இளிவரல் – ‘குறுநல்வாடை’

இந்த மாதம் (ஜனவரி 2019) ’அந்திமழை’ இதழில் வெளிவந்த என் ‘குறுநல்வாடை’ பத்திக் கட்டுரை

இளிவரல் இரா.முருகன் குறுநல்வாடை 2

நவரசத்தில் அருவருப்பும் ஒன்று என்று நான் வகுப்பு எடுக்கும்போது சொன்னால், அதுவரை செவி கொடுத்துக் கேட்டவர்கள் முகம் சுளித்து,, வகுப்பு முடிய, சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிப் போய்விடுவது வாடிக்கை. ”பீக்குட்டிப் பிசாசு வேலைன்னு சொல்வாங்க, அறுசுவை உணவோடு கூட நரகலையும் ஒரு துளி இலையிலே வச்ச மாதிரி ஆயிடுச்சே அய்யா” என்று கிராமம் பயிலும் இளைஞர் ஒருத்தர் கிட்டத்தட்ட ஒப்பாரியே பாடிவிட்டார்.

’நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை’ என எட்டுச் சுவைகளின் கணக்கு சொல்கிறார் தொல்காப்பியர். அதில் மூன்றாவது இளிவரல் என்ற அருவருப்பு. முதுமையும் நோயும் இளிவரலைத் தோற்றுவிக்கும் என்ற அதன் இலக்கண நீட்சிதான் குரூரமானது. சீவக சிந்தாமணியில் பாட்டுடைத் தலைவன் சீவகன் முதுமையை அஞ்சிக் காமம் துய்ப்பதைத் துறந்து பக்தி வழிக்குக் கடக்கிறான். அருவருப்பு அங்கே ஆன்மிகத்துக்கு ஆற்றுப்படுத்துகிறது. பட்டினத்தாரின் ‘யோனி அழல் நாறும்’, உடல் கவர்ச்சியை நாற்றமாக மடை மாற்றி ஈசனடி சேர்க்க முனைகிறது.

வடமொழியில் பீபத்ஸம் என்று அருவருப்பு அறியப்படும். இங்கு போல் அங்கும் அந்தச் சுவை பாராட்டுதல் அபூர்வமாகத்தான் நிகழும். போன நூற்றாண்டு உருது இலக்கியத்தில் சதாத் ஹுஸைன் மாண்டோவின் ‘தண்டா கோஷ்ட்’ (தணுத்த மாமிசம்) சிறுகதையில் வல்லுறவு கொண்டவன் அந்தப் பெண் ஏற்கனவே இறந்து போனவள் என்று அறிவதில் ஏற்படும் குற்ற போதமும், தன்னையே இகழ்தலும், அருவருப்புமாக இறப்பது ஓர் உதாரணம்.

தமிழில் கரிச்சான் குஞ்சு எழுதிய சிறுகதை ஒன்றில் நோய் கொண்ட மனைவியோடு சுகிக்கிறவன் கிட்டத்தட்ட அதே போலவே, அவள் இறந்தது தெரியாமல் அவளோடு கூடுகிறான்.

ரோமன் போலன்ஸ்கியின் ‘ரிபல்ஷன்’ (அருவருப்பு) என்ற திரைப்படத்தில் திகிலும், மன நோயும் அருவருப்போடு கூடவே படம் முழுக்கத் தொடர்கிறது. சகோதரியின் காதலனுடைய முகம் மழித்த ரேசரும், பல் துலக்கிய பிரஷும் கதாநாயகியின் கண்ணாடிக் கோப்பையில் கிடந்து ஏற்படுத்தும் அருவருப்பும், அவன் களைந்த ஆடையை முகர்ந்து குமட்டல் ஏற்பட்டுக் கதாநாயகி வாந்தி எடுப்பதும், அழுகிய முயல் கிடக்கும் குளியல் தொட்டியுமாக, கதாநாயகியாகத் தோன்றும் காதரின் டெனொவெயோடு நமக்கும் மேற்கத்திய இளிவரல் அனுபவமாகும் சினிமா இது. அந்த ரேசரை உபயோகித்து வீட்டு வாடகை வசூலிக்க வந்த வீட்டுச் சொந்தக்காரனை அவள் கொல்லும் போது அருவருப்பு திகிலாக நீட்சி கொள்கிறது.

அபானவாயு வெளியேற்றும் போட்டியில் பங்குபெறும் ஒரு மூதாட்டி பற்றி இங்கிலாந்து சூழலில் ‘வாயு’ என்று ஒரு குறுநாவல் எழுதினேன். வாயு பிரிவதெல்லாம் கதையாகுமா என்று அந்தப் புனைவை மேலோட்டமாகப் பரிச்சயம் செய்து கொண்டு அவ்வப்போது விமர்சனங்கள் இன்னும் கூட எதிர் வருவது உண்டு. ‘கிறுக்கன் எழுதிய கதை’ என்று ஒரு நூலகர் சிறப்புப் பட்டம் கொடுத்ததாகக் கேள்வி. அவருக்கு பீபத்ஸம் அனுபவப்பட என்னாலான உதவியைச் செய்த மகிழ்ச்சி என்றும் எனக்கு உண்டு.
ஸ்வீடனில் பீபஸ்தம் உறைபொருளாக, புழுத்த உணவு. அழுகிய பழம், மாமிசம் என்று (கிருமித் தொற்று, நச்சுத் தன்மை நீக்கி) அளிக்கும் ஓர் உணவு விற்பனை நிலையம் ஏற்பட்டிருக்கிறதாம்.

‘அருவருப்பு என்பது பழகி வருவது. பழக்கத்தை அகற்றி நிறுத்தினால் அது குறித்த மதிப்பீடும் மாறும்’ என்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன