<?xml version="1.0" encoding="utf-8" ?> 
            <rss version='2.0' xmlns:atom='http://www.w3.org/2005/Atom'>
                <channel>
                    <title>This is New Tamil</title>
                    <link>http://www.eramurukan.in/english/magazines_rss.php</link>
					<atom:link href='http://www.eramurukan.in/english/magazines_rss.php' type='application/rss+xml' />
                    <description>This is New</description>
                    <language>en-us</language>
                    <pubDate>Wed, 10 Mar 2010 17:40:32 MST</pubDate>
                    <lastBuildDate>Wed, 10 Mar 2010 17:40:32 MST</lastBuildDate>
                    <docs>http://www.eramurukan.in</docs>
                    <managingEditor>eramurukan@eramurukan.in (Era Murukan)</managingEditor>
                    <webMaster>eramurukan@eramurukan.in (Era Murukan)</webMaster><item>
				<title>
					கேரளா டயரி 2004
				</title>
                <link>http://www.eramurukan.in/tamil/magazines.php?news_id=1#1</link>
				<guid>http://www.eramurukan.in/tamil/magazines.php?news_id=1#1</guid>    
                <description>
				எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் - 1

அமைச்சர் வீட்டுக் காவலுக்கோ, அண்ணாசாலையில் உச்சிவெய்யில் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ போகத் தேவையில்லாமல் சென்னை விமானத்தளத்தில் காவலுக்கு நின்றிருந்த பொலீஸ் காவலர் என்னைப் புல்லே என்று பார்த்தார்.

சார், இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்குப் போங்க.

எதுக்கு அங்கே போகணும்? நான் இந்தியன் ஏர்லைன்ஸ் ·ப்ளைட்டுலே கொச்சிக்கு இல்லே போகப் போறேன்.

சொன்னாக் கேளுங்க சார். இந்த ஏர்போர்ட் இல்லை. அங்கே போங்க.

அவர் அலுத்துக் கொள்ளாத குறையாகத் திரும்பவும் பொறுமையாகச் சொல்லப் பயணச் சீட்டைப் பார்த்தேன்.

\'டிப்பார்ச்சர் ·ப்ரம் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்\'. பார்க்காதது என் குற்றம்தான்.

போர்டிங்க் கார்டோடு, முழ நீளத்துக்கு ஒரு படிவத்தையும் நீட்டினார் அதிகாரி. வழக்கம்போல் அதில் அரைமுழம் இந்தி.

எம்பார்க்மெண்ட் கார்ட் எல்லாம் எதுக்கு சார்? இந்தோ இருக்கிற கொச்சிக்குத் தானே போறேன்?

இங்கேயும் நினைவூட்டல்.

இதைக் கொடுத்துக் கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் வாங்கினால்தான் வண்டி ஏறலாம்.

போகிறபோக்கில், ஆண்றணி பூமியில் போய் இறங்கவும் பாஸ்போர்ட், விசா சகிதம் பயணம் ஆரம்பிக்க வேண்டுமோ என்னமோ - இதை எழுதும் வினாடி வரை கருணாகரனும் அவர் மகன் கேரளா காங்கிரஸ் தலைவர் முரளீதரனும், திருவனந்தபுரத்தில் ஆண்றணி ஆட்சியைக் கெல்லிக் கிளப்பி அப்புறத்தில் எறிய விடாது பாடுபாட்டுக் கொண்டிருப்பது பலன் தரவில்லை.

ஆண்றணியுமாச்சு, கருணாஸ¤மாச்சு என்று பாரத்தைப் பார்த்தால், அதில் ஏகப்பட்ட கேள்விகள். எல்லாம், ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்ல வேண்டியவை.

கையில் ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருக்கிறீரா? முந்தாநாள் உமக்கு நீர்க்கடுப்பு ஏற்பட்டதா? தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கிறீரா? ஆணுறை அணிகிறீரா? மூக்கு நீளம் ஒண்ணேகால் அங்குலத்துக்கு மேலா, குறைவா என்பது போல் கேள்விகளுக்குச் சத்தியப் பிரமாணம் செய்து பதில் தர முயற்சி செய்து கொண்டிருக்கும்போது, விமானம் கிளம்பத் தயாராக இருக்கு, போங்க ஏறிக்குங்க என்றார்கள் வெள்ளையும் சள்ளையுமான துரைகள்.

என்னைப் போல் பொறுமையாகப் பாரம் பூர்த்தி செய்துகொண்டிருந்த நாலைந்து பேர் அவசரமாக நீட்டிய காகிதங்களைப் பார்க்காமலேயே இடது கையால் வாங்கி, இங்க் இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை குத்தி ஓரமாக விட்டெறிந்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.

இந்தக் காகிதத்தை எல்லாம் அப்புறம் கழிப்பறையில் உபயோகப்படுத்துவார்களாக இருக்கும்.

********************************************************************

எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் - 2

எரணாகுளம் நகரம் ராத்திரி எட்டு மணிக்கே சமர்த்தாகத் தூங்கப் போயிருந்தது.

சனிக்கிழமை இல்லியா, அதான் சீக்கிரமாக் கடையை எல்லாம் எடுத்து வச்சுட்டு வீட்டுக்குக் கிளம்பிட்டாங்க.

சகாவு டாக்சி டிரைவர் சொன்னார்.

வார நாள்லே எப்படியோ?

விடாமல் பிடித்தேன்.

எட்டரை ஆயிடும் சேட்டா.

சென்னை அண்ணாசாலையை அகலத்தைக் குறைத்து தெற்கு வடக்காக இழுத்து வைத்து நீட்டினாற்போல் எம்.ஜி.ரோட் என்ற மகாத்மா காந்தி வீதி. நாலு கடைக்கு ஒரு கடை ஆலப்பாட் ஜுவல்லரி. ரெடிமேட் துணிக்கடை. பேக்கரி. அழுக்குக் கட்டடமாக ஒரு தியேட்டர். பானரில் மோகன்லால் சிரிக்கிறார் - படம் \'ஹரிஹரன் பிள்ள ஹாப்பியாணு\'.

லாலேட்டன் ஹாப்பியல்லா. துக்கத்திலாணு.

டிரைவர் சகாவு சொன்னார். படம் ஊத்திக்கிச்சாம்.

ஹோட்டலில் டி.வியைப் போட்டதும், கிரேனின் உச்சியில் உட்கார்ந்து காமரா கீழே பார்க்க, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சண்டை போடத் தயாராக மம்முட்டி. சரசரவென்று கீழே வந்து கிரேனை விட்டிறங்கி, காமிராவைத் தூக்கிக் கொண்டு பச்சையிலைக் காட்டுப் பிரதேசத்தில் வளைந்து வளைந்து கேமிராமேனும் உதவிகளும் ஓட, முன்னால் மம்முட்டி யாரையோ புரட்டி எடுத்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறார். மூணு நிமிஷத்துக்கு மேலே நீளும் ஒற்றை ஷாட் மம்முட்டி நடித்து வெளிவர இருக்கும் புதுப்படத்துக்காம்.

மம்முட்டி காட்டிலும் சென்னைப் பருவ மழைதான் என்று சாரதி சொன்னது நினைவு வர, சானலை மாற்றியதில் கைரளி டிவி. மார்க்சிஸ்ட்கள் பெரும் பங்கு வகிக்கும் நிறுவனம் என்று கேள்வி.

கைரளியில், அவர்களின் தற்போதைய சூப்பர் ஸ்டார் காங்கிரஸ்காரர் கருணாகரன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ்காரரான ஏ.கே.ஆண்றணியை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால் கேரளத்தின் கஷ்டம் எல்லாம் விடியும் என்பதே அவருடைய உக்ரன் பிரசங்கத்தின் சாராம்சம்.

அயர்ந்து தூங்கிவிட்டுப் பாதி ராத்திரியில் எழுந்து பார்க்க, அணைக்காமல் விட்ட டி.வியில் திரும்பக் கருணாகரன். ஆண்றணியை இறக்கி வீட்டுக்கு அனுப்பாமல் இவர் கண் துஞ்சுவார் என்று தோன்றவில்லை.

பாத்ரூம் போய் வந்து பார்த்தபோது கருணாகரனைக் காணவில்லை. மார்க்சிஸ்ட் தினப்பத்திரிகை தேசாபிமானிக்காக ஸ்டைலாயிட்டு ஒரு விளம்பரம்.

தமிழ் எழுத்துக்காரன் அசோக் மித்ரா.

செய்தி வாசிக்கும் புஷ்டியான பெண்ணின் சோனியான குரல்.

தெருவில் தீயணைப்பு வண்டிகள் மணிச்சத்தத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறதாகத் தோன்றுகிறது.

இந்தியன் ஏர்லைன்ஸில் கொடுத்த சைவ சாசேஜ் போன்ற நூதன வஸ்துக்களைச் சாப்பிட்டு, பிளாஸ்டிக் போத்தலில் வழங்கப்பட்ட மூணேகால் டீ ஸ்·பூன் மினரல் வாட்டர் குடித்தால் அஜீர்ணத்தால் இப்படி அபத்தக் கனவு வரும் போல.

டிவியை அணைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்தேன்.

******************************************************************

எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் - 3

அப்பமும் ஸ்ட்யூவுமாகக் காலையில் பசியாறினேன். ப்ரேக்·பாஸ்டை மலையாளத்தில் ப்ராதல் என்கிறதற்கான காரணம் இன்னும் விளங்கவில்லை - தகரம் மிகாமல் படிக்கவும்.

இந்துவும், எக்ஸ்பிரஸ்ஸ¤ம் இல்லாதபோது மலையாள மனோரம ஈயப்படும் என்பதால் அந்தப் பத்திரிகையை எடுத்துப் பிரிக்க முதல் பக்கத்தில் நேற்று ராத்திரி எரணாகுளம் நேப்பாளி மார்க்கெட்டில் தீப்பிடித்தம். கடைகள் கத்திச்சு சாம்பலாயி.

எம்.ஜி.ரோட் நடைபாதைக் கடைகளை ஒழித்துக்கட்டி, கொஞ்சம் ஓரமாக அங்காடி ஏற்படுத்தி அங்கே நிறைய நேப்பாளிகளை, தமிழன்மாரைக் குடியேற்றிவிட்ட இடத்தில் தீவிபத்து.

நேப்பாளிகள் இல்லாத எரணாகுளம் மகாத்மா காந்தி வீதி ஏற்ற இறக்கங்களும், சிமிண்ட் பலகை அங்கங்கே நடுவில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் நடைபாதையுமாக உயரந் தாண்டலும் நீளந்தாண்டலும் பழகத் தோதாக விரிந்து கிடந்தது.

பலகை இருக்கும் இடத்தில் புதுசாகத் துணிக்கடை பரத்திக் கொண்டிருக்க, டவுண்பஸ்ஸில் எடுபிடியாள் கூவியழைத்துக் கூட்டம் சேர்க்கிற சத்தம். மலை கயறி வந்த அய்யப்ப சாமிகள் எல்லா மொழிகளிலுமாக தாண்டிக் குதித்து நடந்து கொண்டிருந்தார்கள்.

கடைகளைக் காரியம் ஒன்றுமில்லாமல் பார்த்தேன். அதெல்லாம் மாக்சி விற்கிறவை. சேச்சிகளுக்கு மாக்சியில் வல்ய இஷ்டம் வரக் காரணம் என்ற யோசனையோடு திரும்ப ஓட்டல் படியேறியபோது \'வை(கி)ட்டு ஆறு மணிக்கு டாக்சி எத்தும்\' என்றார் வரவேற்பாளர். ஆலப்புழை போகத்தான்.

அவ்வளவு தாமதமானால் வேண்டாம். நாளைக்கே போயிக்கறேன்.

மலையாள மனோரமாவின் மற்ற பக்கங்களை மேய்ந்தபோது, தொண்ணூற்று மூன்று வயதான மூத்த மலையாளக் கவிஞர் பாலா நாராயணன் நாயருக்கு மாத்ருபூமி விருதாக இரண்டு லட்சம் ரூபாயும், தந்தப் பேழையும் வழங்கிச் சிறப்புரையாற்றினார் பிரசித்த தமிழ் எழுத்தாளர் அசோக் மித்ரன்.

சுந்தர ராமசாமியைச் சேர்த்து சுந்தரராமசாமி என்று எழுதுவது எவ்வளவு தப்போ அதைவிடத் தப்பு அசோகமித்திரனைப் இரண்டாக்கிப் பொட்டும் வைத்தது. ஆனாலும் இது அசோக் மித்ராவைவிட எவ்வளவோ பரவாயில்லை.

மலையாள எழுத்தாளரைக் கவுரவிக்கப் பிறமொழி எழுத்தாளரை நீங்கள் அழைப்பது போல் எங்கள் ஊரில் நடக்காது என்று அ.மி சேட்டன்மாரைப் புகழ்ந்து சொன்னதாகப் பத்திரிகைக் குறிப்பு.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இலவச இணைப்பும் உண்டு. மகா சோனியான அந்தப் பதினாலு பக்க இணைப்பில் பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு தொழிற்சாலையில் வாட்ச்மேனான கோபி மேனோனோடு பேட்டி. என்ன விசேஷம் என்று கேட்டால், புள்ளி ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். 1970களின் இறுதியில் வன்விஜயம் நேடிய தெலுங்குப் படமான \'டைகர் ராணி\' மூலம் வெற்றியைக் குவித்து, அடுத்து மலையாளத்தில் \'இனி அவன் உறங்கட்டே\' என்று இளைஞர்களைத் தூங்கவிடாமல் அனுராதாவை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து கமலஹாசனை நாயகனாக்கி \'மற்றொரு சீத\' எடுத்து, அப்புறம் அடுத்த படங்களில் கைக்காசு எல்லாம் இழந்து இப்போது காக்கி யூனிபாரத்தோடு காவல் காரனாக நிற்கிறார், பாவம்.

போதாக்குறைக்கு இவர் தற்போது வேலை பார்க்கும் ·பாக்டரியில் ஏதோ படப்பிடிப்பு என்று அண்மையில் ஒரு கோஷ்டி வந்திறங்கியபோது, \'சேட்டா, வாட்ச்மேன் வர்றதுபோல ஒரு சீன் இருக்கு. நடிக்கிறியா?\' என்று கேட்டு இவருடைய பூர்வகதை தெரியாதவர்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்களாம்.

\'முப்பத்தஞ்சு எம்.எம் பாக்யம், எழுபது எம்.எம் நிர்பாக்யம்\' என்று சாதுவாகத் தலைப்புப் போட்டு மனோரமா பிரசுரித்திருந்த செய்தி, தமிழ்ப் பத்திரிகைக்குக் கிட்டியிருந்தால் தலைப்பு என்னவாக இருக்கும்?

\'கமலஹாசன் படத் தயாரிப்பாளர் காவல்காரனானார்\'.

***********************************************************************
எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் - 4

\'கனவான்களே, சீமாட்டிகளே, அவரை(அவனை)ப் பிடித்து விட்டோம்.\'

சாயந்திரம் எல்லாச் சானலிலும் சதாம் ஹ¤சைன். மாட்டுத் தரகன் போல அவர் பல்லைப் பிடித்துப் பார்த்து, தலையில் பேன், பொடுகு இருக்கா என்று தடவினதை விடாமல் லூப்பில் போட்டுக் காட்டி மகிழ்ந்து கொண்டிருந்த கூட்டத்தில் யாருமே \'சதாம் கிடைச்சாச்சு, சரி. வெப்பன்ஸ் ஓ·ப் மாஸ் டெஸ்ட்ரக்ஷன் எங்கேப்பா?\' என்று கேட்காதது ஆச்சரியம் தான்.

பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை சதாம் வைத்திருப்பதால் அதைக் கண்டுபிடிக்கப் போவதாகச் சொல்லி ஈராக்கில் நுழைந்து, இப்போது சதாமைப் பிடிக்கத்தான் அங்கே போனதாக பி.பி.சி, சி.என்.என் தொடங்கி உள்ளூர் சானல் வரை நீளும்படியான ரீல் விடுவதைப் பத்து நிமிடத்துக்கு மேல் பார்க்கப் பொறுமையில்லாமல், வெளியே வந்தேன்.

அந்த மனுஷர் தான் ஆகட்டும். இப்படிப் பசுமாடு போலவா தேமேன்னு நிப்பார்? கைத்துப்பாக்கியை எடுத்துப் பொட்டில் வைத்துச் சுட்டுக்கொண்டு பரலோகம் போகவேண்டாமோ? அதுதானே வீரத்தின் லட்சணம்?

ஓட்டல் ரிசப்ஷனில் டி.வி பார்த்துக்கொண்டிருந்தவர்களில் யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதானே.

திரும்பத் தெருவில் இறங்க, ஒரு புத்தகக்கடை கண்ணில் பட்டது. கூட்டமும் இருந்தது. கிறிஸ்துமஸ், புதுவருட வாழ்த்து வாங்க நிற்கும் கூட்டம். டி.சி புக்ஸ், கோட்டயம் பிரசுரித்த ஏகப்பட்ட புத்தகங்கள் வைத்திருந்த அலமாரிகளின் பக்கம் தப்பித் தவறிக்கூட எந்த மலையாளியும் போகவில்லை.

மலையாளம் அகராதி புதுசா வந்திருக்கு சார்.

கடைச் சிப்பந்தி காட்டிய இடத்தில் 2003 செப்டம்பரில் புதுப்பதிப்பு வெளியான மலையாளம் - ஆங்கிலம் அகராதி.

இதே அகராதியின் 2001 பதிப்பு என்னிடம் இருக்கிறது. இதில் \'முத்தமிழ்\' என்பதற்கு \'தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் என்ற மூன்றும் சேர்ந்த மொழி\' என்று அபத்தமாக விளக்கம் எழுதியிருந்ததைப் படித்துக் கடுப்பாகி, முத்தமிழ் என்றால் என்ன என்று டி.சி புக்ஸ், கோட்டயத்துக்கு விவரமாக எழுதிப் போட்டேன். அது போன வருடத் தொடக்கத்தில். அவர்களும் ஏகத்துக்கு வருந்தி, அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்கிறோம் என்று வாக்களித்திருந்தார்கள்.

புதிய பதிப்பிலும் முத்தமிழ் அப்படியே தான் இருக்கிறது.

******************************************************************

எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் - 5

புத்தனங்காடி. ஆலப்புழைக்குத் தொட்டடுத்த இடங்கழிப் பிரதேசம். தென்னை மரங்கள் அடர்ந்த பரம்பு. நடுவில் ஒரு பதினாலு கெட்டு வீடு. என்றால் பதினாலு கோணம். அதாவது சின்னதும் பெரிசுமாகப் பதினாலு மாடங்கள். தேக்கு மரத்தால் செய்து தச்சு சாஸ்திரப்படிக்கு உருட்டி அமைத்துத் தூக்கி நிறுத்தியவை. மரமும், ஓடும், சுண்ணாம்புமாக எது எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்று புரியாதபடிக்கு இழைத்து இழைத்துக் கலந்து சேர்த்துக் கட்டிய இருப்பிடங்கள்.

தரையிலிருந்து ஐந்தடி உயரத்தில் வாசல் நிலை. ஏறிச் செல்ல நயமான மரப்படிகள். பாதி வரைக்கும் அறுத்து ஒரு கதவும், மேல் பாகம் இன்னொரு பகுதிக் கதவும். கீழ்க் கதவை அடைத்து, மேலே உள்ளதை அடுத்துச் சாத்தி, மணிச் சித்திரத் தாழை இழுத்துச் செருகினால் உள்ளே ஈசல் கூட நுழைய முடியாது.

இந்தத் தரவாட்டின் காரணவராக, மருமக்கள் தாயம் மரபாகிப் போன வீட்டோடு இருக்கப்பட்ட மூத்த மருமகனாக, அனந்திரவர்களான வீட்டுப் பிள்ளைகளை அதிகாரம் செய்துகொண்டு, குடை பிடித்தபடி படகில் போய், பக்கத்துக் கிராமத்தில் பச்சைக் கறிகாயும், மீனும் வாங்கி வந்து, நெல் பாட்டத்தில் முண்டு வலித்துக் குத்தி நடந்து விதைப்புப் பணி நோக்கியிருந்து, சாயந்திரம் குளித்து அம்பலத்தில் தொழுவதற்கு நெற்றியில் சந்தனமும் மேலே வெற்றுடம்போடும் நாலு முழ முண்டுடுத்தி நடந்து தேய்ந்து ஒரு நாள் மூச்சு நின்று இங்கேயே பலா மரத்தின் சுவட்டில் தகிக்கப்பட்டு இடிந்து போன நினைவு மண்டபமாகப் போனவன் நானாக இருக்கலாம். இல்லாவிட்டாலும் அந்தக் கூட்டில் புகுந்து கொள்ள ஒரு சிரமமும் இல்லை. அவ்வளவுக்கு இந்தச் சூழல் மனதிலோ மரபணுவிலோ ஆழமாகப் பதிந்திருக்கிறது.

எதிரே கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிகிற வேம்பநாட்டுக் காயல். அந்தி வண்ணம் பூச ஆரம்பித்திருக்கும் வெள்ளப் பெருக்கில் அங்கங்கே மீனுக்காகத் தண்ணீரில் மூழ்கும் பறவைகள் கும்க் கும்க் என்று மெல்லச் சத்தம் கூட்டுகின்றன. முக்குளித்து அலகில் மீனோடு மீண்டும் எவ்விப் பறக்கின்றன. நீர்த் தாவரங்கள் நீரோடு மிதந்து அங்குமிங்கும் ஒரு நிமிடம் ஒதுங்கி, அது நிலையான இடமில்லை என்று படத் திரும்ப நகர்கின்றன.

டப்டப் என்று பக்கத்தில் எங்கேயோ மோட்டார் படகு சத்தம். கையால் துழைத்துப் போகிற படகில் ஒருத்தன் வாழைக் குலைகளை ஏற்றிக் கொண்டு, வேகவேகமாகத் துடுப்புப் போட்டுப் போகிறான். அவனுக்கு முன்னால் உட்கார்ந்து பீடி வலிக்கிற கிழவருக்கு அருகே கிடைமட்டத்தில் ஒரு பழைய சைக்கிள். அக்கரையில் ஏதோ ஒரு கிராமத்துக்கு இன்னும் அரை மணி நேரத்திலோ ஒரு மணி நேரத்திலோ போய்ச் சேர்வார்கள். போனதும் அங்கே மண்தரையில் அவர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவார். வாழைக்குலை பின் சீட்டில் அப்படியும் இப்படியுமாக ஆடித் தரையைத் தொட்டுக்கொண்டு நகரும். படகுக்காரன் தன் வள்ளத்தைத் தன் கிராமத்துப் படகுத்துறையில் சேர்த்துக் கட்டிவிட்டு கொளுத்திப் பிடித்த லாந்தரோடு வீட்டுக்கு நடப்பான். அது படகுத் துறைக்குப் பக்கமாகத்தான் இருக்கும்.

குளிர் மணக்கும் காயல் பக்கம் மெல்லிய கீற்றாக டீசல் வாடை. படகின் எஞ்ஜின் அணைக்கப்பட்டு திரும்ப உயிர் பெற்றுப் புகையை உமிழ்கிறது. கடல் பறவை போல் இரைகிற படகின் அழைப்புச் சத்தம். தூரத்தே சீன வலைகள் தண்ணீரில் குனியத் தயாராக நிற்கின்றன.

வன்னு கேரு சாரே. நமுக்கு ஒண்ணு காயலில் கெறங்ஙி வராம்.

படகுக்காரன் இடுப்பு லுங்கியை முட்டுக்குக் கீழே தழைத்துக் கொண்டு அன்போடு விளிக்கிறான்.

ஏறி உள்ளே போகிறேன். மீன் வாடை. இப்போதுதான் கூடை இறக்கி இருக்க வேண்டும்.

மேல் தளத்தில் ஓய்வாக உட்கார்ந்து கேம்கார்டரை எடுக்கிறேன்.

தூரத்தில் தெரியும் தென்னந்தோப்புகளை நோக்கி நீர்ப்பரப்பைக் கிழித்துக் கொண்டு படகு முன்னேறுகிறது. மேற்கே இறங்கிக் கொண்டிருக்கும் சூரியன். மேலே வட்டம் போட்டு நகரும் ஒற்றைப் பருந்து. சீரான கதியில் சஞ்சரிக்கும் காற்று.

அப்புறம் கிராமங்கள். கரைக்கு இரண்டு பக்கத்திலும். ஒரு சாட்டம் சாடினால் அங்கே போய் யார் வீட்டு வாசலிலாவது விழுந்து விடலாம்.

எல்லா வீட்டிலும் மாக்சி அணிந்த பெண்கள் மீன் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். மாக்சி அணிந்த பெண்கள் காயலில் சமையல் பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். மாக்சி அணிந்த பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முண்டும் ப்ளவுஸ¤ம் உடுத்திய நாடன் மலையாளிப் பெண்ணை இனிமேல் செம்மீன் டி.வி.டியிலும் கள்ளி செல்லம்ம வி.சி.டியிலும் தான் ஷீலா உருவத்தில் பார்க்க வேண்டும்.

பல வர்ணத்தில் லுங்கி அணிந்து முழங்காலுக்கு வெகு மேலே உயர்த்திக் கட்டி பீடி பிடித்தபடி நடக்கிற ஆண்கள் தான் கேரளத் தனிமையைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதாக ஒரு தோற்றம்.

பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த சூடிதார் கன்னியர் சைக்கிள் மணி ஒலித்துக் கொண்டே வருகிறார்கள். ஒருத்தி வெள்ளையாகச் சிரித்துக் கையை அசைக்கிறாள். மகள் நினைவு வரத் திரும்பக் கையசைக்கிறேன்.

கரையில் வேகமாகப் போகிற டெம்போ பெட்டிக்கடையில் நிற்கிறது. கால்கேட் விளம்பரமும், ஒருவருக்காக உருவாக்கப்பட்ட மற்றவர் பற்றிய வில்ஸ் சிகரெட் விளம்பரமும் (சிகரெட்டும் புற்றுநோயும் போல) எழுதிய கடை. நாற்பது வாட் பல்ப் வெளிச்சத்தில் அலமாரியிலிருந்து டிடர்ஜெண்டோ சோப்போ எடுத்துத் தருகிற மாக்சிப் பெண் ஒரு வினாடி என் படகை அசிரத்தையாகப் பார்த்துவிட்டு வியாபாரத்தைத் தொடர்கிறாள்.

பக்கத்து வீடுகளில் மின்சார விளக்கு அணைத்து, நிலவிளக்கேற்றி நாம ஜபம் செய்து கொண்டிருப்பது கண்ணில் படுகிறது.

அந்த விளக்குகள் தவிர வெளிச்சம் இல்லை. கருப்புத் திரவமாக இருட்டில் மினுமினுக்கும் காயல். தூரத்தில் சீன வலைகளை மீன் பிடிக்கத் தாழ்த்திக் கொண்டிருக்கிறவர்களின் சத்தம் காற்றில் கலந்து வருகிறது.

திரும்பலாம் என்கிறேன்.

********************************************************************

எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் - 6

கேரளத்தில் சர்வசாதரணமாகப் பார்க்கவும், கேட்கவும் கிடைக்கும் இரண்டு வார்த்தைகள் - \'கள்ளு\' மற்றும் \'பணிமுடக்கு\'.

தலை குளிக்காத மலையாளிப் பெண்ணைக்கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம். ஆனால், கள்ளுக்கடையில்லாத கேரள கிராமத்தைப் பார்க்க முடியாது.

பணிமுடக்கு என்ற வேலை நிறுத்தம் அதே போல் வருடம் முழுக்க நடக்கிற விஷயம். யார் ஆண்டாலும், யார் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பணிமுடக்கு இல்லாமல் ஒரு மாதமும் கழியாது.

வேம்பநாட்டுக் காயல் பக்கம் கால் வலிக்க நடந்து விட்டுப் புட்டும் கடலையுமாகக் காலைச் சாப்பாடும், இன்னும் நாலு வருஷத்துக்குச் சேர்த்து வைத்து மிக நீண்ட குளியலும் முடித்து ( இந்தச் சுகானுபவம் சென்னை நண்பர்களுக்குச் சொல்லாமலேயே புரியும்) டபுள் முண்டான எட்டு முழ வேட்டியும் ஷேர்ட்டுமாய் அம்பலப்புழைக்குப் புறப்படத் தயாராக இறங்க, பணிமுடக்கு குறுக்கே புகுந்து ஓடியது.

டாக்சி ஓட்டிக்கான் பாடில்ல. கல்லு கொண்டு எறியும்.

யாரு?

பணிமுடக்குக்கார் தன்னே.

அதான்பா, யாரு ஸ்டிரைக் செய்யறது?

சிவசேனா, சாரே.

பால் தாக்கரேயின் சிவசேனை ஆள் பலமுள்ள கட்சிதான். அது மராத்திய மாநிலத்தில். இந்த நிமிடத்தில் \'சாம்னா\' படித்துக் கொண்டு, \'சத்ரபதி சிவாஜி மஹராஜ் கி ஜெய்\' சொல்லிக் கொண்டு அங்கே லட்சக் கணக்கில் சைனிக்குகள் வெப்ப மூச்சு விட்டுக்கொண்டு இருப்பார்கள். ஆனால் கேரளத்தில்? இருக்கப்பட்ட சிவசேனைக் காரர்களை நாலு மடேடார் வேன்களில் அடைத்துக் கொண்டு வந்துவிடலாம். அதிலும் இரண்டு வேன் மும்பை ரிஜிற்றேஷனோடு, பதினெட்டுப் படி ஏற வந்த மராத்திச் சாமிகளாயிருக்கும்.

என்ன போச்சு? நீர்க்கோலி (தண்ணீர்ப் பாம்பு) நினைத்தாலும் அத்தாழம் (ராச்சாப்பாடு) முடக்கும் கேரளத்தில், சிவசேனை நினைத்தாலும் ஜாம்ஜாமென்று பணிமுடக்கலாம். யார் ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தாலும் உடனே அன்போடு ஆதரித்து அதை வெற்றிகரமாக்கக் கேரளீயர் கொடுக்கும் ஒத்துழைப்பைப் பற்றிச் சொல்ல முத்தமிழில் (டி.சி.புக்ஸ், கோட்டயம் பதிப்பித்த மலையாள அகராதிப்படியான பொருள் கொள்க) வார்த்தை இல்லை.

விஷயம் இதுதான். சபரிமலை யாத்திரைக்கு, ஆன்றணியின் ஜக்ய ஜனாதிபத்ய முன்னணி அரசு பஸ் டிக்கட்டுக்கு மேல் சர்சார்ஜ் விதிக்க, மந்திரிசபையில் கதாகத வகுப்பு (போக்குவரத்து) மந்திரி பகுமானப்பட்ட பாலகிருஷ்ண பிள்ளை அதை நடப்பாக்க, போராட்டம் என்று மாட்டு வண்டி கட்டிக் கொண்டு சபரிமலை போகக் கிளம்பிய சிவசேனைக் காரர்கள் வண்டியோடு பத்தனந்திட்ட பஸ் ஸ்டாண்டில் அதிரடியாகப் பிரவேசிக்க, பொலீஸ் தடியடியில் மனுஷரும் மாடும் எல்லாம் காயம் அடைய, அடுத்த நாள் தென் மாவட்டங்களில் சிவசேனா பந்த் அறிவிப்பு.

இவ்வளவுக்கும் ஆலப்புழை மாவட்டம் அம்பலப்புழை வட்டத்தில் முந்திய நாள்தான் ஏதோ உள்ளூர் விஷயமாகச் செறிய தோதில் ஒரு \'பந்த்\'. கடையடைப்பு. ஆனால் என்ன? இன்னொரு நாள் பணிமுடக்கு என்றால் வேண்டாம் என்று சொல்ல முடியுமா என்ன?

சாயந்திரம் ஐந்து மணிக்குப் பணிமுடக்கு முடிந்ததும் அம்பலப்புழை போகலாம் என்று தள்ளிப்போட்டு, காயலைப் பார்க்க பிரம்பு நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கரிக்கயும், சம்பாரமும் குடித்தபடி (என்றால் இளநீரும், மோரும்) கையில் எடுத்துப் போயிருந்த குந்தர் கிராஸின் \'கிராப் வாக்\' நாவலை முழுக்கப் படித்துத் தீர்த்தேன்.

அப்புறம் எடுத்தது சில மலையாள வாரப் பத்திரிகைகளை. பாதிப் பக்கம் கருணாகரன் வெர்சஸ் ஆன்றணி. முன் முக்ய மந்திரி தோழர் நாயனார் தில்லி ஆல் இந்தியா மெடிக்கல் சயன்ஸ் இன்ஸ்ற்றிட்யூட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கருணாகரனும், மார்க்சிஸ்ட் நேதாவு அச்சுதானந்தனும் அன்போடு கைகுலுக்குகிறார்கள். மார்க்சிஸ்ட் நட்பைக் கொண்டாடுவதற்காக, கருணாகரனின் மகனும் கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான முரளீதரன் லண்டனுக்கு அவசரமாகப் புறப்பட்டுப்போய், கார்ல் மார்க்ஸ் சமாதியில் மலரஞ்சலி செலுத்தி ஸ்வெட்டரோடு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

கருணாகரன் ஆதரவாளர்களும், ஆன்றணி ஆதரவாளர்களும் தில்லிக்குக் குளிரில் நடுங்கிக் கொண்டு படைபட்டாளமாகக் கிளம்பிப்போய் கதவிலக்கம் பத்து, ஜன்பத் வீட்டு வாசலில் சோனியா காந்தியிடம் புகார், பதில் புகார் என்று பட்டியல் கொடுக்க ம·ப்ளரைத் தலையில் சுற்றிக் கொண்டு தேவுடு காக்கிறார்கள். \'அம்மா என்னைப் பார்த்துச் சிரித்தார் - நாளைக்கே ஆன்றணியை அம்பேலாக்கிடுவார்னு புரிஞ்சு போச்சு\' என்றோ, \'அம்மா கருணாகரன் பேரைக் கேட்டதுமே மூக்கை உறிஞ்சினார். அந்த ஆள் அரசியல் ஆட்டம் க்ளோஸ் இனிமே\' என்றோ சந்தோஷத்தோடு உள்ளூர்ப் பத்திரிகைகளுக்குப் பேட்டி தருகிறார்கள்.

கேரளா காங்கிரஸ் மாணி குழு, கேரளா காங்கிரஸ் பாலகிருஷ்ண பிள்ளை குழு, இடது சாரியிலிருந்து வெள்ளை சாரியுடுத்து வலம் தாவிய முன்னாள் மார்க்சிஸ்ட் கௌரி அம்மாளின் கட்சி, லீக், தேசலாகிப் போன சி.பி.ஐ என்று ஏகப்பட்ட கட்சிகள், குழுக்கள், தலைவர்கள். நம்மூர்ப் பத்திரிகைகள் சினிமாக்காரர்களைப் பிடித்துத் தொங்க, மலையாளிகளுக்குச் செய்தித் தீனி போடுவது இந்த அரசியல் தான்.

இதற்கு இடையே கேரளச் சட்ட மன்ற உறுப்பினர்கள் காடு மலையெல்லாம் கஷ்டப்பட்டு ஏறி, அவர்கள் பிரதேசத்து நதிகளிலிருந்து தமிழகம் தண்ணீர் திருடுகிறதா என்று துப்பறியத் தொடங்கி வழுக்கி விழுந்து காலை முறித்துக் கொள்கிறார்கள். தண்ணீர் திருட்டெல்லாம் ஒன்றுமில்லை, நதி போகிற திசையே தமிழகம் நோக்கித்தான் என்று ஈன சுவரத்தில் காலைப் பிடித்தபடி சொல்ல, அதிகாரிகள் \'அன்னிக்கே இதானே சார் சொன்னோம்\' என்று முணுமுணுக்கிறார்கள்.

ஆன்றணியோ பரப்பிரம்மமாக \'சதாம் உசைனைக் கவுரவமாக விசாரிக்க வேண்டும்\' என்று ஜார்ஜ் புஷ்ஷ¤க்குக் கோரிக்கை தெரிவித்து அறிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்.

பத்திரிகையில் வாசகர் கடிதம் பகுதியில், அமெரிக்காவில் சிக்காகோவில் உட்கார்ந்து கொண்டு சாக்கோ கணியாலில் என்ற மலையாளி இன்னொரு டிபிக்கல் மலையாளி நடப்புக்காகக் கவலைப்பட்டு எழுதியிருந்தார். அது திடீர் விடுமுறை பற்றியது.

கேரளத்தில் எந்த மாஜி மந்திரிக்குச் சிவலோக பதவி கிடைத்தாலும், உடனே சர்க்கார் விடுமுறை. ·பைலை மூடி வைத்துவிட்டு, சேட்டரும், சேச்சிமாரும் குடையோடு வீட்டுக்குப் பகல் தூக்கம் போடத் திரும்ப, அரசு ஊழியர்க்குச் சம்பளப் பணம் போன்ற வகையில் இருபது கோடி ரூபாய் தண்டத்துக்குச் செலவு.

கிட்டத்தட்ட அறுபது மாஜி மந்திரிகள் இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆக ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய்க்குச் செலவுக் கணக்கு இப்பவோ அப்பவோ என்று நிற்கிறது. கேரளம் தாங்குமா இதை என்ற சிக்காகோ சாக்கோச்சனோடு நானும் நொந்து நூலாகிப் போனேன்.

திரும்பவும் டி.வி. திருவனந்தபுரம் திரைப்பட விழா.

சோமரத்ன திஸ்ஸநாயகா என்ற இலங்கை இயக்குனர் எடுத்த \'லிட்டில் ஏஞ்ஜல்\' படம் பற்றிய உரையாடல். மலையகத் தோட்டத் தொழிலாளி குடும்பத்தில் பிறந்த ஒரு தமிழ்ச் சிறுமிக்கும், தோட்ட முதலாளி மகன் சிங்களச் சிறுவனுக்கும் நடுவே இயற்கையாக ஏற்படும் நட்பு பற்றிய அழகான அந்தப் படத்தை யார் பார்க்கிறார்களோ இல்லையோ, சுஜாதாவும் மணிரத்தினமும் கட்டாயம் பார்க்க வேண்டும்.

தொடர்ந்து, முழுக்க முழுக்கத் தமிழ் வசனங்களும் ஆங்கில, சிங்கள சப் டைட்டில்களுமாக, \'இன் தி நேம் ஓ·ப் புத்தா\' என்ற இலங்கைப் படம் பற்றி அதைத் தயாரித்த மிஸ்டர் டச்வாட்டரோடு பேட்டி. டச்வாட்டர் சரளமாக மலையாளத்தில் சம்சாரிக்க ஆச்சரியப்பட்டுப் போனேன். அப்புறம் தான் மனதில் ஒரு பளிச். புள்ளிக்காரன் மலையாளிதான். தொடுப்புழ என்ற குடும்பப் பெயர். அதை அதிரடியாக மொழிபெயர்த்து டச்வாட்டர் ஆக்கி விட்டார்.

லண்டனில் தன் ஈழத் தமிழ் நண்பர்கள் விவரித்த சோகங்களைக் கேட்டு அதிர்ந்து போய், அனுதாபம் கொண்டு அவர்கள் நாடு விட வேண்டி வந்த காரண காரியங்களைச் சித்தரிக்கும் இப்படத்தை உருவாக்கியதாகச் சொன்னார் ராஜேஷ் டச்வாட்டர். லோ பட்ஜட் படம் இல்லை என்பதால் விவரணையோடு கூடிய காட்சிச் சித்தரிப்புகள். மலையாள பூமியிலேயே இலங்கைச் சூழ்நிலையைத் தத்ரூபமாகப் பதிவு செய்த படத்தின் காட்சிகள் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும். சொந்த பூமியை விட்டுச் சாரி சாரியாக நடக்கும் குடும்பங்கள், நடைக்கு இடையே ஓடி வந்து மகனின் கல்லறையில் அழும் அன்னை, கொட்டும் மழையில் கையில் இறந்த மகனின் சடலத்தோடு புரட்சிப்படைத் தலைவன் முன்னால் நடந்து சடலத்தைக் கிடத்தி, \'நாம் இப்படி வித்துக்களையே பறிகொடுத்திட்டு இருக்கோம். அப்புறம் அறுவடைக்கு என்ன மிஞ்சும்?&quot; என்று கதறும் தந்தை..

மறக்க முடியாத படமாக இருக்கும் என்று கண்ட சில காட்சிகளிலேயே தெரிந்து போனது.

லண்டனில் அரங்கு நிறைந்து படம் ஓடியதாகப் பேட்டியில் சொன்னார் ராஜேஷ். தமிழ்நாட்டில் இப்படம் பார்க்க வாய்ப்புக் கிட்டுமா என்பது தெரியாது. ஆனால், தமிழ் டிவி சானல்களிலும் இது பற்றிப் பேசப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரியும்.

நிகழ்ச்சி முடிந்து இன்னொரு மலையாளச் சானல். மலையாள எழுத்தாளர் சாரா ஜோச·ப் கூட அபிமுக சம்பாஷணம். சின்னச் சின்ன மலையாள நகரங்களும், வீடுகளும், பள்ளிகளுமாகத் திரையில் நகர்கின்றன. எல்லாம் சாரா வாழும், வாழ்ந்த, புழங்கிய இடங்கள். ஒவ்வொரு காட்சி வரும்போதும் தன்னுடைய எந்தப் படைப்பில் அந்த இடமும், அவிடத்து மனிதர்களும் வருகிறார்கள் என்று விவரிக்கிறார் சாரா. பேட்டி கண்டவர், எழுத்தாளர் எழுதிய படைப்புகளை எல்லாம் படித்தவர் என்பதால் மேலும் கருத்துப் பரிமாற்றம் நிகழ இயல்பாக வழிசெய்தபடிக்குப் பேட்டியைத் தொடர்கிறார்.

சிவசேனைக்கு நன்றி. ஒரு பகல் பொழுது உருப்படியாக இப்படிக் கழிய எனக்கு வசதி செய்து கொடுத்ததற்கு.

சேட்டா, அம்பலப்புழ போகான் கார் வன்னெத்தி.

*********************************************************************
எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் - 7


கோயில் வாசல் கடைகளுக்கு என்று ஒரு பொதுத்தன்மை உண்டு.

பிஸ்லரி மினரல் வாட்டர் பாட்டில், கோலக் குழல், பிளாஸ்டிக்கில் சிறைப்பிடித்த தெய்வத் திருப்படங்கள், பாசிமணி மாலை, இரண்டாவது தடவையாக டேப் ரிக்கார்டரில் போட்டால், யேசுதாஸ் உள்ளே சிக்கி அழும் பக்தி கேசட்டுகள், அமிர்தாஞ்சனம், கொண்டை ஊசி, பம்பரக் கயிறு, சீசனில் நூல் கயிற்றில் தூக்குப் போட்டுப் பாம்புப் பஞ்சாங்கம். அடுத்த வருஷத்துத் தினசரிக் காலண்டர்.

அம்பலப்புழை கோயில் வாசல் கடைகளில் மலையாளத்தில் மாத்ருபூமி காலண்டர். மற்றது முன் பத்தியில் உள்ளவை.

சேட்டா செருப்பு ஊறிப் போகணும். ஷேர்ட் இட்டுப் போகான் பாடில்யா.

கடைக்காரர்களின் கரிசனத்துக்கு நன்றி சொல்லி நடந்தேன்.

கடைகளைக் கடந்து இடது புறம் திரும்பினால் பொந்து போல் சிறிய வாசல்.

ஈ நவரத்ன மோதிரம் தரிக்குன்னவர் ஆக்ரஹிக்குன்னது முழுவன் நேரத்தே கிட்டும். ஸ்வர்ணமோ, ஸ்த்ரியோ, பின்னெ லோட்டரியில் வல்ய பம்பர் பிரைஸோ.

ஒண்ணும் வேணாம்ப்பா. கோயில் வாசல்லே விட்ட செருப்பு காணாமல் போகாமல் இருந்தால் போதும்.

பதில் சொல்ல வாயை எடுத்தால், அம்பல வாசலில் மோதிரக் கடை பரத்தியிருந்தவன் டியூப் லைட் வெளிச்சத்தில் \'வெள்ளி நக்ஷத்ரம்\' சினிமாப் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறான். அவன் பக்கத்தில் டேப் ரிக்கார்டரில் \'ஈ நவரத்ன மோதிரம் தரிக்குன்னவர்.. கேவலம் நூறு ரூபயாணு\'.

கேவலம் நூறு ரூபாய் கொடுத்து நவரத்தின மோதிரத்தை வாங்கி விரலில் போட்டுக் கொண்டு, தோளில் துணி சஞ்சியில் தங்கக் கட்டிகளும், கூடவே ஒரு தலை குளித்த ஸ்திரியுமாகச் சென்னையில் வீட்டுப் படியேறத் துணிச்சல் இல்லாததால், சாதுவாக அம்பலத்தின் உள்ளே நடந்தேன்.

முணுக் முணுக் என்று ஏழெட்டு ட்யூப் லைட் வெளிச்சத்தில் நிழலாட்டம் காட்டும் கம்பீரமான அம்பலத்தின் மரக் கூரை. சுற்றம்பலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தீபங்கள். ஒலிபெருக்கியில் பி.லீலாவின் குரலில் ஒழுகி வரும் நாராயணீயத்தில் பாதாதிகேச வர்ணனை.

எதிர்பார்த்ததுபோலவே வெளித் திண்ணையில் ஒரு கிழவர்.

முத்தச்சா, செருப்பு இங்கே விடலாமா?

அவர் தேர்தல் விளம்பரம் போல் இரண்டு விரலைக் காட்டினார்.

ஷேர்ட்டும் அழிக்கணும்.

சட்டையை அப்புறம் கழற்றுவதாகச் சொல்லி விட்டுத் திரும்பியபோது, மின்சாரம் போயிருந்தது. பாதாதி கேசம் கழுத்து வரை வந்து 
				</description>
				<pubDate>Mon, 25 Jan 2010 00:00:00 MST</pubDate>
                </item><item>
				<title>
					கும்பகோணம் 2001
				</title>
                <link>http://www.eramurukan.in/tamil/magazines.php?news_id=2#2</link>
				<guid>http://www.eramurukan.in/tamil/magazines.php?news_id=2#2</guid>    
                <description>
				வாரம் முழுக்க வேலையில் மூழ்கி முத்தெடுத்து சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பும்போது இவள் சொன்னாள் : &quot; மதியம் ரெண்டு மணிக்குக் கும்பகோணம் போகணும்..நினைவிருக்கில்லே?&quot;

&quot;ஆபீஸிலிருந்து நேரா எழும்பூர் வந்திடறேன்&quot;

&quot;எக்மோர் எதுக்குப் போறது? வீடியோ பஸ். வீட்டு வாசல்லேயே ஏறிக்கலாம். சாயந்திரம் ஆறரை ஏழு மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நேரத்துக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்&quot;

வீடியோ பஸ். நினைத்தாலே வயிற்றில் ஒரு சங்கடம். முட்டிக் கொண்டு வரும்போது நிறுத்த மாட்டார்கள். ஏதோ கண் காணாத இடத்தில் &quot;பத்து மினிட் வண்டி நிக்கும் சார்..காப்பி குடிக்கறவங்க குடிச்சுக்கலாம்&quot; என்று அறிவித்து ஒரு பெருங்கூட்டத்தை அற்பசங்கைக்காக இடம் தேடி ஓட வைப்பார்கள். வண்டிக்குள் சதா உச்ச ஸ்தாயியில் அலறும் சினிமா. மலேய மொழிபெயர்ப்பில் கீழே தொடர்ந்து, \'அபாங்க்...அதாங்க்..&quot; என்று ஏதோ ஓடிக் கொண்டிருக்க பாச மழை பொழிந்து கூட்டுக் குடும்பம் பிரியும். வெனீஸில் கனவுக்கு ஆடி விட்டு, கொட்டாம்பட்டியில் ஆப்பம் சாப்பிடுவார்கள்.

&quot;கார்லே போயிடலாம்&quot;

எடுபடவில்லை. மழை காலத்தில் நானூறு கிலோமீட்டர் போக காரை எடுக்க வேண்டாம். பஸ் தான் சரி.

இரண்டு மனிக்கு சொகுசு பஸ்ஸில் உட்கார்ந்தபோது ஏகப்பட்ட பேர் விசாரித்தபடி இருந்தார்கள் &quot;என்ன படம் இன்னிக்கு?&quot;

நடத்துனரும் அடுத்தாளும் மர்மப் புன்னகையோடு எல்லோரிடமும் கர்மசிரத்தையாகக் கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். அதாவது நான், என் மனைவி, கல்யாணத்துக்கு வரும் மாமிகள், முந்திய சீட் பாய், பர்தாவில் அவங்க வீட்டம்மா, நாலைந்து சேட்டு வீட்டுக் கிழவிகள், சட்டைப் பையில் சிகரெட் பாக்கெட் எட்டிப் பார்க்கும் இரண்டு இளைஞர்கள் இன்னும் யாராரோ ஒன்றாகச் சேர்ந்து சுற்றுலா பஸ்ஸில் கும்பகோணம் இன்பச் சுற்றுலா போகிறோமாம்.

சட்டம் கழுதை என்பது எத்தனையாவது தடவையாகவோ நிரூபணம் ஆகிறது.

&quot;வீடியோ போடுங்கப்பா&quot;...&quot;ரிப்பேருங்க&quot;..&quot;ஏன் சொல்லலே?&quot;..&quot;நீங்க கேக்கலே&quot;..&quot;பாட்டாவது போடுங்க&quot;..

கையில் கொண்டு வந்த புத்தகத்தை விரிக்கிறேன். தரவாட்டு நாயர் ஸ்திரியின் அதிசௌந்தர்யத்தைக் கேள்விப்பட்டு தம்புரான் ஆளனுப்பி கோலோத்து அரண்மனைக்குக் கூட்டி வரச் சொல்கிறார். இருண்ட மண்டபங்களின் வழியே மெல்ல நடந்து உள்ளே போகிற சுந்தரிப் பெண்குட்டி. வயதான தம்புரான் ஜயண்ட் சைஸ் சாய்வு நாற்காலியில் இரண்டு பக்கத்திலும் இறக்கை மாதிரி மரக்கைகளை நீட்டி வைத்து அதில் காலமர்த்திக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட அதே நிலையில் புஷ்பேக் இருக்கையில் நானும். தூங்கிப் போகிறேன்.

விழித்தபோது பண்ருட்டி, மீன்சுருட்டி, சேத்தியாதோப்பு என்று ஒவ்வொன்றாகக் கடந்து போகிறது.

தமிழகத்தில் ஒரு ஊருக்கும் மற்றதுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது.

எல்லா ஊரிலும் கடை வீதியில் வரிசையாகக் கடைகளில் டியூப் லைட் வெளிச்சத்தில் மும்முரமாகப் புரோட்டா சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடைகளில் எல்லா வயது ஆண்களும் எச்சில் கையோடு அடுத்த புரோட்டாவுக்காகக் காத்திருக்கிறார்கள். இவர்கள் ராத்திரி வீட்டில் ஏதாவது சாப்பிடுவார்களா இல்லை தூக்குச் சட்டியில் வாங்கிப் போய்விடுவார்களா என்று தெரியவில்லை.

பேசாமல் புரோட்டாவைத் தமிழ்நாட்டின் தேசிய உணவாக அறிவித்து விடலாம்.

புரோட்டாக்கடை வைத்தது போக மீதி இடத்தில் பேன்ஸி ஸ்டோர் கடைகள் - தமிழகத்தின் கலாசார சின்னமான நீல நிற பிளாஸ்டிக் குடங்கள் வரிசையாக அடுக்கி வைத்திருப்பது கண்ணில் படுகிறது. அப்புறம் கோல்ட் கவரிங் கடைகள். எல்லாச் சுவர்களிலும் நகராட்சி, பஞ்சாயத்துத் தேர்தலுக்காக இலை, சூரியன், சைக்கிள்...கேஸ் சிலிண்டர் சின்னத்தில் கோவிந்தராஜனுக்கு ஓட்டுப் போடுங்கள்.


காதி வஸ்திராலயத்தில் அழுக்குப் பழுப்பு விளக்கு வெளிச்சத்தில் ஒரு செய்தித்தாளில் வறுத்த கடலையைக் குவித்து வைத்து மென்றபடி மூன்று பேர் காந்தி படத்துக்குக் கீழே சுவாரசியமாக விவாதித்துக் கொண்டிருப்பது பின் லாடனா? தீபாவளி அட்வான்ஸா?

வண்டி சுமார் வேகத்துடன் நகர, டாப்ளர் எபக்டில் ஒலிபெருக்கிச் சத்தம் - &quot;வள்ளல் பெருமான் அவதரித்த ஊரில் காண்ட்ராக்ட் ஊழல் என்றால் என் நெஞ்சம் கொதிக்கிறது&quot;

அண்ணே..ஆத்திரப் படாதீங்க.. கொஞ்சம் இப்படி உட்காருங்க..யாருப்பா அங்கே..அண்ணனுக்கு சூடா ரெண்டு புரோட்டா, சால்னா, சின்னதா ஒரு மராமத்து காண்ட்ராக்ட் ஏற்பாடு பண்ணுங்க..

ஒரு வழியாகக் கும்பகோணம்.

சைக்கிளில் போகிற சாஸ்திரிகள் மணியடித்துக் கொண்டே போகிறார்.

&quot;அன்னிய தேசம் க்ருதம் பாவம் வாரணாசிம் வினச்:யதி
வாரணாசிம் க்ருதம் பாவம் கும்பகோணம் வினச்:யதி
கும்பகோணம் க்ருதம் பாவம் கும்பகோணே வினச்:யதி&quot;

(வேறு எங்காவது பாவம் செய்தால் காசியில் விமோசனம். காசியில் பாவம் செய்தால் கும்பகோணத்தில் விமோசனம். கும்பகோணத்தில் பாவம் செய்தால் கும்பகோணத்தில் தான் விமோசனம்).

தி.ஜானகிராமனின் &quot;மோகமுள்&quot; நாவலில் இரண்டாம் பக்கத்தில் வாசனை விடயம் மென்று கொண்டு சுலோகம் சொல்லும் சாஸ்திரிகள் நினைவுக்கு வருகிறார்.

ஒரு ராத்திரிக்குள் கும்பகோணத்தில் பாவம் பண்ண முடியாது. விடயம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.

மேலக் காவேரி பாணாத்துறை வடக்கு வழியாகப் போய்ச் சேர்ந்து, சாப்பிட்டு, வார்த்தை சொல்லிக் கொண்டிருந்து விட்டு, மொட்டை மாடியில் நட்சத்திரங்களுக்குக் கீழே பாய் விரித்துப் படுக்கிறேன். சுற்றித் தென்னைமரங்கள், மலை வேம்பு, மா மரங்கள், எலுமிச்சை, தேக்கு மரம், நந்தியாவட்டை..எங்கேயோ மாதுளம்பூ விரியும் வாசம்.

&quot;ராத்திரியில் திடீர்னு மரத்துலே பட்சி எல்லாம் ஒரு தினுசாக் கத்தும். எழுந்து பார்த்தா, சில சமயம் ஒரு மரத்திலிருந்து இன்னொண்ணுக்கு பாம்பு தாவும்..&quot;

மைத்துனன் சுவாரசியமாகச் சொல்கிறான். தென்னை மரங்களை நிமிர்ந்து பார்க்கிறேன். ஒரு சத்தமும் இல்லை.

நீட்டி நிமிர்ந்து மல்லாக்கப் படுக்க, தலைமாட்டில் யாரோ கொசுவர்த்திச் சுருள் ஏற்றி வைக்கிறார்கள். வரிசையாகப் பாய் விரித்துப் படுத்த ஆண்கள். எல்லோர் தலைமாட்டிலும் ஊதுபத்தி போல் கொசுவர்த்தி என்று கொஞ்சம் அமானுஷ்யமான சூழல்.

பாதி ராத்திரியில் விழித்தபோது மரத்தில் ஆந்தை உட்கார்ந்து வெறித்துக் கொண்டிருப்பது கண்ணில் படுகிறது. ஒரு கூட்டம் மின்மினிப் பூச்சிகள் மாமரத்தைச் சுற்றி ஒளி வளையம் இட்டுப் பறந்து கொண்டிருக்கின்றன. குளிரக் குளிர ஒரு காற்று மெல்லக் காது மடலைச் சிலிர்க்க வைக்கிறது.

இந்த ராத்திரி இப்படியே நீண்டு போகட்டும் என்று நினைத்தபடித் திரும்பக் கண் அயர்கிறேன்.

ஜோதிகா ஆட்டத்தோடு பொழுது விடிகிறது. கே டிவியை யாரோ கர்ம சிரத்தையாக விடிந்து அஞ்சரை மணிக்குப் போட, கே சானலில் அந்தம்மா தரிசனம்.

சானல் மாற்றி ஜெயாவில் தமிழ் சுப்ரபாதத்தோடு திருமலை. தினசரி வருகிற ஒரே உற்சவத்தில், நரைமீசையும், தொப்பையுமாக கருப்பாக ஒரு பட்டாச்சாரியார் பெருமாளோடு புஷ்கரணியில் முழுகிக் கொண்டிருக்கிறார்.

தினமலரில், தஞ்சையில் பிக்பாக்கெட் அடித்துப் பிடிபட்ட நான்கு பெண்களின் புகைப்படம். முதல் பக்கத்தில் ஜெ-வுக்கு ஈமெயிலில் வந்த மிரட்டல்.

&quot;குளிச்சிட்டு வாங்க..முகூர்த்தம் ஆரம்பிக்கறதுக்குள்ளே போகணும்&quot;

கும்பகோணம் தெரு பூவாடையும் சாண வாடையும், வெங்காய மண்டி வாடையுமாக விரிகிறது. யமுனாவும், பாபுவும் தி.ஜானகிராமனும் நடந்த தெருக்கள்..எம்.வி.வெங்கட்ராம் \'காதுகள்\' பற்றி யோசித்தபடி நடைபோட்ட வீதிகள்.. நண்பர் \'பறை\' பொதியவெற்பன் இங்கே தான் எங்கேயோ இருக்கிறார்.. எங்கே?

முகூர்த்தம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. பசியாறிவிட்டுக் கடியாரத்தைப் பார்க்கிறேன். ஒரு மணி நேரத்துக்கு மேல் இருக்கிறது.

வழியில் போகிற ஆட்டோவை நிறுத்துகிறேன். &quot;கோயிலுக்கு எல்லாம் போகணும்..&quot;

&quot;முகூர்த்தத்துக்கு லேட் யிடும்&quot; பட்டுப் புடவையில் இவள் வேண்டாம் என்கிறாள். &quot;பக்கத்துலே ராகவேந்திரா கோவில் இருக்காம்..அங்கே வேணா போய்ட்டு வந்திடலாம்&quot;

ராகவேந்திரரை அப்புறம் தரிசித்துக் கொள்ளலாம். கும்பேசுவரரும், பெருமாள்களும் வரச் சொல்லித் தாக்கீது பிறப்பித்திருக்கிறார்கள்.

ஆட்டோ கிளம்புகிறது.

கும்பேசுவரர் கோவில். வழக்கமான \'கைலி அணிந்து கோவிலுக்குள் வரக்கூடாது\' அறிவிப்புப் பலகைக்குப் பக்கத்தில், &quot;பால் பாக்கெட் அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை&quot;

பாங்காக்கில் இரவு விடுதி வாசலில் புத்தர் விக்ரகத்துக்குக் கீழே தகரக் குடுவையில் கோக்கோ கோலா படையலாக வைத்திருப்பது நினைவு வருகிறது.

சுவரில் திருப்பதிகங்களில் மூழ்குகிறேன். இவள் கடியாரத்தைப் பார்க்கிறாள்.

&quot;கூடிக்கூடி உன்னடியார்
குனிப்பார் சிரிப்பார் களிப்பாராய்
வாடிவாடி வழியற்றேன்
வற்றல்மரம் போல் நிற்பேனே&quot;

&quot;இங்கேயே நின்னுட்டிருந்தா எப்படி? சரசரன்னு முடிச்சுட்டுக் கல்யாண மண்டபம் போக வேணாமா?&quot;

பாரதியின் \'ஞானரதம்\' கதையில் கிரணத்தைப் பிடித்துப் போகிறவன் போல் உணர்கிறேன். இவள் &quot;பொதிமாட்டைப் போன்ற ஸ்திரி&quot; இல்லை. அன்புக்குரிய மனைவி.

சுவரில் ஞானசம்பந்தர் அருளிச் செய்த திரு எழுகூற்றிருக்கை ரத பந்தமாக வரையப்பட்டிருக்கிறது.

உள்ளே பிரகாரத்தில் சுந்தரர் \'விழிநோய் நீக்க வழி கூறிப் பாடிய பதிகம்\'. இடக்கண்ணுக்கான பதிகத்தைப் பதம் பிரித்துப் படித்து முடித்து அடுத்த கண்ணுக்கு வருவதற்குள், &quot;வாங்க போகலாம்.. ஊஞ்சல் ஆரம்பிச்சுடும்&quot;

கும்பேசுவரர் கோவிலிலிருந்து புறப்பட்டு ஆட்டோ ராமசாமி கோவிலில் நிற்கிறது. &quot;பத்தே நிமிஷம்&quot;.. ஓடுகிறேன்.

தூணில் புடைப்புச் சிற்பமாக மூரிச்சிலைத் தடக்கையோடு கம்பீரமான ராமபிரான். நெடிய அந்தத் திருமேனி முழுக்க எண்ணெய் முழுக்காட்டி வைத்திருக்கிறார்கள்.

தூணின் அந்தப் பக்கத்தில் பிராட்டி. தூக்கிக் கட்டிய அழகான தலையலங்காரத்துக்கு மேலே ஒட்டடை படிந்திருக்கிறது. எம்பி நீக்குகிறேன். அடுத்த பக்கத்தில் அனுமன். அழுக்குப் புரண்ட திரு உருவம். நாலாவது பக்கத்து இலக்குவன் இருட்டிலும் தூசியிலும் பாதிதான் கண்ணில் படுகிறான்.

அடுத்த தூணில் ஒய்யாரமாக அன்ன வாகனத்தில் சாய்ந்திருக்கும் பெண்ணின் சிற்பம். லேடி காடிவா போன்ற திண்ணென்ற உருவம். யார் அது? யட்சியா?

பட்டாச்சாரியார் திருவிளக்கு வெளிச்சத்தில் பெருமாளையும் பிராட்டியையும் சேவிக்கக் காட்டுகிறார். வலது புறத்தில் கையில் வீணையும் ராமாயணமுமாக அனுமன் கண்ணை ஈர்க்கிறான். வீணை வாசிக்கும் அனுமன் வேறு எங்காவது உண்டா என்று தெரியவில்லை. ராமாயணத்தில் வீணைக் கொடியுடைய ராவணன் மட்டும்தான் இசைஞானி என்று இத்தனை நாள் நினைத்திருந்தேன்.

&quot;தொட்டிலில் குழந்தையாகப் பெருமாள். எடுத்துக் கையில் ஏழப் பண்ணினா, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்&quot;

பட்டாச்சாரியார் உன்னிப்பாகப் பார்க்கிறார். என் பிள்ளைகள் வீட்டில் இருப்பதைச் சொல்ல வேண்டுமோ?

வாசலுக்கு வந்து ஆட்டோவில் ஏற, பக்கத்துப் பெட்டிக் கடையில் சத்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் - &quot;கம்ப்யூட்டர் லேசுப்பட்டதில்லே...பேக்டீரியான்னு கிருமி இருக்கு பாரு..அது கூட கம்ப்யூட்டர் மூல்யமாப் பரவுதாம்&quot;

கம்ப்யூட்டர் கிருமியை மனதிலிருந்து அகற்றி விட்டு, சாரங்கபாணி கோவிலில் இறங்குகிறேன்.

கம்பீரமான விண்ணகரம். யானை இழுக்கும் கல்தேர் போல் பிரம்மாண்டமான மண்டபம். தேர் நகர்வது போல் தெரிகிறது. பிரகாரச் சுவர்களில் வரிசையாக ஓவியங்களில் ராமாயணம். நாயக்கர் பாணியிலிருந்து \'குமுதம்\' பத்திரிகையில் வரைந்த \'வர்ணம்\' பாணி வரை இருக்கிறது. ஜெயராஜ் பட சாயலில் யாரும் தட்டுப்படவில்லைதான்.

இந்தக் கோயில் சுவரிலும் ரதபந்தனம். &quot;திருக்குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடரவமளியில் அணிதுயில்\' திருமாலைக் குறித்துத் திருமங்கை ழ்வார் பாடியது.

இயல்பான கவிஞர்களான சம்பந்தரையும், திருமங்கை மன்னனையும் கிராஸ்வேர்ட் புதிர் போல் எழுத்து எண்ணிச் சதுரத்தில் அடைத்து ரதபந்தமும், பசுமூத்திர பந்தமும் மற்றதும் பாட வைத்த புண்ணியவான்கள் யார்? \'கொட்டாவி விட்டதெல்லாம் கூறு தமிழ்ப் பாட்டாச்சே&quot; என்று இடைக்காலப் புலவர்களைப் பற்றி எழுந்த எரிச்சல் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் மட்டும்தானா?

&quot;ஊஞ்சல் முடிந்து மாலை மாற்று ஆரம்பித்திருக்கும்&quot;

சக்ரபாணி கோயில். குடமுழுக்கு கி வண்ணம் மினுக்கிக் கொண்டிருக்கும் கோவிலில் நுழைந்ததும் நடுநாயகமாக ஏழு வண்ணம் கசிய சுதை உருவத்தில் புதியதாக உருவாக்கிய பெருமாள். கோடம்பாக்கம் செட் போல் இருக்கிறது அந்த இடம்.

பக்கத்தில் மரத்தாலான ஒரு பழைய பூத வாகனம், &quot;போங்கடா நீங்களும் உங்க குடமுழுக்கும்&quot; என்று முதுகைக் காட்டிக் கொண்டு சுவரைப் பார்த்து உட்கார்ந்திருக்கிறது. அதன் பக்கத்தில் வேறு ஏதோ மரச் சிற்பத்தின் கையும், காலும் தனித்தனியாகச் சிதறிக் கிடக்கின்றன.

பழையதைப் பேணிவிட்டுக் குடமுழுக்கு நடத்தினால் குறைந்து போய்விடுமோ என்று தெரியவில்லை.

சந்நிதிக்குப் போகும் வழியில் கம்பீரமான அந்த வெண்கல விக்கிரகம் கருத்தை ஈர்க்கிறது. அடுக்கடுக்காகப் பட்டாடை விரிய உயர்ந்து நிற்கும் மனிதர். பக்கத்தில் அவர் இடுப்பு உசரத்துக்கு ஒரு பெண்.

&quot;சரபோஜியும் அவா ஆத்துக்காரியும்&quot;

பட்டாச்சாரியார் சடாரி சாதித்தபடி சொல்கிறார். இங்கேயும் தொட்டில் பெருமாள் கையில் ஏழப் பண்ண (எழுந்தருளப் பண்ண)த் தயாராகக் குட்டித் தொட்டிலில் இருக்கிறார். அவரை அப்புறம் கொஞ்சலாம் என்று இவள் கையைப் பிடித்து இழுத்துப் போய் ஆட்டோவில் ஏற்றுகிறாள்.

சோலையப்பன் தெருவில் கல்யாணமண்டப வாசலில் வண்டி நிற்கிறது. விதவிதமான சாயம் தோய்த்த சோற்று உருண்டைகள் உள்ளே இருந்து வந்து காலில் படுகின்றன.

&quot;ஊஞ்கல் ஆரம்பிச்சாச்சு&quot; அரக்கப் பரக்க இவள் உள்ளே ஓட, நான் வாசலில் நாற்காலியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
				</description>
				<pubDate>Mon, 25 Jan 2010 00:00:00 MST</pubDate>
                </item><item>
				<title>
					பகாகா பகாகா
				</title>
                <link>http://www.eramurukan.in/tamil/magazines.php?news_id=3#3</link>
				<guid>http://www.eramurukan.in/tamil/magazines.php?news_id=3#3</guid>    
                <description>
				நத்தார்தினம் (கிறிஸ்துமஸ்) வர இரண்டு மாதம் இருக்கும்போதே யார்க்ஷயரில் ஏகப்பட்ட தள்ளுபடி விற்பனைகள். உள்ளாடையிலிருந்து தங்க நகை வரை பலதும் சலுகை விலையில் கிடைப்பதால் ஹாலிபாக்ஸ் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

\'ஐந்து புத்தகம் ஐந்து பவுண்ட்\' - என்னைக் கவர்ந்த தள்ளுபடி விற்பனை இது. போன வாரம் புத்தகக் கடையில் நுழைந்து ஒரு சின்ன மூட்டை புத்தகங்களோடு திரும்பினேன். தொடர்கதை எழுதுவதைக் கூடத் தள்ளி வைத்துவிட்டுச் சுவாரசியமாக வாரக் கடைசியில் படிக்க எடுத்த முதல் புத்தகம் \'மார்க்கோ போலோவின் பயணக்குறிப்புகள்\'. (\'The Travels of Marco Polo\' - Wordsworth Classics publication).

பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் (A.D 1271) வெனிஸ் நகரத்திலிருந்து உலகச் சுற்றுப்பயணம் கிளம்பியபோது மார்க்கோ போலோவுக்கு வயது பதினேழு தான்.

மங்கோலியாவில் குப்ளாய் கான் சக்கரவர்த்தியாக இருந்த காலம் அது. மங்கோலியாவில் அரச ஊழியத்தில் நிறையக் காலம் கழித்தாலும், மார்க்கோ போலோ மற்ற நாடுகளுக்கும் போயிருக்கிறான். போனதோடு மட்டுமில்லாமல் அவற்றைப் பற்றி விரிவாகக் குறிப்பும் எழுதி வைத்திருக்கிறான். அந்த நாடு நகரங்களில் தமிழகமும் உண்டு.

(திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழர்களில் ஒருவர் கூட இப்படித் தான் போன நாடுகளைப் பற்றிச் சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும், களப்பிரர் காலத்திலும், அதற்கு அப்புறமும் எழுதாத காரணம் என்னவாக இருக்கும்?)

பதினேழு வயது இளளஞன் எழுதியது என்பதாலோ என்னமோ மார்க்கோ எழுதியதில் பாதி நிஜம். பாதி கற்பனன. உண்மையும் கற்பனையும் இது இது என்று இனம் பிரித்து அறிய முடியாமல் இரண்டரக் கலந்திருப்பதால் இந்தப் பயணக் குறிப்புகளுக்கு அலாதியான சுவையுண்டு.

உதாரணத்துக்கு மார்க்கோ போலோவின் தமிழகப் பயணம் பற்றி - அடைப்புக்குறிக்குள் இருப்பவை நம்ம கைச்சரக்கு!

அவன் இலங்கை மூலமாக வந்தது மாபாருக்கு - மதுரை. \'செந்தர் பந்தி\' அரசாண்ட காலம் அது. அதாவது பாண்டிய அரசன் சுந்தரபாண்டியன். மாறவர்மன்?

அப்போது பாண்டிய நாட்டில் மும்முரமாக முத்துக் குளித்திருக்கிறார்கள். வருடத்தில் மூன்று மாதம் - ஜூலையிலிருந்து செப்டம்பர் வரை - மட்டுமே நடந்தாலும் பாண்டிய நாட்டுக் கருவூலத்தில் பணத்தைக் குவித்த தொழில் அது.

(&quot;முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்முன்னாலே வந்துநின்றான் காலன்.சததமின்றி வந்தவனின்கைத்தலத்தில் பத்துமுத்தைபொத்திவைக்கப் போனான்முச் சூலன்&quot;என்ற மஹாகவியின் குறும்பா நினைவு வருகிறது. காய் காய் தேமா/ காய் காய் தேமா / காய் காய் /காய் காய் / காய் காய் தேமா என்று குறும்பாவுக்கு அவர் சொன்ன இலக்கணமும்)

முத்துக் குளிப்பவர்களோடு மந்திர தந்திர்ம் தெரிந்த பிராமணர்களும் கடலுக்குப் போயிருக்கிறார்கள். அபாயகரமான சுறாமீன்களின் வாயைக் கட்ட உச்சரிக்கப்ப்டும் மந்திரங்களை இவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். சாயந்திரத்துக்கு மேல் இந்த மந்திரம் பலிக்காது என்று டைமிங் செய்து வைத்துக் கொள்வதால், இரவில் யாரும் முத்துக் குளிக்கப் போவதில்லை.
மீறிப்போனவர்கள் பசித்த சுறாமீனுக்கு ராச்சாப்பாடாவார்கள்.

மறைக்க வேண்டியதை மறைத்து குறைந்த பட்ச ஆடையே த்மிழர்கள் உடுத்தி இருக்கிறார்கள். செந்தர் பந்தி என்ற சுந்தர்பாண்டியனும் அப்படியே. ஆனால் அவன் அரசன் என்பதால் கை, கால், தோள், மார்பு என்று உடம்பு முழுக்க ஏகப்பட்ட நகைகளை அணிந்து இருக்கிறான். அதில் முக்கியமானது நூற்று நான்கு முத்துக்கள் கோர்த்த மாலை (நூற்றெட்டு இருக்கணுமேப்பா, சரியா எண்ணினியோ!).

நூற்று நாலு இருப்பதற்குக் காரணம் செந்தர்பந்தி தினம் பல தடவை அவன் வழிபடும் கடவுளை வணங்கி நூற்று நாலு தடவை ஒரு மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்பதுதான். அந்த மந்திரம் ரொம்ப சுலபமானது - &quot;பகாகா ... பகாகா .. பகாகா&quot;

(ரீல் விடுறான் பையன் என்று முதலில் தோன்றினாலும் கொஞ்சம் ஆராய்ந்தால் அது \'மகேசா .. மகேசா .. மகேசா\'வாக இருக்குமோ என்று தோன்றுகிறது. அல்லது பசாசா என்று வைத்துக் கொண்டால், பரமேசா .. பரமேசாவாக இருக்கலாம்.).

சுந்தரபாண்டியனுக்கு ஆயிரம் மனைவிகள் மற்றும் வைப்பாட்டிகள். (முத்துக் குளித்து வந்த பணத்தில் பாதி இவர்கள் குளித்த, குளியாமல் இருந்த வகையிலேயே கரைந்திருக்கணுமே). இத்தனை பெண்கள் போதாதென்று தன் சொந்தத் தம்பி மனைவி மேல் ஒரு கண் செந்தர் பந்திக்கு. அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்று (பகாகா பகாகா சொல்லாத வேளைகளில்) மும்முரமாகச் செயல்பட்டிருக்கிறான்.

பார்த்தாள் பாண்டியனின் அன்னை. அவனைக் கூப்பிட்டு, &quot;நீ இந்த மாதிரி அதர்மமான காரியம் எல்லாம் செய்தால், உனக்குப் பால் கொடுத்த் இந்த மார்பகத்தை அறுத்துப் போட்டு விடுவேன்&quot; என்று சூளுரைக்க, பாண்டியன் அரண்டு போய் தம்பி பெண்டாட்டியை விட்டுவிட்டான்.

(மார்க்கோ போலோவுக்கு இந்தச் செய்தி எப்படிக் கிடைத்திருக்கும்? செந்தர் பந்தி அவன் தோளில் கை போட்டுக் கொண்டு என் சோகக் கதையைக் கேளுப்பா என்று சொல்லியிருக்க மாட்டான். பின்னே? வேறென்ன? கிசுகிசுவென்பது பதிமூன்றாம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது என்று தெரிகிறது.).

யாருக்காவது கொலைக் குற்றம் சாட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டால், குற்றவாளி ஏதாவது ஒருதெய்வத்துக்கு நேர்ந்து கொண்டு தன் உயிரைத் தானே போக்கிக் கொள்வதன் மூலம் சொர்க்கம் போகும் சலுகை அவனுக்கு வழங்கப்படுகிறது. ஏழு கத்திகளை வைத்து அங்கங்கே குத்தி, கடைசிக் குத்து நெஞ்சில் சதக்கென்று பதிய கைலாச பதவி அடைய வாய்ப்பு.

பசுவைத் தெய்வமாக வணங்குகிறார்கள். பசு மாமிசத்தைப் புசிப்பதில்லை. இறந்த மாட்டின் உடலை எடுத்துப் போய்ச் சாப்பிட த்னிப்பட்ட பிரிவினர் இருக்கிறார்கள். காய் (gaui) என்பது அவ்ர்கள் இனத்தின் பெயர். (வடமொழியில் / இந்தியில் காய் என்பது பசு; மார்க்கோ போலோ குறிப்பிடுவது \'இழிசினர்\' என்று சங்க இலக்கியத்தில் வரும் தலித்துக்களையா?)

யாராவது கடன் வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாவிட்டால், அந்த ஆள் தெருவில் போகும்போது, கடன் கொடுத்தவன் சரசரவென்று அவனைச் சுற்றி ஒரு வளையம் வளைந்து விடுகிறான். பணத்தைத் திரும்பத் தரும் வரை அவன் அந்த வளையத்துக்குள்ளேயே நிற்க வேண்டியதுதான். செந்தர் பந்தியே ஒரு சந்தர்ப்பத்தில் அந்நிய நாட்டு வணிகன் ஒருவனிடம் இப்படிக் கைமாற்று வாங்கி, இந்தோ தரேன் .. அந்தோ தரேன் என்று நழுவிக்கொண்டிருந்தான். அவன் ஒரு நாள் குதிரையில் போகும்போது கடன் கொடுத்தவ்ன் அவசர அவசரமாகத் தரையில் அவனைச் சுற்றிக் கோடு வரைய, அரசன் கட்டுப்பட்டு அப்படியே நின்றான். அரண்மனையிலிருந்து பணம் எடுத்து வந்து அடைத்து சுந்தரபாண்டியனன விடுவித்துப் போனார்கள். (மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் அதற்கு முன் அடகு வைத்தானா என்ன?)

மக்கள் நாள் முழுக்க வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பை மென்று வழியெல்லாம் துப்புகிறார்க்ள். (நிச்சயம் மார்க்கோபோலோ தமிழ்நாடு வந்திருக்கிறான் - ரீல் விடவில்லை என்பதற்கு இது ஒன்றே போதும்!)

வெற்றிலை எச்சிலைத் தரையில் துப்பாமல் எதிரில் இருப்பவன் மூஞ்சியில் துப்பினால் அவனோடு சண்டை போட விருப்பப் படுகிறான் என்று அர்த்தம்.

(மீதி வெற்றிலையை மென்றபடியே) துப்பியவனும், (வெற்றிலைக்காவி வடியும் முகத்தைத் துடைக்காமலேயே) மற்றவனும் மன்னனிடம் போகிறார்கள். செந்தர் பந்தி ஆளுக்கு ஒரு வாளைக் கொடுக்கிறான். இர்ண்டு பேரும் உக்கிரமாகக் கத்திச் சண்டை போட்டு அதில் ஒருத்தன் பரலோகம் போகும்வரை சண்டை தொடர்கிறது.

(&quot;வெட்டிக்குங்கப்பா .. &quot; என்று சாவகாசமாக இப்படிக் கத்தி எடுத்துக் கொடுத்து, துப்பல் சண்டையை எல்லாம் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கச் சுந்தரபாண்டியனுக்கு எப்படி நேரம் கிடைத்தது? பகாகா-பகாகா,ஆயிரம் மனைவி, தம்பி பெண்டாட்டி, அரசியல் நிர்வாகம், கைமாற்று வாங்குவது என்று நெட்டி முறியுமே நாள் முழுக்க!).

ரொம்ப வெப்பமான பிரதேசம் இது. குடிமக்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளிக்கிறார்கள். (வைகையில் தண்ணீர் நிறைந்திருந்த் காலம்!)

வருடத்தில் இரண்டு மாதம் மழை பெய்கிறது. மற்றப்படி, அனல் அடிக்கிறது. (மதுரைப் பக்கத்துக் காரனான எனக்கு மார்க்கோ போலோ சொல்வது புரிகிறது. நீண்ட நல்ல வாடைக்காலம் மதுரையில் நிலவியதாக நக்கீரர் சொல்வதுதான் விளங்கவில்லை - நெடுநல்வாடை அழகான கவிதை என்றாலும் கூட. ஒருவேளை அவர் மழைக்காலத்தை வாடைக்காலமாகச் சொல்கிறாரோ?).

நாட்டில் கொசுக்கடி அதிகம். மக்கள் கொசுவலை கட்டிக் கொண்டு அதற்கு உள்ளே தான் தூங்குகிறார்கள்.உள்ளே படுத்தபடி ஒரு கயிற்றை இழுத்ததும் வலை நாலு பக்கமும் கவிந்து கொள்கிறது.(நல்லவேளை, மார்க்கோ போலோ கொசுவலையைத் தூக்கிப் பார்த்து ரன்னிங்க் கமெண்டரி கொடுக்கவில்லை. அதுவும் செந்தர்பந்தியைப் பற்றி என்றால் இன்னொரு \'ஆயிரத்தொரு - மைனஸ் ஒண்ணு இரவுகள்\' கிடைத்திருக்கும்)

கோவில்கள் நிறைய உண்டு. எல்லாக் கோவிலிலும் நிறைய் விக்கிரகங்கள். இந்த விக்கிரகங்களுக்குச் சேவகம் செய்யப் பெற்றோர் தம் பெண்மக்களை நேர்ந்து விட்டு விடுகிறார்கள். தினசரி காலையில் சாப்பாடு எடுத்து வந்து விக்கிரகத்துக்கு முன் வைத்து பாட்டுப்பாடி, உடம்பை அப்படியும் இப்படியும் வளைத்து (வயசான மாமிகள் பரத நாட்டியம் ஆடுவதைப் பார்த்தால் எனக்கும் இப்படித்தான் தோன்றுகிறது)
குதிக்கிறார்கள் இந்தப் பெண்கள். இது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடக்கிறது. சாமி சாப்பிட அவ்வளவு நேரமாகிறது.

(பரத்தை பற்றி பதிமூன்றாம் நூற்றாண்டு வெள்ளைக்காரன் சொல்கிறான் - இல்லையென்று என் முகத்தில் வெற்றிலை எச்சிலைத் துப்ப நிறையப் பேர் காத்திருப்பது தெரியும்).

(Halifax, West Yorkshire, 2002 Sep 28)
				</description>
				<pubDate>Mon, 25 Jan 2010 00:00:00 MST</pubDate>
                </item><item>
				<title>
					Ravi Varma
				</title>
                <link>http://www.eramurukan.in/tamil/magazines.php?news_id=4#4</link>
				<guid>http://www.eramurukan.in/tamil/magazines.php?news_id=4#4</guid>    
                <description>
				 From: eramurukan ramasami [mailto:eramurukan@gmail.com]
            Sent: Thursday, January 21, 2010 9:53 AM
            To: crazy M; SURA, Keshav

            Subject: Ram with Shiva Dhanusu - Ravi Verma painting

            Dear friends

            You might have savoured this painting. (encl - Ravi Verma painting of Sita Swayamvaram)

            Could someone clarify

            1) Is this influenced by both the Moghul and company painting style?

            2) why Dasarathan looks like Tippu Sultan?

            3) is Ram looking a wee bit Mongoloid?

            warm regards
            era
---------------------------------------------------------------------------------------------------------------------

  On Fri, Jan 22, 2010 at 12:55 PM,  &lt;Crazy M&gt; wrote:

பிறன்மனை நோக்கா அரண்மனைக் காரன்
விரல்நுனியில் வைத்துள்ளான் வர்ணம் -திறன்மிகு
ஓவியன் வர்மன் திருவனந்த ஆழ்வானின்
ஆயிரக் கையன் அவன்.

Crazy M
----------------------------------------------------------------------------------------------------------------------


On Fri, Jan 22, 2010 at 12:55 PM,  &lt;SuRa&gt; wrote:

            Dear Murukan,
             
            That was one of RRV\'s paintings we enjoyed &amp; reproduced in the \'70s.
             
            The painting reflecting the Mithyla of Threthayoga probably has the architecture of the Northern India influenced by
            the art &amp; aechitecture from other parts of the world.
             
            ( Kaikeyi of Kepayam is from the Cacasus Mountains region- a stubborn &amp; murattu Tribal sect- She had supported Dasaratha during the Wars he faught),
             
            The Old man in the painting is not Dasaratha bur Janaka- cosidered a raja rishi -hence the wellgrooomed Thadi Meesai. Probably Tippu has copied Janaka\'s Style!)
             
            Rama\'s  face does not look Mongoloid to me!
             
            Thanks any way for the share!

      Regards,
           SURA
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

On Fri, Jan 22, 2010 a PM,  &lt;Keshav&gt; wrote:
Dear Sri Murugan

None of these. Ravi Varma was influenced by the European style which he watched stealthily from his European painter in the Travancore palace.
About the plus of this painting, see it in the original in the grand hall of the Mysore palace.

As Ravi pointed out, That is Janaka, which just means a father, so established by Valmiki that it only means only Sita\'s father. Ravi Varma paints according the places he visited rather than accurate depiction of the palace. I presume, his stay in the palaces of Baroda and Mysore showed in his works and had a lot of influence on his architecture and costumes. You might be aware that Ravi varma usually painted the main picture, while Rama Varma, his brother, who was a great painter in his own right, painted the backgrounds, the architecture and nature. There is a painting of Rama Varma in the Mysore gallery, Harishchandra selling his wife in the marketplace. You will certainly mistake it for a Ravi Varma. Talk of sacrificing ones identity for the success of his brother... Just like Theo was for Van Gogh.

The accuracy is here:
The age of Rama when he broke the bow, and that of Sita when she married. she was just 8. You have to see the cute girl in the original painting.
She is the one who should be having the mongoloid features, as she hails from Mewar, now Nepal ( the route which Vishwamitra took from near Ayodhya ie, Siddhashrama, to Mithila, as described in Valmiki Ramayana.)
The turbans do not have any religious connotation. Actually, even Rama and Krishna are portrayed with such turbans in the Kangra style which dominated Indian art for most part of the 17-19 century.

Sorry for things which got added inadvertently, as Ravi Varma is always in my mind.
I would like to share what little I know with you all.
Thanks for the patience.

regards,
Keshav 
----------------------------------------------------------------------------------------------------------------------
             
             
   On Sat, Jan 23, 2010 at 11:57 AM, eramurukan ramasami &lt;eramurukan@gmail.com&gt; wrote:

        dear SuRa, Keshav

        thanks for the interesting responses. Yes, it is Janaka and I thought of him while writing  but somehow Dasaratha poked his non-afghaneese nose in :-)

        And, my one grudge against the great Raja (Revi Verma) is that given the pride of place he enjoyed in society as a scion of Kilimaoor palace, his non-dependence on painting for earning his daily bread,   a string of rather abundant    opportunities to get exposed to international (read European) art and to be trained by the british painter  Jenson, he did not at any point of his life thought it worthwhile to delve into experimentation, rather than concentrating on the regular romantic style (was he influenced by  Eugène Delacroix - with roots in the unique style of Rubens, by any chance?)

        Was he not a contemporary of Eduart Manet? With his stunning visualization, his rather heavenly beautiful models and in-depth knowledge in Hindu mythology, couldn\'t he have produced an immortal \'Luncheon on the grass\' like  work with some creativity at work (unfortunately, even Malayala literature of that period with its accent on heavy sanskritization was more content with Shringara slogams of Namboodhris!)? 

        The Raja could have lit a spark through his paintings and it would have created its ripple effects in both south indian art and literature... but he let go simply  a great art movement that focussed on impressionism, in the process.

        well, we can\'t create alternate histories but it is a tragedy that with such a rich cultural heritage, we could not have a Mane(t) or Van Gough  here - 19th century masters!

        thats all by way of my two penny thoughts about the Kilimanoor kottarakkaran Revi verma thampran! (Waiting with batted breath how Lenin Rajendran is going to depict him on the screen in his oncoming film \'Makara manju\' - the cinematographer Rajiv Menon is playing Revi\'s Verma\'s character, I understand!).

        before i sign off, let me congratulate Keshav for his brilliant Umayalpuram Sivaraman and Vikku Vinayagaram in yesterday\'s The Hindu.

        warm regards
        era
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

           On Sat, Jan 23, 2010 at 5:00 PM, &lt;keshav&gt;  wrote:

    I know, Murugan, It is quite the same criticism which comes to any legend.  None of the present day artists respect him, maybe a few do. like A Ramachandran etc., The biggest accusation is his oleographs for his calendars. But without the calendars, where would Ravi Varma be?

    If Nehru had not done this, Gandhi had not done this, Rajaji had not done this, India would have been ...flowing with milk and honey ?  so many ifs and buts. Ravi Varma was a legend with all the purported drawbacks.
    He was an original. His inspiration was the kathakali. He used to listen to the pravachans --  from the land famous for Narayaneeyam and saptaham, He could not have drawn anything else. He did break new ground when he departed from the usual style followed in India. Breaking the stereotypes of the images of the Gods was in itself a brilliant step. It is for the later artists to have carried on the tradition.
    But none had his fire for mythological representation. I have read that everyone could walk into his studio and many gave suggestions. I shudder to think what all brilliant ideas were struck down by the conservative onlookers...  How many Murugans, Mohans and Ravis are there in the commonfolk to appreciate Ravi Varma?
    We need more refined rasikas. Long journey ahead.....
    All they can do when they see a Ravi Varma is slap their face and say, Ommachi kappathu.
    Ravi Varma took off from the portraits he painted in the palaces. He was not influenced by Delacroix or Rubens. I don\'t see the flesh of Rubens anywhere in Varma\'s work.
    Legends are born and they stay in the minds for their sheer innovation, and not for the faults and their compromises which are a necessary part of existence. Hussain is an example who is most misunderstood. I would call it ignorance.

    sorry i\'m going overboard, i rest my case.
    Leave alone such legends, On looking back, couldnt we have led a better life ourselves? :)

    Thanks for the appreciation. It was your inspiration that got me going.

    with regards,
    Keshav.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

From: eramurukan ramasami  
Date: Sat, Jan 23, 2010 at 5:26 PM
Subject: Re: Ram with Shiva Dhanusu - Ravi Verma painting
 

That was brilliant, Keshav, especially
-------------------------------------------------------------------

We need more refined rasikas. Long journey ahead.....
All they can do when they see a Ravi Varma is slap their face and say, Ommachi kappathu.
---------------------------------------------------------------------------------------------------------------------------

You have summarized it beautifully.

While we had had a Bhakthi movement, a freedom movement, a self respect movement, a Tamil isai movement, a prose renaissance (leading to Tharkkala thamizh) etc why is that when it comes to art alone, we can not site an instance of such enthusiastic participation? And 19th century being the hot bed of such tremendous growth and awareness in art in the west, someone like Revi Verma belonging to that era who had the capability and capacity could have ushered in the same kind of a art movement with zeal here too.

We required one Vallathol Narayana Menon (the Malayala Mahakavi) to revive Kathakali  through founding Kalamandalam. Leave alone impressionism, did Revi Verma look at his fellow malayalees  for a fleeting second and had at least a brief stint with realism? Low caste women could not cover their bosom  and the royalty masquarading as \'Padmanabha dasas\' were freely exploiting the down trodden. And our Revi Verman thampran  was painting blissfully unaware of all these from raja kottaram with towers of timber and teak if not ivory.

warm regards
era.
--------------------------------------------------------------

On Sat, Jan 23, 2010 at 6:32 PM,  &lt;Su.Ra&gt; wrote:

    வணக்கம்,வாழியநலம்!
     
    சிந்திக்க வைத்த இரண்டு கடிதங்கள்!
     
    ஓவியங்களைப் பற்றிய ஆழ்ந்த புலமையோ, பாண்டித்யமோ இல்லாத போதிலும்,
    என்னை முதல்முதலாகப் புலன் மாற்றிப் போட்ட ஓவியர் இரவி வர்மா!
     
    இவர் மாளிகையில் வாழ்ந்த மன்னர் குலத்தவரா அல்லது மண்குடிசையில் வாழ்ந்த சாமானியரா
    என்பதெல்லாம் அறியாது, அவ்ர்தம் ஓவியங்களின் முழுமையில் உள்ளம் பறிகொடுத்து, அவரை
    உபாசிக்கும் ரசிகனாக மட்டுமே என்னால் இருக்க முடிகிறது.
     
    இது அறியாமை எனில், அப்படியே ஆகுக!
     
     
    துரியோதனன் சபையில் தூதுரைக்க வந்த கண்ணனின் முக பாவமும், அந்த உத்தரீயமும் எந்த ஐரோப்பிய பிதாமஹனால் கொண்டுவர ஏலும்?
     
     
    கங்கைப்பெருக்கின் பெருவீழ்ச்சியைத் தாங்கும் சிவனது ஏகாக்ரமான concentrated look உம், காலளை விரித்து ஊன்றி, பின்னே
    நீட்டிய கரங்களிரண்டில் சூலாயுததைப் பற்றி நிற்கும் நிலைப்பாடும், எந்த ஐரோபியஓவியனோ, அவர்தம் ப்ரபிதாமஹனோ வரைந்திருக்க
    முடியுமோ?
     
    மார்க்கண்டேயனுக்காக, எமனை எற்றும் சிவனது சினத்தை எந்த இஸத்தில் வெளிப்படுத்த இயலும்?
     
    ஒரு கலைஞன் எடுத்துக் கொள்ளும் களத்திற்கேற்பவே அவனது எண்ணங்கள் வெளிப்படும்.- அது வண்ணங்களோ, வார்த்தைகளோ!
     
    கம்பன் இராமயணத்தை ஏன் எழுதினான், ஏன் பாட்டாளி மக்களைப் பற்றிப் பாடவில்லை?
     
    ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஏன் ஆண்டவனை மரபும் இசையும் சார்ந்த விருத்தங்களில் மட்டும் பாடினார்கள், ஏன் அவர்கள் ஹைக்கூ வடிவத்தை முயற்சிக்கவில்லை?
     
    ஏன் கச்சேரிகளில் கல்யாணியும் , காம்போதியும், த்யாகைய்யரும், தீக்ஷிதரும்?- அகாடமியில் நாக்கமூக்க பாடலாமே!
     
     
    ஐயா, இரவிவர்மா என்கிற ஒப்பற்ற கலைஞனிடம் என்னால், colours, anatomy, expressions, scenic description, landscape என எல்லாவற்றையும்
    பார்த்து ரசிக்க முடிகிறது. அவர் காவியங்களுக்கும், புராண, இதிகாசங்களுக்கும், தெய்வ வடிவங்களுக்கும் புதுப் பொலிவு கொடுத்த மாமேதை.
     
    போற்றுவார் போற்றவும், தூற்றுவார் தூற்றவும், நான் என் ஓவிய நாயகனை வழிபடுதல் அன்றி வேறறியாத பாமரனாகவே இருக்க விரும்புகிறேன்!
     
     
     
     
    இரவிவர்மனின் பெருமைக்கு மஹாகவி பாரதியின் இரங்கற்பாவே சிறந்த Tribute!
     
     
    சு.ரவி
     -------------------------------------------------------------------------------
From: eramurukan ramasami  
Date: 2010/1/23
Subject: Re: Ram with Shiva Dhanusu - Ravi Verma painting
 


அன்புள்ள ரவி

எண்ணப் பகிர்வுக்கு நன்றி.

நீங்கள் மரபு சார்ந்த நல்ல ஓவியர், கவிஞர். நான் மரபை மதிக்கும் எழுத்தாளன். மீறுவது என் உரிமை என்றால் மீற வேண்டியதில்லை என்று கூறுவது உங்கள் உரிமை.  முரண்பாடுகள் தான் வாழ்க்கையை அர்த்தமுள்ளவையாக்குகின்றன. எல்லோரும் எல்லாவற்றிலும் ஒத்துப் போனால், எறும்புப் புற்று போல் regimentalize ஆகி விடுமே வாழ்வும்!

இலக்கியம் எழுதப்பட்ட வரிகளுக்கு ஊடாக, எழுதாமல் விடப்பட்ட வார்த்தைகள் மூலமாக புதிய தளங்களை அடைய முடியும் என்று நிரூபித்திருக்கிறது.  புதுமைப் பித்தன் கதையின் கட்டிப் போடும் கடைசி வரி - \'இதுதான் ஐயா பொன்னகரம்\' போல, இருண்ட மாதாகோவிலில் Confession box-ல்  உட்கார்ந்திருக்கும் பாதிரியாரின் தனிமையில் முடியும் James Joyce-ன்  Dubliners போல.

 ஓவியம் ஏன் அதைச் சாதிக்க முடியாது? எழுத்துக்கு முன் பிறந்தது வ்ரைகலை அன்றோ.

நமக்கு இலக்கியத் தொடர்ச்சி இருப்பது போல் ஓவிய மரபுத் தொடர்ச்சி இல்லை என்பதை வருத்தத்துடன் நோக்குகிறேன். இருந்தால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரவிவர்மா துஷ்யந்தனை வரைந்து கொண்டிருக்க மாட்டார். இம்ப்ரஷனிசமோ, எக்ஸ்பிரஷனிசமோ, கியூபிசமோ வேண்டாம். குறைந்த பட்சம் ஒரு தொடர் நிகழ்வாக, ஓவியத்தின் முகம் மாறி வந்திருந்தால்,  அது சமூகத்துக்கு இன்னும் நெருங்கி வந்திருக்கும் இங்கும். எடின்பரோவிலோ லண்டனிலோ ஓவியக் கண்காட்சியைப் பார்க்க வரும் அலைஅலையான ரசிகர்களைப் பார்த்து மலைத்திருக்கிறேன். ஓவியத்தோடும் இலக்கியத்தோடும் ரசனை அடிப்படையில் சம்பந்தப்படாத பெரிய கூட்டம் அங்கேயும் உண்டு. மொத்தத்தில் பத்து விழுக்காடு தான் ஓவியத்தை ரசிக்கும் பிரிட்டிஷ் காரர்கள் என்றாலும், இந்திய அளவில் அது ஒரு கோடியாவது இருக்க வேண்டாமா? :-)

மதம், புராணம் சார்ந்த களம் நம் ஓவியத்தையும், சிற்பத்தையும், நாட்டியத்தையும், (தென்னிந்திய) இசையையும் வெகுவாக பாதித்தது  அதன் மூலம் இந்த நுண்கலை- நிகழ்கலை வடிவங்கள் அழியாமல் இருக்க வழி செய்தது. அதோடு அழிவைத் தடுக்க வேண்டிய கரிசனம் கொண்டோ என்னமோ, வளர்ச்சிக்கும் அதுவே தடைக்கல்லாகியது.

புதிய சோதனைகளைத் துணிந்து செய்யாத எந்தக் கலைவடிவமும் தேங்கித்தானே போகும்!

நிறையப் பேச வேண்டி இருக்கிறது. வாங்க சார், உட்கார்ந்து பேசலாம்.


&gt; கம்பன் இராமயணத்தை ஏன் எழுதினான், ஏன் பாட்டாளி மக்களைப் பற்றிப் பாடவில்லை?

பாடினானே, ரவி.  \'வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா\'.

அன்புடன்
இரா.மு


				</description>
				<pubDate>Sat, 23 Jan 2010 00:00:00 MST</pubDate>
                </item><item>
				<title>
					ஊமைப் பாட்டி 1966
				</title>
                <link>http://www.eramurukan.in/tamil/magazines.php?news_id=5#5</link>
				<guid>http://www.eramurukan.in/tamil/magazines.php?news_id=5#5</guid>    
                <description>
				ஊமைப் பாட்டி  1966                          இரா.முருகன்
                                   

 
ரெட்டைத் தெருவில் சாக்குப் படுதா கட்டிய ஒரே வீடு ஊமைப் பாட்டி வீடாகத்தான் இருக்கும். பாண்டியன் மளிகைக் கடையில்  கடலைப் புண்ணாக்கும் அரிசியும் அடைத்து வந்த காலி சாக்குகளை யாசித்து வாங்கி வந்து வீட்டுத் திண்ணையில்  வரிசையாகத் தொங்க விடுவாள் பாட்டி. வெய்யிலோ மழையோ அவள் உலகம் மளிகை வாடையடிக்கும் சணல் திரைகளுக்குப் பின்னால் இடுங்கியிருக்கும். அவள் மட்டுமில்லை, பேரன் நாகநாதனின் உலகமும் கூட.

சொல்லப் போனால் பாட்டியில்லை ஊமை. பேரன் தான். ‘நாகு, எழுந்திருடா. சங்கு ஊதியாச்சு. இன்னும் என்ன வழிச்சுண்டு தூக்கம்?’ பாட்டி சத்தம் புண்ணாக்குச் சாக்கு திரைச்சீலையைக் கடந்து ரெட்டை தெரு பாதிவரை எதிரொலிப்பது நாங்கள் பள்ளிக்கூடம் கிளம்ப அடியெடுத்து வைக்கும் போதுதான். பஞ்சாயத்து போர்டு ஆபீசில் எட்டு மணிச் சங்கு ஊதினாலும் ஊதாவிட்டாலும் பாட்டி குரல் ஒருநாள் விடாமல் பேரனை எழுப்பும். அப்புறம் சொல்லி வைத்தது போல் ஓர் அழுகைச் சத்தம். பேரன் அழுகிற ஓசை அது. நாகநாதனுக்கு இருபது வயசாவது இருக்கும். தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஏதோ சொல்ல ஆரம்பிப்பதுபோல் முஸ்தீபோடு தொடங்கி எதுவும் பேச முடியாத தடித்த குரலில் அவன் அழுவான். அப்போதெல்லாம் மனசை இனம் தெரியாத பயம் கவ்வும்.

எதுக்கு அழணும் அத்தனை பெரிய ஆம்பிளை? எங்களை மாதிரி சயின்ஸ் மாஸ்டர் கரடி சாரின் ஷேவ் செய்த முகத்தை எதிர்பார்த்து திகிலோடு பள்ளிக்கூடம் போக வேணுமா என்ன அவனுக்கு? கரடி வாத்தியார் ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை சுத்தமாக முகத்தை மழித்துக் கொள்வார். தாடியோடு இருக்கிற போது வகுப்பில் பிரியமாகப் பேசுகிற அவர் ஷவரக் கல்யாணம் முடிந்து வந்த தினங்களில் தவறாது ஒரு முதுகு விடாமல் கச்சேரி நடத்தி விடுவார். நாகநாதன் எங்கள் வயசில் கரடி வாத்தியார் பாடம் நடத்த ஒன்பதாம் கிளாஸ் படித்ததாகத் தெரியவில்லை. பள்ளிக்கூடம் போய்ப் படிக்க வைக்காததற்கு அவன் வாய் பேசாத குறைபாடு ஒரு சாக்கு. மதுரையில் இப்படிப் பட்டவர்களுக்காகவே இருக்கிற பள்ளிக்கூடத்தில் ஏதோ ஒரு சமயம் பாட்டி அவனைக் கொண்டு போய்ச் சேர்த்ததாகவும் அவனுடைய குரல் இல்லாத அழுகையில் பயந்து போன வாத்தியார் அவனைத் திரும்பிப் பத்திரமாக பாட்டியோடு அனுப்பி விட்டதாகவும் குண்டு ராஜு அவ்வப்போது கோலி விடுவான். ‘நாகநாதன் மாதிரி காலம் முழுக்க சும்மா இருக்கக் கொடுத்து வச்சிருக்கணும்’. அவன் சொல்வது சரியோ?தெரியாது.

மதியம் சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்து விட்டு அவசரமாக திரும்பப் பள்ளிக்கூடத்துக்கு ஓடும்போது தன் வீட்டு வாசலில் நாகநாதன் நின்று எங்களில் யாரையாவது ஏகதேசமாகத் தோளைத் தொட்டுத் திருப்புவான்.  உதடு வேகமாக அசைய அடித் தொண்டையில் இருந்து மௌனமான குரல் என்னமோ விசாரிக்கும். தொடர்ந்து அவன் கை தொப்பி வைத்த தலை, நீளக் கோட்டு, சைக்கிள், தோளில் பை என்று காட்டுகிற சங்கேதங்களை ஒருசேரப் பார்க்கும்போது ஜவஹர்லால் நேரு ரெட்டைத் தெருவில் சைக்கிள் விட்டுக் கொண்டு பள்ளிக்கூடம் போனதைப் பார்த்தியா என்று கேட்பதாக எனக்குப் புரிந்தது. ‘தபால்காரர் வேலுச்சாமி வந்தாச்சான்னு கேட்கறாண்டா’. குண்டுராஜு மொழி பெயர்க்கும் போது அவனைப் பாராட்டுகிறதுபோல் புன்னகை செய்து திரும்ப அடித் தொண்டையால் விசாரிப்பான் நாகநாதன். தினசரி அவனுக்குக் கடுதாசி எழுத யார் இருக்கிறார்களோ. ஆனால் மாசம் பிறந்ததும் தவறாமல் மணி ஆர்டர் டில்லியில் இருந்து அவன் பெயருக்கு வந்துவிடும். கிளாரா விசாலாட்சி என்று அனுப்பியவர் விவரம் இருப்பதாக நாகநாதன் சார்பில் மணியார்டரை வாங்கி அவன் ரேகை புரட்டிய இடத்தில் சாட்சிக் கையெழுத்து போடும் ரெட்டைத் தெரு வக்கீல் குமாஸ்தாக்கள் சொல்வார்கள். மொட்டைத்தலை ஊமைப் பாட்டிக்கு தில்லிக்கார கிளாரா விசாலம் ரொம்ப உறவாம் ஒரு காலத்தில். அதாவது மருமகள்.

சனிக்கிழமை மதியங்களில் கோர்ட் இல்லாமல் வக்கீல்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது வக்கீல் குமாஸ்தாக்கள் அரட்டைக்கு அலைவார்கள். அவர்களை சுவாரசியமான வம்புகளுக்காக தெருப் பெண்டுகள் முற்றுகையிடும்போது நாங்களும் கூடவே இருந்து ஒட்டுக் கேட்போம். அப்படிக் கேட்டபோது கிடைத்தது இது – விசாலம் தினசரி அடி உதை என்று இருபது வருஷம் முந்தி இங்கே ஊமைப் பாட்டி வீட்டில் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. பாட்டிக்கு ஒரே பிள்ளை அதாவது நாகநாதனின் தகப்பன் குடித்து விட்டு வந்து அடிப்பான். விசாலத்தின் வீட்டில் இருந்து காசு கொண்டுவரச் சொல்லி விரட்டும்போது பாட்டியும் சேர்ந்து திட்டுவாளாம். பிரசவத்துக்கு விசாலம் மிஷினரி ஆஸ்பத்திரியில் சேர்ந்தது, நாளடைவில் அவள் விவாகரத்தும் மதமாற்றமுமாக வீட்டுக்காரனைப் பிரிந்ததில் முடிந்ததாம். நர்ஸ் பயிற்சி முடித்து விசாலம் டில்லிக்குப் போக, ஊமைப் பிள்ளையை நாகநாதனின் அப்பா வளர்க்கச் சொல்லி கோர்ட் உத்தரவாம். அவன் சார்பில் பாட்டி வளர்க்கிறதுக்கு நாகநாதனின் அம்மா நர்ஸ் வேலை பார்த்து இன்னும் மாசாமாசம் தவறாமல் பணம் அனுப்புகிறாளாம்.

மணியார்டர் வந்ததும் நாகநாதன் சுறுசுறுப்பாக ராதா சாமி கடையில் சப்ஜா விதை போட்ட ஒண்டிப்பிலி சர்பத் குடிப்பான். பாட்டி கையைப் பிடித்துக் கொண்டு கோவிலுக்குப் போய் சனீஸ்வரன் கோவில் தீபத்தில் ரெண்டு ஸ்பூன் இலுப்பெண்ணெய் ஊற்றுவான். அப்புறம் அவன் அப்பா குடும்பத்தோடு வரும்போது ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பான். விசாலத்தை ரத்து செய்த கையோடு இன்னொரு கல்யாணம் செய்து கொண்ட அந்த அப்பன் நாலு பெண் குழந்தைகளோடு மாசாமாசம் வந்து ஊமைப் பாட்டி வீட்டுத் திண்ணையில் உட்கார்கிறதும் அந்தக் குழந்தைகள் அதிசயப் பிராணியைப் பார்க்கிறதுபோல் நாகநாதனைப் பார்க்கிறதும் தவறாமல் நடக்கிற காட்சிகள். அதெல்லாம் அனேகமாக அந்தக் குழந்தைகளில் ஒன்றின் கையில் அட்லாஸ் மாதிரி விரிந்த ரெண்டு பெரிய பத்து ரூபாய் நோட்டுக்களை நாகநாதன் வைப்பதில் முடியும். பஸ் பிடிக்க விரையும் குடும்பத் தலைவன் இப்போது குடிக்கிறதில்லை என்பாள் பாட்டி.

பாட்டி வீட்டில் சாவு விழுந்ததும் பஸ் பிடித்து தனியாக வந்தான் அப்பன். நாலைந்து நாள் சென்று வீட்டு வாசலில் ஒரு கார்.  வடக்கத்தி பைஜாமா போட்ட ஒரு சோனியான மாமி அவசரமாக இறங்கினாள். கூடவே கழுத்தில் சிலுவை மாட்டிய நாலைந்து கன்யா ஸ்திரிகள். நிதானமாக படி ஏறினார்கள் அவர்கள்.

கிட்டத்தட்ட நாகநாதன் குரலில் சத்தம் இல்லாமல் அந்த கிறிஸ்துவ மாமி அழுதாள். திடீரென வெடித்துச் சிதறி, ‘இதுக்கா உன்னை இங்கே விட்டுட்டுப் போனேண்டா நாகு’ என்று உச்சத்தைத் தொட்டது அழுகைக் குரல். பாட்டி கன்யாஸ்திரிகளுக்குப் பின்னால் நின்றபடி சும்மா பார்த்துக் கொண்டிருந்தாள். நாகநாதனின் அம்மாவும் அப்பாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கவே இல்லை. 

காய்ச்சல் கண்டு இறந்து போன நாகநாதனின் துணிமணி என்று ஒரு சின்ன மூட்டையை பாட்டி கிளாரா மாமியிடம் கொடுத்தாள். கன்யாஸ்திரிகள் சிலுவை வரைந்து கொண்டார்கள். மாமி புறப்படும் போது ஊமைப் பாட்டி கேட்டாள் – ‘அடுத்த மாசம் மட்டும் கொஞ்சம் வழக்கம் போல பணம் அனுப்பிடுடியம்மா. பத்து நாள் காரியம் பண்ண செலவு  ரொம்ப ஆறது. உன் ஆம்படையான் கஷ்டப்படறான் பாவம்’. மாமி ஒன்றும் சொல்லாமல் இறங்கிப் போனதைப் பார்த்தபடி நின்றோம்.

(தினகரன் டிசம்பர் 2010)
				</description>
				<pubDate>Thu, 14 Jan 2010 00:00:00 MST</pubDate>
                </item></channel></rss>