நேற்றைய மனிதர்கள் – இன்றைய நிகழ்வுகள் -நாளைய எதிர்பார்ப்புகள்

அரசூர் நாவல் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே (ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு). நாவலில் இருந்து
இந்த வாசனைக்கும் இதமான பொழுதுக்கும் வசந்தி பக்கத்தில் இல்லையா உட்கார்ந்திருக்க வேண்டும்!

ஆரம்பிக்கலாமா? ஆத்துக்காரியை கூப்புடுங்கோ. நீங்க பஞ்ச கச்சம், அவா மடிசார். அதான் நியதி

சங்கரன் சற்றே சலிப்போடு வேஷ்டி மாற்ற உள்ளே போக, ஹோகித்தாரே, ஒன் மினிட் சாஸ்திரிகளே என்று ஜூனியர் சாஸ்திரியை அவனுக்கு பஞ்ச கஞ்சம் உடுத்தி விடக் கண் காட்டி உள்ளே அனுப்பியது ஜெயம்மா தான்.

ஏம்மா உனக்கு ஹெல்ப் தேவையா?

உள்ளே பார்த்து குரல் கொடுத்து விட்டு, சமையல் மாமிக்கும் தெரியாதுன்னா நான் வரேன் என்றாள் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு.

சங்கரனாலே அவுக்கவே முடியாம கொசுவம் வச்சுப் புடவை கட்ட நானாச்சு.

சொன்ன அடுத்த வினாடி அவளுடைய அவுட்டுச் சிரிப்பு வீடு பூரா எதிரொலித்துக் குழந்தையை எழுப்பி விட்டது.

மங்களகரமான சிசு அழுகை என்றார் கடியாரத்தைப் பார்த்தபடி காத்துக் கொண்டிருந்த சாஸ்திரிகள்.

சாஸ்த்ரிகளே பசுமாடு, ஒட்டகம் எல்லாம் அக்னியிலே வராதே? பிடார் ஜெயம்மா அக்கறையாக விசாரித்தாள்.

அதை ஏன் கேக்கறேள் நியூஸ் மாமி. கல்காஜியிலே ஒரு ஆந்திராக்கார கிருஹத்திலே ஆயுட்ஷேமம் பண்றபோது பசுமாடும் கன்னுமா ஹோமகுண்ட அக்னிக்குள்ளேஎ தெரிஞ்சதுன்னு நம்ம ராஜப்பா சாஸ்திரிகள் ரெண்டு மாசம் முந்தி சொன்னாலும் சொன்னார், எல்லோரும் அவரை தீவிரமா அவாவா கிருஹங்கள்லே வைதீகத்துக்குக் கூப்பட ஆரம்பிச்சுட்டா. கணபதி ஹோமம் பண்ணினா யானை, நவக்ரஹ ஹோமம் செஞ்சா அண்டங்காக்கா மேலே சனி பகவான், திவசம் பண்ணினா போய்ச் சேர்ந்தவா இப்படி அக்னியிலே வந்து முகம் காட்டணும்னு ஆசைப் படறா. சொன்னா உடனே இதெல்லாம் நடக்க, கவர்மெண்ட் ஆர்டினன்ஸ் போட்டு நடத்திக்கறதா என்ன?

ஜூனியர் சொல்வதை புன்சிரிப்போடு அங்கீகரித்தபடி, காக்கடாவில் தீக்குச்சியால் பற்ற வைத்து கைக்கடக்கமான ஹோம குண்டத்தில் அக்னி வளர்க்க ஆரம்பித்தார் பெரியவர்.

சங்கரன் அவசரமாக உத்ருணியில் ஜலம் வார்த்து மூன்று தடவை உறிஞ்சி ஆசமனியம் செய்து விட்டு சாஸ்திரிகளை வெற்றிப் பார்வை பார்த்தான்.

ஏத்து வாங்கி மந்திரம் சொன்னாப் போறும் அண்டர் செக்ரட்டரி சார். நான் சொன்னதுக்கு அப்புறம் ஆசமனியம் செய்யுங்கோ. எதேஷ்டம்.

இந்த சடங்கை நிர்வகித்து நடத்திக் கொடுப்பதில் தனக்குத் தான் முதலிடம் என்று தெளிவாக சீனியர் நிலைநாட்ட சங்கரன் அவசரமாகப் பின்வாங்கிக் கட்டளையிடக் காத்துக் கொண்டிருந்தான்.

புண்ணியாஜனனத்திலே அக்னி வளர்த்தா அதிலே என்ன வரும்?

ஜெயம்மா கேட்க, ஓரமாக நின்ற பகவதியைப் பார்த்து நான் அக்னியிலே தலை காட்டப் போகட்டா என்று அவசரமாக விசாரித்தாள் குஞ்ஞம்மிணி.

வேண்டாம்டி கொழந்தே, இனிமே அங்கங்கே சட்டுபுட்டுனு போய் நின்னுடக் கூடாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன