புது நாவல் அத்தியாயம் இரண்டில் இருந்து வரும் அஜயதியும் விஜயதியும்

புது நாவல் அத்தியாயம் இரண்டில் இருந்து

புது நாவல் அத்தியாயம் இரண்டு

மெழுகு திரிகள் பிரார்த்தனை நிலையம் போல் எரிந்து ஒளியைப் பரப்பும் குகை அது. பழையதாக சுவரெல்லாம் தண்ணீர் கசிந்து உப்புப் பூத்து பச்சையாக பாசி பிடித்த குடைவரை இருப்பிடம்.

இரண்டு மில்லியன் மனித இனமும், மற்றபடி மொத்தமாக ஒன்றரை மில்லியன் மற்று உயிரினங்களும் சுவாசித்திருக்கும் உள்வெளி இந்தக் குகை. அடுக்கக வசதி நிறைந்த குடியிருப்புகளில் தகுதி நோக்கி பலதரப்பட்ட உயிரினங்கள் வசிக்குமிடம் விநியோகிக்கப் பட்டிருக்கிறது.

முதல் மாடி கடைசி இரண்டு குடியிருப்புகள் குரங்கினக் குடும்பங்கள் சுக வாழ்வு வாழ ஒதுக்கப்பட்டவை. அந்த வசிப்பிடத்துக்கு முன்பு, சூரியனை முன்னிட்ட கிரகத் தொகுதியில், செவ்வாய்க் கிரகத்து இனத்தினர் வாழுமிடம்.

அதற்கு முந்திய மனை பாரம்பரியம் மிக்க கரடிக் குடும்பம் வசிப்பது. ஆறு தலைமுறையாக ஆசிரியர் மற்றும் இசை வல்லுநராக சமூகக் கடமை ஆற்றும் குடும்பம் அது.

சகவாழ்வு வாழும் தரை ஆமைக் குடும்பம் அடுத்து வசிப்பது. கதவு சதா திறந்தே இருக்கும் வசிப்பிடம் இது. வாசலில் மணி ஒலித்துக் கதவு திறக்கக் கிளம்பி வந்தால் அடுத்த நாள் காலை அநேகமாக வாசலுக்குப் போய்ச் சேர முடியும். எனவே அழைப்பு மணி இல்லாத இல்லம் இது.

ஆமைகளின் இயக்கத்தை வேகமாக்க மரபணு மாற்றம் செய்ய கரடி வைத்தியக் குடும்பம் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இளம் ஆமைகள் இந்தச் சோதனைக்கு உட்படுத்தப் படவில்லை.

நூற்றுப்பத்து வயதான முதிய ஆமைகள் முழு ஒத்துழைப்பு நல்கிட அவற்றில் மரபணு மாற்றம் செய்விக்க ஜெனடிக் ரீஎஞ்சினீயரிங் நடத்திய பிறகு அவ்விரு ஆமைகள் வேகம் கணிசமாகக் கொண்டன.

எனில் அவை பின் நோக்கி வேகமாகப் போகத் தலைப்பட்டன. அவற்றின் பசி கணிசமாகக் குறைந்து பின் போகும் அவ்வாமைகள் குகைப் பொழுதுபோக்கு மையத்தில் ஆடிப்பாடி, பின்னால் ஓடிக் குழந்தைகளுக்கு நகைச்சுவையான நேரம் நல்குகின்றன.

முடிந்தது போய் வாருங்கள் என்று பிரபஞ்ச அரசு அவர்களை நிறுத்திக் கொள்வதோடு இந்த ஆட்ட பாட்டமெல்லாம் முடியும். எவ்வளவு நேரம் தான் குழந்தைகள், பின்னால் நகரும் ஆமைக் கோமாளித்தனம் காண முடியும்? பாரவிப் பெண்களா அவை? மடியிலேற்றி சோறு ஊட்டும் விளையாட்டை ஆமையை வைத்து விளையாட முடியுமா?

பாரவிப் பெண்கள் அவ்வப்போது உயிர் கொண்டு குழந்தைகளோடு விளையாடி மறுபடி பொம்மையாகும் பகுதி உயிர்களாகும். அவற்றுக்குக் கூட விளையாடும் குழந்தை நல்கிய பெயர், பள்ளிப் பெயர், பெற்றோர் விவரம் ஆகியவற்றையும் சிநேகிதர் பெயர்களையும் எழுதி அழித்து மீண்டும் எழுதும் வசதியுள்ள மெமரியில் பதிந்து வேறு குழந்தைக்குக் கைமாறும் போது அத்தகவலும் அழிக்கப்படும்.

அப்படியான ஒரு சூழலில் குழந்தைகள் பொழுதுபோக்கு இல்லத்தில் தொடுமொழிக் கூச்சல் உயர்வதில் இதோ இந்த நிகழ்வு தொடங்குகிறது. பாரவிப் பொம்மையின் தொடு குரல் அது –
நான் கேத்தி இல்லை. எனக்கு ஏற்கனவே அல்லி என்று பெயரிட்டிருக்கிறாள் எனக்கு சிநேகிதியாக இருந்த ஆனைக்குட்டி கோதை.

பொம்மைக்கு முழு உயிர் வந்து தன் இருப்பை வலுவாக நிலைநிறுத்திக் கொள்ள முயல்வது வெளிப்படையாகத் தெரிகிறது. எனில் கேத்தி என்று பெயரிட்டாகி விட்டது, அந்த பாரவிப் பெண் அல்லி என்று வேறு யார் சொன்னாலும்.

சரி, நான் இரவு நேரங்களில் கேத்தியாகவும் பகலில் அல்லியாகவும் இருக்கிறேன். பிளவுபட்ட ஆளுமை பாரவிப் பெண்ணுக்கு இருக்கக் கூடாதா?

என்றும் இன்னும் பலவுமாக அரற்றிக் கொண்டிருக்கிறாள். எல்லாம் ராஜி என்ற மனிதச் சிறுமி, பாரவிப் பொம்மையை குகைப் பொழுதுபோக்ககத்தில் வாங்கி வந்ததில் தொடங்கியது.

பாரவிப் பொம்மையை வைத்து அதற்கு முன் விளையாடிய கோதை என்ற ஆனை இனச் சிறுமி பொம்மையைத் திருப்பித் தந்ததும் மெமரி சரியாக அழிபடாமல் போனது.

கோதை குகையின் எந்தப் பகுதியில் இருக்கிறாள் என்று ஏனோ பொழுதுபோக்ககத்தில் தகவலாகப் பதிந்திருக்கவில்லை. வாணி என்ற மானுடச் சிறுமியானால் இந்த பாரவிப் பெண் தவிர வேறு கருதினாளில்லை. பொம்மைக்குப் பெயர் வைக்காவிட்டால் விளையாட முடியாது.

பொழுதுபோக்ககக் காப்பாளர் தொல்வழக்குப்படி பெட்ரோமாக்ஸ் தான் வேணுமா எனக் கேட்டு வேறேதாவது பாரவிப் பெண்ணை அல்லது பகுதி உயிரியையோ எடுத்துப் போகலாம் என்று சிபாரிசு செய்தார்.

குழந்தை அல்லவா, பொம்மை கிடைக்காது என்று தெரிய வந்திடப் பிடிவாதமும் பிரிமுறுக்கலும் கூடிக்கொண்டே போகின்றது.

குகையின் ஒரு தெரு முழுக்க குழந்தைச் சத்தம் மேலெழுந்து வேறு எந்த வேலையும் செய்ய முடியாமல் சர்வ வியாபகமாகச் சூழ்ந்து நிற்கிறது.

நாங்கள் பெயர் சூட்டுகிறோம் என்று ஆர்வத்தோடு குகைத் தெரு முன்வருகிறது. அங்கேதான் மோதல் தொடங்கியது.

தெருவிலிருப்பவர்கள் இரண்டு பிரிவாகி ஒரு பிரிவு பொம்மைக்கு விஜயதி என்றும் மற்றது அஜயதி என்றும் பெயர் சூட்ட வேண்டும் என்றும் கண்டிப்பாகச் சொன்னார்கள்.

விஜயதி என்று பெயர் சூட்டாவிட்டால் குகையை விட்டே அந்தப் பிரிவினர் வேறு புதுக் குகைகளுக்குக் குடிபுகுந்து விடுவதாகச் சொன்னதும் சம்பவித்தது. அஜயதி என்று பெயர் சூட்டாவிட்டால் காஸ்மோஸ் பிரபஞ்சத்திலிருந்தே விலகி அதன் மாற்று அல்லாத வேறு பிரபஞ்சத்தில் நுழைந்திடுவோம் என்றது மற்ற பிரிவு.

யுத்தத்துக்கான முன்னறிவிப்பு கொடுத்து அடுத்த மாதம் எட்டாம் தேதி ஏழரை மணிக்கு இரவில் போர் நடத்தி விஜயதியா, அஜயதியா என்று பொம்மைக் குட்டிக்குப் பெயர் தீர்மானிக்கலாம் என்ற கருத்தில் மட்டும் இரு பிரிவும் ஒருப்பட்டிருந்தார்கள்.

யுத்த அறிவிப்பு பழைய சம்பிரதாயப்படி காகிதத்தில் தான் எழுதி அறிவிக்க வேண்டும் என்பதால் அதற்கான படிவத்தைப் பெற்று வர குகை நிர்வாக அலுவலகத்துக்குப் பிரிவுக்கு ஒருவர் ஆக இருவர் அனுப்பப்பட்டார்கள்.

ஒருவரை ஒருவர் அடித்து துவைத்துக்கொண்டு மூக்கை உடைத்துக்கொண்டு அவர்கள் குகை நிர்வாக அலுவலகம் இருந்த இருட்தெருவில் ஓவென்று அலறியபடி நுழைந்தபோது வீடுகள் ஜன்னல் திறந்து என்ன சமாசாரம் என்று கேட்டு சடுதியில் ஜன்னல் அடைத்தார்கள்.

அவர்கள் போர்ப் படிவம் பெற்றபோது யாரெல்லாம் யுத்தமிட இருக்கிறார்கள் என்று கேட்டது குகை அமைப்பு நிர்வாகியான ஒட்டகச் சிவிங்கி. யுத்தம் செய்தல், போரிடல் இப்படித்தானே சொல்வழக்கம் என்று வேடிக்கை பார்க்க வந்த யாரோ கேட்க, அரசு மொழிப் பயன்பாட்டைக் குறை சொல்லக் கூடாது என்று அவரிடம் ஒட்டகச் சிவிங்கி எடுத்துச் சொன்னது . நானும் வருகிறேன் என்று தெருவுக்குக் கிளம்பியது அது.

சாவதானமாக தெருவில் நுழைந்தபோதே தெருமுனை மரங்களை ஒட்டி நின்று கழுத்து உயர்த்தியது ஒட்டகச் சிவிங்கி. சதா இருட்டில் இருந்து வெளிச்சம் காணாமல் இலைகள் தடித்திருந்த அம்மரங்கள் DNA engineered photosynthesis மூலம் chlorophyl உண்டாக்கி உயிர் மூச்சு விட்டுக் கருத்து செழித்து வளர்ந்திருந்தன.

பாரவிப் பொம்மையை இடுக்கிக்கொண்டு அழுகை நிறுத்திய குழந்தை ஒட்டகச் சிவிங்கியைப் பார்த்து சிரித்து விட்டது. அதன் தகப்பனார் அப்படிச் சிரிப்பது body shaming-இல் பட்ட நாகரிகமும் பரிவுமற்ற செயல் என்று குழந்தை காதில் அவசரமாக ஓதிப் பாதுகாப்பாக அணைத்தபடி நின்றார்.

இதையொன்றும் கவனிக்காத ஒட்டகச் சிவிங்கி இன்னும் கழுத்து நீட்டி மரத்தின் மேல் கிளைகளின் இலை பறித்து சுவாரசியமாக மென்றது. ஆறு கார்பன் டை ஆக்ஸைட் மாலிக்யூல்களும் ஆறு தண்ணீர் மாலிக்யூல்களும் சேர்ந்தால் என்ன வரும் என்று பாடியபடியே கால்களை முன்னும் பின்னும் ஆட்டி நாட்டியமும் ஆட, குழந்தை என்றில்லை அங்கே குழுமிய சகல உயிரினங்களும் நகைத்தது அபூர்வமாகத் தோன்றியது.

நேசத்தோடும் கையில் இடுக்கிய பாரவி பொம்மைக் குட்டியுமாகக் குழந்தை சிவிங்கி அருகில் போய் நீயே இவளுக்குப் பெயர் வை என்று உரிமையோடு கேட்டுக்கொண்டது.

கருத்த மரங்களின் கிளைகளிலிருந்து இலைகளைச் சுவாதீனமாகப் பறித்து உண்டு இந்த பொம்மைக்கு க்ளோரொஃபில் என்று பெயர் வைக்கிறேன் என்றது ஒட்டகச் சிவிங்கி. கவனத்தில் எளிதாக நுழைகிறதாக பெயர் வேண்டும் என்றது பாப்பா.

அப்போ சிவிங்கின்னே பேரு வச்சுடு என்றது ஒட்டகச் சிவிங்கி.

ஓஓஓ என்று கூடியிருந்த எல்லாம் சிரிக்க குழந்தையும் நகைத்தது. யுத்தம் வரை போய் ஓய்ந்தது குறித்து போன நிமிடம் வரை தொடுமொழியாக கட்டைவிரல்களை இழுத்து நோவித்ததன் மூலம் கூச்சலிட்டு விரோதம் பாராட்டி நின்றவர்கள் ஒருவருக்கொருவர் உள்ளங்கைகளைச் சுரண்டி மகிழ்ச்சி தெரிவித்து களி கூர்ந்தார்கள்.

இந்தக் குகை பூமியே தொடுமொழி நகைப்பில் நிரம்பி வழிகிறது. நூறாண்டு முன் பயங்கரமான வாகினிப் பேய்களும் சாகினிப் பேய்களும் யுத்தம் செய்ததுபோல் நடந்திருந்தால் எப்படி இருக்குமோ தெரியவில்லை என்றது ஒட்டகச் சிவிங்கி.

அந்த யுத்ததில் நானும் பங்கெடுத்திருந்தேன் என்றது அது இன்னும் மேலே இருக்கும் கிளைக்கு கழுத்து நீட்டிப் பறித்தபடி.

பேய்களின் யுத்தத்தைப் பற்றி சிறுவர் சிறுமியர் இருந்தால் கேட்க வேண்டாம் என்று சொல்ல பாரவி பொம்மையோடு ராஜியும் இன்னும் நான்கு குட்டிப் பய்யன்களும் வீடு திரும்பினார்கள். அவர்கள் பல மாடி அடுக்கக வீட்டு மின்தூக்கியில் ஏறி மேலே போவதைப் பார்த்தபடி இருந்தவர்கள் சரி இப்போது சொல்லுங்கள் என்று ஒட்டகச் சிவிங்கியைச் சூழ்ந்திருந்தார்கள்.

சிவிங்கி தொடங்கியது அது சொன்ன பேய்ச் சண்டை கதை இப்படி இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன