Vishnupuram ThErthal – Part 8விஷ்ணுபுரம் தேர்தல் – பகுதி 8

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 8

’நீ தமிழ்நாடு தானே..’

இருபது வருடமாக டெல்லியில் இருக்கிறேன். தமிழ்நாட்டில் எனக்கு என்று அரை அடி மண் கூட இல்லை. இங்கே முன்னீர்காவில் இரண்டு அறை கொண்ட, சுவர்கள் ஈரம் பூரித்து நிற்கிற, கழிவுநீர் தினம் அடைத்துக் கொள்கிற டி.டி.ஏ ஃப்ளாட் இருக்கிறது. பத்திரிகைக்காரன் என்பதால் பிழைத்துப் போ என்று கொடுத்தார்கள். என் மனைவி மராத்தி பேசுகிறாள். பள்ளிக்கூடம் போகிற பிள்ளை, ‘காய்கோ கூப்பிடறே சும்மா.. அப்பன் வெரி பிஸி..’ என்று புதிய மொழி பேசுகிறான். தமிழ்ப் பத்திரிகைக்காகவும், இட்லி சாம்பாருக்காகவும் எப்போதாவது காரை எடுத்துக் கொண்டு கரோல் பாக் வருகிறேன். பிள்ளைக்குத் தமிழ் சொல்லித் தரவில்லையே என்ற குற்ற உணர்ச்சி அப்போதெல்லாம் பலமாக உண்டாகிறது.

என்றாலும் நான் ’மதராஸி’ தான். தமிழ் பேசுகிறவன்..

‘விஷ்ணுபுரம் தெரியுமா?’

பத்திரிகையின் ஆசிரியர் தொடர்ந்து என்னைக் கேட்கிறார்.

‘பிறந்த ஊர் சார்..’

என் குரல் எனக்கே கொஞ்சம் பலமாக ஒலிக்கிறது. முப்பத்தைந்து வயதுக்கு மேல் உணர்ச்சி வசப்படுவதைக் குறைத்துக் கொள்ளாவிட்டால் உடம்புக்கு காலக் கிரமத்தில் ஏதோதோ வரலாம்… காலக் கிரமம்… மயில் வாகனம்… வணக்க்ம் கூறி விடை பெறுவது…

‘என்னப்பா யோசனையிலே மூழ்கிட்டே.. நீ உடனே விஷ்ணுபுரம் போ.. அங்கே இடைத் தேர்தல் நிலவரத்தைப் பத்தி ஒரு அனலைசிஸ் அனுப்பு.. நாடே கவனிக்கிற தேர்தல் இது.. அணிகள் சிதறியும் உருவாகியும் வர்ற சூழ்நிலை…’

ஆங்கிலப் பத்திரிகை. தேர்தலுக்குப் பதினைந்து நாள் முன்னால் தான் இப்படி விழித்துக் கொண்டு போகச் சொல்கிறார்கள். நான் புரட்டிய தமிழ்ப் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் ஏற்கனவே நிறைய அலசி விட்டார்கள். அவர்கள் எல்லாவற்றையுமே அலசுகிறார்கள்.. அரசியல் அலசல்.. சினிமா அலசல்… விலைவாசி அலசல்.. கலவர அலசல்… கலாச்சார அலசல்…வானிலை அலசலும் நீர்மட்ட அலசலும் தான் பாக்கி…

என் பங்குக்கு நானும் அலச வேண்டும்.

‘நாளைக்கு காலை மெட்ராஸ் ஃப்ளைட்..’

—————————————-

இருள் பிரியாத அதிகாலை. விஷ்ணுபுரத்தில் என்னை இறக்கி விட்டுத் தெற்கே போனது ரயில்.

எல்லா ரயில் நிலையத்துக்கும் ஒரே முகம்.. வாச்னை.. ஊருக்குள்ளேயே இருந்தாலும் ஊரோடு கலக்காமல்.. பஸ் ஸ்டாண்ட் போல ஒரு சம்சாரியின் சந்தோஷமும் துக்கமும் கலக்காத முகம்…

வெளியே வந்தேன். பழைய நினைவுகள் எதுவும் வந்து உடல் புல்லரிக்கவில்லை. ஒரு காப்பி சாப்பிட வேண்டும் முதலில். நிச்சயமாக நாராயண பவன் இருக்காது.

‘நல்ல ஓட்டலா பாத்துப் போப்பா..குதிரை வண்டி இப்பல்லாம் கிடையாதா.. ஒரே ரிக்‌ஷாவா கிடக்கே…’

புதுசு புதுசாகக் கட்டடங்கள். வரிசையாகக் குடம் வைத்துத் தண்ணீர் பிடிக்கிற பெண்கள், பால் வாங்கக் காத்திருக்கிற தூக்கம் கலையாத முகங்கள். லாரிகள். சுவரொட்டி. கட் அவுட்.

நேற்று பொதுக் கூட்டம் நடந்த இடத்தில் மூத்திரச் சுவடு. வேர்க்கடலைத் தோல். சிகரெட் துண்டுகள். மைக் செட்டைக் கழற்றுகிறவனின் கெட்ட வார்த்தை சத்தம். திருப்பத்தில் சிவன் கோவில்.

மனசு விம்முகிறது. இது விஷ்ணுபுரம். இந்தக் கோயில் போதும் அடையாளம் சொல்ல. பழைய நினைவுகளின் ஊர்வலம் தொடங்கி விட்டது.

அந்த நகரசபைத் தேர்தலில் டாக்டர் சதானந்தம் தான் ஜெயித்தார். டாக்டருக்கும் பாலுசாமிக்கும் ஒரே எண்ணிக்கையில் ஓட்டு .. சரியாக நூற்று நால்பத்தேழு… திரு உள்ளச் சீட்டு போட்டு டாக்டர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

ஒரே ஒரு ஓட்டு கூடுதலாகக் கிடைத்திருந்தால் பாலுசாமி ஜெயித்திருக்கலாம்…

எலக்‌ஷன் அன்று ‘இண்டு’ பேப்பர் வரவில்லை.

டாக்டர் வீட்டு வாசலில் எம்.பி.பி.எஸ் எம்.சி என்று போர்ட் போட்டுக் கொண்டார். அவர் கவுன்சிலராகத்தான் இருந்தார். முறுக்குக் கடைக்காரர் நகரசபைத் தலைவர்.

நான் கல்லூரிக்குப் போகிறவரை கானா நியூஸ் எல்லோருக்கும் வந்தது. அமெரிக்க எம்பஸியிலிருந்து ‘புத்தகம் கேட்டுத் தொந்தரவு பண்ண வேண்டாம். கைவசம் ஏதுமில்லை’ என்று கடிதம் வந்த நினைவு.

அக்பரின் மார்க்கக் கல்யாணத்தையோ, மெகரின் நிக்காவையோ நாங்கள் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கடை கடனில் மூழ்கி ராவுத்தர் வீட்டை லாரிக் கம்பெனி சாதிக் அலிக்கு விற்றுவிட்டு சாதிக் அலியின் லாரியில் தட்டுமுட்டு சாமானோடு குடும்பத்தையும் ஏற்றிக் கொண்டு சொந்த ஊரான புளியங்குடிக்குப் போனார். மெகர் சொல்லிக் கொள்ள வந்தபோது அம்மா கண் கலங்கினாள். அவள் லாரியில், அத்தா தூக்கிவிட ஏறியபோது அம்மா வாய்விட்டு அழுதாள்.

‘என் குழந்தே.. உனக்கு ஒரு குறையும் பகவான் வைக்க மாட்டான்..’…

அவள் ரயிலிலோ பஸ்ஸிலோ போயிருந்தால் அம்மா இத்தனை வருத்தப்பட்டிருக்க மாட்டாள் என்று தோன்றியது.

புவனா லிஸ்டெய்லர் மாதிரி அழகாக இருப்பதாக எனக்குத் தோன்ற ஆரம்பித்தபோதுதான் அவள் காணாமல் போயிருந்தாள். அவள் இலங்கையில் இருபதாகவும், அவள் கணவர் சைவ சமயம், திருக்கோவில்கள் பர்றி ஆராய்ந்து டாக்டர் பட்டம் வாங்கியவர் என்றும் சொன்னார்கள், வக்கீல் மோகனதாசன் ஒத்துழைப்போடு தான் அவள் கல்யாணம் நடந்ததாகச் சொன்னார்கள்.

அறிவரசன் கதர் சட்டை போட்டுக் கொண்டார். ஸ்தானிஸ்லாஸ் நாடார் பெரிய துண்டோடு காணப்பட்டார். தியாகி டெயிலர் மனநிலை சரியில்லாமல் பூங்கா பெஞ்சில் சதா உட்கார்ந்தபடி ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இறந்து போனார். நினைத்துக் கொண்டாற்போல, சங்கு ஊதத் தொடங்கும்போது அவர், ‘வந்தேமாதரம்’ என்று கத்திக் கொண்டே கடைத்தெருவில் ஓடுகிற காட்சி பழக்கமாகி இருந்தது அப்போது..

பாலுசாமி ஒரு இரண்டு வருஷம் போல சின்னதாக ஒரு ஓட்டல் நடத்தி நஷ்டப்பட்டு டாக்டர் சதானந்தத்திடம் எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்தான். ஒழிந்த நேரத்தில் சிங்கப்பூர் செண்டும், ரேபான்ஸ் கூலிங் கிளாஸும் ரகசியம் பேசுகிற குரலில் விற்றான். வீட்டுக்கு ஒருத்தர் சபரி மலைக்கு மாலை போட்டபோது, அவன் போவதை நிறுத்தி விட்டான்.

வக்கீல் மோகனதாசன் பப்ளிக் ப்ராசிக்யூட்டராகப் போனார். சிவப்புத் துண்டுக்காரர்கள் அவர் ஆபீஸ் பக்கம் வருவது குறைந்து நின்றே விட்டது.

சீதரனும், கிரியும், குள்ள கிட்டுவும் மூலைக்கு ஒருவராகப் போய் எங்கேயெல்லாமோ சுகமாக இருக்கிறதாகக் கேள்வி.

ஜீவராசன்…

‘வண்டியை நிறுத்துப்பா.. ஜீவராசன் அண்ணே.. நலமா… என்னை அடையாளம் தெரியுதா..’

‘பிரேக் வசந்தமா…’ என்றார் அந்தக் கிழவர்.

(நாளை நிறைவு பெறும்)

கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, செப்டம்பர் 1993-ல் பிரசுரமானபோது இந்தக் குறுநாவலின் தலைப்பு – விஷ்ணுபுரம்.

என் ‘தகவல்காரர்’ குறுநாவல் தொகுப்பில் (அட்சரா வெளியீடு – 1995) இடம்பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன