குடம்

 

புதிய பார்வை சிறுகதை (அண்மையில் வெளியானது)

குடம் இரா.முருகன்

ஆகாசவாணியில் ஜவஹர்லால் நேரு இறந்து போன செய்தி படித்துக் கொண்டிருந்தபோது ஆனந்தராவ் சைக்கிளில் வந்து இறங்கினான். ஊர் முழுக்க கடையடைப்பும் அங்கங்கே வரப் போகவிடாமல் சைக்கிளை, கட்டை வண்டியை, பிளஷர் காரை எல்லாம் வழிமறிக்கிறதாகவும் தகவல் வந்துகொண்டேயிருக்க, இவன் சைக்கிளில் எப்படித்தான் வந்தானோ.

எனக்கும் நேரு இஷ்டம்தான். ஆனாலும் அவர் இப்படித் திடீர் என்று போய்ச் சேருவார் என்று எதிர்பார்க்கவில்லை. எழுபத்து நாலு எல்லாம் ஒரு வயசா என்ன? சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி பிறந்தநாள் என்றால் இனிமேல் தில்லியிலிருந்து யார் அறிக்கை விடப் போகிறார்கள்? கொடி ஏற்றுகிறது போல், சமாதானப் புறா பறக்க விடுகிற மாதிரியெல்லாம் பத்திரிகை முதல் பக்கத்தில் போட வேறு யாருடைய படம் தோதாக இருக்கும்? அதற்கெல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு அவர் போயிருக்கலாம். குறைந்த பட்சம் சக்ரபாணி ஓட்டலை அடைக்காமல் அங்கே வழக்கம்போல் இட்லியும் காப்பியும் கிடைக்கவாவது வழி செய்திருந்தால், குளித்து, நாஷ்டா பண்ணிவிட்டு வேலைக்குக் கிளம்பி இருக்கலாம். வேலை இன்று நடக்கும் என்று தோன்றவில்லை. ஆனாலும் பசியாறாமல் முடியுமா?
போனவாரம் பார்த்தபோது சொன்னேனே, நாங்கள் ஒரு சினிமாப் படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்ப் படம். தேவகோட்டை அனாருனா தான் பைனான்சியர். கண்டமங்கலம் பையன் ஒருத்தன் கெச்சலாக நம்ம ராமநாதன் சார் கூடத் திரிந்து கொண்டிருப்பான் இல்லே, அவன் தான் டைரக்டர். ராமநாதன் சார் டைரக்ட் செய்து போன மாதம் வந்த படத்தில் உதவியாளர்கள் பெயர் அடங்கிய டைட்டில் கார்டில் கீழாக துணை வசனம் என்று போட்டு அவன் பெயரும் வந்திருந்தது, பார்த்திருப்பீர்கள். அந்தப் படம் சரியாக ஓடவில்லைதான். டவுணுக்கு வெளியே எங்கேயாவது கீற்றுக் கொட்டகையிலாவது அது தட்டுப்படாமல் போகாது. கிடைத்தால் அவசியம் பாருங்கள். இன்றைக்கு வேண்டாம். கொட்டகை எல்லாம் அடைத்திருக்கும்.

ராமநாதன் சாரும் கண்டமங்கலம் பையனும் ஜவஹர்லால் நேருவும் கிடக்கட்டும். ஆனந்தராவ் என்னத்துக்கு வந்திருக்கிறான்? சட்டையில் கருப்புத் துணி குத்திவிடவா? அதற்கும் வழி இல்லாமல் சட்டையைத் துவைத்துப் போட்டிருக்கிறேன். ஆனந்தராவ் போல அசிஸ்டெண்ட் டைரக்டராக நான் இருந்தால் ரெண்டு சட்டையாவது கைவசம் இருக்கும். ஆர்ட் டைரக்டருக்கு எடுபிடி. கொஞ்சம் மேலே வந்து என் பெயரும் டைட்டில் கார்டில் போடுவதற்குள் நேருவுக்குப் பத்து இருபது திதி திவசம் நடந்திருக்கும். அதுவரை இந்தச் சட்டை கிழியாமல் இருக்குமா?

வாய்யா ஜேம்சு. ஷூட்டிங் லேது. நேரு மர்கயா. சரியா?

நான் புஷ் டிரான்சிஸ்டரை மேன்ஷன் வாசல்படியில் வைத்துவிட்டு ஆனந்தராவை விசாரித்தேன். என்னுடையதில்லை. கூடத் தங்கியிருக்கிற காமரா அசிஸ்டெண்டுடையது. எனக்கான டைட்டில் கார்ட் போட்டதும் நானும் வாங்குவேன். வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு டிரான்சிஸ்டரில் மங்கல இசை, ஒலிச் சித்திரம், ஆகாசவாணி செய்திகள், சோக கீதம் என்று கேட்க சுகமாக இருக்கும்.

ராவ் சைக்கிளை ஸ்டாண்ட் போடாமல் சுவரில் அதை சார்த்தி வைத்துவிட்டு அரக்கப் பரக்கப் படி ஏறினான். அவன் காலடியில் டிரான்சிஸ்டரில் ஒற்றை வயலின் புலம்பியது. கிட்டத்தட்ட இதே டியூனில் தான் ஒரு பேத்தாஸ் பாட்டு போன மாதம் படத்துக்காக ரிக்கார்ட் செய்தோம். ரேப் சீனுக்கு அடுத்த காட்சி. நேரு உயிரோடு இருந்த நேரம்.

பல்லு வெளக்கிட்டியா? சட்டையைப் போட்டுக்கிட்டு வா.

ஆனந்தராவ் சொன்னான். நான் பல்லு வெளக்கியிருந்தால் உடனே சட்டையை மாட்டி விட்டுச் சாப்பாடு போடக் கையோடு கூட்டி வரும்படி யாரோ சொல்லி அனுப்பியதுபோல் இருந்தது. துக்கம் இல்லாமல் மங்கல இசை கேட்கிற யாரோ.

எங்கே போகணும் சொல்லு. காலையிலே இருந்து காப்பி கூட இல்லாம உக்காந்திருக்கேன். நேரு இப்படி திடீர்னு அவுட்டாகி.

அதுக்கு சாவகாசமா உக்காந்து கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுதுடலாம் மவனே..

ரூம் உள்ளே அவன் வந்தபோது ராத்திரி படுத்துக் கிடந்த பாயைக் கூடச் சுருட்டி வைக்காதது ஞாபகத்துக்கு வந்தது. ஆனந்தராவ் பாயில் காலைப் பரப்பி உட்கார்ந்தான். பாய் ஓரமாகப் பிரிந்து இருந்த கோரையைப் பிய்த்தான்.

முந்தாநாள் பாட்டு ஷூட் பண்ணிணோம் இல்லே.

அவன் கோரைத் துரும்பால் காது குடைந்தபடி சாவகாசமாக ஆரம்பித்தான். போன வருடம் கல்யாணம் முடிந்து ஸ்டோர் வீட்டில் குடித்தனம் நடத்துகிற சம்சாரி. தாம்பத்தியத்தில் வேறே ஏது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் காலையில் ஒரு டம்ளர் நீர்க்கவாவது காப்பி கிடைக்கும். குடித்துவிட்டுக் காது குடைந்து கொண்டு உட்காரலாம். நேரு சாவுச் செய்தி திடீரென்று வந்து எல்லாம் இதை மாற்றாது.

நான் சும்மா வாய் பார்த்துக் கொண்டு நிற்க ஆனந்தராவ் தொடர்ந்தான்.

முடிச்சு பேக் அப் பண்ணி செட் ப்ராப்பர்டி எல்லாம் திருப்பிக் கொடுத்தாச்சோ?

பின்னே? உதவி-ன்னு டைட்டில் கார்ட் போடாவிட்டாலும் என் பொறுப்பில் இருக்கப்பட்ட காரியம் இல்லையா அது எல்லாம்? கிணத்தங்கரையிலே ஹீரோயின் தண்ணீர் இரைத்தபடி செகண்ட் ஹீரோயினோடு பாடுகிற காட்சி. கிணற்றுப் பக்கம் துளசி மாடம், அவசரமாகக் கட்டி வைத்த செங்கல், மேலே கவிழ்த்து நிறுத்தின ப-வடிவ மரச் சட்டம், நடுவில் ராட்டினம், தாம்புக் கயிறு, தகர வாளி இப்படி ஒரு ஜாமானையும். வேண்டாம். அது கெட்ட வார்த்தையாகிக் கொண்டிருக்கிறது இப்போது பட்டணத்தில். ஒரு பொருள் விடாமல். இது நல்ல வார்த்தை. ஒரு பொருள் விடாமல் ஜாப்தா படி எடுத்துப் போய் வாடகைக்கு எடுத்த கடைகளில் கொடுக்க வேண்டும். ஹீரோயினின் பஞ்சு அடைத்த உள்பாடி முதற்கொண்டு என் பொறுப்பில் தான் விடப்படுகிறது. அதுக்கு ஒரு வாடை உண்டு.

கிணற்றுப் பாட்டுக்காக தகரவாளியில் ஸ்டூடியோ கழிப்பறையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பியது நான் தான். எடுத்து முடிந்து ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்துப் போய் சொக்கலிங்க ஆசாரியாரின் சகலபாடியின் கடையில் கொடுத்துவிட்டு வர ப்ரொடக்ஷன் யூனிட் காரில் போனேன். அப்போதும் நேரு மூச்சு விட்டுக்கொண்டு இருந்தார். அன்றைக்கு டேராடூனில் இருந்தார் அவர். மகள் இந்திராவோடு பூந்தோட்டத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்ததாக சகலபாடி கடையில் அப்போது ஆகாசவாணி செய்தி அறிக்கை படித்தது துல்லியமாக நினைவில் இருக்கிறது.

கிணத்துக் கைப்பிடிச் சுவர் மேலே ஒரு பித்தளைக் குடம் இருந்துதே. இன்னொரு குடம் வச்சா இடுப்பு உடையாதான்னு கதாநாயகி பாடும். அப்ப இந்த செகண்ட் ஹீரோயின் பொண்ணு குடத்தைத் தூக்கி இடுப்புலே வச்சுக்கும். அதை அப்படியே அணைச்சுப் பிடிச்சுக்கிட்டுச் சைட் ப்ரொபைல்லே ரெண்டு மாரும் அலுக்கிக் குலுக்கிக்கிட்டு ஒய்யாரமா நடக்கும். காமிராவிலே மூணு குடம் தெரியும். சரியா?

ஆனந்தராவ் மாரைத் தள்ளிக் கொண்டு அசைந்தபடி பாடிக் காட்டினான். துணைக்கு ரேடியோவில் துக்கமான சங்கீதம். அது என்னமோ சாவு என்றால் யாரையாவது பிடித்து வந்து ஆகாசவாணியில் அழ வைத்து விடுகிறார்கள். வீட்டிலிருந்து சப்பாத்தி கட்டி எடுத்துக்கொண்டு அவர்கள் வேலைக்கு வந்திருப்பார்கள் போல.

அந்தப் பித்தளைக் குடம் திரும்ப வந்து சேரல்லேன்னு சொக்கலிங்கம் ஆசாரியார் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டுட்டுப் போனார். சகலை புகார் பண்ணியிருக்காராம்.

ஆசாரியும் அவர் சகலையும் என்ன விதமான ஆட்கள் என்று புரியவில்லை. நாடு முழுக்க துக்கம் அனுஷ்டிக்கிற நேரம். இந்த வார்த்தை எடுப்பாக இல்லையா? அனுஷ்டித்தல். ஜாமான் மாதிரி கிடையாது. நாலு பேர் கூடியிருக்கப்பட்ட இடத்துலே கவுரவமாகச் சொல்லலாம். குடத்தோடு பெண்கள் இருந்தாலும் சரிதான்.

அது சரி. துக்கம் அனுஷ்டிக்கிற நேரம் என்பதால் வாடகைக்கு கொடுத்த குடத்தைத் தலை முழுகிவிடலாமா? வேண்டாம்தான். அதுக்காகப் பொழுது ஒரு பக்கம் விடிந்ததுமே ஆனந்தராவ் வந்து இறங்கி தேடச் சொல்லி அவசரப் படுத்த அது தங்கக் குடமா என்ன? தங்கத்திலே குடம் செய்வார்களா? செட்டிநாட்டில் வேணுமானால் கொல்லுப் பட்டறையில், இதுக்கெதுக்கு கொல்லுப் பட்டறை? பத்தர் நகைக்கடையில் செய்து வாங்கி கல்யாணத்துக்கு சீர் பரப்பி இருப்பார்கள். நம்ம படத்தில், ஆந்திராவிலிருந்து புறப்பட்டு வந்த ரெண்டாம் கதாநாயகி கோடம்பாக்கம் ஸ்டூடியோ கிணற்றடி செட்டில் தடவத் தங்கக் குடம் எல்லாம் கட்டுப்ப்படியாகாது.

ஆனாலும் எனக்குப் பித்தளைக் குடத்தைத் திருப்பிக் கொடுத்ததாக நினைவு இல்லை. அம்பாசிடர் கார் டிக்கியிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துக் கடையில் பரத்திய பொருளில் ஈரமான தாம்புக்கயிறும் தகர வாளியும் இருந்தது. சட்டையை நனைத்தது அது ரெண்டும். குடம் என்ன ஆச்சு?

ஸ்டூடியோ லைட்பாய் பாத்தானாம். செகண்ட் ஹீரோயின் குடத்தோட ஆட்டோவிலே ஏறிப் போச்சாம். சொக்கலிங்க ஆசாரி துப்புக் கொடுத்திருக்கார்.

ஆனந்தராவ் பாயை மடித்து வைத்தபடி சொன்னான். பஞ்சு வெளியே வந்து சிதற என்னத்துக்காகவோ தலைகாணியை, இதுவும் சரியான வார்த்தை இல்லை, தலையணையை உதைத்தான் அவன். ஒரு காப்பி குடித்தால் சரியான வார்த்தை எல்லாம் சரம் சரமாக வந்து விழும்.

கிளம்பு. குடத்தைப் பத்தி விசாரிச்சுட்டு வந்துடலாம்.

எங்கே போகவேண்டும் என்று தெரியவில்லை. பஸ் பிடிக்கக் கையில் காசு குறைச்சலாக இருக்கிறது. ரெண்டு டிக்கட் போக வர எடுக்க நிச்சயம் துட்டு கிடையாது. வரும்போது குடத்தை வேறே கட்டித் தூக்கி வர வேண்டும். பஸ் இருக்குமா? நேருவே போய்விட்டார்.

பஸ், ரிக்ஷா எல்லாம் எதுக்கு? இப்படியே நேரா வண்டியை விட்டா ராஜாபாதர் தெருவாண்டை சாக்கடைத் தண்ணி சுத்தப்படுத்தற ஆபீஸ் இருக்கு இல்லே? அங்கேதான் எங்கேயோ இருக்குது அந்தப் பொண்ணு. மதமதன்னு நிஜமாவே எடுப்பான ராயலசீமைக்காரி. கொஞ்சம் அனுசரிச்சுப் போனா வெர்சா முன்னுக்கு வந்துடலாம். மாட்டேன்னு முரண்டு பிடிக்குறா. ஹீரோ கூட ஒரு கண்ணு வச்சிருக்கான் தெரியுமில்லே?. போய்யா, முடியாதுன்னாளாம், சொக்கலிங்க ஆசாரி போட்ட கிணத்தடி செட்டிலேயே அவ ஆயுசு பூரா, தலை நரைச்சு நிக்கட்டும். நீ கிளம்பு.

தொழில் கூப்பிடுகிறது. தொழில் தர்மம் தெரிந்த ஆர்ட் டைரக்டர்கள் பற்றி நிறையக் கேட்டிருக்கிறேன். ஷ¥ட்டிங்குக்காகக் கொண்டு வந்த நாலு வாத்துக்களை, வாத்துகளையா வாத்துக்களையா, சரி ஏதோ ஒண்ணு, அதுகளை உடனே திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் வீட்டு முற்றத்தில் நாலைந்து நாள் மேய விட்டிருந்த சுப்பையரைத் தெரியுமோ? வாத்து மேக்கி ஐயர் என்று இன்னும் கூட பழைய கைகள் கூப்பிடுகிறார்கள். ஒரு படத்துக்கு அவரிடம் அசிஸ்டெண்டாக இருந்தேன். இழைப்பு உளியைக் கையில் எடுத்தால் மனுஷர் அற்புதமான தச்சராகி விடுவார். தெலுங்கில் மாயாஜாலப் படங்களில் மந்திரவாதி குகை செட் போடுவது அவராகத்தான் இருக்கும். வில்லன் மந்திரவாதி ஏவி விட்ட பிசாசுகள் எல்லாத் திசையிலும் ஓடிய பிறகு, வில்லி தொடை வரைக்கும் வழித்துக் கொண்டு தொம்தொம் என்று குலுக்கியபடி குதித்து ஆடினாலும் ஒரு ஆணி கூட கழண்டு வராத குகை அதெல்லாம். அவருடைய மூக்குப் பொடி வாடையையும், மூக்குக்கு மேல் சதா வரும் கோபத்தையும் சகித்துக் கொள்ள முடிந்திருந்தால் நானும் ஜருகண்டி என்று தெலுங்கில் நுழைந்து லட்டு லட்டாகப் பணம் எண்ணிக் கொண்டிருப்பேன். இப்படி இட்லி காப்பிக்கு அண்ணாந்து கிடக்க வேணாம்.

காப்பி, நாஷ்டாவை எல்லாம் துச்சமாகப் புறக்கணித்து தேசமே துக்கத்தில் மூழ்கிக் கிடக்கிற ஒரு தினத்தில் பித்தளைக் குடத்தைத் தேடி அலைய ஆயத்தமாக ஈரச் சட்டையைக் கொடியிலிருந்து உருவி எடுத்தேன். ஆனந்தராவோடு வாசலுக்கு வந்தபோது தான் அவன் சைக்கிளில் கேரியர் இல்லை என்பது கண்ணில் பட்டது.

முன்னால் உட்காருடா, மிதிச்சுடலாம்.

அவன் சொன்னபடிக்கு குந்தினேன். சைக்கிள் தறிகெட்டு அலைபாய்ந்து அடுத்த வீட்டுத் தோட்டத்துக்குள் ஓடியது. பூச்செடியில் முட்டி மோதி குடை சாய, உள்ளே இருந்து யாரோ இரைந்தார்கள். பீப் பீப் என்று சத்தத்தோடு ஆகாசவாணி வீட்டுக்குள் செய்தி படிக்க ஆரம்பித்தது கேட்டது. நேருவின் சடலம் தகனமாகிற நாள், நேரம் குறித்த தகவலாக இருக்கும் என்பதால் தோட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் பொருட்படுத்த வேண்டியதாகத் தோன்றியிருக்காது.

வண்டியை நிமிர்த்தி எடுத்துக்கொண்டு ராவ் அவசரமாக வெளியேறினான். பின்னால் தட்டிக்கொண்டு நானும் நடந்தேன். பசியில் வயிறு ஆகாசவாணி போல் அழுதது.

தெருக் கோடியில் சின்னக் கும்பல் ஒன்று இன்னும் அடைக்காத கடைகளை உடனடியாகப் பூட்டச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தது. தெலுங்கு கடையில் கொத்தாகத் தொங்கும் பச்சை வாழைப்பழங்களைப் பார்க்கப பசி அதிகமானது. கடையை அடைக்கும் முன்னால் ஓடினால் பிய்த்துத் தின்னலாம். துக்கம் அனுஷ்டிக்கவும் பித்தளைக் குடத்தைத் தேடவும் வயிற்றில் தீனி வேண்டும். குடத்தை இடுப்பில் ஏற்றி இறக்க, கதவை அடைக்கக் கூடத்தான்.

சைக்கிள் ஓட்டக் கூடாது, தெரியுமில்லே?

கூட்டத்தில் இருந்து கெச்சலாக ஒருத்தன் முன்னால் வந்து ஆனந்தராவ் சைக்கிளின் ஹேண்டில்பாரைப் பிடித்து நிறுத்தினான். புசுபுசுவென்று இருந்த அவன் மீசை என் கன்னத்தில் குத்துகிற நெருக்கத்தில் நின்றிருந்தான். மீசையை முறுக்கிவிட்ட படி முறைப்பான் என்று எதிர்பார்த்தபடி கீழே குதித்தேன். வயிற்றைத் தடவிவிட்டுக் கொண்டு அவன் சொன்னதையே திரும்பச் சொன்னான். முகத்தில் திருப்தி தெரிந்தது. தெலுங்குக் கடை அடைக்கும் முன்னால் வாழைப்பழம் பிய்த்துத் தின்றுவிட்டுத் துக்கம் அனுஷ்டிக்கிறவனாக இருப்பான். பத்து நிமிடத்தில் வயிற்றில் இருந்து பாரம் இறக்க வசதியாக வீடு இந்தப் பக்கம்தான் எங்கேயாவது இருக்கும். சுகமோ துக்கமோ அதெல்லாம் நடந்தே ஆக வேண்டிய விஷயம்.

ஆனந்தராவ் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கெத்தாக நடக்க ஆரம்பித்தான். அவன் நடைக்குச் சரியாக நடந்தால், சுழன்று வந்த சைக்கிள் பெடல் காலில் இடறியது. கொஞ்சம் பின்னால் நடந்தால் அவனுக்கு சேவகம் செய்கிறதுபோல் தோன்றியது.

ராஜாபாதர் தெருக் கோடியில் சீரான சத்தத்தோடு மோட்டார் ஓடிக் கொண்டிருந்தது. பெரிய குழாய் மூலம் தொட்டியில் விழுந்து கொண்டிருந்தது கழிவு நீரா, இல்லை சுத்தப்படுத்தப்பட்ட தண்ணீரா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நேரு காலமானதற்காக இந்த மோட்டாரை நிறுத்த யாருக்கும் தோன்றவில்லை என்பது வருத்தமாக இருந்தது.

ஆனந்தராவ் சைக்கிளை நிறுத்தினான். முன்னால் வாய்க்கால் விட்டுப் போகிற மாதிரிப் பிரிந்த சந்துக்குள் இருந்து ஒரு பழைய வீடு எட்டிப் பார்த்தது. குகை வாசல் போல் கதவு பாதி திறந்திருந்தது. ஒற்றை அறை. வாசலை ஒட்டி அடிபம்பில் ஒரு தாடிக்காரன் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தான். தகர வாளி.

அந்த வீட்டுப் பக்கம் நடந்தேன். தண்ணீர் சன்னமாக வாளியில் விழுந்தாலும் அடிபம்பை விடாமல் அடித்துக் கொண்டிருந்தான் அவன். வீட்டுக்குள் இருந்து முட்டை உடைத்த வாடை. காற்றில் மிதந்து வந்து காலில் ஒரு நீளமான முடிக்கற்றை சிக்கியது. எடுத்துப் போட்டுவிட்டு தாடிக்காரனை விசாரித்தேன்.

நடிகை வீடுதான் இது. இத்தனை கீகடமான இடத்திலா இருக்கிறாள்? புதுசாக வந்து ஒரு படத்தில் மட்டும் தலைகாட்டியவள். இன்னொரு குடம் இடுப்பில் வைத்தால் ஒன்றும் குடி முழுகிவிடாது என்று ஹீரோவுக்கும் மற்ற தேவையானவர்களுக்கு நிரூபித்தால் சொக்கலிங்க ஆசாரி போட்ட படுக்கையறை செட்டோடு நாலு படம் கிடைக்கும். நிரூபிக்க வாகாகக் குடம் எங்கே?

வீட்டு நடையில் சுவரில் சாய்ந்து இருந்த வயதானவள் என்னைக் கவனிக்காமல் இருமலோடு தெலுங்கில் யாரிடமோ நைச்சியமாகப் பேசிக்கொண்டிருந்தாள். ஒரு நடுவயசுக்காரர் மடித்துக் கட்டிய வேட்டியோடு நாற்காலியில் வந்து உட்கார்ந்து தரையில் சிதறிக் கிடந்த முட்டை ஓட்டைத் தர்மசங்கடமாகப் பார்த்தார். மேல் சட்டை மட்டும் அணிந்த ஒரு சின்னப் பையன் வாசலை நனைத்து விட்டுத் திரும்ப வீட்டுக்குள் ஓடினான். செகண்ட் ஹீரோயினுக்கு இவர்கள் எல்லாம் என்ன உறவு? எல்லாரும் காலையில் முட்டை சாப்பிட்டார்களா? ரேடியோ கேட்டார்களா?

உள்ளே இருந்து தலைப்பா கட்டிய இன்னொருத்தர் கிழவிக்குக் கடுமையாகப் பதில் சொல்லியபடி வேகவேகமாக வெளியே வந்தார். ‘’சாயந்திரம் டாக்சி கிடைச்சா எடுத்துக்கிட்டு’ அவர் சொன்னதை முழுசாகக் கேட்க விடாமல் வீட்டுக்குள் இருந்து ரேடியோவில் நேருவுக்காக திருவாசகம் படிக்கிற சத்தம். வீட்டுச் சுவரில் சாய்த்து வைத்திருந்த சைக்கிளை நிமிர்த்தியபோது என்னைப் பார்த்து முறைத்தார்.

இவர் கடன் வசூல் செய்ய வந்திருப்பார். முட்டை சாப்பிடக் காசு இருக்கிறது, கடனை அடைக்க முடியாதோ என்று கேட்டிருப்பார். பாக்கிக்கு ஈடாக ஜாமான் செட்டைத் தூக்குவேன் என்று மிரட்டியிருப்பார். எடுத்துப் போக நேரு இறந்த துக்க நாள் சரிப்படாது போயிருக்கலாம். நேருவுக்காகத் துக்கம் கொண்டாடாத டாக்சி டிரைவர் அகப்படும் பட்சத்தில் அவர் சாயந்திரம் டாக்சி எடுத்து வருவார். அனுசரித்து நடந்தால் இனி துக்க நாள் ஏதும் இருக்காது. முக்கியமாக, கவுரவமான பெண்கள். ஹீரோவின் கண்பட்டவர்கள். குகைகளில் வசிக்கிற, ஆடுகிற பெண்கள்.

வாசலில் சிறுநீரை மிதிக்காமல் திரும்பினேன். உடம்பு சூட்டில் சட்டை உலர்ந்திருந்தது. ராவ் தூரத்தில் இருந்தபடிக்கே குடம் கிடைச்சுதா என்று ஜாடையில் விசாரித்தான். இல்லை என்று தலையசைத்தேன். அது உள்ளே இப்போதைக்கு பத்திரமாக இருக்கும். இன்னொரு தடவை வந்தால் யாராவது கைப்பற்றிக் கொண்டு போயிருப்பார்கள். தெரு திரும்பும்போது ரேடியோவில் நேரு மரணம் பற்றி அடுத்த செய்தி வாசிப்பது கேட்டது. காலையிலிருந்து கேட்கும் அதே தழுதழுத்த குரல்தான். அவர் சாப்பிட்டாரா என்று தெரியவில்லை.

(புதிய பார்வை – ஜூன் 2008)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன