புதிது – எழுதி வரும் நாவல் ‘மிளகு’ வில் இருந்து – கவுண்டின்ஹோ பிரபுவும் காஸெண்ட்ராவும்

மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி – Draft awaiting editing

ஹொன்னாவர் நகரில் ஷராவதி ஆற்றுப் பாலத்தைக் கடந்து பெத்ரோ புண்ணியவாளனின் தேவாலயம் போகும் சாலை. புராதன மாளிகைகள் வரிசையாக நிற்கும் கருங்கல் பாவிய அகலமான வீதிகளில் ஒன்று அது. போர்த்துகீஸ் அரசப் பிரதிநிதி மேனுவல் அகஸ்டினோ பெத்ரோ வீட்டு வாசலுக்கு வந்து காத்திருந்த வெள்ளை நிற குதிரை பூட்டிய சாரட் வண்டியையும் சேணத்தைப் பற்றியபடி நிற்கும் கடைக்கீழ் உத்தியோகஸ்தனையும் மாறி மாறிப் பார்த்தார்.

பெஹன்.. நாடு விட்டு நாடு வந்ததும் போர்த்துகீஸ் அரசு சார்பில் கற்றுத் தரப்படும் கெட்ட வார்த்தைகள் நினைவில் இருக்க, அவற்றில் நாலைந்தை வேலைக்காரன் மேல் பிரயோகித்தார். இவற்றை வேலைக்காரர்கள், துப்புரவுக்காரர்கள், பிச்சைக்காரர்கள் தவிர யார்மேலும் பிரயோகிக்கக் கூடாது என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். கீழான பணி செய்கிறவர்கள் அந்த வார்த்தைகளைக் கேட்டு நடுநடுங்கி துரைக்கு தெண்டனிட்டு வணங்கி அடுத்த உத்தரவுக்காக நாயாகக் காத்திருப்பார்கள் என்றும் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

ஆனால் இங்கே உடனே குழிக்குள் போகவேண்டிய இந்தத் திருடர்கள் பெத்ரோ துரை திட்டத்திட்ட வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கிறார்கள். அவர் வரிசையாக வார்த்தை உதிர்க்க, தரையில் விழுந்து புரண்டு சிரிப்பை அடக்க முடியாமல் அடுத்த வார்த்தையை கொஞ்சம்போல் சொல்லி பெத்ரோ முழுப்பிக்கக் காத்திருக்கிறார்கள்.

இவர்களைத் திட்டுவதும் ஒன்றுதான். எருமை மாட்டின் மேல் மழை பெய்வதும் அதேபடிதான். லவலேசமாவது உறைத்தால் தானே.

நேற்று ராத்திரி உறங்கப் போகும்போது பெத்ரோ துரை இந்தப் பயல்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்.

“காலையில் மிர்ஜான் போக இருக்கேன். சாரட் வண்டி வேணாம். கருப்புக் குதிரையை சவாரிக்காக சித்தம் செய்து உடம்பு துடைத்து சேணம் புதிதாகப் பூட்டி வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்த வேண்டிய நேரம் காலை விடிந்து ஐந்து நாழிகை. என் கடியாரத்தில் காலை ஏழு மணி. புரிந்ததா?

அவர் நிதானமாகப் பேசி நிறுத்தி விசாரிக்க, இ ந்தக் களவாணிகள் புரிந்தது புரிந்தது என்று நூறு முறை சொல்லி வாயையும் பிருஷ்டத்தையும் அடைத்தபடி போனார்கள். இப்போது பார்த்தால் வெள்ளைக் குதிரை சாரட் வந்து நிற்கிறது. என்ன திட்டினாலும் சொல்கிற படி நடப்பதில்லை யாரும்.

”கருப்புக் குதிரைக்கு என்ன ஆச்சுடா ஆயுசுக்கும் குளிக்காத வேசி மகனே?” பெத்ரோ கண்ணால் எரிப்பது போல் பார்த்துக்கொண்டே விசாரிக்க அவன் இதை எதிர்பார்த்து இருந்தது போல் கூட்டமாகக் கைகாட்ட ஓ என்று சிரித்து வழிந்தார்கள். பெத்ரோ துரைக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

களவாணிகள் சிரித்தே காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள்.

”கருப்புக் குதிரை படுத்து உறங்கிக் கொண்டிருக்கு எஜமானே” இன்னொருத்தன் நாலாக மடிந்து நின்று இளித்தபடி சொன்னான்.

“குதிரை எப்படிப் படுத்து உறங்கும்? அது நின்று கொண்டே நித்திரை போகும் உயிரினமாச்சே?” நியாயமான சந்தேகத்தைக் கிளப்பினார் பெத்ரோ.

“அது வெள்ளைக் குதிரையோடு படுத்தது. அப்படியே உறங்கி விட்டது போல” இதற்கு சிரிப்பு அதிகமாகக் கிடைத்ததை பெத்ரோ கவனிக்க மறக்கவில்லை.

”ஆனால் குதிரை நின்று கொண்டே..”

அவர் வார்த்தையை முடிக்க விடாமல் அவர்கள் பூர்த்தி செய்தார்கள்.

ஆனால் வெள்ளை, கறுப்பு ரெண்டு குதிரையும் ஆணாச்சே.

அந்தக் கழுவேறிகள் இதைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள். ஒற்றை வார்த்தையை கூட்டமாகச் சொல்லி தாவித்தாவிக் குதித்தார்கள். ஒருத்தன் மற்றொருத்தனைக் கட்டிக்கொண்டு கண்ணில் நீர் வழியச் சிரித்தார்கள். பாதி புணர்ச்சியில் வாசல் கதவு தட்டப்பட பெண்டாட்டி விலக்கிய நாயகன் போல் அடக்க முடியாமல் தரையில் மல்லாக்க விழுந்து புரண்டார்கள். இவர்களை குதிரைகளைக் கொண்டுதான் அடக்க முடியும்.

பெத்ரோ சாரட்டில் ஏறினார். சவுக்கு சகிதம் ஓட்டுகிறவன் தலை வணங்கிப் போகலாமா என்று மரியாதையோடு விசாரித்தான்.

“போய்த் தொலை” என்று நகைத்தபடி பெத்ரோ தலையாட்ட வண்டி நகர்ந்தது.
”போம் தியா சின்ஹோர்”

தெருக்கோடியில் பெண்குரல். காலை வணக்கம் சொல்வது யார்?

ஜன்னல் வழியே எக்கிப் பார்த்தார் பெத்ரோ.

கஸாண்ட்ரா நின்று கொண்டிருந்தாள். பெத்ரோவின் வீடு நிர்வகிக்கிறவள் அவள். ஐம்பது சதவிகிதம் போர்த்துகல்லும் மீதி தட்சிண, உத்தர கன்னடப் பிரதேசமும் கலந்து உருவாக்கிய அழகி. நாற்பத்தைந்து வயதானால் என்ன? அழகி அழகி தான். அதுவும் பெத்ரோ கண்ணுக்குப் பேரழகி. செப்பு நிறத்தில் வனப்பாக உயிர்த்த சிலை. வெகு அருகில் வந்து பார்த்தாலே ஒழிய முகத்தில் சிறு சுருக்கங்கள் பார்வையில் படாது. பக்கத்தில் வந்தால் வேறெவ்வளவோ இருக்க, முகச் சுருக்கத்தைப் பார்த்து நேரத்தை வீணடிப்பது புத்திசாலித்தனமா? பெத்ரோவின் மனைவி மீன் வாங்கப் போகும்போது ஐந்து பத்து நிமிஷம் அவசரமாக அண்மையைப் பகிர்ந்து கொள்வாள். குறைந்தது ஒரு முத்தமாவது தேறும். இருபது குருஸடோ அதற்கான கூலியாக வாங்கவும் மறப்பதில்லை. முத்தம் இலவசம்.

பெத்ரோவின் மனைவி அடுத்த, நான்காவது பிள்ளை பெற மலபாரில் கள்ளிக்கோட்டை நகரில் தாய் வீட்டுக்குப் போயிருக்கிறாள். கஸாண்ட்ராவுக்கு இடுப்பு முறிய வேலைப்பளு.

வண்டியை நிறுத்தச் சொல்லாமலேயே நின்றது அது. திரிசமன் செய்த விஷமப் பார்வை பார்த்தபடி சாரட் வண்டியோடு குதிரையை இழுத்துப் பிடித்து தெருவோரம் நிறுத்தியிருந்தான் வண்டியோட்டி வந்தவன்.

“பெண்ணே, அவசர வேலையாக கோட்டைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். நீ வழிமறிக்கிறாயே இப்படி. நான் போய்ச் சேர்ந்த மாதிரிதான்” பொய்யாக அலுத்துக் கொண்டார் பெத்ரோ.

“மீ பெர்தோயி சின்ஹொர்” என்று உடனடி மன்னிப்பு தெரிவித்தாள் அவள். கல்லையும் உருக்கும் குரல் அது.

“என்னை ஊர்க் கோடியில் மாமிசம் விற்கும் அங்காடியில் விட்டுவிட்டுப் போனால் என்ன குறைந்து போவீர்கள் எஜமானே?” கஸாண்ட்ரா அவருடைய முகவாயைத் தொட்டு அசைத்துக் கேட்டாள். அவளை புழுதி படிந்த தெருவில் இருந்து உயர்த்தி இழுத்து பக்கத்தில் உட்கார்த்தி முத்தமழை பொழிய வேண்டும் என்று அடங்காத காமம் உயிர்க்க பெத்ரோ சாரட் ஓட்டுகிறவனை தீயாகப் பார்த்து விழித்தார். அவனா, அடுத்த பத்து நிமிஷம் நல்ல பொழுதுபோக்கு என்று எதிர்பார்க்கிற தோதில் காத்திருக்க, எதிர்த் திசையில் இருந்து புத்தம்புது சாரட் வந்து கொண்டிருப்பதை முதலில் பார்த்தவள் கஸாண்ட்ரா தான்.

”பெரிய துரை வந்துட்டிருக்கார்” என்றபடி உடையைத் திருத்தி தலைமுடி கலையாமல் கையால் ஒதுக்கி ஒட்டி வைத்த சிரிப்போடு அவள் நிற்க பெத்ரோ சாரட்டில் இருந்து குதித்து இறங்கி வீதியோரம் நின்றார்.

ஓரமாக ஒரு வயோதிகன் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான். நகரப் பன்றிகளில் கனமான ஒன்று துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தது. ஓடாத சாக்கடை ஒன்று அடுத்து கந்தம் கிளப்பியபடி நிலைத்திருக்க தெரு ஓய்வில் கிடந்தது. நான்கு குதிரை பூட்டிய பளபளப்பான சாரட்டில் ஜாதிக்காயும், பாக்கும் மென்றபடி எதிர்த் திசையில் கடந்து போகும் பெரும் வர்த்தகர் யாரையும் எதையும் லட்சியம் செய்யாமல் நேரே பார்த்தபடி அமர்த்தலாக அமர்ந்து போய்க்கொண்டிருந்தார்.

பெரிய துரை கவுண்டின்ஹோ அரசப் பிரதிநிதி பதவியிலிருந்து ஓய்வு பெற்று இரண்டாண்டு முடிந்து விட்டது. என்றாலும் இந்த தேசத்தை விட்டுப் போக அவருக்கு விருப்பமில்லை. மனைவி பெயரில் ஏலக்காய், ஜாதிக்காய் வர்த்தகம் மறைவாகச் செய்வதாக வதந்தி. ஏகமாகக் கெஞ்சி வேண்ட, போர்த்துகல் அரசம் முதலாம் பிலிப்பும் அவரை கவுரவ ஆலோசகர் என்று ஓர் அதிகாரமுமில்லாத பதவி ஏற்படுத்தி நியமித்திருக்கிறான். யாருக்கும் தேவைப்படாத யோசனைகள் யாரென்று இல்லாமல் எல்லோரிடத்திலும் சொன்ன மணியமாக இருக்கிறார் கௌண்டின்ஹோ பிரபு.

”பெருந்தகைக்கு காலை வணக்கம்” என்று பெத்ரோ கௌண்டின்ஹோவின் சாரட் நின்றதும் ஜன்னல் வழியே பார்த்து வணங்கிச் சொன்னார். கை நடுக்கத்தோடு நெற்றியில் கரம் வைத்து சல்யூட் செய்திட கவர்னர் அதை ஏற்றுக் கொண்டதாகத் தலையசைத்தார்.

“என்ன பெத்ரோ. நடுத் தெருவில் வண்டியை நிறுத்தி என்ன சுவாரசியமான பேச்சு? இந்தப் பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறேனே?” என்றபடி கஸாண்ட்ராவைப் பார்க்க அவள் சிந்திய புன்னகையில் அவர் ஆகக் குழைந்து போனார்.

“உனக்கு லிஸ்பனில் தானே வீடு? ரூஆ அகஸ்டியாவிலிருந்து பழைய நகரத்துக்குத் திரும்பும் பாதையில் நாலாம் அவென்யூவில் பார்த்திருப்பேனோ” என்று போர்த்துகீஸ் மொழியில் சந்தேகம் சொன்னார்.

”ஐயா மன்னிக்கணும். நான் பிறப்பு வளர்ப்பு எல்லாம் இங்கே ஹொன்னாவரில் தான். என் அப்பா போர்த்துகல்லில் போர்டோ நகரிலிருந்து வந்தவர். லிஸ்பனில் என் ஜாடையில் யாரையாவது பார்த்திருக்கக் கூடும் எஜமான்”.

”என் வீட்டை நிர்வகிக்கிறாள் கஸாண்ட்ரா” பெத்ரோ தடபுடலாக அவளை கவுண்டின்ஹோவுக்கு அறிமுகப் படுத்தினார்.

“உங்கள் மனைவி கள்ளிக்கோட்டை போயிருப்பதால் இந்தப் பெண் நிறைய உதவி செய்கிறாள் என்று ஊகிக்கிறேன். மகிழ்ச்சியைப் பரப்பி நன்றாக இரு பெண்ணே” என்று பூடகமான சிரிப்போடு சொன்னார் மாஜி கவர்னர் துரை.

கஸாண்ட்ரா வணங்கி அப்பால் போக, கவர்னர் பெத்ரோ அவர்களை ஷேம லாபம் விசாரித்து தற்போது சாரட் வண்டி பூட்டித் தெருவில் இறங்கிய விசேஷம் கேட்டார்.

“மிர்ஜான் கோட்டைக்குத் தினசரி போய் வருகிறீரா பெத்ரோ? மிளகாலேயே உம் அரைக்குக்கீழ் காப்பு இட்டு வாயிலும் ஒரு உருண்டை தின்னக் கொடுத்து உரைக்க உரைக்க சொர்க்கம் போக வைத்து விடுவார்கள் மிளகு ராணியும் கூட்டமும். ஜாக்கிரதை”

Copyright @EraMurukan

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன