No Petrol Day Feb 14th

 

  

திங்கட்கிழமை, 7, பிப்ரவரி 2011 (7:30 IST)

ஓட்டுக்களை சேகரிப்பது முக்கியம் அல்ல : கமல்ஹாசன்

அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் புதிதாக இளைஞர் அமைப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன் தொடக்கவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டை மகாராஷ்டிரா நிவாஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு எல்லா மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர்.திருமண மண்டபத்தின் அருகே உள்ள தனது வீட்டில் இருந்து கமல்ஹாசன் காலை 10.30 மணியளவில் அங்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், உலக நாயகன் வாழ்க, கமல் வாழ்க என்று உற்சாக மிகுதியில் குரல் எழுப்பினார்கள். கமல்ஹாசன், ரசிகர்களின் வரவேற்பை புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் நடைபெற்ற விழாவில், இளைஞர் அமைப்பை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். உடல் ஊனமுற்றவர்களுக்கு 3 சக்கர சைக்கிள்களையும், ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும், ஒரு சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்கான நிதியையும் வழங்கினார்.

விழாவில் கமல்ஹாசன் பேசும்போது, ’’ரசிகர் மன்றம் இருக்கும்போது புதிதாக இளைஞர் அமைப்பு என்ற அமைப்பை என்ன காரணத்திற்காக தொடங்க வேண்டும் என்று கேட்கலாம். என்னை பொறுத்தவரையில், மனிதர்களை சேகரிப்பதுதான் முக்கியம். ஓட்டுக்களை சேகரிப்பது முக்கியம் அல்ல.

நமது மன்றத்தின் பணிகள், செயல்கள் என்ன என்று செயல்விளக்க கூட்டங்களில் ஏற்கனவே பேசி இருக்கிறேன். எனவே, அதைப்பற்றி எல்லாம் இங்கு சொல்ல தேவையில்லை. ரசிகர்களை சந்திப்பதற்கான ஒரு தருணமாக இந்த நிகழ்ச்சியை கருதுகிறேன்.

இங்கே மண்டபத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் திரண்டு நிற்பதை பார்த்தேன். சாலையில் யாரும் போக்குவரத்திற்கு இடைïறாக நிற்கக்கூடாது. மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாமல் இருப்பதுதான் முதல் பணி.

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.18-க்கு விற்கப்படுகிறது. நம் நாட்டில் பெட்ரோல் விலை 64 ரூபாய் ஆகும். பெட்ரோல் விலையை குறைக்க அரசியல் கட்சிகள் என்ன முயற்சி எடுக்கின்றன என்பதை விட நாம் என்ன செய்ய போகிறோம் என்பதுதான் முக்கியம். இதை `சோசியல் மெசேஜ்’ என்று சொல்வார்கள். அரசியல் அமைப்புகளை விட தனி மனிதர்களுக்கு அதிக பலம் இருக்கிறது.

நாம் எல்லோரும் ஒருநாள் பிப்ரவரி 14-ந்தேதி என்று சொல்லி இருக்கிறார்கள். அன்றைய தினம் ஒருநாள் பெட்ரோலே போடாவிட்டால் பிரச்சினை சரியாகிவிடும். அதற்காக பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு நான் எதிரி கிடையாது. நாம் இதுபோன்ற பணிகளை செய்தால் போதும். அதற்கு மேல் போகத்தேவையில்லை.

நாம் எந்த கட்சியை சார்ந்தவர்களும் கிடையாது. நம்மால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும். மற்றவர்களை குறைசொல்லக்கூடியவர்கள் அல்ல நாம். எதையும் பகுத்தறிந்து, பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நாட்டுக்கு பயன்படக்கூடிய வகையில் நடந்துகொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன