என் புதிய நாவல் தினை

புது நாவல் – தினை

என் அடுத்த நாவல் ‘தினை’ வரும் வாரத்தில் இருந்து திண்ணை – முதல் தமிழ் இணையப் பத்திரிகையில் பிரசுரமாகிறது.

சில குறிப்புகள்

1) தினை என்பது சிறு தானியம் -foxtail millet. இந்த 2023-ஆம் ஆண்டு உலகச் சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. தினை நாவல் அந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெறும்

2) தினை நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போதே திண்ணையில் பிரசுரமாக இருக்கிறது. நாவல் ஆசிரியர் என்ற முறையில் எனக்கும் வாசகர்களுக்கும் புது அனுபவமாக இது இருக்கலாம்

3)நாவலின் மொழிநடை பண்டிதத் தமிழிலிருந்து பாமர மொழிப் பயன்பாடு வரை பரவியிருக்கும்

4)தினை ஃபாண்டஸி, மாய யதார்த்தம், சர்ரியலிசம், அறிவியல் புனைவு தளங்களில் நிகழும். இது நடக்குமா என்ற கேள்விகளுக்கு இடம் இல்லை. எதுவும் நடக்கக் கூடியது அல்ல. நடக்கலாம் ஒரு நாள்.

5) தினை நாவலிலிருந்து take away ஏதும் கிடைத்தால் நீங்கள் பாக்கியசாலிகள்.

6)இதற்கு முன் என் பெருநாவல்கள் அரசூர் வம்சம், விஸ்வரூபம் ஆகியவை திண்ணையில் பிரசுரமாகி வாசகர் ஆதரவை ஈர்த்தது போல், தினைக்கும் வாசகர் ஆதரவை எதிர்பார்க்கிறேன்,

தினை வருகிறது. வாசிக்க வாருங்கள்

அன்புடன்
இரா.முருகன்

//
பூர்வாங்கம்

கோகர் மலை என்பது பரந்து விரிந்த மலையும் மலை சார்ந்த இடமும், கடந்த நூறாண்டுகளில் கவர்ந்தெடுத்த மருத நிலமும், பாலையும் எல்லாம் சேர்ந்த மிகப்பெரிய பூமியாகும். ஆயிரம் மைல் குறுக்குவெட்டில் விரியும் நாடு இது.

கோகர் மலையில் இவை தவிர நிறையக் காணப்படுகிறவை நரித்தண்டிக்கு, என்றால், நரி அளவுக்குப் பெருத்த கரப்புகள் மற்றும் கீரி அளவு பருத்த செந்தேள்கள். இரண்டும் ஒரே தரத்திலான வலிமை கொண்டவை. பேச இயலாவிட்டாலும் மனுஷர்களோடு தொடர்பு ஏற்படுத்திப் பயமுறுத்துகிறவை.

கோகர் மலைநாட்டை ஆட்சி செய்யும் அரசு யந்திரமாக இயங்குவது கரப்புகளும் தேள்களும் சேர்ந்த அமைப்பு தான். மனிதன் அவற்றைக் கண்டு பயந்து, மனம், உடல் ரீதியாக அடிபணிந்து, அவற்றுக்குச் சேவகம் செய்வதில் களி கூர்ந்து, திருப்தி அடைந்து வாழ்ந்து வருவது வழக்கம்.

பறக்கும் செந்தேள்கள். யோசித்துப் பார்க்கவே பயமாக இல்லையா?

கோகர் மலைநாட்டில் இப்படி சிறிதும் பெரியவையுமான விலங்குகள் பறப்பது ஒரு இருநூறு வருடமாக நிகழ்வது. மலையில் பிறப்பெடுத்து இங்கேயே உயிர்க்கின்ற பிராணிகள் மலையை விட்டுப் போகவேண்டி நேர்ந்தால் அப்போது தாற்காலிகமாக இறகுகள் காணாமற் போகும்.

மற்ற குறிஞ்சி நிலப்பரப்பு உயரங்களைவிட இந்தக் குன்றுப் பிரதேசத்தின் உயரம் அதிகம். நூற்று முப்பத்தைந்து அடி மேலேறிப் போகும்போதும் நூற்று முப்பத்தெட்டு அடி கீழே இறங்கும்போதும் அளவு காட்டும் மலை இது. இரண்டும் சரியான அளவுதான்.

இங்கே உள்ளே நுழைய, உள்ளிருந்து வெளியே வர சில நியமங்கள் உண்டு.

பறக்கும் விலங்குகளின் மலை என்பதால் இயற்கையைப் பாதுகாக்க இங்கே மனிதர்களும் கரடிகளும் சிகரெட், பீடி, சுருட்டு ஆகிய லாஹிரி வஸ்துக்களைச் சுருட்டிய குழல்களைப் புகைக்கக் கூடாது என்பது விதி.

//
Go

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன