4 ஜி – யுகத்தின் வாயிலில் : தி இந்துவில் இரா.முருகன் கட்டுரை

இன்றைய (ஃபெப்ரவரி 10, 2015) ’தி இந்து’ நாளிதழில் வெளியாகியுள்ள என் கட்டுரை இது

4ஜி இரா.முருகன்

முக்காலி போட்டு வீட்டுக் கூடத்திலே வைத்த லேண்ட் லைன் தொலைபேசி தான் முப்பது ஆண்டு முன்பு வரை உலகம் முழுக்க இருந்தது. காரில் வைத்து நகரும் தொலைபேசியை அமெரிக்கக் கம்பெனியான மோட்டரோலா 1984-ல் விற்பனைக்கு வெளியிட்டது. அதுதான் முதல் தலைமுறை மொபைல் தொலைபேசி. தொடர்ந்து 1991-ல், முன்னேறிய தொழில்நுட்பத்தோடு, பின்லாந்தில் அறிமுகமானது ரெண்டாம் தலைமுறை தொலைபேசி. பேச்சையும், குறுஞ்செய்திகளையும்(SMS) 0,1 ஆகிய டிஜிட்டல் வடிவத்தில் எடுத்துப் போவது 2ஜி-யில் தொடங்கியது. நம் நாட்டில் இன்று பரவலாகப் பயன்படுவது 2ஜி தான்.

3ஜி ஆகிய மூன்றாம் தலைமுறை மொபைல் சேவை 1998-ல் அறிமுகமானது. வினாடிக்கு 14 மெகாபிட் அதாவது பத்து கோடி துணுக்கு 0,1 வடிவில் 3ஜி-யில் தகவல் அனுப்ப முடியும். இதில் ஆயிரத்தில் ஒரு பங்கு வேகம் கூட 2G-யில் வராது.

3ஜி அதிவேகம் என்றால், அதைத் தொடர்ந்து, தென் கொரியாவில் 2007-ல் அறிமுகமான நாலாம் தலைமுறை மொபைல் சேவையான 4ஜி மின்னல் வேகம். வினாடிக்கு 100 மெகாபிட். அலைபேசியாக அதை அலைந்தபடி உபயோகிக்காமல், வீட்டில் இருந்தபடிக்கு பயன்படுத்தினால், 1 கிகாபிட் வேகமும் வசப்படும். அதாவது 100 மெகாபிட்டை விட பத்து மடங்கு அதிகம்!

கம்ப்யூட்டரில் கூட இந்த வேகம் அண்மையில் தான் வந்தது. கூகிள் நிறுவனம் ஒரு கிகாபிட் இண்டர்நெட் சேவையை அமெரிக்காவில் விரிவாக்கி வருகிறது.

இந்த வேகம் மொபைல் தொலைபேசியில் கிடைக்க அது ஐபி என்ற இண்டர்நெட் தகவல் தொடர்புக்கு (IP-Internet Protocol) மாற வேண்டும். ஐ.பியை ‘இணைப்பில்லாத தகவல் தொடர்பு (connectionless protocol) என்பார்கள்.

ஒரே நேரத்தில் ஏகப்பட்ட இணைப்புகளை உருவாக்க, 4G-யில் எஃப்.டி.எம்.ஏ முறை FDMA(Frequency Division Multiple Access) பெரும்பாலும் பயனாகும். நாலு பேர் உள்ள அறையில் இருவர் கீச்சுக் குரலிலும், இன்னும் இரண்டு பேர் கட்டைக் குரலிலும் பேசி ஒரே நேரத்தில் இரண்டு உரையாடல் நடத்துவது போன்றது என்று எஃப்.டி.எம்.ஏவுக்கு விளக்கம் சொல்லலாம். 2ஜி காலத்திலேயே FDMA வழக்கத்துக்கு வந்தது. ஆனால் கிராஸ் டாக் பிரச்சனை எழுந்ததால் அது ஓரமாகக் கிடத்தப்பட்டது. இப்போது அதைத் தேடி எடுத்து வளப்படுத்தி 4ஜி-க்கு பயன்படுத்துகிறார்கள். OFDMA என்று பெயரில் ஒரு எழுத்து அதிகம்.

4ஜி முக்கியப் பயன்பாடு என்ன? இண்டர்நெட் மூலம் தொலைபேசும் வசதி (internet telephony) 4ஜி மூலம் பரவலாகும். தொலைபேசிக்காகத் தனியான கட்டணம் இன்றி எங்கும் எப்போதும் எவரையும் அழைத்துப் பேச, குரல்கள் துல்லியமாக இருக்க இது வழிசெய்யும். பளிச்சென்று முப்பரிமாண தொலைக்காட்சி 4ஜி மூலம் கிட்டும். ஒன்றுக்கு இரண்டாக ஒரே நேரத்தில் வீடியோ சந்திப்புகளை (video conferencing) 4ஜி கொண்டு நிகழ்த்தலாம். இதெல்லாம் கம்ப்யூட்டர் மூலம் நிறைவேற்றப்படும் பணிகள். 4ஜி தொழில்நுட்பம் மூலம், இண்டர்நெட்டை பயன்படுத்தி செல்போனும் இவற்றைச் செய்யும்.

4ஜி பயன்படக் கூடிய இன்னொரு துறை மருத்துவம். தொலை மருத்துவம் என்ற டெலிமெடிசின் இது. நோயாளி காஷ்மீரில் பனி படர்ந்த ஒரு கிராமத்தில் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரை, ஒரு ஸ்டெதாஸ்கோப்பை செல்போனில் இணைத்துப் பிடித்துக் கொள்ளச் சொல்லி விட்டுச் சென்னையில் இருக்கும் இதயநோய் சிகிச்சை மருத்தவ நிபுணர் தன் மொபைல் மூலம் பார்த்து, நாடித் துடிப்பைக் கேட்டு ஆராய்ந்து சிகிச்சை தரலாம்.

அமெரிக்கா 4ஜி-யை ராணுவத்துக்குப் பயன்படுத்த ஆர்வமாக இருக்கிறதாம். போர்க்களத்தில் இருக்கும் ராணுவ வீரர்கள் அடிபடும் போது அவர்களின் முழங்கால், தோள் என்று பழுதடைந்த பாகத்தை செல்போனில் எக்ஸ்ரே கருவியை இணைத்துப் படம் எடுத்து, டாக்டரின் செல்போனுக்கு உடனுக்குடன் அனுப்பி, அவர் ஆலோசனைப்படி சிகிச்சை அளித்து சோதனை செய்திருக்கிறார்களாம்.

’என் 3ஜி செல்போனை தூக்கிப் போட்டுட்டு புதுசா 4ஜி போன் வாங்கணுமா?’ என வருத்தப்படும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு ஒரு நற்செய்தி- 3ஜி ஃபோனை மாற்றவே வேணாம்.4ஜி அதே தொலைபேசியில் பிரமாதமாக வேலை செய்யும்.

தற்போது வைமேக்ஸ் (WiMAX), எல்.டி.இ (LTE – Long Term Evolution) என்ற இரண்டு விதமான தரநிர்ணயங்களின் அடிப்படையில் 4ஜி மொபைல் சேவை பல நாடுகளில் கிடைக்கிறது. தென்கொரியாவில் அறிமுகமானது வைமேக்ஸ். அமெரிக்காவில் பரவலாக இருப்பது. நோர்வே, ஸ்வீடன் வழி வருவது எல்.டி.இ. நம் நாட்டிலும் எல்.டி.இ தான் 4ஜிக்கான வழிமுறையாக இருக்கும்.

இந்தியாவில் ஏர்டெல், ஏர்செல், ரிலையன்ஸ் மற்றும் அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்,என்.எல் ஆகியோர் 4ஜி சேவை அளிக்க முன்வந்திருக்கிறார்கள்.

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோஃபைபர் என்ற பெயரில் மும்பை போன்ற பெருநகரங்களில் வசதி படைத்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 4-ஜி சேவையை அறிமுகப் படுத்துகிறது. ‘முதல் மூன்று மாதம் முற்றிலும் இலவசம்’ என அதிரடி விளம்பரங்களோடு களமிறங்குகிறது ரிலையன்ஸ். ‘உங்கள் கம்ப்யூட்டரில் தற்போதைய இணைப்பில் ஒரு சினிமா படத்தைத் தரவிறக்கம் (download) செய்ய 11 மணி நேரம் பிடிக்கும். எங்கள் 4-ஜியில் ஏழே நிமிடத்தில் காரியத்தைக் கனகச்சிதமாக முடித்து விடலாம்’ என்று நிறுவனத்தின் விளம்பரம் ஆசை காட்டுகிறது.

வேகமான அலை அகலத்தைப் பயன்படுத்த அரசு அனுமதி தேவை. ரிலையன்ஸ் 1800 மெகாஹெட்ர்ஸ் ஸ்பெக்டரம் அலைவரிசைப் பயன்பாட்டுக்கான உரிமத்தைக் கடந்த ஏலத்தில், 11,000 கோடி ரூபாய்க்கு வாங்கியது. நம் நாட்டில் 22 தொலைத் தொடர்பு பகுதிகள் உண்டு. அவற்றில் 14 பகுதிகளில் இந்த உரிமம் நடப்பாகும். அங்கே எல்லாம் 4ஜி சேவை வழங்க இருக்கிறது ரிலையன்ஸ். இதற்காக 70,000 கோடி ரூபாய் விலை மதிப்புக்கு சாதனங்களை வாங்கியிருக்கிறது இந்த நிறுவனம்.

போட்டியாளரான ஏர்டெல் தங்கள் 4ஜி சேவைக்கு, 3ஜி-யை விடக் குறைவான கட்டணம் வசூலிக்கப் போவதாகச் சொல்லி வாடிக்கையாளர்களை அழைக்கிறது.

தனியார் உபயோகத்துக்கு மட்டுமல்லாமல், அலுவலக, தொழிற்சாலைப் பணிகளுக்கும் பரவலாக 4ஜி பயன்படுத்தப் படும்போது, அந்த நிறுவனங்களின் தொலைத் தொடர்பு மற்றும் கம்ப்யூட்டர் செலவு முப்பது விழுக்காடு வரை குறைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. இந்த சேமிப்பு அந்த நிறுவனங்களின் லாபக் கணக்கில் கணிசமான தொகையாக வரவாகும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள 3ஜி, 4ஜிக்கான ஸ்பெக்டரம் ஏலத்தின் மூலமாக அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.

வேறு யாருக்கு வருமானம் வரக்கூடும் என்று கேட்க வேண்டாம்.

இரா.முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன