புது நாவல் : 1975:ஜனாதிபதி பக்ருதீன் அகம்மது அவசரச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டுட்டார். நாட்டில் நெருக்கடி நிலைமை பிரகடனம்.

தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் ஒரு சிறு பகுதி
————————————————————

‘இன்னிக்கு கவர்மெண்டே இல்லாத நிலைமை சார். மிலிட்டரி டேக் ஓவர் செஞ்சா கூட ஆச்சரியப்பட மாட்டேன்”.

சீனிவாசன் அரசியல் பேசிக் கேட்பது இதுதான் முதல் தடவை. ஆபீஸ் விஷயம் பற்றி இல்லாமல் மற்றதைப் பேசிக் கேட்பதும் முதல் முறைதான்.

லஞ்ச் டேபிளில் சீனிவாசனிடம் நான் கேட்டேன், “சார், காலையிலே கிருஷ்ண அய்யர் பத்தி சொல்லிட்டிருந்தீங்களே, பிரதமரை ஹைகோர்ட் பதவி நீக்கம் செய்திருக்குன்னு, அதாலே நமக்கு என்ன பிரச்சனை? இந்திராவுக்கு பதவி இல்லேன்னா சஞ்சய் காந்தி பிரதமர் ஆகிடுவார் இல்லே? அவர் தானே லைன்லே அடுத்தது?”

சீனிவாசன் ஏதும் சொல்லாமல் என்னைப் பார்த்துப் புன்னகையோடு தலையை ஆட்டியபடி ஒரு பப்படத்தை ஆசையோடு நொறுக்கி வாயில் போட்டுக் கொண்டார். நாலடுக்கு டிபன் செட் அவருடையது. அதில் மூணு பொறித்த அப்பளமும் பப்படமும் அடைத்து வரும். மற்றதில் தயிர் சாதம். ஒரு பாட்டில் நிறைய சாம்பார். பப்படத்துக்குத் தொட்டுக் கொள்ள அது.

”போத்தி, இது ஜனநாயக நாடு. மன்னராட்சி இல்லே. அம்மா போனா, மகன் அரியணை ஏற முடியாது. அது இல்லே இப்போ விஷயம். டெக்னிகலா பார்த்தா இன்னிக்கு இந்திய அரசாங்கமே இல்லை. பிரதமரை பதவி நீக்கம் செய்ததாலே நாட்டுக்குத் தலைவரும் கிடையாது. மற்ற பல நாடுகளிலே இப்படி நிலைமை வந்தால், ராணுவம் ஆட்சிக்கு வந்துடும். இங்கே இதுவரைக்கும் இல்லை. இனிமேல் எப்படியோ.

சீனிவாசன் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டு அடுத்த பப்படத்தை எடுத்தார். “எப்போ வேணுமின்னாலும் எதுவும் நடக்கலாம். அதுவும் இன்னிக்கே”. அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த யாரும் ஒரு சத்தமும் எழுப்பவில்லை. ஏதோ ஒரு கூட்டுப் பயம் பாதித்திருந்தது எல்லோரையும். என் மனதில் சீனர்கள் கோல்டன் கபே வாசலில் துப்பாக்கியுடன் நின்று டீ குடிக்கப் போகும் என்னைச் சுடுவதற்கு இலக்கு நோக்குவதாகக் கற்பனை செய்து ஒரு வினாடி நடுங்கினேன்.

பிற்பகல். ரகோத்தமன் ஃபோன் பண்ணினான். ஆல் இந்தியா ரேடியோ, தில்லியில் வேலை பார்க்கிற சகா. ஆகாசவாணி ரேடியோ ஸ்டேஷனில் ஒலிபரப்பு பக்கம் போகாமல், குமாஸ்தா வேலை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் போன ரகோத்தமன் ஒரு வாரம் சொந்த ஊர் திருப்புல்லாணி வந்து திரும்பும் நாள். செண்ட்ரலுக்கு ஒரு ஐந்து மணி சுமாருக்கு வந்தால், கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் 7 மணிக்குக் கிளம்பும் வரை அரட்டை அடிக்கலாம் என்று அவன் போஸ்ட் கார்ட் போட்டிருந்தான். இப்போது நினைவு படுத்துகிறான்.

ஐந்து மணிக்கு நான் செண்ட்ரல் போக ரெடி. வால்டாக்ஸ் ரோட்டில் தான் ஆபீஸ் என்பதால் ஒரு பத்து நிமிடம் நடந்தாலே செண்ட்ரல் ஸ்டேஷனுக்குள் போய் விடலாம். கோல்டன் கபேயில் இன்னொரு பால் டீ சாப்பிட்டு விட்டு நடக்க ஆரம்பித்தேன். ஆறுதலான கடல் காற்று கூடவே வந்தது. சீனுவாசன் பயமுறுத்திய ராணுவமும், நான் சுயமாகப் பயந்த சீனர்களும் வால்டாக்ஸ் ரோடு நெரிசலில் காணாமல் போனார்கள்.

ரகோத்தமனுடன் நாஸ்டால்ஜியா அரட்டை ரயில் கிளம்பும் வரை தொடர்ந்தது. சீனிவாசன் சொன்னது நடக்குமா என்று மத்திய சர்க்கார்க்காரனான அவனிடம் கேட்டேன். அவனுக்கு கிருஷ்ண அய்யர் யாரென்றே தெரியவில்லை. அவர் பள்ளிக்கூட ஹெட்மாஸ்டரா என்று கேட்டான். தொடர்ந்து, “ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ஏன் இந்திரா காந்தியை வெளியே போகச் சொல்லணும்?” என்று அடிப்படைக் கேள்வியைக் கேட்டு என்னை நிசப்தனாக்கினான். அதற்கு அப்புறம் ராயர் கடையில் பஜ்ஜி சாப்பிட்ட பத்து வயதுக்கு மேற்பட்ட எதையும் அவனோடு பேசவில்லை.

எந்த ஜென்மத்தில், எந்த ஊரில் எங்கே காண்போமோ என்று கண்ணில் நீர் மல்க, கட்டிப் பிடித்துக் கொண்டு ரகோத்தமனுக்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டு ஜெனரல் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப்பில் பதினொண்ணாம் நம் பஸ் பிடித்து ஜி.என்.செட்டி ரோடு வழியாக உஸ்மான் தெரு வந்து சேர்ந்தேன். சிவா விஷ்ணு கோவில் எதிரே விரியும் தெருவில் எங்கள் மேன்ஷன். உஸ்மான் ரோடு நெரிசல் எல்லாம் காப்பிப்பொடி புதுசாக அரைத்து வாங்கவும், கோன் ஐஸ் சாப்பிடவும், லிப்கோவில் இங்கிலீஷ் தமிழ் டிக்‌ஷனரி வாங்கிப் போகவும், நல்லியில் சுங்கிடிப் புடவை வாங்கவுமாக இருந்தது

நாதன்ஸ் கபே புல் மீல்ஸ் பிரிவில் டோக்கனை எச்சில் இலைப் பக்கம் வைத்துக் காத்திருக்க வேண்டியில்லாமல் போனதுமே இடம் கிடைத்தது. வத்தல் குழம்பும், ரெண்டு சுட்ட அப்பளமும் போனசாகக் கிடைக்க, இந்தியாவை, சீனுவாசனை, ஐம்பத்து நாலு பைசா வித்தியாசத்தை மறந்து, பருப்புப் பொடி கலந்து சூடான சாதம் வயிற்றில் நிறைய எங்கே எங்கே என்று தூக்கம் எட்டிப் பார்த்தது.

மாடிப்படி ஏறி நடையில் திரும்ப, முதல் அறை கன்னட நண்பர்கள் பெல்காவியும் குல்கர்னியும் வாசலிலேயே டிரான்சிஸ்டருடன் நின்று கொண்டிருந்தார்கள். என்ன விஷயம் என விசாரித்தேன். ராணுவ ஆட்சியா?

“இன்னும் இல்லே. இந்திராம்மா அமைச்சர்களோடு ஆலோசனை செய்து ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதை சந்திக்க ராஷ்ட்ரபதி பவன் போயிருக்காங்களாம். அதுவும் ஆகாசவாணி ந்யூஸ் இல்லை. பி.பி.சி லண்டன் செய்தி. வாய்ஸ் ஆப் அமெரிக்காவும் அதே தான் சொல்றது”, ரேடியோ குமிழியைத் திருகிக் கொண்டு சொன்னார் பெல்காவி. அவர் எனக்கு பிரியமான நண்பர். பெல்காவி என்பது கர்னாடகாவில் ஊர்ப் பெயரான பெல்காம் அடிப்படையில் வருவதாம். குல்கர்னி மூத்தவர். நகத்தைக் கடிக்காதே, தலை வாரிட்டு வா, வீபுதி எட்டுக்கோ என்கிற மாதிரி அண்ணா அவதாரம் அடிக்கடி எடுப்பார். அவரைத் தவிர நாங்கள் இங்கே அறைகளில் இருக்கப்பட்ட எல்லா பிரம்மசாரிகளும் இருபத்தைந்து வயதுக்குக் கண்டிப்பாகக் கீழ்ப்பட்டவர்கள் என்பதால் ஹள்ளி அண்ணா என்ற இந்தக் கிராமத்து அண்ணா சொல் மதிப்பானது.

அறைக்கு நடந்தேன். உள்ளே போய்ப் படுத்தால் உலகோடு ஒரு தொடர்பும் இல்லாமல் அடுத்த எட்டு மணி நேரம் போகும். அப்புறம் பூமியே புரண்டாலும் தான் என்ன?

பேண்ட் பாக்கெட்டில் ரூம் சாவிக்குக் கை விட்டேன். அது அங்கே இல்லை.

இரண்டு பாக்கெட், கைப்பை, இருக்க முடியாது என்று தெரிந்தாலும் சட்டைப் பை. பரபரப்பாகத் தேட அறைச் சாவியைக் காணவே காணோம்.

பூட்டு எதுவும் இல்லை. கதவிலேயே பதிந்த பூட்டை இயக்கிப் பூட்டும், திறக்கும் ஏற்பாடு. காலையில் ஆபீஸ் போகிற அவசரத்தில் சாவியை எடுத்துக் கொள்ளாமல் வெளியே வந்து சாத்தி விட்டுக் கிளம்பியிருக்கிறேன். இனிமேல் கதவு திறக்க கோபாலன் தான் வரவேண்டும்.

கோபாலன் இந்த மேன்ஷனின் உரிமையாளர். எல்லா சாவிக்கும் பொதுவான, ஒரு மாஸ்டர் சாவி அவரிடம் இருக்கிறதாகக் கர்ணபரம்பரைக் கதைகளாக வதந்தி உலவுகிறது. அதில் நம்பிக்கை இனிமேலாவது வைத்தாக வேண்டும். கதவு திறக்காவிட்டால் எங்கே போய் உறங்க? நாளை எப்படி ஆபீஸ் போக?

ஜன்னல் வழியே ஏக்கத்தோடு ரூமுக்குள் பார்த்தேன். பின்னால் கொரகொரவென்று பிபிசியோ எதுவோ இந்த நாட்டு நிலைமையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்திரா என்ன ஆனார்? அவர் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். எங்கேயும் போகட்டும். நான் எப்படி அறைக்குள் மீண்டும் போகப் போகிறேன்.

“பக்ருதீன் அகம்மது அவசரச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டுட்டாராம். நாட்டில் நெருக்கடி நிலைமை பிரகடமாகி இருக்காம்”. பெல்காவி டிரான்சிஸ்டரை உரக்க வைக்க, எமர்ஜென்சி வந்ததைப் பரபரப்போடு மதராஸ் வானொலி நிலையத்தில் பத்மநாபன் சிறப்புச் செய்தி அறிக்கையாகச் சொல்கிற ஒலி. பத்மநாபன் செய்தி சொல்லி முடித்து வீட்டுக்குப் போவார். தட்டியதும் கதவு திறக்கும். ஓய்வெடுத்துக் கொண்டு, குளித்து, சாப்பிட்டு வந்து நாளைக்கு இந்திரா காந்தி புகழ் பரப்பும் செய்தி சொல்வார். நான் ஆபீஸ் போக முடியாமல், அழுக்கு உடுப்போடு அறைக்கு வெளியே கையைப் பிசைந்து கொண்டு நிற்பேன்.

“என்ன ஆச்சு போத்தி, வாசல்லே நின்னு முழிச்சிட்டு இருக்கே?’ இந்தப் பக்கம் அடுத்த ரூம்காரரான நாராயணசாமி ஸ்கிப்பிங் கயிறில் தாண்டிக் குதித்தபடி தன் அறைக்குள் இருந்தபடிக்கே விசாரித்தார். காலை ஏழு மணிக்கு எண்ணூரில் வேலைக்குப் போய் ராத்திரி ஏழுக்கு வருகிறதால் ராத்திரி படுக்கும் முன் ஸ்கிப்பிங்க் ஆடுகிற உடல் பயிற்சி அவருக்கு விதிக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார். ராத்திரியில் ஸ்கிப்பிங் ஆடி ஆடி, நடக்கும்போதே குதித்துக் குதித்துப் போவதாகத் தான் தோன்றும். என்ன சாப்பிட்டாலும் சதையே போடாத பூஞ்சை உடம்பு அவருடையது.

“நாராயணசாமி சார், சாவியை ரூம் உள்ளே விட்டுட்டேன். என்ன பண்றது?”

பெல்காவி டிரான்சிஸ்டரைக் கட்டிச் சுமந்தபடி ஜன்னல் வழியே பார்க்க, குல்கர்னி பின்னாலேயே வந்து உள்ளே டார்ச் அடித்தார். “எதிர்க் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராகக் கைது செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று அமெரிக்காவோ, பிரிட்டனோ உற்சாகமாகச் செய்தி சொல்ல, நான் குழப்பத்தோடு அறைக்குள் பார்த்தேன். கதவு ஓரமாக சின்ன மேஜையில் சாவி பத்திரமாக இருக்கிறது.

நாராயணசாமி வந்து கையை ஜன்னல் கம்பிகளுக்குள் கையை நீட்ட குட்டி மேஜைக்கு நாலு அங்குல உயரத்தில் அவர் விரல் அலை பாய்கிறது. கொஞ்சம் நீளமாக இருந்தால் சாவியைக் கைப்பற்றி இருக்கலாம்.

நாராயணசாமியும் ஸ்கிப்பிங்க் கயிறை ஓரமாகப் போட்டு விட்டு அவருடைய டிரான்சிஸ்டர் ரேடியோவில் பிபிசி போடுகிறார். “மொரார்ஜி தேசாய் போயாச்சு”. அவர் சொன்னதைக் கேட்க நடுக்கம் வருகிறது. அதுவும் அனாதையாக அறைக்கு வெளியே நின்று மொரார்ஜியை நினைக்கும் சோகம். சுட்டுட்டாங்களா அவரை? கொலையும் செய்வார் அந்தம்மாவா?

“எழுபத்தேழு வயசு. அவரை ஜெயில்லே போட்டுட்டாங்க. அநியாயம்”, குல்கர்னி குரலில் ஆத்திரம் புலப்பட்டது. ரொம்ப சாந்தமான மனிதர் அவர்.

கோபாலனுக்கு போன் செய்து பார்க்கலாமா? நாராயணசாமி தன் பர்சில் தேடி ஒவ்வொன்றாக அவர் அறையில் தரையில் போட்ட பொருட்கள் – தினசரி காலண்டர் காகிதத்தில் மடித்த கோவில் வீபுதி. எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் டிக்கட். மின்சார ரயில் சீசன் டிக்கெட். கோளறு திருப்பதிகம் ஒன்றும் பின்னால் பனியன், ஜட்டி விளம்பரமுமாக சிறு அட்டை. மடாதிபதி படம். நுணுக்கி அச்சடித்த புகையிலைக் கம்பெனி கேலண்டர். பஸ் டிக்கட். சின்ன, மினிக்கும் மினியாக பாக்கெட் சைஸ் நோட்புக். அதுதான் என்றார் நாராயணசாமி. எடுத்துப் பிரித்து கோபாலனை அழைக்க, அவர் டெலிபோன் அவுட் ஆப் ஆர்டர். நாசமாகப் போகட்டும் அதுவும் அவரும்.

“வாஜ்பாயி அரெஸ்டெட். அத்வானியும் உள்ளே தான்”. பெல்காவி சொன்னார். “கலைஞர் கருணாநிதி?” அந்தக் குழப்பமான நேரத்திலும் எனக்குக் கேட்கத் தோன்றிய பெயர் அதுதான்.

“இன்னும் இல்லை” என்றார் நாராயணசாமி. அந்தப் பதில் மற்ற எதையும் விட மிரட்டலாக கதிகலக்க வைத்தது. அது இருக்கட்டும். அறைக்குள் எப்படிப் போக? நாளைக்கு எப்படியாவது சமாளித்து, கோபாலன் வீட்டுக்குப் போய், எந்த அட்ரஸோ தெரியாது, அவரைக் கெஞ்சிக் கூத்தாடிக் கூட்டி வந்தால் கதவு திறக்குமா? என் ஒரு வருடம் சம்பளம் முழுக்க அவருக்கு அபராதமாகத் தர வேண்டி வருமா? பாண்டி பஜாரில் ட்யூப்ளிகேட் சாவி பண்ணுகிறவர் கீதா கபே அருகே மரத்தடியில் உட்கார்ந்திருப்பாரே. அவரைக் கூப்பிட்டால் செய்து கொடுப்பாரா? பூட்டு இருந்தால் சாவி போடுவார். கதவிலேயே பதிந்த பூட்டுக்கு? தப்புக் காரியமா அப்படி சாவி போடச் சொல்வது?

“ஆகாசவாணி. ஒரு முக்கிய அறிவிப்பு. நாளை, ஜூன் 26-ந்தேதி, வியாழக்கிழமை, காலை ஏழு மணிக்கு இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். ஆகாசவாணியின் அனைத்து நிலையங்களும் இந்த உரையை அஞ்சல் செய்யும். அடுத்த நிகழ்ச்சி, நிலைய வித்வான்”.

நான் கதவில் சாய்ந்து கொண்டு நடையில் காலை நீட்டி ஓய்ந்து போய் உட்கார்ந்தேன். எமெர்ஜென்சி என்றால் இருப்பிடத்துக்குள் போக முடியாமல் தவிக்கிற ராத்திரி. இப்படித்தான் என் அகராதியில் எழுதப் படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன