viswaroopam – a review of the novelவிஸ்வரூபம் நாவல் விமர்சனம்

என் அன்புத் தங்கை ஓவியர் – கவிஞர் ஜெயா (கோவை) விஸ்வரூபம் நாவல் பற்றி எழுதி அனுப்பியிருக்கிறாள். வீடு, பள்ளி (ஆசிரியை),  என்று ஆயிரத்தெட்டு பணிகளுக்கு நடுவில் என் நாவலையும் படித்துக் கவித்துவத்தோடு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறாள்.
கண்கள் பனிக்கின்றன. விழாவில் இதைப் படிக்கலாம் என்று இருக்கிறேன்.

viswaroopam (1)

விஸ்வரூபம்

——————

அருமை அண்ணாவிற்கு

சின்னதாய் ஒரு பகிர்தல் விஸ்வரூபம் பற்றி

புத்தக வெளியீடு நடக்கும் முன்பே எனக்கு

கிடைக்கும்படி செய்ததற்கு  முதலில்  நன்றிகள்

சொல்லும் உணர்வும் சேர்ந்தால் உள்ளம் கடவுள் அறியும்

படித்து முடித்தவுடன் விஞ்சி நின்றது பெருமூச்சு

முடித்தவுடன் பகிர்ந்து கொள்ளத்தோன்றியது

உங்கள் வார்த்தைகளின் பாதிப்பு இருக்கும் என்பதால்

சில நாட்கள் கடந்து இந்த பகிர்தல்

ஒருகாலம் கடந்த உணர்வுகளோடு கைகோர்த்த அனுபவம்

நழுவிப்போன கலாச்சாரமும் நசுங்கிய நாகரிகமும் முட்களாய்

மனதில் ஊடுருவிச் சென்றது

கதைக்கான களம் கண்முன் கற்பனையில் சுகமாய்

விரித்த கல்கண்டு வார்த்தைகள் காதோரம்

விசாலம் மன்னியின் ரகசியகுரல்களில்

நடேசனின் கிருஷ்ணனிடம் அறிமுகம் கிடைத்தால்

அடியேன் பாக்கியவான்

குரிசுக்குள் குடியேறிய குடும்பங்கள் ஜீசஸ் ரிஷி யானாலும்

அம்பலப்புழையின் கால்பதித்து நின்றது பூர்விகம் மாறாது

லண்டனும்  அம்பலமும் அடுத்தடுத்து வந்தது

அங்கேயே சென்ற வந்த உணர்வு

எடுத்துச் சென்றது வார்த்தைகளானாலும்

ஏக்கமாய் மனதில் ஆங்காங்கே வலிகள்

ஒரு ராஜ குடும்பம் சத்தமின்றி சங்கீதம் பாடியபோது.

எங்கே இருந்த நாம் எப்படி ஆனோம் என்பதில்

வரலாறு வம்சங்களாய்  அழிந்த கதை புரிந்தது

உடையும் நடையும்  உள்ளூரில் மாறினாலும்

உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காலத்தில்

முப்பாட்டன் முடிவை  மூடிவைத்த மூடர்கள் நாம் என்பதாய்

உண்மை முகத்தில் அறைந்தது

எந்த ஒருநபரும் ஏமாற்றம் இல்லாமல் மனதில் ஒட்டிக்கொண்டனர் எத்தனை உணர்வுகள் .!

வருஷப் பிறப்பின்போது அடித்த மாங்காபச்சடி வாசனை அருமை

அடுத்தவீட்டு ஐம்பது வருட வாழ்க்கையை

முத்தச்சன் முனகலாய் கூறியது போல் மெல்லிய வரிகள்

ஆவிகள் யாராக இருப்பினும் அதனோடு அளவளாவ ஆசைதான்

கட்டம் போட்டு ஆவி அழைத்த அனுபவம் அறிந்திருக்கிறேன்

ரெட்டியின் மனசுக்குள் கலந்த கலவியும் கள்ளத்தனமும்

பிடுங்கித் தின்னும் புத்தியும் பிணம்தின்னி குணமும்

நம்மில் பலரிடம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது

மறுப்பவர் மறுத்தாலும் மறையாது

பகவதியின் சுமை நீங்கிய மரணம் வேண்டியது மனம்

சுவாசம் நீக்கி உணர்வாய் வந்தவர்களின் உள்வருத்தம்

நாற்காலிபோட்டு நச்சென்று அமர்ந்தது

நானும் தெரிசாவானேன் இழந்த ஒன்றை கரைசேர்த்தேனா?

அறிந்தால் அமைதிவரும்

மாதாகோவில் மணியோசைக்குள் மறைவாய்கேட்டது மந்தரமும்

மாற்றுமொழி கற்க இப்படியும் ஒரு கதை படித்தால் போதும்

கண்மூடி கனவில் வாழ்ந்த அனுபவமாய் அத்தனையும்

போதை தரும் கதை படித்ததுண்டு அது போனகதை இப்போதுதான்

மனிதர் வாழ்ந்த வாழ்க்கை படிக்க வரலாற்று படிவம் வேண்டாம்

பலரின் மனதில் வாழும் உன் கதை போதும்

நன்றிகள் அண்ணா

இது வெறும் வார்த்தை அல்ல

வேறு ஒன்றும் இல்லை என் மனதை வெளிப்படுத்த  என்பதால்

பழைய சொல்லையே நானும் பயன்படுத்துகிறேன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன