Pakal Paththu – Raa Paththu (a novelette by Era.Murukan) Chapter 1பகல் பத்து ராப் பத்து – குறுநாவல் (இரா.முருகன்) – அத்தியாயம் 1

என் குறுநாவல்களில் மும்பாயைக் களனாகக் கொண்டது ‘பகல் பத்து ராப்பத்து’.

1990-களின் மத்தியில் மும்பை வங்கிக் கிளைகளில் கிளையண்ட் சர்வர் கம்ப்யூட்டிங்கில் யூனிக்ஸ் பிரதிஷ்டை செய்து சைபேஸ் டேட்டாபேஸ் கட்டி எழுப்புவது தொடங்கி நாங்களே உருவாக்கிய சி-மொழி அடிப்படையான மென்பொருளும், ஹப், டெர்மினல் கான்சண்ட்ரேட்டர் இன்னோரன்ன வன்பொருளும் சீராக நிறுவி வெற்றிகரமாக இயங்க வைக்க உயிரைக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம்.

நாளின் 18 மணி நேரம் கிளைகளிலும், மற்ற நேரம் செண்ட்ரல், வெஸ்டர்ன், ஹார்பர் என்ற மூன்று மின்சாரத் தடங்களில் பயணமும், கோழித் தூக்கமுமாகக் கழிந்த மறக்க முடியாத நாட்கள் அவை.

ராத்திரி பத்து மணிக்கு நாரிமன் பாயிண்ட், நடு நிசிக்கு சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தை ஒட்டிய வீதியில் நடமாட்டம், விடிகாலை நேர சர்ச்கேட், அமைதியும் ஆர்ப்பாட்டமுமாக நேரத்துக்கொரு முகம் காட்டும் அரபிக் கடல்.. பண்டிகைகள், அரசியல், சினிமா.. மராட்டியும் பாரதத்தில் புழங்கும் மற்ற மொழிகள் அனைத்தும் சுற்றிச் சூழ, காலையில் ஒரு திசையிலும் மாலையில் நேரெதிர் திசையிலுமாக ஜன சமுத்திரத்தின் பேரியக்கம் …

மும்பையின் ஒரு நாளில் – பகல் பத்து மணி முதல் இரவு பத்து வரை – நிகழும் குறுநாவல் ‘பகல் பத்து ராப்பத்து’.

சுஜாதா சார் குமுதம் ஆசிரியராக இருந்தபோது குமுதத்துக்கு அனுப்பி, அவர் பதவிக் காலம் முடிந்து வெளியானது.

தினம் ஒரு அத்தியாயத்தைப் பகிர்ந்து கொள்ளத் திட்டம். பார்க்கலாம்.
————————————————————————————————————-

பகல் பத்து ராப் பத்து இரா.முருகன்

அத்தியாயம் 1

ராமபத்ரன் நாக்கை நொந்து கொண்டார்.

கேடு கெட்ட புளியோதரை ஆசை. கர்ப்ப ஸ்திரி கேட்டாள் என்று செய்த புளியோதரை.

எதிர் ஃப்ளாட் சுதாகர் ஷிண்டே பெண்டாட்டி முழுகாமல் இருக்கிறாள். வயிற்றைத் தள்ளிக் கொண்டு ஸ்வெட்டர் பின்ன ஊசி வாங்க வந்த பொழுது சொன்னாளாம் –

‘மதராஸி ஸ்டைல் இம்லி சாவல் சாப்பிடணும் போல இருக்கு மிசஸ் அய்யர்..’

கரிசனமும், எள்ளுப் பொடியும், பெருங்காயமுமாக மணக்க மணக்க அகிலாண்டம் செய்து கொண்டுபோய்க் கொடுத்தது போக மீந்ததை உருளியில் மூடி வைத்திருக்க வேண்டாம் ..

நாற்பத்தேழு வயதில், ராத்திரி ஒன்பது மணிக்கு மேல், எண்ணெய் கசிகிற புளியோதிரை சாப்பிட்டு அஜீர்ணம், தூக்கமின்மை, மனைவியைச் சீண்டல், ஸ்கலிதம், அசதி, கண்ணயர்வு, நேரம் வெகுவாகத் தவறிக் கண்விழிப்பது, மலச்சிக்கல், ஆசன வாயில் எரிச்சல், தவறவிட்ட விரைவு ரயில்… ஸ்டேஷன் ஸ்டேஷனாக நின்று குசலம் விசாரித்துப் போகும் இந்த சாவகாச லோக்கல் டிரெயின் சனியன்.

ராமபத்திரன் கழுத்தை எக்கிப் பார்த்தார்.

இஷ்டர்களோ மித்திரர்களோ யாரும் தட்டுப்படவில்லை. அவர்கள் ஏழு ஐம்பத்தைந்து ஃபாஸ்ட் லோக்கலில் வழக்கம் போல புறப்பட்டுப் போயிருப்பார்கள். ராமபத்ரனைப் போல் முன்னூற்றுச் சில்லரை சதுர அடி இருப்பிடங்களில் முடங்குகிறவர்கள். எதிர் ஃப்ளாட்டில் கர்ப்பிணிகளோ, சித்ரான்னத்தில் இச்சையோ இல்லாதவர்கள். வருகிற தை மாதம் மகா கும்பாபிஷேகமாகப் போகிற சம்பாஜி காலனி சித்தி வினாயகர் கடாட்சத்தால் சகல சௌபாக்கியங்களும், தினசரி சீரான வாகன யோக சௌகரியங்களும் வாய்க்கப் பெற்றவர்கள்…

சராசரிக்கு மேற்பட்ட பம்பாய்த் தமிழர்கள்…

உள்ளேயும் போக முடியாமல் வெளியேயும் சாட முடியாமல் கம்பார்ட்மெண்டில் கூட்டம் முழி பிதுங்குகிறது. பக்கத்தில் உசரமாக நிற்கிறவன் குடம் குடமாகத் தோளில் வியர்வை வடித்துக் கொண்டிருக்கிறான். வெங்காய வாடையும், பூண்டு வாடையும், செண்டுமாக ஏக காலத்தில் மூக்கில் குடைகிறது. சட்டமாக காலை அகட்டி உட்கார்ந்து ‘லோக்சத்தா’ படிக்கிற வல்லபாய் பட்டேல் ஜாடை ஆசாமி தாதரில் இறங்குவானா என்று தெரியவில்லை.

எதற்கும் இருக்கட்டும் என்று கைப்பைய அவன் முதுகை மோப்பம் பிடிக்கிறதுபோல தொடுக்கி வைத்தார்.

‘சப்லோக் ஜாவேச்சே…’

குர்லாவில் ஏறிய இரண்டு குஜராத்திகள், இரைச்சலை மீறி சூரத் பட்டணம் காலியானதைப் பற்றிப் பேச ஆரம்பிக்க, ஏகப்பட்ட கைக்குட்டைகள் மூக்கைச் சுற்றி உயர்ந்தன.

ராமபத்ரன் அவசரமாகக் கைப்பையில் துழாவினார். கண்ணாடிக் கூடு, சீசன் டிக்கெட், வெற்றிலைப் பெட்டி .. துண்டு எங்கே தொலைந்தது?

பாழும் புளியோதரை ஆசை ப்ளேகில் கொண்டு விடுமோ?

இருபத்தைந்து வருட பம்பாய் வாசத்தில் எத்தனை அடைமழையும் கலவரமும் காய்ச்சலும் அனுபவித்தாகி விட்டது… ப்ளேக் தான் பாக்கி.

‘தாதரில் தேஷ்பாண்டே கிட்டே ஷேர் டிரான்ஸ்பர் ஃபாரம் கொடுத்திட்டு …’

யாரோ யாரிடமோ ஷேர் மார்க்கெட் அலசலுக்கு நடுவே சொல்ல , ராமபத்ரன் ஒரு நடுக்கத்துடன் தாதரை எதிர்பார்த்தார். இந்த ஜோதியில் கலக்க வரும் இன்னொரு ஜனக் கூட்டம் அங்கே காத்திருக்கும்.

பத்தரைக்குப் போக வேண்டிய ஆபீசுக்கு அரை மணி நேரம் கழித்துப் போய், யார் யாருக்கோ பதில் சொல்லி, சிரித்து மழுப்பி, கையெழுத்து போட்டு…

எகனாமிக்ஸ் டைம்ஸில் ஷேர் விலை பார்க்க நேரம் கிடைக்காது. மதியம் தான்.

மத்தியானம் போல வந்தால் சித்திவினாயகர் கோயில் நிதிக்கு கேசவ் ஷெனாய் முன்னூத்தியொண்ணு எழுதுவதாகச் சொன்னான். அவன்
பக்கத்தில் இன்னும் இரண்டு ஷெட்டியும், இரண்டு கினிகளும், ஒரு நாயக்கும் கூட எழுதக் கூடிய சாத்தியக் கூறுகள். கன்னடமும், பணமும் தாராளமாகப் புழங்குகிற பேங்க் அது.

ரசீதுப் புத்தகம்..

கைப்பையைத் திரும்பத் திறக்க முயற்சி செய்ய, ஸிப் பாதி வரை வந்து நகரமாட்டேன் என்றது.

ரசீதுப் புத்தகம் உள்ளே தான் இருக்கும் ..

எட்டு மாதமாக, ஆபீஸ் நேரம் போக கோயில் காரியம் தான் ..

எல்லாம் ஒரு சனிக்கிழமை சாயந்திர ரயில் பயணத்தில் தான் ஆரம்பமானது.

‘சம்பாஜி காலனி கோயில் சுவர் மழையிலே விழுந்துடுத்தாம்’.

சீட்டும், பஜனையும், அரட்டையும் அமர்க்களப்பட்ட கம்பார்ட்மெண்டில் திருமலாச்சாரிதான் பிரஸ்தாபித்தார்.

ரயிலில் இப்படிச் சேர்ந்து போய் வருகிறவர்கள் வசூல் செய்து, ஒரு ஐயாயிரம் பத்தாயிரம் ஏற்பாடு செய்தால் சுவர் எழும்பிவிடும் என்று தொடங்கியது.

சுவரிலிருந்து தளமும், தளத்திலிருந்து பிரகாரமும் என்று சேர, உற்சாகம் ஏறிக்கொண்டே போய் கும்பாபிஷேகத்தில் முடியப் போகிறது.
கமிட்டியும், கூட்டமும், ஆலோசனையும் எல்லாம் ரயிலில் தான்..

தாதர் வந்து விட்டது.

ராமபத்ரனை முழுதும் மறைத்த இரண்டு பேரின் பிருஷ்டங்களுக்கு இடையே ஒரு வினாடி தெரிந்த ஜன சமுத்திரம் வழக்கத்தை விடப் பெரியதாக இருந்தது. இதில் நாலும் ஒரு பங்கு உள்ளே நுழைந்தாலே நிற்பது கூடத் திண்டாட்டமாகி விடும்.

நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.

‘வெஸ்டர்ன் ரயில்வேயிலே தகராறு அண்ணாச்சி.. பயாந்தர்லே ஏதோ ஜகடா .. தாதரோட திருப்பி விடறானாம்.. எல்லாக் கூட்டமும் செண்ட்ரல் ரயில்வேயிலே தான்..’

கெச்சலாக ஒருத்தன் ஜன்னல் பக்கம் யாரிடமோ தமிழில் உரக்கச் சொல்கிறான்.

‘க்யா க்யா?’

வல்லபாய் பட்டேல் ராமபத்ரனைத் திரும்பப் பார்த்து விசாரித்தார்.

பின்னால் ஏழு யானை பலத்தோடு பதிகிற இறுக்கம்.

‘புளியோதரை’ என்றார் ராமபத்ரன்.

(தொடரும்)

2 comments on “Pakal Paththu – Raa Paththu (a novelette by Era.Murukan) Chapter 1பகல் பத்து ராப் பத்து – குறுநாவல் (இரா.முருகன்) – அத்தியாயம் 1
  1. BALACHANDRAN G சொல்கிறார்:

    Recommended by Dr Guru Raghavan

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன