குறுநாவல் பகல் பத்து ராப்பத்து – டங்கல் என்பது யார் பெயர்?

குறுநாவல்  பகல் பத்து ராப்பத்து அத்தியாயம் 7

 

டங்கல்.

 

இது ஒரு மனிதனின் பெயரா இல்லை ஏதாவது வஸ்துவா என்று சாந்தாபாய்க்குப் புரியவில்லை.

 

மதியத்திலிருந்து சாரிசாரியாக வந்த ஆரஞ்சு நிறத் தலைப்பாகைக் காரர்கள் விக்டோரியா டெர்மினஸ் முன்னால், மலைப்பாம்பு கிடப்பது போல, நீள வளைந்து போகிற சங்கிலி போல, கையைக் கோர்த்து நின்றபோது, உரத்த குரலில் திரும்பத் திரும்பச் சொன்னது ‘டங்கல்’.

 

ஆஸாத் மைதானத்தில் அப்புறம் அவர்கள் பிரம்மாண்டமான கூட்டமாகக் கூடி இந்தியிலும், மராத்தியிலும் இன்னும் என்னென்னமோ பாஷையிலும் ஒலிபெருக்கி வைத்துப் பேசியபோது, தெரு இரைச்சலை மீறிக் காதில் அடிக்கடி விழுந்தது ‘டங்கல்’.

 

யாராக, எதுவாக இருந்தாலும் நன்றி. டங்கல் புண்ணியத்தால் சாந்தாபாய்க்கு முன்னூற்று நாற்பது ரூபாய்க்குப் பிய்த்துக் கொண்டு போன வியாபாரம்.

 

எத்தனை ஆரஞ்சுத் தலைப்பாகைக் காரர்கள் ஊர் போய்ச் சேரும் வரை டங்கலை நினைவு வைத்திருப்பார்கள் என்று சாந்தாபாய்க்குத் தெரியவில்லை. ஆனால், அவர்களில் சிலர் வீட்டிலாவது சாந்தாபாயின் கிருஷ்ணன் கோலமாகத் தவழப் போகிறான்.

 

காலிச் சாக்கோடு, வழக்கத்தை விட வெகு சீக்கிரமாகக் கிளம்பும்போஹ்டு சாந்தாபாயின் மனது ஏகப்பட்ட கற்பனைகளில் மிதந்தது.

 

சின்னச் சின்னதாக, உட்காருகிற தோதில் பூப்போட்ட பிளாஸ்டிக் விரிப்பு..

 

ஒரு நூறு, ஐம்பது வாங்கி அடுக்கிக் கொள்ள வேண்டும்…

 

அப்புறம் ஜிகினாத் தோரணம், தரையில் சதுரம் சதுரமாக ஒட்டுகிற சிவப்பு கோல ஸ்டிக்கர். பிளாஸ்டிக் மாவிலைக் கொத்து. பீங்கான் ஜாடி…

 

நசீமுக்குத் தெரிந்த சேட் வட்டிக்குப் பணம் தருகிறான். அவனுக்கு மாமன் முறையான ஒரு கிழவன் கோவாண்டியில் இதெல்லாம் மொத்த விலைக்குத் தருகிறான்.

 

கங்காதருக்கு மெல்லச் சொல்லிக் கொள்ளலாம். நசீமோடு போய்ப் பார்த்து ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்.

 

சாந்தாபாய்க்கு வாயில் சாதுரியமான வார்த்தை இருக்கிறது. யாரிடம் எப்படிப் பேசினால் சரக்கு விலை போகும் என்று படிந்து வருகிறது…

 

கங்காதருக்கும் சேர்த்து சொந்தக் காலில் நிற்கப் போகின்ற சாந்தாபாய்…

 

அவள் தாராவியில் ஒன்றுக்கு இரண்டாக இருக்க இடம் வாங்குவாள்.

 

சிமெண்டும், காரையுமாக எடுத்துக் கட்டிய வீடு. சாங்க்லியில் பஞ்சாயத்துத் தலைவர் வீடு போல முகப்பில் மகாலட்சுமி படம் பதித்தது.

 

வி.டியில் பிளாட்பாரத்தை ஒட்டி, ஷெல்பும் கதவும் வைத்த கடை போடுவாள்.

 

உதவிக்கு யாரையாவது வைத்துக் கொண்டு கல்லாவில் சில்லறையை வாங்கிப் போட்டுக் கொண்டு, ஜம்னாதீதி போல சதா வாயில் ஜர்தாபான் மென்று கொண்டு.. ஜர்தா வேணாம்.. உள்நாக்கு வரை இனிக்க இனிக்க மீட்டா பான்..

 

கங்காதருக்கு ஒரு மோட்டார் வைத்த மூன்று சக்கர சைக்கிள் வாங்கிக் கொடுப்பாள்.

 

இஷ்டம் போல சுற்றட்டும். கணக்கு வழக்கை எல்லாம் கவனித்துக் கொள்ளட்டும்.

 

சேட் போல பணம் வட்டிக்குத் தந்து, வாடகை வசூல் செய்து கழுத்தில் சங்கிலி பளபளக்க..

 

முதலில் கங்காதருக்கு நல்லதாக இரண்டு ஜிப்பா வாங்க வேண்டும். ..

 

ஒரு நீலப் புடவை.. இது மாதிரி இல்லாமல் நல்ல வடிவான கச்சு..

 

இதற்கே பாட்டு பாடுகிறான்.

 

புடவையை இப்படிக் கச்சம் வைத்துக் கொலிவாடிக்காரி போல் கட்டிக் கொள்ளக் கூடாது.

 

தெரு இருட்டில் கிடந்தது.

 

இன்றைக்காவது சூடாக அரிசிச் சோறு பொங்கி கங்காதருக்குப் பிடித்த ஆம்டி புளிக்கீரை செய்து .. தெருக் கோடியில் பொறித்த மீன் விற்கிறார்கள்… நாலு துண்டம் வாங்கி வந்து..

 

எல்லா சந்தோஷத்தையும் கங்காதரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு அவன் தவழ்ந்து மேலே படரும் வரை சாந்தாபாய் பார்த்துக் கொண்டிருக்க மாட்டாள். அவள் தான் பக்கத்தில் மெல்ல நகர்ந்து..

 

‘நான் சாப்பிடுவேன் ..குந்த வைப்பேன்.. படுப்பேன்.. இரு நூறு ரூபாய் அந்த ஜம்னாதீதி முகத்தில் எறிந்தால் என் குடிசைக்குள் என்னைக் கேட்காமல் காற்று கூட நுழைய முடியாது..

 

நாளைக்குச் சீக்கிரம் கிளம்பிப் போய் மோரேயிடம் இன்னும் இருநூறு கோலக் குழல் வாங்கிக் கொண்டு மாதக் கடைசியில் கொடுத்து விடலாம்.. நர்த்தனமாடும் கணபதி கூடச் செய்ய ஆரம்பித்திருக்கிறான்..

 

வயிறு சுருட்டி வலிக்க, பசி உள்ளே பந்தாக உருண்டது.

 

தொடர்ந்து வியாபாரம் வந்து கொண்டே இருந்த மும்முரத்தில் மந்தமாகிப் போன நித்திய அவஸ்தை அது.

 

மலையாளி ஓட்டலில் மதியம் கழிந்து வெகு நேரம் போய், வறட்டுத் தோலாகக் காய்ந்து கிடந்த பரோட்டாவை டீயோடு விழுங்கி, தினம் அதை தாஜா செய்கிற வழக்கம்…

 

அவசரமாகப் பிய்த்துத் தின்ற ஒற்றை பன்னோடு காய்கிற வயிறு..

 

பொங்கல வீடுகளைக் கடந்து வலப்புறம் திரும்ப ஜம்னாதீதியின் ‘கண்பத் மெஸ்’.

 

மின்னி மின்னி அணையும் ஒற்றை ட்யூப்லைட் வெளிச்சத்தில் செருப்பு இரைந்து கிடக்கிற படிக்கட்டு.

 

ஓரமாகக் காலிச் சாக்கை வைத்துவிட்டு நின்றாள்.

 

கூப்பிடலாமா?

 

வேண்டாம். தரையில் நெருக்கியடித்து நிறையப் பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

பொங்கல் வீடுகளில் தங்கி இருக்கிற தனிக் கட்டைகள் எல்லோரும். நடை வழியே உள்ளே போக, பார்வைகள் உயர்ந்து தாழ்ந்தன.

 

சாந்தாபாய்க்கு சந்தோஷம் தான். ஒரு வினாடிக்காவது எதிர்ப்படுகிறவனின் பார்வையைக் கட்டி நிறுத்த அவளால் முடிகிறது.

 

‘ஜம்னாதீதி..’

 

திரையை மெல்ல விலக்கியபடி கூப்பிட்டாள்.

 

’வெளியே போயிருக்கா..’

 

கட்டிலில், இடுப்புக்கு மேலே வெற்றுடம்போடு படுத்து, கேபிள் டிவியில் தாதா கோண்ட்கே படத்தை ரசித்துக் கொண்டிருந்தவன், லுங்கியைத் தழைத்தபடி எழுந்து வந்தான்.

 

ஜம்னாதீதியின் தம்பி.

 

பட்டாளக்காரனான ஜம்னாவின் வீட்டுக்காரன் கண்காணாத சிலோனில் கண்ணிவெடி வெடித்ததில் நகம் கூட முழுசாகக் கிடைக்காமல் சிதறிப்போன பிறகு, வந்த பணத்தில் மெஸ் எடுக்க முன்கை எடுத்தவன் இவன் தான்.

 

மெஸ் நாலே வருஷத்தில் நாலு குடிசை வாங்கிப் போட வைத்தது. வட்டிக்குக் கடன் கொடுக்க வழி செய்தது. இவன் கழுத்தில் மைனர் செயின் இப்படிப் பளபளக்க வைத்தது.

 

‘தீதிக்குப் பணம் தரணுமா?’

 

சாவதானமாக சாந்தாபாயின் உடம்பில் மேய்கிற பார்வை..

 

சாந்தாபாய் தலையைக் குனிந்தபடி பணத்தை எடுத்து நீட்டினாள்.

 

‘உட்காரேன்.. தீதி வந்துடுவா..’

 

‘பரவாயில்லை..’

 

‘வியாபாரம் எல்லாம் எப்படிப் போறது?’

 

கழுத்துக்குக் கீழே நிலைத்த கண்கள் தகிக்கின்றன…

 

சாந்தாபாய் ஓரமாகத் திரும்பி நின்றாள். சீக்கிரம் போய்விட வேண்டும் இங்கிருந்து என்று மனது அடித்துக் கொண்டது.

 

டி.வியில் ரவிக்கை மேல் பக்கத்துக்கு ஒரு பானையாகப் படம் எழுதியிருக்கும் பெண்கள் தாதா கோண்ட்கேயைச் சுற்றி ’மட்கா மட்கா’ என்று பாடியபடி குலுக்கி ஆட, ஜம்னாதீதியின் தம்பி டி.வியில் ஒரு கண்ணும் சாந்தாபாய் மேல் இன்னொன்றுமாக நமட்டுச் சிரிப்போடு பார்த்தபடி பக்கத்திலேயே நின்றான்.

 

சூழ்நிலை சரியில்லை. இவன் கண்ணாலேயே அசிங்கப்படுத்தி விடுவான்.

 

’வியாபாரம் விருத்தியாக பணம் வேணும்னா நான் தரமாட்டேனா சாந்தா.. நீ நினைச்சா இந்த சில்லுணி  சாமானை எல்லாம் கடாசிட்டு, பெரிசா ஆரம்பிக்கலாம்… தாதர்லேயோ மாஹிம்லேயோ கடை போட்டுத் தர ஏற்பாடு பண்ணட்டா…’

 

‘நேரமாச்சு.. வீட்டுக்குப் போய் அடுப்பு பத்த வைக்கணும்..’

 

வழியை அடைக்கிறது போல் நிற்கிறான்.

 

‘ஒரு நாளைக்குத் தான் வெளியே சாப்பிடறது..’

 

அவன் சிரிப்பு வீடு வரை தொடர்ந்து வந்தது.

 

கங்காதரிடம் இதெல்லாம் சொல்ல வேண்டாம்.. கால் இல்லாவிட்டாலும் முரட்டுத் தனத்துக்குக் குறைச்சல் இல்லை.

 

ஒன்று கிடக்க ஒன்று நடந்து முதலுக்கே கூட மோசமாகி விடலாம்..

 

இருட்டில் அமிழ்ந்து கிடக்கிறது வீடு.

 

விளக்கு கூட வைக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறானோ?

 

கதவைத் திறக்கப் போனவள் நின்றாள். உள்ளே மொணமொணவென்று பேச்சுச் சத்தம்.

 

‘மூணு மாச வாடகை என்னாச்சுன்னு கேக்க வந்தவளை இப்படியா.. படுபாவி.. இதோட மூணு தடவை.. நியாயமாடா இது.. பொறுக்கிப் பயலே..’

 

மெல்லச் சிரிக்கிற பெண் குரல்..

 

‘காலு போன வெறும் பயன்னு தெரியாமே வந்துட்டேண்டா பரதேசி.. டேய் விடுடா.. உடம்பு பூரா வலிக்குதுடா கபோதி.. உன் வீட்டுக்காரி வந்து தொலைக்கப் போறா..’

 

’அவளா.. இன்னும் ஒரு மணி நேரமாகும் அவ வர்றதுக்கு.. அதுக்குள்ளே..’

 

‘எந்துருக்க விடுடா நொண்டிப் பயலே.. டாக்டர் கிட்டே போக வச்சுடுவே போலேயிருக்கே..’

 

’கவலைப் படாதே.. ஆபரேஷன் பண்ணிக்கிட்டிருக்கேன்.. அவளுக்குக் கூடத் தெரியாது..’

 

’படுடா பேசாம ..’

 

இரண்டு பேரும் சேர்ந்து சிரிக்கிற சத்தம். அப்புறம் நிசப்தம் மட்டும்.

 

சாந்தாபாய் காலிச் சாக்கை வாசலில் எறிந்துவிட்டு நடந்தாள்.

 

பசி.

 

கண்பத் மெஸ் திறந்து இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன