதை ஒரு பழமொழியாக, அவங்க பதிவு செஞ்சிருக்காங்க..

நீல:ஒரு நெடிய பாரம்பரியம் கொண்ட, தலைமுறை தலைமுறையாகத் தொடந்து வர்ற, தமிழ் மாதிரி ஒரு சமூகத்துக்குத் தான் வார்த்தைகளை இப்படி சுருக்கி வாழ்க்கை அனுபவத்தைக் கொடுக்க இயலும்.. சுருக்கமான, வளவளன்னு இல்லாம புதுக் கவிதை மாதிரி.. அதை நினைவு வைக்க சூத்திரம் மாதிரி எதுகை மோனை இருக்கும்.. என் எழுத்திலே அது தன்பாட்டில் புழங்கி வரும்.. ஆபீஸ்லே கூட நான் அவற்றை சாதாரணமா சொல்வேன்.. எழுத்திலே வேணாம்னு தவிர்க்கறது இல்லை.. வீட்டிலும் சொல்றதுதான்.. வீட்டுலே பெரிய குடும்பம்.. எங்கம்மாவுக்கு எட்டு சகோதரிகள். தக்கலையில் பிறந்த வீடு. அவங்க எல்லாம் இருந்து பேசும்போது .. புதுசா ஏதாவது பழமொழி காதுலே விழும் என்பதாலே. நானும் போய் உக்காருவேன்.. கோபி வந்தாச்சுன்னு சொல்வாங்க.. கோபின்னு என்னை வீட்டில் கூப்பிடுவாங்க.. ..கேட்கிற பழமொழியை எழுதி வச்சுக்கற்தெல்லாம் இல்லே.. அது பாட்டுக்கு மனசில் வரும்

கமல்: பழமொழி ஒரு code word பரிபாஷை மாதிரி. இந்த மாதிரின்னு கோடி காமிச்சுட்டா, முழுசுமே சொல்லாமே விளங்கிடும்

நீல: ஆமா, இந்த நாலைஞ்சு வார்த்தையை மட்டும் சொல்லிட்டா துல்லியமாக விளங்கிடும்.. பாருங்களேன்..வேலி சாடுன்ன பசுவினு கோலு கொண்டு மரணம்னா, எவ்வளவு அர்த்த்ம் அதில் வந்துடுச்சு..சும்மா இருந்தா குழப்பம் இல்லே.. போய் ஏதாவது தகிடுதத்தம் செஞ்சா..

இரா: இன்னொண்ணு கூட சொல்வீங்களே.. நீர்க்கோலி நெனச்சா

நீல: ஆமா, நீர்க்கோலி .. தண்ணிப் பாம்பு .. அது கடிச்சாலும்.. அத்தாழம் .. முடக்குன்ன ஸ்திதி.. ராச்சாப்பாடு இல்லேன்னு செய்யறது.. இது பழமொழி வழக்கு… இந்த சேறைன்னு சொல்வாங்களே .. அது பண்ணியாச்சுன்னா ராத்திரி சாப்பிடக் கூடாதுன்னு சொல்வாங்க.. பெரும்பாலும் எல்லாத்துக்குமே ஒரு காரணம், பின்னணி இருக்கு effect இருக்கு.. எதையுமே நாம தள்ள முடியாது

கமல் வீராசாமி செட்டியார் பக்கத்துக்கு நாலு பழமொழி உதிர்த்துக்கிட்டே போறார்.. தம்பிடிக்கு நாலு பட்டுத் துணி வித்தாலும் நாய்க்கு கோமணத்துக்கு ஆகுமான்னு அதில் ஒண்ணு..

(சிரிப்பு)

நீல: ஆமா, சிலதை நேரடியா சொல்லவும் முடியாது.. ஆனா ரொம்ப அர்த்தத்தோடு இருக்கும்.

கமல்: புரியாதவன் கிட்டே சொல்ற மாதிரி.. நாய் கிட்டே போய் பட்டுக் கோமணம் விக்க முடியாது

நீல: குளத்தோடு கோவிச்சுக்கிட்டுன்னு ஒரு பழமொழி கூட இது போல தான் .. நீங்க இந்தக் கேள்வி கேட்டதிலே சந்தோஷம்..

இரா: பள்ளிகொண்டபுரம் நாவல்லே சட்டம்பி சுவாமிகள் எப்படி வந்தார்?அவர் ஒரு கதாபாத்திரத்திடம், ’பிரபாகரா, குருவை பரீட்சை பண்ணாதே’ங்கறார்.. சட்டாம்பி சுவாமிகள் தானா.. இல்லே..அவர் போல..

நீல: சட்டம்பி சாமிகள் தான். அவர் வாழ்க்கையிலே இப்படி ஒரு நிக்ழ்வு இருந்ததா சொல்றாங்க..

இரா: உங்க கதைகளிலே ஒரு ஆன்மிகத் தேடல் வந்துட்டிருக்கே

நீல: ஆமா, கூண்டினுள் பட்சிகள் படிச்சிருக்கீங்களா

இரா: இல்லியே

நீல: கூண்டினுள் பட்சிகள் படிச்சதில்லையா? மைசூர் செண்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆப் லேங்க்வேஜஸ்லே கதாபாரதின்னு ஒரு ஸ்கீம் வச்சிருக்காங்க

இரா: ஓ.. கூண்டினுள் பட்சிகளா.. சாரி.. சரியாக் கேட்கலே.. படிச்சிருக்கேன்

நீல: என் தொண்டையும் கம்மிடுத்து வயசுக் காலத்துலே.. இந்த மாதிரி ஒரு ஆள் இருந்தாரான்னு எதிர்காலத்திலே கேட்க நீங்க இதைப் பதிவு பண்ணிட்டு இருக்கீங்க…கூண்டினுள் பட்சிகள்.. அதுலே நான் இதைக் கையாண்டிருக்கேன் .. நீங்க தலைமுறைகளை எடுத்தாலும் அதிலே.. கூனாங்கண்ணி பாட்டா, உண்ணாமலை ஆச்சி.. அவங்கெல்லாம் ஆத்மீகமா யோசிச்சு நடமாடறவங்க. இதை நான் வேணும்னு சேர்க்கலே. இதெல்லாம் நான் சின்ன வயசிலே . இப்ப நீங்க சொன்னீங்களே.. பள்ளிகொண்டபுரம்.. அதிலே இன்னொரு கேரக்டர்.. பாஸ்கரன் நாயர்.. இதுக்கு காரணம்னா.. நான் நேரமே சொன்ன மாதிரி யாத்திரைன்னு .. இத வந்து.. இப்போ சமீபத்துலே ஒரு நேர்காணல்லே கூட சொல்லியிருந்தேன்.. அந்தக் காலத்தில் எங்க தெருவிலே பாட்டிமார், வயசானவங்க நிறைய இருந்தாங்க.. சின்னக் குழந்தை பிராயத்திலே…. தெருவிலே அடிக்கடி சாவு நடக்கும்.. நாள் கணக்கா கிடப்பாங்க.. அப்புறம் சாவு.. இதெல்லாம் வாழ்க்கையிலே ஒரு அங்கம்னு அப்பவே பட்டது.. ராமாயணம், கருட புராணம் எல்லாம் அப்போ வாசிப்பாங்க.. அப்போ வயசானவங்களை பாரம்னு எங்கேயாவது கொண்டு தள்ள மாட்டாங்க.. ஹோம் நர்ஸ் வரமாட்டாங்க.. வீட்டோட தான் இருப்பாங்க.. என் பெரிய பாட்டி கூட இப்படித்தான்….அடிக்கடி தெருவிலே இப்படி இறப்பு நடக்கும் வீட்டுலே சொல்வாங்க. இதையெல்லாம் பாக்காதே.. பார்த்தா ராத்திரியிலே பயப்படுவே.. கனவு காணுவே. உள்ளே வந்துடும்பாங்க.. நான் அதை எல்லாம் கேட்க மாட்டேன் சங்கெல்லாம் ஊதிக்கிட்டு எடுத்துப் போவாங்க.. சின்ன தெரு பாருங்க.. ..சின்ன வயசிலே இருந்தே இதை பார்த்து பார்த்து வளர்ந்திட்டேன். . மரணம்.. நேற்றைக்கு இருந்தார்.. இப்போ இல்லே.. இந்தப் புரிதல்.. என் ஆத்மீக தேடலுக்கு நான் சந்தித்தபடி இருந்த மரணம் ஒரு முக்கிய காரணமா இருக்குமோன்னு இப்போ எனக்கு தோணறது..சாவு விழுந்த வீட்டுப் பக்கம் அது நடந்து கொஞ்ச நாள் போக மாட்டாங்க.. பயம்… பேய் பிசாசு இப்படி.. புதுமைப் பித்தன் சொன்ன மாதிரி.. நீங்க பேய் பிசாசை நம்பறீங்களா..இல்லே ஆனா பயமா இருக்கே அப்படி. மண்ணின் மைந்தன் கதையிலே சமீபத்திலே வந்தது நான் இதை சொல்லியிருக்கேன்.. இப்படி அந்தக் காலத்திலேயே மனசுலே படிஞ்சது என் ஆத்மீகச் சிந்தனைக்கு காரணமாக இருக்கலாம். ஆனா இது முழுக்க முழுக்க வந்தது கூண்டினுள் பட்சிகள் எழுதும்போது தான்.. அதுக்கு முன்னாடி அப்படி இல்லை..வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்கற போதம்.. என்ன தான் கழுதையாக் கத்தினாலும் ந்டக்கறது நடந்துட்டு தான் இருக்கும்.. நம்மால் சிலவற்றை சாதிக்க முடியும்..ஐடியலிசம் ரியலிசம் இந்த போராட்டம்.. சில் விஷயங்களை செய்யணும்… நான் மெடிடேஷன் பண்ணுவேன்.. பரமஹ்ம்ச யோகானந்தர் ஆசிரமம் …. ராஞ்சியிலே இருக்கு …அங்கே போயிருக்கேன்..வாழ்க்கை அது பாட்டுக்கு ஆறுபோல போய்க்கிட்டுத்தான் இருக்கும்.. நம்பிக்கையின்மையோடு சொல்லலே.. மத்தவங்களை திருத்திட்டு தான் ஓய்வேன்னு புறப்பட்டா நம்ம பிளட் பிரஷர் தான் கூடும்.. தேவையில்லாம நாம எல்லோர்கிட்டேயும் கெட்ட பெயர் வாங்குவோம்.. மனைவி ஆனாலும் சரி, குழந்தைகள் ஆனாலும் சரி, இலக்கியம் ஆனாலும் சரி.. . நம்மைப் பத்தி தப்பா மத்தவங்க சொன்னா கூட அது தப்பில்லேன்னு போய் argue பண்ணாதே Learn to accept blind criticism even though it is unjustifed and untrue, silently without retaliation அப்படின்னு சொல்வாங்க. அது பாட்டுக்கு நடக்கும். இதுக்கு அப்புறம் ஒண்ணுமே இல்லே பாருங்க.. அந்தக் காலத்திலே, இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதினோம் அதைப் போய் இப்படி சொல்லிட்டாங்களேன்னு எல்லாம் மனசு கஷ்டப்படும்.. இப்போ அப்படி இல்லை. அப்படியும் ஒரு கருத்து இருக்கலாமே..

கமல்: உங்க அனைத்துப் படைப்புகளையும் தொகுத்து வெளியிட முயற்சி ஏதும் நடந்துட்டிருக்கா?

நீல: சாகித்ய அகாதமியில் ஒரு பதிப்பு போட்டிருக்காங்க.. Neela Padmanabhan, a reader-னு தலைப்பு. பிரேமா நந்தகுமார் தான் அதை எடிட் பண்ணியிருக்காங்க. ரொம்ப முயற்சி எடுத்து ..வேறே எழுத்தாளர் யாருக்கும் வந்திருக்கறதா தெரியலே.. . அந்த CD எல்லாம் கூட தொலைஞ்சு போயிடுச்சு.. ஐயப்ப பணிக்கர் அகாதமி பதவியில் இருந்த நேரத்தில் வந்தது.. என் எல்லா படைப்பில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் போட்டு .. க.நா.சுவோட மொழிபெயர்ப்பு, நாவல் பகுதிகள், சில கதைகள்..என் சில கவிதைகள், கட்டுரைகள் .. மொழிபெயர்ப்பு நானே செய்தது எல்லாம் சேர்த்து நல்ல ஒரு அறிமுகத்தோடு சிறப்பாக வந்திருந்தது அது. சாதாரணமாக தமிழ்நாட்டில் நடக்காதது

கமல் : மலையாளத்தில் வந்ததா?

நீல:ஆங்கிலத்தில்

கமல்:தமிழில் வரலையா?

நீல:காவ்யா சண்முகசுந்தரம் தமிழில் போட முயற்சி எடுத்திட்டிருக்கார்.

கமல்: வந்ததும் அவசியம் வாங்கிப் படிக்கறேன். என் வாழ்த்துகள். நன்றி

நேர்காணல் பதிவு இரா.முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன