ரொமன் பொலன்ஸ்கி பற்றியும் மற்றவையும் – எழுத்துக்காரன் குறிப்புகள் – ஏப்ரல் 2015


வகுப்பு எடுப்பதற்காக, எத்தனையோ வருடம் கழித்து மறுபடி ரொமன் பொலன்ஸ்கியின் (Repulsion) ரெபல்ஷன் திரைப் படம் பார்த்தேன்

ஆழ்மனதில் பதிந்த வெறுப்பும், தனிமையும் மனதைக் குறக்களி காட்டி நிஜத்துக்கும் பிரமைக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க விடாமல் குழப்பி அந்தகாரத்தில் ஆழ்த்தும் கதை. கேதரின் டெனேயூ Catherine Deneuve அருமையாக சித்தப் பிரமை கண்ட கதாநாயகியாக நடித்திருப்பதைக் கண்டு இன்னொரு புகழ் பெற்ற பிரஞ்சு இயக்குனர் லூயி புனுவல் Luis Bunuel கேதரினுக்கு இதுபோல் மாறுதலான பெண் பாத்திரம் கொடுத்து, இன்னொரு புகழ் பெற்ற திரைப்படமான Le Belle De Jour அளித்திருக்கிறார்.

ஒரே ஒரு ரிபல்ஷன் படத்துக்காக ரொமன் பொலன்ஸ்கியின் சமூக விரோதத் தனி வாழ்க்கைக் குற்றங்களைக் கூட மன்னித்து விடலாம் என்று தோன்றுவது தவறே. ஆனாலும் உலக சினிமா தளத்தில் ரொமன் பொலன்ஸ்கி மறக்க முடியாத சாதனையாளர் தான்.

——————————————————————

திரு.இந்திரா பார்த்தசாரதி அவர்கள் அச்சுதம் கேசவம் நாவல் (அத்தியாயம் 28) குறித்து அனுப்பிய மின்னஞ்சலோடு தமிழ்ப் புத்தாண்டு புலர்ந்தது.

It is very interesting. You are a keen observer of men and manners. You are gifted with a natural sense of humor, which is, sadly missing in modern writing. Of course you are also a modern writer and you have not discarded the possible old influences as bad cargo!
———————————————————————–

கலாப்ரியா பத்திரிகை கலெக்‌ஷனில் கலைமகள் ஓவியம் அட்டையில் போட்டிருக்கும் தீபம் பத்திரிகை இதழ் கவனத்தை ஈர்த்தது

தீபம் ஆகஸ்ட் 1972 (இந்திய சுதந்திர வெள்ளி விழா) இதழ் அது. நான் அப்போது புதுவை தாகூர் கலைக் கல்லூரியில் இயற்பியல் இரண்டாம் ஆண்டு மாணவன். தீபம் நா.பா அந்த ஆண்டு கல்லூரிப் பேரவையைத் தொடங்கி வைக்க வந்தார். மாணவர்கள் இரு குழுக்களாக (காங்கிரஸ் – திமுக) செயல்படத் தொடங்கிய நேரம் அது. பேரவைத் துவக்க விழா நிகழ்ச்சி தொடங்கியதுமே சரமாரியாகக் கல்வீச்சு. நா.பா நல்ல வேளையாகக் காயமின்றித் தப்பினார்.

கலாப்ரியா கலெக்‌ஷனில் ஒரு பத்திரிகை இதழே இப்படி நினைவுகளில் முழுக வைத்துவிடுகிறதே.. எல்லாம் சேர்த்துப் படித்தால்…

அருமை நண்பன் கலாப்ரியா தான் சேகரித்துப் பாதுகாக்கும் பழைய இலக்கிய இதழ்களை நிழற்படங்களாகப் போட்டதைப் பார்த்து முதலில் வந்தது பொறாமை.

உடனொடத்தவன், நாலு வயசு பெரியவனா இருக்கலாம்.. எப்படி சேர்த்து வச்சிருக்கான்.. நான் சிவகங்கையிலேயே விட்டுட்டு ஊர் ஊராச் சுற்றி இந்த சந்தோஷம் இல்லாமல் போனேனேன்னு வருத்தம்..

பழையன கழிதலும் .. சரிதான்.. மனம் கேட்க மாட்டேங்குதே!
————————-

யூடியூபில் ‘மறிமாயம்’ சில எபிசோட்கள் பார்த்தேன்.

கேரளத்தில் அதிகம் பார்க்கப்படும் டிவி சடையர் இது. மழவில் மனோரமா சானலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வருவது.

மறிமாயம் என்றால் ஏமாற்று – cheating, hoodwinking, creating a delusion.. எல்லாம் தான்.

கேரள அரசாங்கத்தில் ஒரு துறை, ஒரு ஆபீஸ் விடாமல் ஒவ்வொரு வார எபிசோடிலும் தேர்ந்தெடுத்து மகா உக்ரமாகக் கிண்டல் செய்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் ’மறிமாயம்’ போல ஒரு நிகழ்ச்சி இப்படி ரெண்டு வருஷத்துக்கு மேலாக வெற்றிகரமாக நடப்பது அசாத்தியமான காரியம்.

லோலிதன், வல்சலா மேடம், மொய்து, மண்டோதரி, சத்யசீலன் என்று எல்லா எபிசோட்களிலும் அதே பெயர்களில் வரும் கதாபாத்திரங்கள் – லோலிதன் ஆஸ்பத்திரி எபிசோடில் டாக்டராக இருப்பார், ரேஷன்கடை எபிசோடில் சிவில் சப்ளை ஆபீஸ் கிளார்க்காக இருப்பார் – இப்படி.

இந்தக் கதாபாத்திரங்களாக நடிக்கும் நடிக, நடிகைகள் கேரளாவில் பிரபலமாகி இருக்கிறார்கள். முக்கியமாக, சிரிக்கக் கூடாத சந்தர்ப்பத்தில் வசீகரமாகச் சிரிக்கிற லோலிதனாக வரும் எஸ்,பி.ஸ்ரீகுமார்.

மொழிமாற்ற சீரியல்களாக இந்தியில் இருந்து கண்றாவி கதைகளைத்தான் இறக்குமதி செய்ய வேண்டுமா? மலையாளத்தில் இருந்து ‘மறிமாயம்’ இங்கே வரலாமே!
——————————————————————–


தேவராஜன் மாஸ்டரை நல்ல இசையமைப்பாளராக மட்டும் அறிந்தவர்கள் அநேகம். அவர் நல்ல பாடகரும் கூட. ஓஎன்வி குறூப் எழுதி, இவர் இசையமைத்துப் பாடிய ‘துஞ்சன் பறம்பிலே தத்தே’ அபூர்வமான ஒரு நாடக மேடைப் பாடல். (நிங்கள் என்னெ கம்யூனிஸ்ட் ஆக்கி என்ற பெயரில் தோப்பில் பாசி எழுதி கே.பி.ஏ.சி நிகழ்த்திய நாடகம் என்று நினைவு)

மோகனத்தில் முதல் சரணமும், ஷண்முகப்ரியாவில் அடுத்ததும், தொடர்ந்து பெஹாஹ் ராகத்தில் (??) இறுதிச் சரணமும் வரும். எப்போதோ கேட்டு மனதில் தங்கிய பாடல் இது –

————————-
நியூயார்கர் பத்திரிகைத் தளத்தில் ஹருகி முரகாமியின் ‘பூனைகளின் நகரம்’ படித்தேன்.
சர்ரியலிசமும், மினிமலிசமும், நுட்பமான சித்தரிப்பும் கலந்த அபூர்வமான கதையாடல்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன