கரப்பு அதிகாரிகள் தூங்கி வழிந்த கூட்டம்

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

அத்தியாயம் 36இல் இருந்து
==========================================================================================

நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் சொன்னார்.

கர்ப்பூரம் ஒவ்வொரு சொல்லாக உச்சரித்து ஒரு வினாடி அதிக மௌனத்தில் இருந்து அடுத்து உரக்க ஒரு தடவை கூறினான் – நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் உரைத்தார். அடுத்து வேகம் கூட்டி ஒரு முறை சொன்னார் அதையே. அவை நிறைந்திருந்தது.

நீலன் வைத்தியர் கிட்டத்தட்ட 4700 ஆண்டுகள் அவர் காலத்தைக் கடந்து நம் காலம் பொது யுகம் 5000க்கு வந்திருக்கிறார். பெருந்தேளார் விருப்பப்படி சகல நோயும் போக்கி அனைத்து இனத்தாருக்கும் நல்ல உடல்நலம் அளிக்கும் சஞ்சீவினிக்கு அடுத்த சகல இன சஞ்சீவினி உருவாக்கக் கேட்டுக் கொண்டோம்.

ஈ எறும்பு தொல்லையும் இல்லாமல் இருக்கவும் வேண்டினோம் என்று யாரோ சொல்ல அவர் பறக்கும் செந்தேளர் ஜுனியர் அதிகாரி என்று உடனே கண்டுபிடித்து வெளியே அனுப்பப் பட்டார். கர்ப்பூரம் தன் உரையைத் தொடர்ந்தார்.

வேறே யாரும் வெளியே போக விரும்புகிறார்களா என்று பெருந்தேளர் கேட்க கர்ப்பூரம் கடைசி வரிசை ஆசனங்களில் நான்கு கரப்பர் அதிகாரிகள் ஒத்துசேர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. அவர்கள் உறங்கட்டும். அப்போதுதான் ஆலோசனைக் கூட்டம் களைகட்டும் என்று பெருந்தேளரிடம் பார்வையில் சொன்னான் கர்ப்பூரம்.

வாயைத் திறக்காமல் மனுஷர்களைப்போல் புன்சிரிக்க முற்பட்டு தோற்றார் பெருந்தேளர். வழக்கம்போல் வாசலில் கதவுக்கு அந்தப் பக்கம் இரண்டு பழைய மர நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. குயிலியும் வானம்பாடியும் அவற்றில் மிகக் கவனமாக கர்ப்பூரத்தின் பேச்சைக் கேட்பதாகப் பாவனை செய்து மனதில் அங்கே இருந்த எல்லோரையும் கிண்டல் செய்து அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.

கர்ப்பூரன் சொல்லிக்கொண்டே போனார் –

போன வாரம் இதே புதன் கிழமை. இதே காலை நேரத்தில் நம் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பெருந்தேளரின் பெருந்துணையோடு துயிலரங்கத்தில் நீலன் வைத்தியர் துயில்நீங்கி விழித்தார்.

அட மடையா அவன் கசாப்புக்கடை நீலன் டா என்றாள் குயிலி.

போன வாரம் புதன்கிழமை விழித்தெழுந்து வியாழன் ஓய்வெடுத்துவிட்டு, வெள்ளியன்று சகல இன சஞ்சீவனி உருவாக்கி வெற்றி கண்டார் நம் பெருமதிப்புக்கு உரிய நீலன். மருந்தை சனிக்கிழமை தேர்ந்தெடுத்த மையங்களில் மாலை ஆறு மணிக்கு விநியோகிக்க ஆரம்பித்தோம்.

விநியோகம். எங்கே இருந்துதான் இப்படி க்ளீஷே கெல்லி எடுத்து பேச்சு நெடுக்கத் தூவி செர்வ் பண்றானோ இடியட் என்றாள் வானம்பாடி.

நாம் எதிர்பார்த்ததற்கு மேலே பெரும்வெற்றி.

எழுந்து நின்று கைநீட்டி எங்கும் ஆரவாரம்.

கையா நீண்டுது?குயிலி மனதில் சொல்ல இரண்டு தோழியரும் மனதில் சிரித்து ஓய்ந்தார்கள். சனி, ஞாயிறு, திங்கள் நாட்டில் வேறேதும் நடக்கவில்லை.

பெரிய நகைப்பு மண்டபத்தில் எழுந்தது. பின்வரிசை கரப்பின அதிகாரிகள் சட்டென்று எழுப்பி விடப்பட்ட அதிர்வோடு கூட்டத்தைக் கவனிக்க எல்லோரும் நகைப்பது கண்டு அவர்கள் சிரிக்க, கர்ப்பூரன் அப்போது பெருந்தேளரசரின் அறிவும் தொழில் நுட்ப அறிவும் வாழ்த்தப்பட வேண்டியது என்று அடுத்த உரைக் கண்ணிக்குக் கடந்திருந்தான்.

கரப்பு அதிகாரிகளை எரித்துவிடுவதுபோல் முந்திய வரிசையில் அமர்ந்து திரும்பிப் பார்த்த செந்தேளர் அமைதியை நிலைநாட்டிய வெற்றியோடு முன்னே பார்த்தார்.

அந்த மூன்று நாளும் நல்ல வேளையாக பாலியல் குற்றங்கள் அதிகரிக்காமல் பெருந்தேளரசு காவல்படையினர் கண்காணித்தார்கள். அவர்கள் பணியைப் பாராட்டி ஊக்கத்தொகை தருவதோடு இந்த வாரம் இரண்டு நாள் சிறப்பு விடுமுறையும் கொடுக்கக் கோருகிறேன்.

கூட்டத்தினர் எழுந்து நின்று கரம்தட்டி உற்சாகமாக ஒலித்தனர். பிரச்சனை நேற்று செவ்வாயன்று தான் உக்கிரமடைந்தது என்பதைப்பதிவு செய்ய முற்படுகிறேன். உடல்பசி எழுந்து தீர்ந்து மறுபடி எத்தனையோ முறை எழுந்து தீர்ந்து வயிற்றுப்பசி மற்றும் உடல் சோர்வு மிகுந்து அவரவர் வசிப்பிடத்திலும் வந்து சேர்ந்து உறங்கிய இடத்திலும் கிடந்துறங்கினதாகத் தெரிகிறது. எழுந்ததும் எல்லா இனங்களுக்கும் என்றென்றும் விலையில்லா உணவு கோரிக்கை கவனமில்லாமல் கையாளப்பட்டதாகத் தெரிகிறது.

அடபாவி அந்தப் பெருந்தேள் கடங்காரன் இலவச உணவு அறிவிப்பை இந்தக் கடங்காரன் சொல்லித்தானே செய்தான் என்று வானம்பாடி அகலமாகக் கண்விரித்து ஆச்சரியப்பட குயிலி அவளுக்கு மனமுத்தமொன்று அனுப்பினாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன