’இருபதம்சத் திட்டம் அது இந்தியாவின் சட்டம், நம் இந்தியர்க்கு மட்டும், இனி இன்ப வாழ்வு கிட்டும்’

1975 – எமர்ஜென்சி காலத்தில் நிகழும் நாவல் 1975-இல் இருந்து

நாங்கள் வாசல் முன்னறை நாற்காலிகளில் உட்கார்ந்ததுமே ஏதோ கடிக்க உணர்ந்து துள்ளினோம். கேளு நாயர் மற்ற உயிரினங்களோடு, மூட்டைப் பூச்சியும் சிறு அளவில் வளர்த்து வருவதாகத் தெரிந்தது.

“அது போன மாசம் நிறைய இருந்து மருந்து அடிச்சுக் கொலை செஞ்சாச்சு. இன்னும் கொஞ்சம் இருக்கு. அதுவும் இன்னிக்கு ராத்திரி போய் ஒழிஞ்சுடும்”.

தலை கலைத்து வாராமல் விட்ட யட்சிக் களையோடு பாருகுட்டி – பாருக்குட்டி இல்லை, பாருகுட்டி தான் – சொல்ல, “இன்னிக்கா பௌர்ணமி?” என்று திடீரென்று சந்தேகம் கேட்டார் கேஷியர்.

நான் அமாவாசை, பவுர்ணமி எல்லாம் இருபத்தைஞ்சு அம்சத் திட்டத்துக்குக் கிடையாது என்று சொல்ல, பாருகுட்டி சிவந்த நாக்கைத் துருத்திக் காட்டினாள். இன்னும் ஒரு மணி நேரம் அவளுடைய சார்ம் அஃபென்ஸிவ் ஆன அழகுத் தாக்குதலுக்கு ஆட்பட்டால் என்னை அவள் தலைமுடிக்குள் பிடித்துப் போட்டு, ஈரோடும் பேனோடும் இருட்டுச் சிறை பிடித்துவிடுவாள்.

”எதுக்கு லோன் அப்ளை பண்ணியிருக்கீங்க?”

கேஷியர் கேட்க, பாருகுட்டி தொண்டையைக் கனைத்துக் கொண்டு சும்மாதான் என்றாள். சும்மா எல்லாம் பேங்க் கடன் கிடைக்காது என்று அவர் சொல்ல, திட்டப்படியான லோன் என்றாள் அவள்.

என்ன திட்டம் என்று கேஷியர் விடாமல் பிடித்தார். சளைக்காமல், ரேடியோ நாள் முழுக்கப் பாடும் பாடலைப் பாடத் தொடங்கினாள் பாருகுட்டி :

’இருபதம்சத் திட்டம் அது இந்தியாவின் சட்டம், நம் இந்தியர்க்கு மட்டும், இனி இன்ப வாழ்வு கிட்டும்’

இவ்வளவு அபத்தமாக ஒர் அரசு விளம்பரம் எப்போதுமே வெளியானதில்லை. பாருகுட்டியின் பாட்டை பாதியில் நிறுத்தினேன்.

“தேனீ வளர்ப்புக் கடன் தொகையை என்ன செய்வீங்கன்னு கேட்கறார்”, விளக்கினேன்.

“செலவு செய்வேன்” என்று கச்சிதமாகப் பதில் சொன்னாள் பாருகுட்டி.

(இன்று எமர்ஜென்ஸி பிரகடனமான தினத்தின் 49-வது ஆண்டு தொடக்கம் 25 ஜூன் 1975. அந்தக் காலகட்டத்தில் நிகழும் நாவல் ‘1975’-ல் இருந்து ஒரு சிறிய பகுதி இது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன