எல்லாப் படமும் நல்லாத் தான் இருக்கு.. எனக்குத் தான் ரசிக்கத் தெரியலேன்னு தோணுது’

ராத்திரி வண்டி                  இரா.முருகன்  பகுதி – 4 அ

 

 

சீவகன் எல்லாப் படங்களிலும் பிரம்மாண்டமான கட்டிடங்களைப் பார்த்தான்.

 

மஞ்ச மசேல்னு, பச்சை மினுக்கிக்கிட்டு… நடுவிலே நடுவிலே கசாப்புக்கடை சுவர் மாதிரி சிவப்பு வேறே தெளிச்சு இருக்கு… சொல்லி வச்சாப்பிலே எல்லாம் இருளோன்னு கிடக்கு.. அப்புறம் எல்லாத்திலேயும் ஓட்டை உடசல் கடியாரம், மரப்பெட்டி, பிரம்பு பிஞ்சு தொங்கற நாற்காலி… ஒண்ணுலே ஒரு பொம்பளை முகத்தைத் தலை முடியாலே மறச்சுக்கிட்டு மாடி ஏறிட்டு இருக்கா. ஜன்னலுக்கு வெளியே ஒருத்தன் தலையிலே மூட்டையைத் தூக்கிட்டு நிக்கறான்… இன்னொரு படத்துலே வழுக்கைத் தலைக்காரன் ஒருத்தன் மாடிப்படியிலே உருண்டு வர்றான்.. இந்தப் படம் இன்னும் விசேசஹ்ம். ஒரு சின்னப் பையன் மேல் படியிலே இருந்து ஒரு பெரிய மேஜையை – மூணு கால் தான் அதுக்கு – கீழே தள்ளி விடறான். கீழே யாரோ முகத்தை சிடுசிடுன்னு வச்சுக்கிட்டு தொங்கிப்போன மாரோட தரையிலே உக்காந்திருக்கா.. மேஜை டிராயர் பாதி திறந்து வழுக்கைத் தலையன் தலை மட்டும் தெரியறது.. இது இன்னிக்குக் காலையிலே போட்டுட்டு இருந்தது மாதிரி இருக்கு.. இந்தப் பொண்ணு சாயல்லே வேறே ஒரு படம் கூட இல்லியே.. மொட்டக்கட்டயா கண்ணாடிக்கு முன்னாடி நின்னு சிரிச்சுக்கிட்டு இருக்கா.. கண்ணாடியிலே தெரியற உருவம்.. நம்ம ஆளுதான்.. மகா கிறுக்கனா இருப்பான் போல இருக்கே…ராசுவாவது அப்புராணி.. இவன் இன்னும் மோசம்…. அப்புராணி என்ன அப்புராணி.. உன்னைப் பார்த்து ஒருத்தியாவது சிரிச்சிருக்காளாடா சீவகா? இவ எகத்தாளமா இல்லே சிரிப்பா…’டாக்டர் கிட்டே காட்டுங்களேன்.. ஜின்செங்குன்னு ஏதோ வேராமே’…

 

சித்திரக்காரன் தலையில் இருந்து தண்ணீர் சொட்ட, இருமிக் கொண்டே பாத்ரூமிலிருந்து வந்தான்.

 

வரான் பாரு.. உரிச்ச கோழி மாதிரி.. ராசுவும் இப்படித்தான். ராசு என் கையிலே மசில்ஸ் பாத்தியாடா? எக்ஸர்ஸைஸ் பண்ணுடா… கொஞ்சம் உடம்பு போட்டா போலீஸ் உத்தியோகத்துக்கு மனுப் போடலாம்.. இல்லே டீக்கடைக் காரனுக்கு அசிஸ்டெண்டா டீ ஆத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான்…

 

மசில்ஸ்… சிவப்புக் கொடியும் பச்சைக் கொடியும் மாறி மாறிக் காட்ட..பொண்டாட்டிக்குத் தலை வலிச்சா நீலகிரித் தைலம் தடவிவிட… என்னிக்காவது வர ஆபீசருக்கு சலாம் போட… பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு ஊருக்குப் போனா, கடுதாசி எழுதி வ்ரவழைக்க…மாமனார் வீட்டுப் பரண்லே ஜாதிக்காய்ப் பெட்டியை எடுத்து வைக்க..

 

‘ரெஸ்ட் எடுத்துக்குங்க மாப்பிள்ளே.. ரொம்பக் களைச்சுட்டீங்க பாவம்… பாப்பாவை டவுண்லே டாக்டர் கிட்டே காமிச்சிட்டு வந்தோம்.. நீங்க தான் வருவேனாங்கறீங்க.. என்னத்தச் சொல்ல… எல்லா டாக்டரும் அவ சரியாத்தான் இருக்காங்கறாங்க… அட வெறும் தரையிலே எதுக்குப் படுக்கணும்… மாப்பிள்ளைக்கு மரியாதை தராத குடும்பம்னு ஊர்லே சொல்லுவாங்களே.. கொஞ்சம் எந்திருங்க..இந்தாம்மா பாப்பா.. மாப்பிள்ளைக்கு பாய் கொண்டாந்து விரி…தரையிலே படுக்காதீங்க மாப்பிள்ளை…(கிழவன் பல்லு வெளக்கறதே இல்லியா..) .. நீத்துப் போகும்.. ஆமா விளையாட்டு இல்லே… அனுபவஸ்தன் சொல்றேன்.. தரைச் சூட்டுலே சுக்கிலம் நீர்த்துடும் .. ‘

 

தரை சூடு. அப்ப மரம்..பலகை…கட்டில்… பெஞ்ச்… டைப்பு கிளாசிலே சிவன் பிரஸ்காரன் பொண்ணு முடிச்சுட்டு எழுந்த உடனே அவ உட்கார்ந்திருந்த பெஞ்சுலே உடனே உக்கார்ந்து ஏ எஸ் டி எஃப் அடிச்சா… இதமா ஒரு சூடு பாக்கி இருக்குமே… ஒரு வேளை அவளைக் கட்டிக்கிட்டிருந்தா தரையிலேயே படுத்திருக்கலாம்.. ஒழிஞ்ச நேரத்திலே மாமனார் வீட்டுப் பரண்லே எதையும் எடுத்து வைக்க வேணாம்… பூப்புனித நீராட்டு விழா அழைப்பு ஃப்ரூப் பார்க்கலாம் கூடமாட… ரெண்டு டைப் ரைட்டரை வாங்கிப் போட்டு இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்கலாம்…

 

‘அந்தப் படம் எல்லாம் அவ்வளவு நல்லா இருக்காது.. ஒண்ணு ரெண்டு தான் பேப்பர்லே அக்ரலிக் பெய்ண்ட் உபயோகிச்சுப் போட்டது.. சிலது வாட்டர் கலர்… பெரும்பாலும்.. நான் சொன்னேனே… வெறும் ஸ்கெட்ச் தான்…’

 

சித்திரக்காரன் மன்னிப்புக் கேட்கும் தோரணையோடு சீவகனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொன்னான். ஈரத் தலையில் துண்டை முக்காடு மாதிரி போட்டுக் கொண்டு முன்னால் நிற்கிறவ்னைப் பார்க்க சீவகனுக்கு சிரிப்பு வரவே அடக்கிக் கொண்டான்.

 

‘அப்படி இல்லே … எல்லாப் படமும் நல்லாத் தான் இருக்கு.. எனக்குத் தான் ரசிக்கத் தெரியலேன்னு தோணுது’

 

‘உங்க வீடு நல்லா இருக்கு.. பாத்ரூம் ரொம்ப பெரிசு..’

 

‘இது கவர்மெண்ட் வீடு..’

 

‘கவர்மெண்ட் வீட்டுலே ஓட்டை உடசல் வைச்சுக்க விட மாட்டாங்க… இல்லியா…. யாரும் கொண்டு வது போட்டா வெளியே தூக்கி எறிஞ்சிடலாமில்லியா?’

 

பாரு..திரும்பவும் பயித்தாரன் மாதிரி ஏதோ பினாத்த ஆரம்பிச்சுட்டான். இவனை சீக்கிரம் அனுப்பி வச்சாத்தான் நல்லது… குளிச்சுட்டு அதே அழுக்கு ஜீன்ஸைத் தான் மாட்டிக்கறான்.. வேறே இல்லே போலிருக்கே… பாவம்.. நம்ம பேண்ட் ஒண்ணைக் கொடுத்தா…உயரம் சரியாத்தான் இருக்கும்…

 

சும்மா டீக்கடையிலே வாய் பாத்துக்கிட்டு உக்கார வெள்ளையும் சள்ளையுமா எதுக்குடா? நான் காலேஜ் போனபோது போட்டுக்கிட்டதை எடுத்து உடுத்திக்க.. எனக்குத் தான் இடுப்பு பெரிசாகி ஒண்ணும் பத்த மாட்டேங்குது.. செகண்ட் ஹேண்ட் பேண்ட் போட்டுக்கற வழக்கமில்லையா.. அடி செருப்பாலே.. செகண்ட் ஹாண்டா இழுத்துக்க்கிட்டு ஓடற பயலுக்கு உடுப்புத் துணி பர்ஸ்ட் ஹேண்ட் கேக்குதோ..துணி கொடுக்கணும் உனக்கு.. அதான் ஹமாரா கர்த்தவ்ய ஹை..

 

’கிளம்பலாமா? புக்கிங் கிளார்க் நான் போன அப்புறம் தான் வீட்டுக்குப்போய் சாப்பிட்டு வரணும்.. கணபதியும் டவுனுக்குப் போயிருக்கான்..’

 

‘கணபதி யாரு?’

 

‘கலாசி… இங்கே அவனன்றி ஓரணுவும் அசையாது’

 

‘யாரோ உங்களுக்கு அங்கே இருந்து கையைக் காட்டறாங்க’

 

சித்திரக்காரன் வாசல் பக்கம் கையைக் காட்டினான்.

 

சீவகன் அவன் காட்டிய திசையில் பார்த்தான். ஸ்டேஷன் வாசலில் நின்று புக்கிங் கிளார்க் அவசரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன