புது நாவல் என்றொரு புது நாவல் தொடங்கிய நாள் இது

இன்று ஒரு முக்கியமான தினம் என்பதால் புது நாவல் (பெயரும் அதுதான்!) எழுதத் தொடங்கி இரண்டு அத்தியாயங்கள் எழுதினேன்.

தினை அல்லது சஞ்சீவனி என்ற என் முந்தைய ஃபாண்டஸி நாவலின் தொடர்ச்சியும் நீட்சியுமாக புது நாவல் அமையும்.

அவ்வப்போது இந்த இணையத் தளத்தில் ’ இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாக’ புது நாவல் எந்தத் திசையில் எப்படி நடக்கிறது என்று சூசனை காட்ட அத்தியாயங்களிலிருந்து ஒன்றிரண்டு பக்கங்கள் பிரசுரமாகும்.

கிருஷ்ணார்ப்பணம்
=======================================================================================================================
புது நாவல் அத்தியாயம் 1

புது நாவல் அத்தியாயம் ஒன்று

காலை இது, இந்த நிமிடம் பிற்பகல், தொடர்ந்து உடனே இரவு வந்தது, அது கடந்து மறுபடி இன்னொரு பகல் என்று தரி கெட்டு ஓடும் பொழுதுகள் இந்தப் பிரபஞ்சத்தை பொது ஆண்டு ஆறாயிரத்துப் பதினேழு முதல் பிடித்து நீங்காது சூழ்ந்துள்ளன.

இப்போது நடப்பில் உள்ள பொது ஆண்டு 6120.

குகைகள் நிரம்பி வழிய, எஞ்சிய மானுடமும், மற்ற விலங்கினங்களும் குகை இருட்டின், குகைப் பாறையின் பாதுகாப்பில் வெளியேற மனமின்றி சுருண்டு ஈரம் அப்பிய குகைத் தரையில் அங்கங்கே படுத்திருக்கின்றன. பிரபஞ்சம் முழுவதும் குகைகள் என்பதால் குடியேற இன்னும் குகையுண்டு.

அணுசக்தி ஆயுதங்கள் பொது ஆண்டு 5867-இல் நிலமழித்ததும், ஆலங்கட்டி மழை தொடங்கியது. அது கருத்த பெருமழை பெய்யும் பகலாக நூறாண்டு தொடர்ந்தது. அந்த நீண்ட பகல் பொழுது ஓய, அடுத்த நூறாண்டு தொடர்ந்தது இரவாக. இருட்டைத் தின்று இருட்டைப் பிறப்பித்த நீண்ட இரவு முடிய, அணுவிளைவு குறைந்து தணிந்தது.

அது ஓய்ந்து எங்கணும் குகைகள் புதியதாக முளைவிட்டன. பயிர்கள் செழித்தோங்கியிருந்த நிலங்களில் வந்த குகைகள். பழைய பெருஞ்சாலைகளைப் போர்த்தி முளைத்த குகைகள். கடற்கரைக் குகைகள். கடலுக்குள் எழுந்த குகைகள். அருவி, ஆறு, வாய்க்கால் எனச் சகல இடத்திலும் காளான் குடை விரித்ததுபோல் எழுந்து வந்த குகைகள்.

அவை அறிவு மிகுந்த குகைகள். எந்த திசை நோக்கி இருக்க வேண்டும், எத்தனை வளைவுகள் இருக்க வேண்டும், நீள, அகலங்கள் சுற்றுச் சூழலைப் பொறுத்து எவ்வளவு இருக்க வேண்டும் என்று தானே விதித்துக் கொண்ட கணிதச் சமன்பாட்டின்படி எழுப்பிக்கப்படுகிற குகைகள் அவை.

உயரம் மட்டும் பிரபஞ்சம் முழுக்க ஒரே அளவு, அதாவது எட்டடி தான் இருக்கும், எங்கும்.

குகை மனிதர்களுக்குப் பேச, கேட்க, அதன்படி நடக்க மட்டும் தேவையான அறிவு பிறவியிலேயே சிறுமூளை முகுளத்தில் பதிந்திருக்கும்.

அந்த அடிப்படை அறிவு, சைகை மற்றும் தொடுமொழி வழியாக பரஸ்பரம் தொடர்பு கொள்ளப் பயனாகும். பார்வை குறைந்த, அற்ற மாற்றுத் திறனாளிகளோடு தொடர்பு கொள்ள தொடுமொழி மட்டும் பயன்படும் என்பதால் அப்படியானவர்கள் குறைந்த அளவே பிறப்பிக்கப் படுவார்கள்.

சைகை மற்றும் தொடுமொழி, மானுடர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள மட்டுமானவை அல்ல. சகல விலங்கினம், பறவையினங்களோடும் சகஜமாகத் தொடர்பு கொள்ளப் பயனாகிறவை.

இந்த ஏற்பாடு சரிப்பட்டு வராததால் இப்பிரபஞ்சத்து ஊர்வனவான மற்றும் சற்றே எழும்பிப் பறக்கும் பூச்சிகள் எல்லா இனப் பூச்சிகளும், பாம்புகள் உட்பட அனைத்துப் பூச்சிகளும் பிரபஞ்சம் முழுக்க இயற்கை எய்யப்பட்டன.

தேள்கள் ஆயிரம் ஆண்டு முன்பு வரை இந்தக் காஸ்மாஸ் பிரபஞ்சத்தை ஆட்சி செய்து வந்தன. பொது ஆண்டு 5867இல் மானிட இனத்தோடு பகுதி தேளினம் கூட்டுச்சேர, அணு ஆயுதப் பிரபஞ்சப் போரில் அவை அழித்தொழிக்கப்பட்டன.

தேளினத்தோடு கூட்டணி அமைத்திருந்த கரப்புகள் அணு ஆயுதப் போரில் தப்பிப் பிழைத்து அடுத்த ஆயிரம் ஆண்டுகள் தலைமறைவாயின. பொது ஆண்டு 6005-இல் அவை நல்ல ஆரோக்கியமும் எதிர்ப்பட்டதை எல்லாம் மோதித் தகர்க்கும் வெறியுமாக குகை எங்கும் படை எடுத்துச் சூழ்ந்தன.

எல்லா உயிரினங்கள் மேலும் பறந்து போய்ப் பாய்ந்து ஒட்டிக்கொண்டு கத்தி போன்ற கால்கள் கொண்டு முகம், தலை, பிரத்தியோக உறுப்பு என்று தேடித்தேடி ஊர்ந்து ஆழமான காயங்களை உண்டாக்கின.

ஐக்கிய உயிரினக் கூட்டமைப்பு என்ற அனைத்துக் குகைகளயும் ஆட்சி செய்யும் அரசமைப்பு கரப்பினத்தை இரண்டு மாதம் நீண்ட யுத்தத்தில் வென்று இன அழிப்பு நடாத்தியது.

கிழக்கு திசையில் ஏற்பட்டிருந்த நீளம் மிகுந்த குகையில் கரப்புகளின் அழிபடாத இன மிகுதி இன்னும் உயிர்த்திருப்பதாகவும், அவை வேண்டிய காலத்தில் வெளிவரும் என்றும் தொடுமொழிக் கதையாடல் சொல்லும்.

கரப்புகளோடான பிரபஞ்ச மகாயுத்தம் ஐக்கிய உயிரினக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற நிகழ்வாக, கரப்பினத்துக்கு சைகை மொழி, தொடுமொழி என்ற இரண்டு வலிமையான ஆயுதங்கள் கிட்டாமல் போனது காரணம் என்று பொதுவாகக் கூறப்பட்டது. அவற்றுக்கான நெகிழி, அசுத்த ஜட வஸ்து, ஜல வஸ்து, அபான வாயு போன்ற உணவு கிட்டாமல் கரப்புகள் இறந்து பட்டன.

காஸ்மோஸ் பிரபஞ்சம் குகை தோறும் ஓய்வாக இயங்கும் விடுமுறை தின இரவுப் பொழுது இது.

இரவில் இயங்கிப் பகலில் உறங்கும் பிரபஞ்சம் இது என்று ஏற்கனவே குறிப்பிட்டு நாமும் கதையைத் தொடங்கினோம். இந்நானிலம் முற்றும் இருளில், நல்லின்பத்தில் வாழ்க.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன