பகிரத்தான் அனுபவங்கள் – பீங்கான் பரணியில் ஊறுகாய் போட்டு தொட்டுக்கொள்ள இல்லை

அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது = வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து

===========================================================================

கால்டெர்டெல் மார்க்கெட்டில் கசாப்புக்கடை வைத்திருக்கும் பெர்ணாந்தஸ். அமேயர் பாதிரியாருக்கு அன்போடு ஒரு குவளை தேநீர் தர முன் வந்தான்.

 

பாதிரியார் இரண்டு நீண்ட மாதங்கள் இந்தியாவில் சுற்றி வந்ததைக் குறிப்பிட்டு அவருடைய அனுபவத்தைப் பங்கு வைக்கக் கோரிக்கை விடுக்கும் கால்டர்டேல் மறைநில மந்தையின் அன்பான ஆடுகளை அவர் மகிழ்ச்சியோடு வரவேற்றார். அனுபவங்கள் எல்லாம் பங்கு வைக்கத் தானே. காடியில் அமிழ்த்தி சீனப் பரணியில் ஊறுகாய் போட்டுச் சேமிக்க இல்லையே

 

பெர்னாந்தஸ், பாதிரியாருக்குச் சிறப்பான டீத்தூளை அன்பளிப்பாக வழங்கினான். அது ப்ராட்ஃபோர்டில் இருந்து மாமிசம் எடுத்து வருகிற டிரக் ஓட்டும் சீனாக்காரன் சூ மின் பீஜிங்கில் விடுமுறைக்குப் போய் விட்டு வந்த போது கொண்டு வந்ததாம்.

 

இந்தியப் பெண் மாதிரி மல்லிகைப் பூ வாசனை அடிக்கிற சாயா என்றான் பெர்னாந்தஸ். வேண்டாம் என்று சொல்லி,  சாயா இலைகளைக் கிள்ளிப் போட்டு உண்டாக்கிய பழைய மூணு ரோஜாப் புஷ்பம் டீ கேட்டு வாங்கிக் கொண்டார் அமேயர் பாதிரியார். அது நேற்று காலையில்.

 

வாடிகனில் இருந்து அவருடைய இந்தியப் பயணத்தைப் பற்றித் தொலைபேசியில் அழைத்து விசாரிக்காவிட்டாலும், கூப்பிடு தூரத்தில் மான்செஸ்டரில் இருந்து திருச்சபை அழைப்பு வந்தது. அது முந்தாநாள் மாலையில்.

 

அமேயர் பாதிரியார் தென்னிந்தியாவின் சிறப்பை, அங்கே ஏசு சபை நடவடிக்கைகள் இன்னும் மேம்பட வழி இருப்பதை எல்லாம் ஆர்வத்தோடு பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். சரிதான் என்று குறுக்குச் சால் போட்டு அந்தப் பக்கம் பேசிக் கொண்டிருந்த வயதானவரும் ஒரு நிமிஷத்துக்கு பத்து வினாடி நேரம் மட்டும் காது கேட்கிறவருமான கார்டினல் சொன்னார் –

 

தந்தையார் அவர்களே, நீங்கள் இரண்டு வருஷம் உங்கள் மந்தையைப் புறக்கணித்து, ஆடை துறந்த விக்கிரக ஆராதகர்களிடையே ஆனந்தக் களிப்போடு பாடி ஆடித் திரிந்து தேவ ஊழியத்தை ஒதுக்கி வைத்ததன் காரணம் என்ன? இப்போதாகிலும் திருந்தி வந்தீரா?

 

நான் இரண்டே இரண்டு மாதம் தான் எழுதி அறிவித்து விடுப்பில் போனது. இந்தியாவில் இருந்து ஆயர் கடிதம், திருச்சபை செய்தித் தொகுப்பு இரண்டு சேவைகளையும் செய்து தான் வந்தேன். தொழாமல் ஒரு நாளும் இருந்ததில்லை.

 

அமேயர் சொன்னது எல்லாம் கார்டினல் காதில் விழாமல், அருவி பொழியும் சீரான ஓசை மட்டும் அவருடைய உட்செவியில் நிறைந்து வழிந்தது.

 

வாரும், உம் மந்தைக்காக மன்றாடுவோம்.

 

நாத்தழதழக்க, கார்டினல் உரக்க லத்தீனில் திருவசனம் சொல்ல ஆரம்பித்து விட்டார். தனக்கு எதுவும் காதில் கேட்காத தோரணையில் நாலு ஹலோ, ஹலோவும் அவசரமான ஆமெனுமாக அமேயர் பாதிரியார் கார்டினலை அகற்றி நிறுத்த வேண்டி இருந்தது அப்போது.

 

பாதிரியார் இத்தனை வருடம் செய்த ஊழியமும் செய்ய இருப்பதும் இப்படி மறைவில் ஒளிக்கப் படுவது பற்றி அவருக்கு வருத்தம் இல்லை. அவருடைய பயணத்தைப் பற்றி வாடிகனில் ஊழியம் புரியும் தெக்கே பரம்பில் அச்சன் மூலம் அங்கே சரியான தகவலைப் போப்பரசர் வரை அறிவித்து வைத்திருக்கிறார். நாளைக்கே அவரை ரோமாபுரிக்குப் பதவி மாற்றமும் இட மாற்றமும் செய்து அழைத்துக் கொள்ளலாம். அப்பன் வீட்டில் ஆயிரம் அறை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன