எரிக்கா ஜாங்க், மில்ஸ் அண்ட் பூன், மற்றும் சர்சோங்கா ஸாக்

குறுநாவல்   பகல் பத்து ராப்பத்து    அத்தியாயம் 8 அ

 

மூவாயிரத்துச் சில்லரை பணம் அழுது ஆளுக்கு இரண்டு என்று சாப்பிட்ட மேத்தி ரொட்டியும் சர்சோன் – கா – சாகும் .. அப்புறம் ப்ரீதிக்கு மட்டும் ஐநூறு ரூபாய்க்கு, பெரிய படகு போன்ற கிண்ணத்தில், நடுவே தீப்பற்றி எரிய எடுத்து வந்த ஐஸ்க்ரீம்…

 

விக்ரம் அங்கிருந்தே டாக்ஸி பிடித்துப் போய்விட்டான்.

 

‘ஜெயந்த்.. நீ காரை ஓட்டாதே.. ஒண்ணு நரகத்துக்குப் போவோம்.. இல்லே போலீஸ் ஸ்டேஷனுக்கு ..நகரு.. நான் ஓட்டறேன்..’

 

பெரைரா ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

 

‘இங்கேயே இறக்கி விடுங்களேன்.. டாக்ஸி பிடித்துப் போயிடறேன்..’

 

ப்ரீதி சொன்னாள். சர்ச்கேட்டைக் கடந்து போகிற கார்.

 

‘வேணாம்..நீ உருப்படியாப் போய்ச் சேர்ந்தால் தான் அடுத்த வாரம் ஷூட்டிங்குக்கு ரிப்போர்ட் செய்ய முடியும்..’

 

பெரைரா பின்னால் திரும்பிப் பார்த்துச் சொல்லி விட்டு, கையில் கொண்டு வந்திருந்த சின்ன பாட்டிலை வாயில் கவிழ்த்துக் கொண்டான்.

 

‘நாளை மறுநாள் இவள் த்ரிதீப் பானர்ஜிக்குக் காலைக் காமிக்கணுமாம்.. ரோம நாசினி விளம்பரம்.. சர்வ நாசமாயிடும் எல்லாம்..’

 

‘வலமா.. இடதா..’

 

பெரைரா கேட்டான்.

 

தெரு முனையில் காரை நிறுத்தி இவர்களிடமிருந்து நழுவிக் கொண்டால் என்ன?

 

‘வலது பக்கம் மூணாவது கட்டிங்.. ஓரமா நிறுத்தினா நடந்துடுவேன்..’

 

ப்ரீதி கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டாள்.

 

‘இவ்வளவு தூரம் வந்து உன்னை நடுத் தெருவிலே தூக்கிப் போடறதுக்கா .. மகாராணி போல கூட்டிப் போய் அரண்மனையிலே விட்டுட்டு, குனிஞ்சு கும்பிடு போட்டபடி பின்னாலேயே நடக்கப் போறேன்..’

 

ஜெயந்த் தீர்மானமாகச் சொன்னான். தலை இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டிருந்தது.

 

ஆக, ரெண்டு பேரும் கூட வரப் போகிறார்கள்.

 

யாராவது ஒருத்தர் என்றால் சரி..ரெண்டு பேருமா..

 

ப்ரீதிக்கு லேசாக பயம் எட்டிப் பார்த்தது.

 

ஹோலிக்கு கலர்ப் பொடி பூச வரேன் என்று ஹோலி கழிந்த மூணாம் நாள் ராத்திரி வண்ணப் பொடியும், பீச்சாங்குழலுமாகக் கதவைத் தட்டிய டெல்லிக்கார பல்பீரை விட இவர்கள் முரடர்கள் இல்லை. ஆனால் அவனைவிட அதிகமாகவே உள்ளே இறக்கி இருக்கிறார்கள்..

 

பல்பீரைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய பஞ்சாபிக் குதிரை ப்ரீதி. ஆனால் இவர்களுக்குச் சூடு போட முடியாது.

 

ப்ரீதிக்கு இவர்கள் தேவைப்படுகிறார்கள். நிறையவே.

 

‘இந்த இடம் தான்..’

 

ப்ரீதி கதவைத் திறந்து இறங்கினாள்

 

பெரைரா கையில் பாட்டிலோடு இறங்க, ஜெயந்த் ப்ரீதியின் தோளை இறுகப் பற்றியபடி நடந்தான்.

 

‘லிப்ட் வேலை செய்யலே.. மூணாம் மாடி.. நடக்க கஷ்டமா இருக்கும்..’

 

ப்ரீதி கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்தாள்.

 

’லிப்ட் இலாட்ட என்ன.. உன்னை அப்படியே அலாக்காத் தூக்கிட்டுப் போய் உன் படுக்கையிலே போடணுமா சொல்லு..’

 

ஜெயந்த் எத்தனையாவது தடவையாகவோ உரக்கச் சிரித்தான்.

 

லிப்ட் விளக்கு எரிந்து காத்துக் கொண்டிருந்தது. சனியன்.

 

‘லிப்ட் சரியாயிடுத்து போலே இருக்கு’

 

ப்ரீதி லிப்டில் நுழைந்தாள்.

 

மூணு மாடியும் ஏறி, ஏகப்பட்ட பேரின் பார்வையில் பட்டு.. ராத்திரி பத்து மணிக்கு யார் இருக்கப் போகிறார்கள்.. ஜெயந்த் தடுமாறி விழுந்து வைப்பான்.. எதுக்கு வம்பு..

 

ஃப்ளாட் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.

 

‘ப்ரீதி, கொஞ்சம் தண்ணி கொடேன்.. கண்ணில்லேயா..’

 

ஜெயந்த் கேட்டபடி சோபாவில் சரிந்தான்.

 

கடைசியாக ஒரு யோசனை. இது பலிக்கலாம்..

 

‘கசகசன்னு இருக்கு.. குளிச்சிட்டு வரேன்.. நீங்க வெயிட் பண்ண வேணாம்.. போகிறபோது கதவை மட்டும் சாத்திட்டுப் போங்க, ப்ளீஸ்..’

 

ஃப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் ஜக்கை வெளியே எடுத்தபடி சொன்னாள் ப்ரீதி.

 

‘மில்ஸ் அண்ட் பூன்ஸ் படிச்சே கிழவியாயிடப் போறே.. எரிக்கா ஜாங் படி.. ஃபீமேல் ஈனக்னு ஜெர்மெய்ன் கீர் எழுதியிருக்கா… தரேன்.. படிச்சுப் பாரு..’

 

அலமாரி ஓரமாக அடுக்கியிருந்த ஒற்றை வரிசைப் புத்தகங்களைப் பார்த்தபடி பெரைரா ஒரு ஹவானா சுருட்டைப் பற்ற வைத்தான். குழறத் தொடங்கிய குரல்.

 

‘தள்ளிக்கோடா பையா..’

 

சோபாவில் ஜெயந்தை ஓரமாகத் தள்ளிவிட்டு உட்கார்ந்து பெரைரா கசமுசவென்று பிரிந்து டேபிளில் கிடந்த டைம்ஸைப் புரட்டத் தொடங்க, ஜெயந்த் சின்னக் குரலில் பாட ஆரம்பித்திருந்தான். கொங்கணி லாவணி அது என்று ப்ரீதிக்குத் தெரியும்.

 

குளியல் அறை.

 

ப்ரீதி உள்ளே நுழைந்தாள்.

 

ப்ரீதி வினாடிகளை எண்ணிக் கொண்டிருந்தாள்.

 

யுகமாக நகர்கிற பொழுது. நகரட்டும். இவர்கள் போகட்டும்..

 

யாராவது ஒருத்தர் தங்கினாலும் பரவாயில்லை.. சீண்டல் கடைசி வரை போகாமல் சமாளித்து விடலாம்.

 

போனால் தான் என்ன? சொந்தமாக ஃப்ளாட்.. செஷனுக்கு லட்ச ரூபாய் கொட்டித் தரும் மாடலிங் அசைன்மெண்ட்கள்..

 

எல்லாவற்றுக்கும் ‘மறைந்திருக்கும் விலை’ இருக்கிறது.

 

இருக்கலாம்.. ஆனாலும்..

 

யாராவது ஒருத்தர் போயே ஆக வேண்டும்..கட்டாயமாக..

 

கதவு சத்தம்.

 

யார் போகிறது? இரண்டு பேருமா?

 

நல்லதுதான்.

 

இல்லை.. ஒருத்தர் மட்டும்..

 

வெளியே போய்ப் பார்க்கலாமா?

 

வேணாம்.. உடனே போகக் கூடாது..பொறுமையாக இரு பெண்ணே..

 

கையில் ஒரு மில்ஸ் அண்ட் பூன்ஸ் எடுத்து வந்திருக்கலாம். எதையாவது படித்துக் கொண்டிருந்தால் இப்படிக் கஷ்டமாகத் தெரியாது.. இப்போ வெளியே போகலாமா..

 

மெல்லக் குளியல் அறைக்கு வெளியே வந்தாள்.

 

யார் போனது?

 

பெரைராவா?

 

பெரைரா படுக்கையில் இருந்தான்.

 

ஜெயந்தும்.

 

‘யூ.. யூ..யூ.. .. இதுக்கு என் படுக்கை தானா கிடைச்சுது?’

 

அவள் சத்தம் போட நினைத்து வேண்டாம் என்று தீர்மானித்து பால்கனிக்குப் போனாள்.

 

பால்கனிச் சுவரை ரொம்ப நேரம் எட்டி உதைத்துக் கொண்டிருக்க, மெல்லிய கடல் காற்று அவளைச் சுற்றி சிரிப்பாணி கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன