ரயில்வே ஸ்டேஷனில் ஓவியன் – சர்ரியலிச ஓவியம்

ராத்திரி வண்டி    குறுநாவல்              இரா.முருகன்  பகுதி – 2 அ

 

’அசிங்கமாப் படம் போட்டிட்டிருக்கார் சார்.. இங்கே கொஞ்சம் வாங்க..’

 

புக்கிங் கிளார்க் ராமசாமி குரல் முன்னால் வந்தது. அப்புறம் சங்கடமாகச் சிரித்துக் கொண்டே கலாசி கணபதி.

 

பெஞ்சில் யாரது?

 

அவன் கொஞ்சம் வித்யாசமாகத் தெரிந்தான். பிடிவாதம் பிடிக்கும் குழந்தையைப் போல் நாக்கைத் துருத்திக்கொண்டு சிமெண்ட் பெஞ்சின் விளிம்பில் தொக்கினாற்போல் உட்கார்ந்திருந்தான். முன்னால் விரித்து வைத்த பலகை. ஒரு முப்பது வயது. அழுக்கு கதர் ஜிப்பா. தலை காடு. பெஞ்ச் பக்கத்தில் ஒரு ஹவாய் செருப்பும் பாதியும்.

 

சுற்றி இருந்தவர்கள் சும்மா லாந்தி விட்டுப் போக வந்தவர்கள். இப்படியே ஸ்டேஷன் வழியாக நடந்து கொஞ்சம் தள்ளி மதகடியில் குத்த வைத்துவிட்டு, காலைக்கடன் முடித்த தேஜஸோடு திரும்பி உலகை எதிர்கொள்ளப் புறப்பட்டவர்கள்.

 

‘ஊர் உலகம் கெட்டுப் போச்சுவே.. படத்தைப் பாத்தீரா? நட்ட நடுவிலே அவன் பாட்டுக்கு பலகையை நிறுத்தி வச்சுக்கிட்டு எளுதறான்….துணிக்கடைக்கு இருக்குமோ…கட்டினா எங்க சேலையைக் கட்டு.. இல்லே…இப்படி முண்டக்கட்டையா தரையிலே கால் பாவாம நில்லு..’

 

அவன் யாரையும் லட்சியம் செய்யாமல் படம் போட்டுக் கொண்டிருந்தான்.

 

‘கோன் ஹை பாய்?’

 

இந்திக்காரன் மாதிரி தெரியலியே. நல்ல கறுப்பா இருக்கான் பய.

 

‘யாருப்பா அது?’

 

முகத்தை நிமிர்த்தி அவன் பார்த்தான்.

 

ராசு.. ராசுப்பய இல்லே…?

 

அதே உயரம்.. மலங்க மலங்க முழிக்கறது.. நாக்கை வேறே துருத்திக்கிட்டு.. ராசு. தம்பி.. ஸ்டேஷன் மாஸ்டர் வேலையிலே சேர ஒரு நாள் இருக்கும்போது காணாமப் போனானே.. அவனே தான்… அவனா?

 

‘அப்பாவிப் பய.. தம்பிக்கு ஒரு வழி பண்ணுப்பா.. நீ நல்லா இருப்பே.. உன் உத்தியோகம் மேலே மேலே வரும்.. ராசு இங்கே வாடா.. அண்ணன் வேலையிலே சேரப் போறான்.. உடுப்பை இஸ்திரி போட்டு வாங்கிட்டு வாடா.. போய் டீக்கடையிலே உக்கார்ந்திடாதே… அண்ணன் ஊருக்குப் போகணும்..’

 

அப்பாவிப் பய டீக்கடைக்காரன் பொண்டாட்டியோட ஓடியே போனான்.

 

இங்கே எப்படி வந்தான்? நான் இருக்கறது தெரிஞ்சிருக்குமோ? மூணு வருஷத்துலே படம் போடக் கத்துக்க முடியுமா என்ன? அந்தப் பொம்பளையை வச்சுப் பழகிக்கிட்டானா? ஒரு சாயலுக்கு.. சாயல் என்ன, எப்படிப் பார்த்தாலும் என்னமா இருப்பா…

 

இல்லே.. இது ராசு இல்லே.. ராசுன்னா எழுந்து வது கட்டிக்க மாட்டானா என்ன? இவன் சிரிக்க மட்டும் சிரிக்கறான்.

 

’இதோ முடிச்சுட்டேன். ஃபைவ் மினிட்ஸ்.. கொஞ்சம் காயணும்..’

 

சிநேகமாகச் சொன்னான்.

 

டீசண்டான ஆள் தான். கேக்கற தோரணையே சொல்றதே.. என்ன தோணினதோ.. இங்கே எறங்கி வரைஞ்சுக்கிட்டிருக்கான்.. திடீர்னு மூடு வந்திருக்கும்.

 

‘நீங்க எல்லாரும் போங்க.. நான் பாத்துக்கறேன்.. ஆர்ட்டிஸ்ட்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க.. அவங்க கண்ணுலே அசிங்கம் கிடையாது.. மனசும் அப்படித்தான்..’

 

நமக்குக் கூட இப்படியெல்லாம் பேச வருதே. சொசைட்டி எலக்சனுக்கு நிக்க வேண்டியதுதான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன