Come back, Kalyanjiசீக்கிரம் திரும்பி வாங்க


கல்யாண்ஜி ஃபேஸ்புக்கிலே இனிமே கவிதை எழுத மாட்டேன்; எப்பவாவது தோணிச்சுன்னா திரும்பி வருவேன். இல்லேன்னா இல்லேதான்னு system shut down செஞ்சுட்டார்.

வருத்தமா இருக்கு. எதுக்கு ஃபேஸ்புக்கை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கணும்? இது பத்திரிகையோ புத்தகமோ இல்லை. நண்பர்களோடு, முப்பது பேரோ மூவாயிரம் பேரோ எல்லோரோடயும் casual-ஆக அரட்டை அடிக்க, social networking செய்ய ஒரு இடம்.. one’s own publicly private digital space. அத்ரயே உள்ளு.

நான் இங்கே என் நாவலை promote செய்யும்போது எழுத்தாளனா இருப்பேன். மற்றபடிக்கு நாயுடு மெஸ் வெண்பா, நியூஸ்பேப்பர் செய்தியைக் கிண்டல் செய்யறது, சீரியஸா, லைட்டா உலகத்திலே இருக்கற ஒரு சப்ஜெக்ட் விடாம அரட்டை அடிக்கறது..யூடியூப் பாட்டை கேட்கச் சொல்லி எல்லாரையும் கட்டாயப்படுத்தறது..I enjoy doing all that .. ஜோக் கூட எழுதியிருக்கேன்..

ராத்திரி ஒரு அரை மணி நேரம், காலையிலே ஒரு அரை மணி நேரம்..பேஸ்புக்கில் இருந்து வெளியே வரும்போது அன்பான மனுஷர்கள் கிட்டே நாளைக்குப் பார்க்கலாம்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போற சந்தோஷமும் வருத்தமுமான ஒரு கலவை நினைப்பு.

கல்யாண்ஜி இங்கே கவிதை மட்டும் எழுதினார். மணி மணியான கவிதை ஒவ்வொண்ணும். ஆனாலும், கல்யாண்ஜிங்கற கவிஞரா மட்டும் தான் அவர் வந்தார். அல்லது அவரைப் படிச்சுட்டு உண்மையாகவே பாராட்டி மறுமொழி போட்டவங்க, விதந்து ஓதிப் பாராட்டியதிலேயே அவர் கவிஞர் வட்டத்துக்குள் இன்னும் உள்ளே போயிட்டார் போல தோணுது. திகசி சொன்ன வீரவணக்கம் வேண்டாம் என்பதை அவர் மகன் செயல் படுத்திட்டாரோ..

கலாப்ரியா எம்.ஜி.ஆர் சினிமா பத்தியோ, மனுஷ் சகலமானதையும் பத்தியோ எழுதி கவிஞர் என்ற ஒற்றைப் பரிமாணத்தை வெற்றிகரமா உடைச்சாங்க. நான் ஆரம்பத்திலே (யாஹு குழுமக் காலம்) இருந்தே லொட லொட. எனக்குன்னு தனி பிம்பம் ஏதும் வேண்டாம்கிறதிலே பிடிவாதம் உண்டு.. இருந்தா உடைச்சுடணும் ..

நெட்டுலே ராயர் காப்பி கிளப்புன்னு ஆரம்பிச்சு சீரியஸான விஷயங்களைக் கூட சாப்பாட்டுக்கடை idiom உபயோகிச்சு கொடுத்தோம். இலக்கியவாதின்னா தட்டுப்படும் மொடமொடன்னு கஞ்சிப்பசை போட்ட ஜிப்பா வேட்டி பிம்பத்தை, ராயர் ஓட்டல் தோசை மாஸ்டரா மாத்தி ரசிக்க வைச்சதுலே என் நண்பர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் பங்களிப்பு அதிகம். அங்கே எழுதின பலரும் எழுத்தாளர்கள், ஓவியர்கள் அல்லது எழுத ஆரம்பித்து எழுத்தாளர் ஆனவங்க. relaxed ஆக எழுதினதாலே நிறைய எழுத முடிஞ்சது..எனக்கு மட்டுமில்லே எல்லோருக்கும்.. அதோட miniature version தான் ஃபேஸ்புக்கிலே social networking செய்யறது..

யாருக்கும் தொடர்ந்து இங்கே கவிதையோ மற்றதோ எழுதக் கட்டாயம் கிடையாது. கல்யாண்ஜி கவிதையோட கூட சகஜமாக மற்றவர்களோடு உரையாட வந்திருந்தால் திரும்பப் போக விரும்பியிருக்க மாட்டார்னு தோணுது.

சுஜாதா சார் எண்பதுகள் ஆரம்பத்திலே அவர் சந்திக்க விரும்பும் பத்து பேரோடு கற்பனை கலந்துரையாடல் எழுதியிருந்தார். கணிதமேதை ராமானுஜம் மனைவி, அவருடைய பால்ய கால நண்பன் இப்படியான பட்டியல்லே சுஜாதா அதுவரை சந்தித்திருக்காத ரெண்டு எழுத்தாளர்கள் உண்டு. ஒண்ணு கல்யாண்ஜி. இன்னொருத்தர் மாஞ்சி மாஞ்சி இதைத் தட்டச்சிட்டு இருக்கற நான்..

‘இவ்வளவு கூட்டமா இருக்கும்னு தெரிஞ்சா வந்தே இருக்க மாட்டேன்’ அப்படீன்னு சங்கோஜத்தோடு கல்யாண்ஜி ஒதுங்கறாதா கற்பனை செய்திருப்பார் சுஜாதா. ரொம்ப சரியாக்கும் அது.

கல்யாண்ஜி, இங்கே கவிதை உங்களுக்குத் தோணும்போது எழுதுங்க.. மத்தபடி எல்லோரோடும் பேசுங்களேன்.. உலகத்திலே பேச கவிதை மட்டும் இல்லையே.. அதுவும் உங்க மாதிரி சக மனிதன் மேல் அடிப்படை அன்பு கொண்ட ஒருத்தருக்கு.. கடையிலே போய் முள்ளங்கி விலை விசாரிக்கற மாதிரி இயல்பா (ஆமா, எடுவர்ட் மானே சொன்னது தான்).. எத்தனை எத்தனை பேசலாம்.. உங்களுக்கு பிடிச்ச காலைப் பலகாரம் என்ன? சமீபத்தில் எந்த சினிமா பார்த்தீங்க? வாணி ஜெயராம் குரல் பிடிக்குமா உங்களுக்கு? ஜ.ரா.சு சார் எழுதின அப்புசாமி கதை, ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ், கவுண்டமணி காமெடி..பிடிக்குமா.. கர்னாடக சங்கீதம்? இந்துஸ்தானி? ராக் ம்யூசிக்? பாப்?

சீக்கிரம் திரும்பி வாங்க ..

——————————————

செய்திகள் – வாசிப்பது

அமெரிக்காவில்
போதை மருந்து மாபியாவைப்
பிடித்துத் தண்டனை கொடுத்த
சர்க்கார் அதிகாரிகள்
கூண்டோடு கட்சி மாறி
’எஸ் பாஸ்’ என்று மெக்சிகோவில் நின்றார்கள்.

பட்ஜெட் இன்றைக்கு
புதுசு புதுசாக என்ன வரியோடு
அவதாரம் எடுக்குமோ.


மலையாளி மனம் கவர்ந்த
ஆகாசவாணி, வார்த்தகள்’
நியூஸ் படித்த
மாவேலிக்கர ராமச்சந்திரன்
ரிடையர் ஆன பிறகு அனந்தையில்
காணாமல் போனார்
தேடுதல் தொடர்கிறது
எங்கே போனார்? ஏன்?

பெட்ரோல் விலை
அடுத்து எப்போது உயரும்?
எவ்வளவு?

மணிரத்னம் வீட்டுக்கு
சொந்த செலவில்
ரெண்டு போலீஸ் கான்ஸ்டபிள்
பாதுகாப்பு
ஹைகோர்ட் ஆணை.
கடல் கோள் நேரம்.

இந்த வரும் சென்னை தண்ணீர்ப் பஞ்சம்
எப்போது தொடங்கும்?

நம்ம டாய்லெட்
சூரியக் கழிப்பறை.

ஹெலிகாப்டர் ஊழலைக்
கண்டுபிடித்துக் கப்பலேற்ற
ஆந்தணி சார் நியமித்த
முப்பது எம்.பி கமிட்டி
புலன்விசாரணைக்காக
குடும்ப சகிதம்
எப்போது இத்தாலிக்கு
பயணம் வைக்கப் போகிறார்கள்?

சென்னை முழுக்க அப்புகிற
கொசுத் தொல்லை
எப்போது ஒழியும்?

ஒரு நாள் பேப்பரில்
கருத்து சொல்ல
கவிதை எழுத
எத்தனை இருக்கு.

எழுதிவிட்டு
ஆபீஸ் கிளம்பலாமா?
ஆபீஸ் போய்விட்டு வந்து
எழுதலாமா?

(era.murukan Feb 28 2013)

——————————–

கல்யாண்ஜி கவிதையை விரும்பியாச்சு
கலாப்ரியா எழுத மாட்டேங்கறான்
கேஷவ் ஓவியத்தை ரசிச்சாச்சு
கொலட்கரைப் பகிர்ந்து கொண்டாச்சு
என்ன செய்யலாம்?
கொம்பா முளைச்சிருக்கு?
எல்லோரையும் போல
ஆபீஸுக்குப் போகலாம்

——————————–

கொலட்கரின் கவித்துவம் சின்னச் சின்ன வாக்கியங்களில் அநாசயமாக ஒரு தலைமுறைச் சிந்தனையை உதிர்த்துப் போவது.

ஜெஜுரி வரண்ட, பாறைப் பிரதேசம். அங்கே தலயாத்திரை போவது எளிய மராத்தியர்களின் வழக்கம். காண்டோபா என்ற வன தெய்வ வழிபாடு.

கொலட்கரும் போய் வந்தார். அவருக்குக் கடவுளோடு கவிதையும் தரிசனமானது. சொற்சிக்கனமான கவிதை.

ஜெஜூரி கவிதை முடிவில் சொல்கிறது போல் –

scratch a rock and a legend springs

ஏதாவது கல்லை லேசாச் சுரண்டுங்க.
ஒரு கதை வரும்.

—————————-

இன்றைய மகிழ்ச்சி – காலை குளிரக் குளிரப் பொழுது விடிந்தது.

இன்றைய எரிச்சல் – எங்கள் அலுவலகம் ஆறாம் மாடியில் உள்ளது. பகல் உணவுக்குக் கீழ்த்தளத்துக்கு வந்துவிட்டு லிப்டில் மேலே போகத் திரும்பினால் பெண்கள் கூட்டம். எத்தனையோ கம்ப்யூட்டர் கம்பெனி எங்கள் வளாகத்தில். அதில் எந்த மாடியோ.

சொல்லி வைத்தாற்போல் எல்லாரும் லிப்ட் நிற்கும் மாடி எண்கள் பதித்த பலகைக்கு மிக அருகில் நின்று கொள்கிறார்கள். எல்லோரும் கிட்டத்தட்ட சராசரி உயரம்.

நான் ஆறாம் மாடிக்காக விரல் நீட்டிப் பொத்தானை அழுத்த முடியாமல், சிக்ஸ் ப்ளீஸ் சிக்ஸ் ப்ளீஸ் என்று பரிதாபமாகச் சொல்லிக் கொண்டே நிற்கிறேன்….

——————————

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன