Who has to seek an apology? For what?யார் மன்னிப்பு கேட்கணும்? யாரிடம்?


1919-ல் அமிர்தசரஸ் நகரில் பல இந்திய உயிர்களைத் துப்பாக்கிச் சூட்டில் ஆங்கிலேய ஏகாத்திபத்தியம் ஜெனரல் டயர் மூலம் பலி கொண்டதற்கு இன்றைய பிரிட்டீஷ் பிரதமர் கேமரூன் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

1857-ல் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட காலம். தில்லியின் கடைசி முகமதிய சுல்தான் கவி பஹதூர் ஷா ‘ஸஃபர்’ அரண்மனையான தில்லி செங்கோட்டையில் அவருடைய பாதுகாப்பைக் கோரி ஓடி வந்து தங்கி இருந்தார்கள் ஆங்கிலேயப் பெண்களும், குழந்தைகளும். கம்பேனியார் அதிகாரி துரைமார்களின் மனைவி – மக்கள் அவர்கள் எல்லோரும்.

பஹதூர் ஷா பார்த்துக் கொண்டிருக்க, அவர்களை நிற்க வைத்து வெட்டிக் கொன்று குவிததார்கள் மங்கல் பாண்டேயின் தலைமையில் இயங்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் கூட்டத்தினர்.

அவர்களுடைய செயலுக்கு யார் கேமரூனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?

(வில்லியம் டால்ரிம்பிளின் ‘லாஸ்ட் மொகல்’ இந்த சம்பவத்தை விரிவாகச் சொல்லும்).

———————————————————————

1919-ல் நடந்த ஜாலியன்வாலா படுகொலைக்காக இந்தியா வந்துள்ள தற்போதைய பிரிட்டீஷ் பிரதமர் கேமரூன் மன்னிப்புக் கேட்கணும்.

அப்படியே, அதுக்கு முன்னால் களவாண்டு எடுத்துப் போய், லண்டன் டவர்லே காட்சிக்கு வச்சிருக்கற கோஹினூர் வைரத்தையும் திருப்பிக் கொடுக்கணும்.

———————————————————————

பேஸ்புக்கில் இருப்பதால் யாருக்கு என்ன பயனோ, எனக்கு தினமும் காலைப் பொழுது மூன்று நண்பர்களோடு இனிமையாகத் தொடங்குகிறது.

அன்புக்குரிய கல்யாண்ஜி, கலாப்ரியா, கேஷவ்,

You enable me make my day every day..

———————————-

எழுதாமல் வருடக் கணக்கில், மாதக் கணக்கில் இருக்கவும், எழுதத் தொடங்கி தினம் நாலு நல்ல கவிதையாகப் பொழியவும் எது நம்மை முடக்குகிறது, இயக்குகிறது?
கல்யாண்ஜி, கலாப்ரியாவுக்கு

————————————-

//நல்லா இருக்கு கல்யாண்ஜி. வீட்டில் எல்லாப் பெண்களுக்கும் கையில் மருதாணி வைத்துக் கிணற்றடிக்குப் போய்த் தன் கை பார்த்து அழும் விதவை அத்தையைப் பற்றி எழுதியது நீங்களா, சோமு கலாப்ரியாவா? அடிக்கடி நினைவு வரும் கவிதை அது – நான்

அது கலாப்ரியா இரா.முருகன். அவன் பக்கத்தில் நிற்கமுடியுமா நான்? – கல்யாண்ஜி

என் பதில்

//அது கலாப்ரியா இரா.முருகன். அவன் பக்கத்தில் நிற்கமுடியுமா நான்?// அவன் பாட்டுக்கு அவன், நீங்க பாட்டுக்கி நீங்க.. அப்புறம் நம்ம ரெயினிஸ் ஐயர் தெரு வண்ணநிலவன் .. உங்களைப் படிச்சு எழுத வந்தவன் நான் ..

வண்ணநிலவனோட ‘கடல்புரத்தில்’ நர்மதா பதிப்பக முதல் பதிப்பு ஞாபகம் இருக்கா? எனக்கு அதோட வாசனை கூட ஞாபகம் வருது கல்யாணி…

அப்புறம் இவன், கலாப்ரியா.. முதல் தொகுப்பு சோனியா செவலைக் குழந்தை மாதிரி.. திறந்தா, சோமுவோட கவித்துவம் பக்கத்துக்கு பக்கம்..

அட்டையிலேயே விமர்சனத்தைப் போட்டுப் புத்தகம் போட்ட முதல் ஆள் இவனாத்தான் இருக்கும்..

பாலகுமாரன் முன்னுரையில் சொல்வாரு ..’எதுக்குய்யா சசிகலாவுக்கு சிம்மாசனம் வெங்காயம்’..

அப்புறம் இலக்கியச் சிந்தனை தொகுப்பில் சிறப்புச் சிறுகதையா உங்க ‘தனுமை’.. காலை விந்தி விந்தி வரும் அந்த தனுவையும், ‘பறக்கத் துவங்கும் முன்னார்ல் -கூட்டுப் புழுக்களாக’ (பெயர் சரிதானா?) வேலை கிடைக்கக் காத்திருக்கிற இளைஞன் – கூடத்திலே படுத்தா மேல் சுவரில் துணியைக் கலைச்சுப் போட்ட மாதிரி மனதில் சிரிக்கும் உருவம்..

போங்கய்யா..

உங்க ’நெல்லை மூவருக்கும்’ நண்பராக இருப்பது எனக்குப் பெருமை.

———————————————-

மராத்திய – ஆங்கிலக் கவிஞர் அருண் கொலட்கரின் Jejuri, Kala Goda Piems என்ற இரு நூல்களையும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன். அமரரான அருண் கொலட்கரின் மனைவியின் அனுமதியோடு புத்தகமாகப் பிரசுரம் செய்ய வேண்டும் என்ற எம் பிடிவாதத்தால் இதுவரை அது நூலாக்கம் செய்யப்படாமல், திண்ணையிலும், ராயர் காப்பி கிளப்பிலும் வெளியாகி, பதிப்பகத்தாரோடு நிற்கிறது.

நண்பர்கள் கல்யாண்ஜியும், கலாப்ரியாவும் தினசரி புதுக்கவிதை விருந்து படைக்கும் இந்த நன்னாட்களில், கொலட்கரும் கலந்து கொள்வார் – இன்று முதல்.

பூசாரி

குளிர்ந்த பிரகாரச் சுவர்மேல்
புட்டம் அமர்த்திப்
பூசாரி காத்திருக்கிறான்.

பஸ் இன்று தாமதமாக வருமோ,
பகல் சாப்பாட்டில் இனிப்பு இருக்காதோ,
அவனுக்குப் புதிய கவலைகள்.

தணுத்த கல்லில் பட்ட
விரைகளை வேகமாய் விலக்கி
வெய்யில் பக்கம் தலை திருப்புகிறான்.

இறந்தவன் கையில் தனரேகை போலச்
சும்மாக் கிடந்த தெரு.

பழக்கமான கிராம நாவிதன் போலக்
கன்னம் தடவித் தலையில்
கைவைக்கும் சூரியன்.

வெற்றிலைத் துண்டொன்று
மேலும் கீழுமாய் நாவில் சுற்றும்
மந்திரம் போல.

தூரத்தில் புள்ளியாய்த் தெரிந்த பஸ்
அவன் பல்லிப் பார்வையில்
மூக்கு மருவாக உருவம் பெருகும்.

பள்ளத்தில் குலுங்கி ஏறி
சத்தம் எழக் கடந்து
அவன் கண்ணில் நீலம் பூசும்.

ஒருவலம் வந்து அவன் முன்னால்
செல்ல உறுமலோடு
மெல்ல நிற்கும் பஸ்,
பூனைச் சிரிப்பும்
இந்தாபிடி என்று
உள்ளே யாத்ரீகர்களுமாக.

( அருண் கொலட்கரின் ‘ஜெஜுரி’ கவிதைத் தொகுப்பிலிருந்து – மொழியாக்கம் இரா முருகன்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன