சோபான சங்கீதமும் பிஸ்கட் சாஸ்திரி எடுத்தெறிந்த சோம்பேரி சங்கீதமும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது நாவலில் இருந்து -ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு

முட்டை ரெண்டு கொடு நாயரே

சைக்கிளை நிறுத்திக் கேட்டான் திலீப்.

ஏய் அது பாடில்ல. கொடுத்தா என்னை நொங்கிடுவாங்க என்று உச்ச பட்ச மகிழ்ச்சியோடு சொல்லியபடி போனான் நாயர். ஒரு நாள் வியாபாரம் கெட்டது பற்றி ஒரு புகாரும் அவனுக்கு இல்லை போல.

கோவிலில் இருந்து செண்டை மேளம் சத்ததோடு மாரார் குரல் எடுத்துப் பாடுவதும் கேட்டது. அவரை திலீப் அறிவான். அர்ஜுன நிருத்தம் தெரிந்தவர்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்த அடுத்த தினத்தில் செண்டையோடு படி ஏறி வாசித்துப் பாடிக் காட்டி அது காரியத்துக்கு ஆகுமென்றால் சேர்த்துக் கொள்ளச் சொன்னார் சின்னச் சிரிப்போடு அவர். பிஸ்கட் சாஸ்திரி நிராகரித்தது மட்டுமில்லை, அவர் போன பிற்பாடு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விமர்சனம் வேறே வைத்தார் –

இதுக்கு பேரு சோபான சங்கீதமாம். சோம்பேறி சங்கீதம்னு வச்சிருக்கலாம். நல்ல வேளை இது கேரளத்துக்கு வெளியே வந்து புழங்கி, இதான் மதராஸி சங்கீதம்னு மானத்தை வாங்காமப் போச்சு

பிஸ்கட் மண்டையில் மேலே சுழன்று கொண்டிருந்த ஃபேன் விழுந்து மூஞ்சி நசுங்கிப் போவதைக் கற்பனை செய்தபடி அப்போது அடுத்து நிருத்தமாட வந்தவரைக் கவனித்தது திலீபுக்கு நினைவு வந்தது. மாராருக்கு இன்றைக்கு பணி முடக்கு இல்லை போல. என்றைக்கும்?

அம்பலமும் செண்டையும் மாராரும் கோவிலில் இருந்து கூப்பிடுகிறது கேட்கிறது. அங்கேயே போகலாம். பணிமுடக்கு பகவானுக்கு இருக்காது. பசியாற ஏதாவது கிடைக்கலாம்.

திலீப் நம்பிக்கையோடு சட்டையை அவிழ்த்து ஒரு தோளில் தாழத் தொங்க விட்டுக் கொண்டு கோவிலை நோக்கி நடந்தான்.

தரிசனம் முடிந்து எதிர்பார்த்தபடியே பிரகாரத்தில் உன்னியப்பம் நாலைந்து ஒரு இலை நறுக்கில் வைத்து கோவில் தந்த்ரி திலீப் கையில் போட்டார். வந்த ஒரு மாதத்தில் கோவில் ஊழியர்கள் யார் என்ன பதவி என்று தெரிந்து கொள்ள உதவி செய்தவர் உப புரோகிதரான தந்த்ரி தான். திலீப் பழகிய கொஞ்ச நஞ்சம் மலையாளமும் இவரும் மாராரும் சொல்லிக் கொடுத்தது தான்.

இன்னிக்கு பணி முடக்காமே மாமா? நான் பட்டினி முடக்க முடியுமோ?

திலீப் சோகமாகக் கேட்க, தந்த்ரி தாராளமாக இன்னும் நாலு உன்னியப்பமும் மிளகு புரட்டிய சாதமுமாக மீண்டும் அவன் கையில் தொப்பென்று இட்டார். வேலு நாயர் கடை முட்டை ஆப்பாயிலை விட அமோகமாக இன்றைக்குக் காலைச் சாப்பாடு திலீபுக்கு. சாயா கிடைக்காவிட்டால் என்ன? ஊரில் இருக்கப்பட்ட நெய், சர்க்கரை எல்லாம் கொட்டிக் கலந்து கிளறி கொதிக்கக் கொதிக்க அம்பலத்துப் பால் பாயசம் ஒரு கும்பா நிறையக் கிடைத்தது. இன்னும் நாலு நாள் பணிமுடக்கினாலும் பிரச்சனை இல்லை. சாயந்திரமும் இங்கே வந்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தான் அவன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன