திருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 1

மறதி குறித்த மனக் குமைச்சலோடு
வார இறுதிக் காலை விடிந்தது.

வெண்பாப் போட்டியில் வென்றாருக்கு
வாக்குத் தத்தம் செய்தபடி
ரெவ்வெண்டு போத்தல் கேரளப் படைப்பு
புளியிஞ்சி வாங்கி அனுப்பினேனிலன்
இஞ்சியோடு கண்ணாடிச் சில்லும்
ஊறுகாயாவதாய் படித்ததாலஃது.
சொல்ல மறந்தேன் சேதி எவர்க்கும்.

பாண்டி பஜார் பாலாஜி பவனத்தில்
ஊரே ருசிக்கும் காப்பி அருந்த
அழைப்பு விடுத்தேன் நண்பர் கவிஞர்க்கு
அழைப்பை மறந்து அசோகநகர் குடிபெயர்ந்தேன்.
நிகனொர் பர்ரா அகவிதை என்றவர் போக.

ஊர்தி என்று இலக்கிய சஞ்சிகை
ஆங்கிலத்தில் நடத்தி ஓய்ந்த
சிரித்த முகத்து சித்தனை
மத்ஸ்யம் என்று மீன்பெயர் தாங்கி
மாத்வர் நடத்தும் சைவ ஓட்டலில்
மதிய விருந்துக்கு அழைத்திருந்தேன்
நீர்தோசை, மத்தூர்வடை, பிசிபேளா ஈறாக
உத்தர கன்னடச் சமையல்
சுவை கண்டவர் அவர் கன்னட இலக்கிய
மயக்கமும் உண்டு பலநாள் சென்றெனக்கு
மறந்தது நினைவுவர சித்தர் சிவனடி புகுந்தார்.

புதுவையில் இந்தியக் காப்பியகத்தில்
கடித்துக் கொடுத்த பாதி கேக்கின்
பதிலாக பட்டிஸேரி எனும்பெயர் கடையில்
ப்ளம் கேக் வாங்கி ஊட்ட
அமேலியிடம் சொன்னதும் மறந்தேன்
அது ஆச்சு நாற்பது ஆண்டு முன்பு
அவள் இன்னும் கேட்க மறந்தாளில்லை
அச்சுவை கடந்து போனது எனக்கெப்போது
அதுவும் மறந்தேன் நினைத்தென்ன ஆகணும்.

(தொடரும்)
11 Dec 2019

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன