New Poem பூங்காக் காவல் இரா.முருகன்

பூங்காக் காவலராக
இருத்தல் அன்று எளிது.
புகார் நகரச் சதுக்கத்தில்
தீயோரை அடித்துத்
தின்ற பிறகு
உத்தியா வனத்தில்
உலவும் பூதமாய்
கற்புடைப் பெண்டிரை
மிரட்டிப் பொழிந்து
கலாசாரமும் காவல் காத்து
பீடம் ஏறி
ஓய்வு எடுக்கலாம்.

பூங்காக் காவலனாக
இருத்தல் இன்று கடினம்.
செடிக்கும் கொடிக்கும்
பொழிய வைத்திருக்கும்
சன்னக் குழாயைக்
கவிழ்த்து வளைத்து
பிளாஸ்டிக் குடத்தில்
தண்ணீர் பிடித்து
ஒக்கலில் குழந்தையொடு
நடக்கும் பெண்ணைப்
பார்க்கவில்லை என
நடிப்பது கடினம்.

கைவிரல் பிடித்து
அப்பா என்றழைத்து
பூவும் மரமும் காட்டிப்
பெயர் கேட்டு
ஓடிவரும் சிறுவனின்
ஒற்றைக் கதாநாயகனாக
புல்லை மிதித்து
நடக்கும் இளைஞனை
விசில் ஊதி விலக்கிக்
குழந்தைக் கற்பனை
சிதைந்து நசிக்கக்
கண்டிப்பது கடினம்.

பூங்காக் கம்பத்தில்
சுதந்திர தினக் கொடி
ஏற்றும் போது ஈயும்
ஆரஞ்சு மிட்டாய் மட்டும்
தின்று வாழ்தல் கடினம்.

பூங்கா இல்லாத ஊரில்
பூங்காக் காவலனாக
இருத்தல் கடினம்.

இரா.முருகன்
அக்டோபர் 4, 2015

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன