இரா.முருகன் நேர்காணலில் இருந்து – எனக்குப் பிடித்த இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள்

’புரவி’ இலக்கிய மாத இதழ் இரா.முருகன் நேர்காணலில் இருந்து –

(மே 2022 இதழ் -நேர்கண்டவர் காளிபிரசாத்)

 

:

 

இன்றைய இலக்கிய போக்கு குறித்த உங்கள் பார்வை / விமர்சனம் என்ன? உங்களுக்கு அடுத்த தலைமுறையில் நீங்கள் வாசிக்கும் எழுத்தாளர்கள் யார் யார்?

 

இரா.முருகன்

 

எழுபதுகளில் தமிழ்ச் சிறுகதையின் இரண்டாம் பொற்காலம் வந்த பிறகு (1940களின் மணிக்கொடிக்காலம் முதல் பொற்காலம்) இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் சிறுகதைகள் வரவு குறைந்திருந்தது. இப்போது மறுபடி சிறுகதைகள் நிறையத் தென்படுகின்றன.

 

மற்றப்படி இது நாவல்களின் காலம். சிறுகதை எழுதி வந்தவர்களும் கவிஞர்களும், கட்டுரையாளர்களும், ஓவியர்களும், சிற்பிகளும், பேச்சாளர்களும் குறைந்தது தலைக்கு ஒரு நாவலாவது எழுதுவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது.

 

கலைச்செல்வி, ஆத்மார்த்தி, ஸ்ரீதர் நாராயணன், சுநில் கிருஷ்ணன், வா.மு.கோமு என்று தொடங்கும் நீளப் பட்டியலாக அடுத்த தலைமுறைப் படைப்பாளர்கள் சிறப்பாகச் சிறுகதையிலும் தொடர்ந்து நாவலிலும் செயல்படத் தொடங்கியுள்ளனர். பெரிய பட்டியல் இது. விரிப்பின் பெருகும். அவர்களுக்கு நல்வரவு. அறிவியல் புனைகதை எழுதத்தான் படைப்பாளிகள் குறைவு. சுதாகர் கஸ்தூரி தனியனாக நினைவு வருகிறார்.

 

புரவி

 

இன்றைய காட்சி ஊடக காலத்தில் முன்பிருந்த தீவிர இலக்கியம் & வெகுஜன எழுத்துக்கான இடைவெளி குறைகிறதா.. இனி எழுத்தாளர்களுக்கான இடம் எத்தகையாதாக இருக்கும் எனக் கருதுகிறீர்கள்?

 

இரா.முருகன்

 

காட்சி ஊடகம் பெரும்பாலும் coordinated collaborative effort ஒருங்கிணைத்த கூட்டு முயற்சி அடிப்படையில் இயங்குவது. வெகுஜன எழுத்தாளருக்கும் தீவிர இலக்கிய எழுத்தாளருக்கும் அங்கே இடமுண்டு. தொடர்ந்து நிகழும் காட்சி ஊடக இடையூடுகள் இரு தரப்புக்கும் இடையே இடைவெளியைக் குறைத்துக்கொண்டு வருகின்றன. இது தனியாளுமை அடிப்படையில் நிகழ்வது. சார் என்ற மரியாதை விளியைப் பயன்படுத்தத் தொடங்கும்போது தீவிர இலக்கிய எழுத்தாளர் இந்த இடைவெளியைக் கடக்கிறார்.

 

புரவி இதழ் தொடர்புக்கு 9942633833 (கார்த்திகேயன்)

 

 

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன