Chennai Book Fair 2014சென்னை புத்தகக் கண்காட்சி 2014

சென்னை புத்தகக் கண்காட்சி – ஜீவா சிற்றரங்கு

காலச்சுவடு வெளியீடான ‘ஸ்ரீதரன் சிறுகதைகள்’ புத்தகத்தை பி.ஏ.கே அண்ணா வெளியிட்டுப் பேசினார். என் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய நண்பர்கள் லண்டன் பத்மனாப ஐயர், மு.நித்தியானந்தன் ஆகியோர் நிறுவிய தமிழியல் தரும் நூல் இது.

ஐயர் லண்டனிலிருந்து தொலைபேசி புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்ரீதரன் கதைகளை வெளியிட்டுப் பேச வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்ததைத் தட்ட முடியவில்லை என்றார் பி.ஏ.கே. 2002-ல் ஸ்ரீதரன் கதைகளைப் புத்தகமாக்க முயற்சி எடுத்து நிறைவேறாமல் தற்போது காலச்சுவடு மூலம் அது சாத்தியமாகிறது என்று ஐயர் குறிப்பிட்டதாகச் சொன்னார் அவர்.

பிஏகே பேச்சின் சாரம் :
//
சிறுகதை அவ்வளவாகத் திருப்தி தராத ஒன்று. அந்த இலக்கிய வடிவத்தைக் கையாள்வதில் உள்ள சிரமமே அதற்குக் காரணம். நகர்ந்து போகும் வாழ்க்கையில் நழுவி ஓடும் ஒரு கணத்தை உறைய வைத்த சிறந்த சிறுகதைகள் தமிழில் இருப்பது முக்கியமான நிகழ்வு.

ஸ்ரீதரனின் ஆரம்ப காலக் கதைகள் ஜெயகாந்தனை வியந்து அவருடைய சாயல் சமூக விமர்சனங்களைக் கொண்டவை. இந்தத் தொகுப்பில் முதலில் வரும் கதைகள் அவை. அவற்றைத் தொடர்ந்து வரும் ராமாயணக் கலகம் போன்ற கதைகளில் தனித்தன்மை தெரிகிறது.

ஸ்ரீதரன் அண்மைக் காலங்களில் சிறுகதை எதுவும் எழுதவில்லை என்று தெரிகிறது. அவர் தொடர்ந்து நல்ல சிறுகதைகளைப் படைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

//

புத்தகத்தை காலச்சுவடு கண்ணன் செம்பதிப்பாக வெளியிட்டுள்ளார். அச்சும் அமைப்பும் அபாரம். நண்பர் ஓவியர் லண்டன் ராஜாவின் ஓவியங்கள் சிறுகதைகளுக்கு அணி செய்கின்றன.
—————————————–
சிற்றரங்கு எங்கே இருக்கு? பதிப்பாளர்களிலேயே பலருக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்.

வெளியே இருக்குங்க என்றார் ஒருத்தர். பத்து ரூபாய் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கி விட்டு உடனே வெளியே போக மனம் இல்லாம இன்னும் இருவரிடம் கேட்க விதவிதமான் பதில்கள்.

எதிரே வந்த நண்பர் வண்ணதாசனிடம் நலம் விசாரித்த கையோடு அவ்ருக்கு இது சம்பந்தமாக ஏதும் தெரியுமா என்று விசாரித்தேன். நல்ல வேளை, அவரோடு வந்த நண்பர் சரியாக ஆற்றுப் படுத்தினார்.

வண்ணதாசனோடு இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம்.
————————————-
நண்பர்கள் காலச்சுவடு கண்ணன், நாகரத்தினம் கிருஷ்ணா சந்தித்தேன். விழா தொடங்கும் முன் பி ஏ கே அண்ணாவோடு சிற்றரங்கத்துக்கு வெளியே ‘ஓய்விட’த்தில் சமணர் கழுவேற்றம் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தேன்.

(ஓய்விடம் நாற்காலிகள் போட்டு வைத்த ஓய்விடம் தான். ரெஸ்ட் ரூம் அல்ல)

அவருடைய கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்குப் பதில் அளிப்பதாக ஒரு விளக்கமான கட்டுரை எழுதியிருப்பதாகச் சொன்னார்.

காலச்சுவடில் அல்லது செம்மலரில் எதிர்பார்க்கலாம்.
————————————-
கண்ணகி தொன்மம் புத்தக வெளியீடு

சு.ப.அறவாணன் கண்ணகி என்ற சொல் கண்ணால் சிரிக்கிறவள் (கண் +நகி) என்ற பொருள்படும் என்றார்.

கணிகை என்ற குலம் ஏற்பட்டது சிலம்பு காலத்தில் என்று தெரிகிறது.

நூலாசிரியரை எனக்கு காவ்யா சண்முகசுந்தரம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
—————————————–

Nagarathnam Krishna’s translation of Nobel laureate Jean-Marie Gustave Le Clézio’s novel Le Procès-Verbal.

As Prapanjan who was to have released the book is reported to be indisposed, Prof.Panchangam (please correct me if I am wrong) officiated in his place.

Le Clézio’s novel with the complex theme of the protagonist confused about where he comes from – whether from the army camp or from a psychiatry ward – poses a tough challenge to translators. Krishna has been remarkably successful at his attempt to render the book in Tamil.
———————-
பி ஏ கே அண்ணாவோடு வலம் வந்தபோது கண்ணில் பட்டவை –

நண்பர் காவ்யா ஷண்முகசுந்தரம் அவர்கள் தமிழ் வாசகர்களின் இலக்கியத் தேடல் மீது நம்பிக்கை வைத்து, பிரசுரம் செய்துள்ள நூல்களின் ரசகரமான தலைப்புகள்.

கநாசுயம், புதுமைப்பித்தம் .. இன்ன பிற

பிஏகிருஷ்ணம் எப்போ வரும்?
———————————–
சென்னை புத்தகக் கண்காட்சி 2014

வாங்க வேண்டாம் என்ற வைராக்கியத்தோடு போனாலும், அச்சு மோகினி மாயையில் ஆட்பட்டு நேற்று வாங்கிய புத்தகங்கள் –

– பஞ்சக் கும்மிகள் (புலவர் செ.இராசு தொகுத்தவை – காவ்யா

– தி.ஜானகிராமனின் ‘செம்பருத்தி’ (காலச்சுவடு)
————————————
.
நண்பர் சுகுமாரனுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடைய ‘வெலிங்டன்’ நாவல் வாங்கினேன். மலையாளத்திலும் கையெழுத்து போடச் சொல்லி நான் வற்புறுத்த, முதல் பக்கத்தில் ‘ஸ்நேகபூர்வம் முருகனு’ என்று எழுதிக் கொடுத்தார்.

அவருடைய தொகுப்பு மலையாளத்தில் வெளியாகும்போது தமிழில் கையெழுத்து வாங்கிக் கொள்ள வேணும்
———————-
கிழக்கு விற்பனையகத்தில் நண்பர் ஹரன் பிரச்சனாவுக்கு ஹலோ சொல்லி பத்ரியோடு பல பட்டடையாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

The best publishing business model, break even in terms of the print order, publishing paradigm shift and the future of digital publishing…

பத்ரி சொன்னதில் கிரகித்தது – ‘there is no one-size-fits-all solution’.

அரை மணி நேரம் கழித்து இன்னொரு முக்கியமான பதிப்பாளர் சொன்னார் – ‘மினிமம் ஐம்பது காப்பி போடுறேன்’ (ஆமா, ஐம்பது தான்).

விற்க விற்க கூடுதல் பிரதிகள் அச்சாகின்றன போல.

appears the common perception that print-on-demand has huge overheads may not be wholly true..
———————————–

‘என் எச் எம் ரைட்டர் எம்.எஸ்.வேர்டு ஃபைல் அடிக்க உபயோகிச்சா சில எழுத்து சரியா வரலியே’ – பிஏகே டு பத்ரி.

‘மைக்ரோசாப்ட் க்ளோஸ்ட் சோர்ஸ் கோட் எம் எஸ் வேர்ட் உள்ளே என்ன பண்றதுன்னு தெரியறதில்லை. safest bet is to write with NHM Writer in Notepad, copy it in MS Word and save’ – பத்ரி.

நோட்பேட் தான் எதுக்கு? நான் வேர்ட்பேடில் என் எச் எம் ரைட்டரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தறதைச் சொன்னேன்.

விஸ்வரூபம் நாவல் முழுக்க அப்படி எழுதினது தான்.

அதுக்கு முன், அரசூர் வம்சம், ரெட்டைத் தெரு, லண்டன் டயரி இதெல்லாம் முரசு அஞ்சல் யூனிகோட் உபயோகிச்சு எம் எஸ் வேர்ட் கோப்பாக்கியது. அதற்கும் முன் பிராஜக்ட் மேனேஜ்மெண்ட், ராயர் காப்பி கிளப், சைக்கிள் முனி, மூன்று விரல் இதெல்லாம் முரசு அஞ்சல் TSCII in MS Word file. பிரச்சனை இல்லாம இருந்தது அப்போ. காரணம் முன்பு operating System Windows 2009, அதுக்கும் முற்பட்டவை.

இப்போ விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டாஸ். லாப்டாப்பில் ஓப்பன் சோர்ஸ் உபுண்டோ எல்லாம் பயன்படுத்த தைரியம் கம்மி. பயன்படுத்தினால் என் எச் எம் ரைட்டர் வழுக்கிட்டு சுகமா ஓடும்னு தோணுது.
——————————–
இன்னிக்கு ராத்திரி இங்கே தங்கணும் என்றார் பத்ரி

கண்காட்சி வளாகத்தில் இரவு முழுக்க ரோந்து வர வேண்டிய அவசியம். inventory-ஐ asset valuation செய்தால் குறைந்தது ஒரு கோடி ரூபாயாவது வரும். ஸ்டால்களைப் பூட்டி வைக்க முடியாது. ஆகவே இவ்வளவு மூலதனமும் வெட்டவெளியில். பாதுகாப்பு அவசியம்.

பபாசி சார்பில் தினசரி ஒரு குழு இந்தக் காவல் – ரோந்துப் பணி செய்கிறார்களாம். குழுவில் ஒரு உறுப்பினர் யாராவது ஒரு பதிப்பாளர்.

நேற்று பத்ரி முறை.

பெரிய ப்ளாஸ்கில் காப்பி போட்டு எடுத்து வந்துடுவீங்களா என்று கேட்டேன். அதெல்லாம் அவங்களே கொடுத்திடுவாங்கன்னு எதிர்பார்க்கிறேன் என்றார் தன் நம்பிக்கையைச் சற்றும் இழக்காத பத்ரி.

காவல் கோட்டத்தை வலம் வந்து ‘பாரா உஷார்’ என்று கூவியபடி (இது காபந்து செய்கிறதற்கான பாரா) பத்ரியைக் கற்பனை செய்ய நன்றாக இருக்கிறது.
———————-
தினமணியில் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் நாவல் ‘நிமித்தம்’ பற்றி –

//எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல் “நிமித்தம்’ (ரூ.375, உயிர்மை பதிப்பகம்). தன்னுனோடு படித்த நண்பர் பற்றிய உருக்கமான கதையை அவர் எழுதியுள்ளார். காது கேளாக்குறைபாடு உடைய நண்பன் அவன். அந்தக் குறைப்பாட்டின் காரணமாகவே பிச்சை எடுத்துக் வாழக்கூடிய நிலைக்குத் தளப்பட்டு சமூக விதியில் அலைகிறான். அந்த வலியை பக்கங்களில் நிறைத்துள்ளார்.//

ரொம்ப எளிமைப் படுத்தி எழுதிய அறிமுகமாகத் தெரிகிறது. எஸ்.ரா நாவல் உலவும் தளம் இதுவாக இருக்காது. காது கேட்காததால் பிச்சை எடுத்தான் என்று நம்பிக்கையின்மையை எஸ்.ரா நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார்.

சரி, எம்.வி.வெங்கட்ராம் ‘காதுகள்’? அவை நம்பிக்கை பற்றியோ நம்பிக்கையின்மை பற்றியோ அல்ல. அகச்செவியும் உள்மனமும் சேர்ந்து நிகழ்த்திய ரசவாத எழுத்து எம்விவியுடையது.’
————————————-
சாகித்ய அகாதமி ஸ்டாலில் வாங்கிய புத்தகங்கள்

1) சே.ப.நரசிம்மலு நாயுடு – சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதியது. (விலை ரூ 10 – சற்றே பழுதடைந்த பிரதி)

2) ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு (தேர்ந்தெடுக்கப்பட்டது)

3) ஹென்றி கிருஷ்ணபிள்ளை (யோ.ஞானசந்திர ஜான்சன் எழுதியது)

மலையாளம்

1) குஞ்சன் நம்பியார் (வி.எஸ்.சர்மா எழுதியது)

2) எழுத்தும் வாயனயும் (வி.எஸ்.அனில்குமார் எடிட் செய்தது)
———————–
சென்னை புத்தகக் கண்காட்சி 2014

அசோகமித்திரன் சார். வணங்கினேன். புத்தகத்தில் கையெழுத்து போட காலச்சுவடு ஸ்டால் போகிற அவசரத்திலும் ’மோதிலால் தெரு தானே’ என்று அன்போடு விசாரித்தார். ‘ஆமா சார், அங்கே வந்துட்டேன்.. முந்திய தலைமுறை எழுத்தாளர் ந.சிதம்பரசுப்ரமணியன் இருந்த தெருன்னு நீங்க எழுதியிருந்தீங்களே’

அழகான, அளவான அசோகமித்திரன் சிரிப்பு. ‘ஆமாமா, நான் உங்களைத் தேடி ஒரு தடவை வந்திருக்கேன்.. உங்க அப்பா கூட என்கிட்டே சொன்னார் – கதை எழுத வச்சு அவனைக் கெடுத்திடாதீங்கன்னு.. ஞாபகம் இருக்கா?

நான் பதில் பேசாமல் சிரித்தேன். சில கேள்விகளை சாய்ஸில் விட்டு விடலாம். பதில் எதுவும் வேணாம். அந்த வாஞ்சையும் அன்பும் தான் முக்கியம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன