சென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்

சென்னை புத்தகக் கண்காட்சி 2019 நிறைவு நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் புத்தகப் பதிப்பாளர்களுக்கு ஓர் எழுத்தாளன் என்ற முறையிலும், வாசகனாகவும் விடுக்கும் சில அன்பான வேண்டுகோள்கள்.

1) புத்தகக் கண்காட்சி பாடப் புத்தகம், நோட்ஸ் விற்கும் கடைகளின் சங்கமம் இல்லை. செலபோன் பேப்பரில் பொதிந்து புத்தகங்களை காட்சிக்கு வைப்பதைத் தயைகூர்ந்து தவிருங்கள். உங்கள் அரங்குக்கு (ஸ்டால்) வரும் வாசகர் புத்தகத்தைப் புரட்டி அங்கே இங்கே கொஞ்சம் படித்து (browse), வாங்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தால் விலைக்கு வாங்குவார். டாய்லெட் சோப்பு மாதிரி அவற்றைக் கட்டி வைத்துக் கொடுப்பது சரியில்லை.

2) புத்தக அலமாரிகளில் பார்வை மட்டத்தில் (eye level) இருக்கும் தட்டுகளில் இருக்கும் புத்தகங்கள் வாசகரின் கண்ணில் படுமளவு கீழே காலடிக்கு நேரே, முழங்காலை ஒட்டி இருக்கும் அடுக்குகளில் வைத்த நூல்கள் பார்வைக்கு வருவதில்லை. மேல் அடுக்குகளில் ஒரே – ஒரு சில எழுத்தாளர்களின் புத்தகங்களின் பல பிரதிகளை அடுக்கி வைக்காமல், அதிக நூல்களை அங்கே ஒவ்வொரு பிரதி மட்டும் இருப்பதாக வைக்கலாம். கூடுதல் பிரதிகள் கீழடுக்குகளில் இருந்து, விற்க விற்க மேலே வரட்டும்.

3) சாக்லெட் வாங்குவது போல், புத்தகம் வாங்குவதும் சில நேரம் திடீரென்று மனசு சொல்ல வாங்கும் செயல் (impulsive purchase). கேஷ் கவுண்டர் ஒட்டி உள்ள பரந்த மேஜைகளில் வைத்திருக்கும் புத்தகங்கள் இப்படியான விற்பனைக்குச் சிறந்தவை. அங்கே ஒரே புத்தகத்தின் பல பிரதிகளை வைக்காமல், (முடிந்தவரைக்கும்) பல புத்தகங்களின் ஒன்று அல்லது இரண்டு பிரதிகளை வைக்கலாம்.

4) புத்தகக் கண்காட்சி வீட்டு விசேஷம் மாதிரி பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும், வாசகர்களும் நண்பர்களைச் சந்திக்கவும், உரையாடவும், சேர்ந்து டீ குடிக்கவும், செல்ஃபி எடுத்துக் கொள்ளவும், அதற்கு அப்புறம் நேரம் இருந்தால் புத்தகம் வாங்கவுமான இனிய சூழலுள்ள இடம். கூடியிருந்து குளிர நாற்காலிகளை கேஷ் கவுண்டரைச் சுற்றிப் போட்டுக் கொள்ள வேண்டாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன