ராத்திரி வண்டி

‘வடக்கே எல்லாம் டீத்தூளைஉம் பாலோட சேர்த்துக் கொதிக்க வச்சுத்தான் டீ தயார் பண்ணுவாங்க’.

 

’நல்லா இருக்குமா என்ன அது?’

 

ஸ்டேஷன் மாஸ்டர் கவலையோடு கேட்டான்.

 

‘நான் வாரணாசியிலே இருந்தபோது அப்படிக் குடிச்சே பழகிடுத்து’

 

‘வாரணாசின்னா காசிதானே? பெரிய கோயிலெல்லாம் இருக்கு இல்லே?’

 

‘நான் அங்கே மசான கட்டத்தைத் தான் வரஞ்சுக்கிட்டிருந்தேன். எரிச்சு எரிச்சு கங்கையிலே விடுவாங்க. படிக்கட்டு எல்லாம் சாவு பூசிக்கிட்டு எப்பவும் வைராக்கியத்தோட கிடக்கும்’.

 

‘பார்க்க எப்படியோ இருக்குமே..’

 

‘நல்லா இருக்கும். புகையும் நெருப்பும் அழகுதானே.. ஏகப்பட்ட படிக்கட்டுக்கு நடுவே தண்ணியிலே நானே எரிஞ்சுக்கிட்டே மிதக்கறதா வரஞ்சேன்..’

 

‘இதிலே இருக்கா?’

 

ஸ்டேஷன் மாஸ்டர் ஹோல்டாலைக் காட்டிக் கேட்டான்.

 

‘இல்லை. சப்பாத்திக்கு காசு இல்லேன்னு கடைக்காரன் கிட்டே கொடுத்திட்டேன். அவன் அது பைசா பெறாதுன்னு சொன்னான். அவன் அப்பா படம் வரைஞ்சு தரச் சொல்லி போட்டோ கொண்டு வந்து கொடுத்தான். நான் தனியா எரிவானேன்னு அவன் அப்பாவும் கூடச் சேர்ந்து எரியறதா போட்டுக் கொடுத்தேன்..’

 

ஸ்டேஷன் மாஸ்டர் ஏன் இத்தனை ஆச்சரியமாகப் பார்க்கிறான் என்று தெரியவில்லை. சுபாவமாகக் கூட தன்னால் பேச முடியவில்லை என்று வருத்தமாக இருந்தது.

 

‘குளிக்கிறீங்களா? சீக்கிரமா கிளம்பினா மத்தியான சாப்பாட்டுக்கு மண்டபம் போயிடலாம்’

 

சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல், காட்டிய திசையில் நடந்தான். பின்னால் குரல் வந்தது –

 

‘துண்டு எடுத்துக்குங்க’.

 

ஹோல்டாலில் இருந்து ஒரு கட்டு காகிதத்தை உருவிக் கீழெ போட்டான்.

 

‘ஸ்கெட்ச். கான்வாஸிலே எல்லாம் போடணும். காசுதான் இல்லே.. அது கிடக்கு… பல்பொடி இருக்கா…உமிக்கரி கூட போதும்..’

 

‘பாத்ரூமிலே பயோரியா பல்பொடி டப்பா இருக்கு..துண்டு வேணுமா..’

 

அவன் நாக்கைத் துருத்தினான்.

 

‘எங்கிட்டே குற்றாலத் துண்டு இருக்கு.. போதும்..’

 

ஹோல்டாலில் இருந்து பழைய துண்டை எடுத்துப் போட்டான். தேசலாக ஒரு சோப்புத் துண்டும் உள்ளே இருந்து விழுந்தது.

 

‘நீங்க நல்லா டீ உண்டாக்கியிருந்தீங்க.. தாங்க்ஸ்’

 

‘பாத்ரூம் மக் வெளியிலே இருக்கு. அந்தப் பக்கம் டாய்லெட்’.

 

‘ரொம்ப தாங்க்ஸ். நீங்க சரவணன் மாதிரி ஹெல்ப் பண்றீங்க’.

 

‘யாரு அது?’

 

‘ஆர்ட் காலேஜ்லே சீனியர். பானர் வரையறான் இப்ப’

 

‘பாத்ரூமிலே கதவு சரியாச் சாத்தாது. கொஞ்சம் அறைஞ்சு சாத்தணும்’.

 

குவளை குவளையாகத் தண்ணீரை எடுத்து விட்டுக் கொண்டபோது அவன் குற்றாலத்தில் இருந்தான்.

 

சந்தோஷமாகப் பாடுகிற, அவ்வப்போது பயம் கொள்ள வைக்கிற, கூகூ என்று கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்யும்படி உற்சாகம் பீறிடச் செய்கிற, அரையில் சிறுநீர் பிரியப் பிரியத் தலைமேல் குளிர்ந்த தாரையாகக் கும்மாளம் போட்டு இறங்குகிற, சுற்றிலும் சின்னச் சின்னத் திவலைகளை வீசி, கண்ணுக்கு முன் நீர்க் கண்ணாடி வழியே எதிரே இருக்கிற மலைகள் எல்லாம் குவி ஆடியில் பார்க்கிறது போல எல்லா விகிதமும் மாற்றிக் காண்பிக்கிற் அருவி. ராமச்சந்திரன் குளித்து விட்டு வருகிறான். பென்னிங்க்டன் துரை அரையில் லங்கோட்டோடு குளிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார். பின்னால் டிபுடி தாசில்தார் அய்யங்கார், பெருமாளை எழுந்தருளப் பண்ணி நடந்து வருகிறது போல், குடையைப் பொத்தாம் பொதுவாகப் பிடித்துக் கொண்டு பவ்யமாக வருகிறார். யாரோ ராமச்சந்திரன் கையில் காகிதத்தைத் திணிக்கிறார்கள்.

 

‘பார்த்துப் பாடு’

 

..’

 

குரல் உச்சஸ்தாயியில் போகும்போது தலையிலிருந்து வழிந்த தண்ணீர் தொண்டையில் இறங்குகிறது.

 

துரை தடுமாறுகிற தமிழில், ‘நீர் இன்று ஒரு ராத்திரி இங்கே தங்க வேண்டியிருக்கும். குட்ஸ் தரம் புரண்டு ரயில் ஓடாது. சும்மா இருக்கிற நேரத்தில் நன்றாகப் பாடிப் பழகிக் கொள்ளும். ஓதுவார்கள் இங்கிலீஷ் டியூன் சொல்லித் தருவார்கள்’ என்கிறார்.

 

மூக்கில் தண்ணீர் ஏற, ராமச்சந்திரன் இருமிக் கொண்டு வெளியே வந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர் அவன் ஹோல்டாலிலிருந்து எடுத்துப் போட்ட படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.

 

 

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன