புது நாவல் : அச்சுதம் கேசவம் அத்தியாயம் 47 இரா.முருகன்


கடவுள். தாய்த் தெய்வம். உறங்கிக் காலையில் விழித்ததும் தேநீர் கொடுக்க ஒரு படையே நிற்கிறது. ராணுவம். ஆயிரம் ரெண்டாயிரம் ஆப்பிரிக்க வீரர்கள். மாறி மாறி வருகிறார்கள். நந்தினிக்கு அவர்கள் எல்லோரும் பகலும் இரவும் காவல். நந்தினி அவர்களுக்கு நிரந்தரக் காவல். ஒரு வருடமாக இப்படித் தான் நடக்கிறது.

வீட்டு வாசலில் ராணுவ வண்டி வந்து நின்ற ஒரு பகல் பொழுதில் நந்தினி கடவுளானாள். சரியாகச் சொன்னால், கடவுளுக்கு மூத்த சகோதரி. அவள் கிடைத்த நிம்மதியில் கடவுளை சாவகாசமாக அடையாளப் படுத்திக் கொள்ளலாம் என்று ஒத்திப் போடப்பட்டது.

புழுக்கமான அந்தப் பகல் நேரத்தில் நந்தினி ராணுவத் தாவளங்களையும், ஒற்றைக் கட்டிலும் பழைய மேஜை மின்விசிறியுமாக அவற்றில் புழுங்கி நாறும் சிறு அறைகளையும் ஏனோ நினைத்தாள். முக்கியமாக, குறுக்குக் கம்பிகளோடு கதவு அடைத்து வெளியே இருந்து உள்ளே முழுக்க பார்க்கக் கூடிய அப்படியான ஒரு அறையை. அவள் இதுவரை பார்க்காத இடம் அது. அசுத்தமான அறை. இருட்டான அறை. ஆண் வாடை ஆக்கிரமித்த, வயிறு வாயில் எழும்பி வரக் குமட்டும், கழிவறைக்கும் மோசமான குச்சு. பத்திரிகைக் கட்டுரை ஒன்றில் வேறேதோ நாட்டில் ராணுவ அத்துமீறல்கள் பற்றிய கட்டுரைக்குத் துணையாக வந்து நினைவில் ஊடுருவி இருந்த அந்த அறை புகைப்படம் கூட இல்லை. கையால் வரைந்த கோட்டுச் சித்திரம்.

ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட ஒரு பெண், கிட்டத்தட்ட நந்தினி வயது அல்லது நாலைந்து வருடம் இளையவள். அவளை ஒரு வருடத்துக்கு அடைத்து வைத்தார்களாம். உடல் தினவு எடுத்தபோதெல்லாம் யார்யாரோ சர்வ சுதந்திரமாக வந்து ஒற்றைக் கட்டிலில் தள்ளி அந்த உடலை அனுபவித்து விட்டுப் போனது பற்றிப் பேசிய கட்டுரைக்கு ஓரமாக, ஓவியன் பெயர் போடாமல் வந்த சித்திரம் அது.

அந்த ராணுவம் ஒடுக்கப்பட்டபோது விடுவிக்கப் பட்ட பெண் ஒற்றை அறைச் சிறையை விட்டு வெளியே கிளம்ப மாட்டேன் என்று அடம் பிடித்துப் பித்தாக, நடைப் பிணமாக ஆஸ்பத்திரிக்குச் சுமந்து போகப்பட்டது பற்றி கட்டுரை நீண்டதும் நந்தினிக்கு நினைவில் உண்டு.

நந்தினி கடவுளான தினத்தில் வாசலில் வந்து நின்ற ராணுவ வண்டி அவளை அவளுக்கேயான ஒற்றை அறைக்கு அழைத்துப் போக வந்திருக்கிறது என்ற தீர்மானத்தோடு செருப்புக்குள் கால் நுழைத்துக் கொண்டாள் நந்தினி. ஹாலில் மாட்டியிருந்த லண்டன் பாலப் புகைப்படத்தில் அவள் இடுப்பை வளைத்துப் பிடித்து அணைத்து நின்ற வைத்தாஸிடம் சொன்னாள் –

நான் உனக்குத் திரும்பக் கிடைக்காமலே போகணும்னு நீ கும்புடற தெய்வத்தை வேண்டிக்கோ என் அன்பே. அடுத்த பிறவி எல்லாம் இல்லை. இதோடு நாம் பிரிந்து போறோம். என் ஒற்றை அறையின் துர்க்கந்தம் உனக்கு அனுபவப்பட வேணாம். உன் நாவல் நல்ல வண்ணம் முடிய என் வாழ்த்து.

கண்ணில் துளிர்த்த கண்ணீரோடு வாசலில் போவதற்கு முன் பௌதீக அவஸ்தைகள். முதலில் சிறுநீர் கழிக்க வேண்டும். போய் வந்தாள்.

பசி எடுக்கிறது. ராணுவ அதிகாரியை அல்லது அதிகாரிகளை வாசலில் உட்காரச் சொல்லி விட்டு உள்ளே சமையல் அறையில் போன வாரம் செய்து மீந்த ரொட்டிகள் நாலைந்தை வெறும் தண்ணீராவது விட்டு நனைத்துப் பிசைந்து சாப்பிட வேண்டும்.

அதற்கு அப்புறமும் பத்து பதினைந்து நிமிடம் இருக்கச் சொல்லி, இருக்கச் சொன்னால் இருப்பார்கள். விரோதி என்றாலும் முக்கிய அதிகாரியின் மனைவி. சிறு ஏவல்கள் செய்து தீர்க்கப் பட வேண்டியவை, அவர்களை இருக்க வைத்து விட்டு, பாத்ரூம் ஷவரை முழுக்கத் திறந்து விட்டு ஒரு குளியல். சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். கைப்பையிலும் அதே படியான உடுப்புகளை எடுத்து அடைத்துக் கொள்ள வேண்டும். சானிடரி நேப்கின் பொதிவுகளும் கூட. பூப்போட்ட கர்ச்சீஃப். அப்புறம் படுக்கை அறையில் கூடவே இருக்கும் இந்த கல்யாண போட்டோ.

புகைப்படத்தைப் பார்த்ததும் நிலை குலைந்து போய் அழலானாள் நந்தினி. மனதில் திரண்டெழுந்த இறுக்கம் பிரி நெகிழ்ந்து ஆடிக் குழைந்து சிதறியது. எங்கே போகப் போகிறாள் அவள்? ஏன் போக வேண்டும்? விருப்பமில்லாமல் இழுத்துச் செல்லப்படும் பிராணி போல் அவளைக் கூட்டிப் போய்க் குற்றேவல் செய்ய வைக்க யாருக்கு எல்லாம் அதிகாரம், யாரால் கொடுக்கப்பட்டிருக்கிறது?

படுக்கையில் உட்கார்ந்து அழுதபோது இன்னொரு பயம் எட்டிப் பார்த்தது. இப்படியே இங்கேயே முதல் தடவை அவள் உடம்பை அத்து மீறுவார்களோ? எத்தனை பேர்? வியர்வை பெருகிய கை இடுக்கு உடுப்பை நனைக்க, முகர்ந்து பார்த்தாள், இந்த நாற்றத்தோடும், வாயில் புரண்டெழும் துர்வாடையோடும், இன்னும் எத்தனையோ அசுத்தத்தோடும் அவளை ஒரு பன்றியைப் போல், சொறி பற்றிய நாய் போல் மேலேறி இழிகலவி செய்ய வருகிறவர்களை அவளுக்குத் தடுக்க முடியாமல் போகுமோ? ஏன்?

எழலாமா இருக்கலாமா என்று கூட முடிவு செய்ய பலமில்லாமல் அவள் தளர்ந்து இருந்தபோது கூக்குரலாக வெளியே ஆண் குரல் ஒன்று. யாரோ யாரையோ வெட்டிச் சாய்க்கிறார்களோ. அவள் பயத்தில் உறைந்து போனாள், பிணங்கள் அழுகி நாற, அவற்றுக்கு வெகு அருகில் அவளுடைய உடலில் அத்துமீற நேரம் நெருங்கி வருகிறதோ.

படுக்கை அறைக் கதவு தட்டப்படுகிற சத்தம். தட்டியிருக்கக் கூடாதோ என்ற நினைப்பில் நிறுத்திய மாதிரி அந்தச் சத்தத்தோடு தெருவின் மங்கிய ஒலிகளும் ஒரேயடியாக நின்று போயின. இன்னொரு ஐந்து நிமிடம் நிசப்தம். மறுபடி மெல்லத் தட்டப்படும் கதவு. மறுபடி நிசப்தம். பொறுக்க முடியாமல் ஓடிப் போய்க் கதவைத் திறந்தாள் நந்தினி.

கதவுக்கு வெளியே நிறையப் பதக்கங்களும் கயிறுகளும் நாடாக்களும் அப்பிய, பச்சை அழுத்தமாகப் பதிந்த ராணுவ உடுப்போடு நடு வயது மேஜரோ வேறே பெரிய பதவியில் இருப்பவரோ ஒருவர் மண்டி போட்டுக் கைகளை ஒருசேர மேலே உயர்த்தி இருந்தார். அவர் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

அந்த அதிகாரிக்கு இரண்டு அடி தூரத்தில் அறை முழுக்க ராணுவத்தினர். வெளியே படிகளில், தெருவுக்கு இட்டுச் செல்லும் நடைபாதையில், வீட்டு வாசலில், தெரு முழுக்க எங்கேயும் ராணுவம் தான்.

அதிகாரி விக்கி விக்கி அழுதபடி ஆடும் பறவை ஆடும் பறவை என்று திரும்பத் திரும்ப ஆப்ரிகான்ஸ் மொழியில் சொல்லிக் கொண்டிருந்தார்.

டான்ஸ் உயல். பௌ. டான்ஸ் உயல். பௌ. பௌ. உயல்.

அந்தக கூவலை உள்வாங்கி அருகே இருந்த அதிகாரிகளும் அவர்களிடமிருந்து அலையலையாகக் கடந்து தெரு வரை, அல்லது அதற்கும் அப்புறம் நின்றவர்களும் ஆடும் பறவை என்று திரும்பச் சொல்லும் சத்தம். ஒன்று சேர முயலும் ஒலிகள் திரண்டு எழும்பி வர, பல கைகள் வானம் பார்க்க நீண்டு உயர்ந்து நின்றதைப் பார்வை சென்ற இடமெல்லாம் சந்தித்தாள் நந்தினி. என்ன பறவை? எங்கே ஆடுகிறது?

மெல்ல எழுந்த ராணுவ அதிகாரி குரல் கரகரக்க நந்தினியின் கைகளை தேவதையை ஸ்பர்சிப்பது போல் பிரமிப்போடு தொட்டார். தெய்வச் சின்னங்களை மரியாதையோடு முத்தமிட்டு வணங்குவது போல் இன்னொரு முறை மண்டியிட்டு அவள் கைகளில் ஆராதகராக முத்தமிட்டார்.

சகோதரி, மூத்த சகோதரி.

நந்தினி எதுவும் புரியாமல் ஒரு வினாடி நின்றாள். அவளுக்கு இவர்களால் இனி எந்தத் துன்பமும் வராது என்று மனதில் பட்டது. அது கொடுத்த ஆசுவாசமே பலமானதாக இருந்தது. சாப்பிடலாம். குளிக்கப் போகலாம்.

வாசலில் மரியாதையோடு நின்று உள்ளே வரலாமா என்று உத்தரவு கேட்டார் அந்த அதிகாரி. அபத்தமான சூழ்நிலை. பழைய பருத்தி அங்கி அணிந்து படுக்கையில் உட்கார்ந்தபடி நந்தினி. அந்த ஆபீஸர் உட்கார வேறு இடம் இல்லை என்பதால் அவரையும் அங்கே அமரச் சொல்லித் தான் கைகாட்ட வேண்டியிருந்தது. படுக்கையில் வேற்று மனிதரை இருக்கச் சொல்லிக் கூப்பிடுவதன் அபத்தம் புலனாக, மெல்லச் சிரித்தாள் நந்தினி.

காட் ஸெ அவொர் சிஸ்டொர். கடவுளின் அக்கா. அவொர் சிஸ்டொர்.

அவர் பிதற்றியபடி உள்ளே வந்து விதிர்விதிர்த்து நின்றார். உட்கார மறுத்து விட்டார். அது மரியாதையில்லை என்பது போல் கையசைத்தார். ஏதோ சொல்லி உடனே வெளியே போக வேண்டிய அவசரம் அவர் அசைவுகளில் தெரிந்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தார் அவர். வாசலை நோக்கிக் கை காட்டினார்.

ஒரே ஒரு செய்தி மட்டும் சொல்ல வேண்டும் உங்களிடம். சொல்ல அனுமதிப்பீர்களா?

அவர் மரியாதை விலகாத குரலில் கேட்டார்.

சொல்லுங்கள் என்று ஆதரவாகக் கூறினாள் நந்தினி.

வாசலில் வைத்த படத்தில் இருந்து அந்தப் பறவை.

அவர் ஆரம்பித்து ஒரு வினாடி நிறுத்தினார். உடல் இன்னும் நடுங்கியது.

அந்தப் பறவைக்கு என்ன?

எல்லாமே தான், அவொர் சிஸ்டொர். நிறைய இறகுகள் உள்ள, வர்ணத்தில் அவை மினுமினுக்கும் பறவை இல்லையா அது. பறவை படத்துக்குள் இல்லை. வெளியே உங்கள் அறைக்கு வெளியே நடனமாடியபடி நின்றது. நீங்கள் கடவுளின் மூத்த சகோதரி என்று அகவியபடி அறை முழுக்கத் தாழப் பறந்து வந்தது. பார்த்தேன். கேட்டேன்.

அவர் வாசல் பக்கம் திரும்பவும் உத்தேசமாகக் காட்டி வியப்பு மறையாமல் சொல்ல, நந்தினிக்கு முன்னறையில் மாட்டிய இந்திய ஓவியம் நினைவில் வந்தது. ஆடுகிற ஆண் மயிலும், ஓரமாக நின்று கவனிக்கிற பெண் மயிலுமாக இந்திய ஓவியன் வரைந்தது அது. லண்டனில் ஆர்ட் கேலரிக்கு வெளியே படங்களையும் நகல்களையும் பரத்திப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த போலந்து நாட்டு வயசரிடம் முப்பத்து நாலு பிரிட்டீஷ் பவுண்டுக்கு வாங்கியது அந்த ஓவியம். இன்னார் வரைந்தது என்ற உறுதி தரும் ஆவணம் எதுவும் மயிலாடும் ஓவியத்துக்கு இல்லை என்று கை விரித்து விட்டார் போலந்துக்காரர்.

ராத்திரியில் விளக்குகள் அணைக்கப்பட்டதும் படம் மாந்திரீகமான நீல ஒளியைச் சிந்தி அறையையே அந்த நிறத்தில் குளிரக் குளிரக் குளிக்க வைப்பது அவ்வப்போது நடக்கிறதுதான். ஆனாலும் அந்த மயில் படச் சட்டத்தை விட்டு வெளியே வந்து ஆடியதும், பறந்து அறை முழுக்கச் சுற்றியதும், திரும்ப உள்ளே போனதும் எல்லாம் நடந்ததில்லை.

இந்த மாதிரியான நீள இறகு கொண்ட மயில்கள் அம்பலப்புழையில் நிறையக் காணக் கிடைக்கும் என்று விடுமுறைக்கு லண்டனில் இருந்து வந்த அம்மா சொன்னாள். வைத்தாஸுக்குப் பிடித்ததால் லண்டனில் வாங்கியது என்பது தவிர வேறே சிறப்பான கவனம் எதையும் இந்தப் படத்தில் வைக்கவில்லை என்று அப்போது அம்மாவிடம் சொன்னது நந்தினிக்கு நினைவு வந்தது.

பறவை இருக்கட்டும். நீங்கள் சொல்ல வந்தது?

அதிகாரி கை உயர்த்தி உறுதியான குரலில் முழங்கினார்.-

உங்களை யாரும் உபத்திரவிக்க மாட்டார்கள். துரும்பை எடுத்து உங்கள் மேல் போட்டாலும் எட்டு சிப்பாய்கள் முன்னால் வந்து நின்று அவர்களைச் சுட்டுத் தள்ளுவார்கள். அதற்கான உத்தரவை இன்று பிறப்பிக்கிறேன்.

அப்போது தான் முன்னால் வணங்கி நிற்பவர் ராணுவத்தில் உச்ச பட்ச மரியாதைகளோடு இருப்பவர் என்று நந்தினிக்குத் தெரிய வந்தது. தேசத்தின் அடுத்த அதிபராகப் பதவி ஏற்கப் போகிறவர் அல்லது ஏற்றவர்.

வைத்தாஸ் ஐயன் நாட்டின் செல்வம். அவருடைய அன்பு மனைவியான நீங்களோ இங்கே இருக்கும் உங்கள் உறவினர்களோ இந்த நாட்டை விட்டு எப்போதுமே வெளியே போக வேண்டாம். வைத்தாஸ் அவர்களும் திரும்பி வந்து எங்களோடு சேர்ந்து இருக்கவே விரும்புகிறோம். அவர் எழுத்தாளர். மகிழ்ச்சியாக இங்கே இருந்து நாவல் எழுதாமல் எதற்கு அவர் தனியாக எங்கேயோ இருந்து துன்பப் படவேண்டும்?

ராணுவ அதிகாரி சொன்னதற்கெல்லாம் மரியாதையோடு தலையசைத்து உய் உய் என்று ஆமோதித்து பேச்சை முடிக்க அவசரம் காட்டினாள் நந்தினி,

அந்தப் பறவை படத்தில் திரும்பப் போய் என்னிடம் சொன்னது. உங்களை கடவுளின் மூத்த சகோதரியாகப் போற்றினாலே எம் அரசாங்கம் நிலைக்கும் என்று. அதற்கான உத்தரவும் இன்னும் இரண்டு மணி நேரத்தில் வெளியாகும்.

புதிய ஜனாதிபதி கையை உயர்த்தி, உச்ச பட்ச கௌரவமான விருதை அளிப்பது போல் நின்று அது சரிப்படாது என்று உணர்ந்தவராக, இன்னொரு முறை நந்தினிக்கு முன் மண்டியிட்டார்.

வைத்தாஸ், நீ எங்கே? இதையெல்லாம் பார்க்க வேண்டாமா உனக்கு? உன் பெண்டாட்டி காலில் நொடிக்கொரு தரம் நாட்டின் அதிபர் மண்டியிட்டு மரியாதை செலுத்துகிறார். வெளியாகப் போகும் அரசாங்க உத்தரவு சொல்கிறது நான் கடவுளின் மூத்த சகோதரி என்று. வைத்தாஸ், உன் நாவலில் இது வருமா? உனக்கு இதெல்லாம் ஆச்சரியமாக இல்லையா?

ஒரு ஆச்சரியமும் இல்லை. உன்னை தெய்வமாக்கின பிறகும் பாத்ரூம் உபயோகிக்கவோ, சாப்பிடவோ, உறங்கவோ எந்த விதமான இடைஞ்சலும் இருக்கக் கூடாது என்று தயவு தாட்சணியம் பார்க்காமல் அவர்களிடம் கூறு.

லண்டன் பாலப் படத்தில் இருந்து வைத்தாஸ் வெளிப்பட்டு உலாத்தியபடி இதைச் சொல்லித் திரும்பப் படத்தில் ஏறும்போது நந்தினியைப் பார்த்தான்.

மயில் எச்சம் எல்லாம் வரவேற்பறை சோபாவில் இல்லாமல் கவனமா இரு. மேலே அப்பினால் லேசில் போகாது.

வைத்தாஸ் இல்லை. ஆடும் மயிலும் இல்லை. படங்கள் இனிப் படங்களாகவே இருக்கட்டும்.

ராணுவ வண்டி வாசலில் நின்ற பகல் பொழுதில் நந்தினி அப்படி நினைக்க ஆரம்பித்து ஒரு வருடம் ஆகி விட்டது.

ராணுவக் குழுக்கள் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கின்றன. யார் வந்தாலும், நந்தினி வீட்டுக்கு அந்தப் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் வந்து அவளை மண்டியிட்டு வணங்குகிறார். வாசலில் ஆடும் பறவை ஓவியத்தை பிரமிப்போடு பார்க்கிறார். அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு போகிறார்கள். மறுநாள் உள்ளூர்ப் பத்திரிகையில் மக்கள் தலைவர் புனித சகோதரியிடம் ஆசி பெற்றார் என்ற செய்தியும் புகைப்படமும் வெளியாவதும் தவறாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வைத்தாஸ் சார்ந்திருக்கும் அரசியல் பிரிவை ஆதரிக்கும் ராணுவக் குழு நேற்று திரும்பவும் பதவிக்கு வந்தது. ஏழு மாசம் முன்னால் ஒரு தடவை அவர்கள் அதிகாரத்தைப் பிடித்தார்கள் தான். ஆப்பிள்களோடும் ஆரஞ்சுகளோடும் அப்போது நந்தினியைப் பார்க்க வந்தபோது அவள் இந்தியா போகவேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினாள்.

ஏற்பாடு செய்கிறேன்

சொல்லிப் போனவர் அடுத்த வாரம் சுட்டுக் கொல்லப் பட்டார்.

வாசலில் இதோ இப்போது ஒரு ராணுவ வண்டி நிற்கிறது. புது ஜனாதிபதி. கூடவே மரியாதையான இடைவெளி விட்டுப் புகைப்படக் காரர்கள். ராணுவ அதிகாரிகள்.

மயிலும் குயிலும் இருக்கட்டும். இந்தியா போக வழி பண்ணுடா

முணுமுணுத்தபடி, கடவுளின் மூத்த சகோதரி மூட்டுப் பிடிப்புக்குக் காலில் களிம்பு புரட்டலானாள்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன