புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 30 இரா.முருகன்


அச்சுதம் கேசவம் – அத்தியாயம் முப்பது இரா.முருகன்

அமேயர் பாதிரியார் மரக் கூண்டுக்கு வெளியே நின்று எக்கிப் பார்த்தார். தூசு உறிஞ்சும் யந்திரத்தை அவ்வப்போது காலால் இயக்கிக் கொண்டு நடக்கிற நடுவயதுப் பெண் தவிர உள்ளே யாருமே இல்லை. பெரிய பூப்போட்ட உடுப்பும் மேலே நீலக் கோட்டும் அணிந்த லத்தீன் அமெரிக்கப் பெண்மணி அவள். உலகமே கண்ணாடிக் கூண்டுக்கு அந்தப் பக்கம் திரண்டு நின்று அழைத்தாலும் அவள் திரும்பி என்ன என்று பார்க்க உத்தேசித்திருந்ததாகத் தெரியவில்லை.

அந்த உலகத்தில் வேறு யாரையும் அவள் அலட்சியம் செய்யட்டும். அமேயர் பாதிரியாருக்குக் கவலை இல்லை. கால்டர்டேல் நகர நல்மேய்ப்பன். அவருடைய பட்டியில் இல்லாத ஆடுகளும் ஆடல்லாத இதர ஆப்ரஹாமிய ஜீவன்களும், சந்தித்த நேரம் தோறும் அன்பும் மரியாதையுமாக ஸ்தோத்திரம் சொல்லி வந்திக்கக் கூடியவரல்லவோ. தீர்மானமாக முகத்தை வேறு பக்கம் திருப்பியபடி தூசி அள்ளும் யந்திரத்தை நடத்திக் கொண்டிருந்த பெண்ணையும் சற்றே உய்விக்க அவளோடு பேச வேண்டும் என்று பாதிரியாருக்குக் கிடக்கை எழுந்தது.

பாதிரிக் குப்பாயத்தில் கைவிட்டுக் குடைந்து அவர் எதையோ எடுக்க முயற்சி செய்ய, கூடவே நின்ற கொச்சு தெரிசாவும் முசாபரும் மந்திரவாதி வித்தை காட்ட முற்படும் போது தோன்றும் ஆரவத்தோடு அவரைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள். அவர் முதலில் வெளியே எடுத்தது ஒரு வாரமாகத் தேடி எங்கோ விழுந்து தொலைந்து போய்விட்டது என்று கருதியிருந்த அவருடைய மூக்குக் கண்ணாடிக் கூடு. மரக் கூண்டின் ஜன்னல் ஓரம் விழுந்துவிடாமல் அதை வைத்துவிட்டு அடுத்துக் குப்பாயத்தில் தேட, கந்தலாகச் சுருண்ட நீல நிற வெல்வெட் துணியொன்று வந்தது. நாசம், பெண்பிள்ளைகள் பயன்படுத்துகிற கைக்குட்டை போல இருக்கும் இந்த வஸ்திரம் அவர் குப்பாயத்தில் எப்படி வந்தது என்று குழம்ப, நல்ல வேளையாக நினைவு வந்தது. புதுசாக மூக்குக் கண்ணாடி மாற்றியபோது, அது ஆறு மாதம் முன்பு, கடைக்காரன் மூக்குக் கண்ணாடி துடைக்க உகந்தது என்று சொல்லி இலவசமாகக் கொடுத்த துண்டுத் துணி அது.

முசாபர் கேள்வி ஏதும் எழுப்புவதற்குள் அந்தத் துணியின் பின்னணியைச் சொல்லி அதையும் கூண்டுக்கு வெளியே வைத்து விட்டு இன்னொரு முறை குப்பாயத்தில் தேட, முகத்தில் சீராக எழுதிய ஆனந்தம் குமிழிட்டு வந்தது. அவருடைய தபால் பெட்டியில் யாரோ போட்டு விட்டுப் போன இன்னொரு புத்தகமாக அது இருக்கலாம் என்று முசாபர் நினைப்பது போல் தெரிய, பாதிரியார் முந்திக் கொண்டார் –

புத்தகம், புறா எல்லாம் ஒண்ணும் இல்லே மக்களே. நான் மேய்ப்பன் மட்டும் தான். மந்திரக்காரன் இல்லே.

அவர் சொல்லியபடி, குப்பாயத்தில் இருந்து எடுத்த பத்து பென்ஸ் நாணயத்தை விரலால் சுண்டி, அதைக் கொண்டு மரக் கூண்டின் பலகையில் தொடர்ந்து சீராகத் தட்டத் தொடங்கினார்.

தூசி யந்திரத்தின் சீற்றத்தை அதிகப் படுத்தி கூண்டு போல ஏற்படுத்திய அறையின் இண்டு இடுக்குகளைச் சுத்தப் படுத்திக் கொண்டிருந்த பெண்மணி காதில் அது விழுந்திருக்காது தான். விழுந்திருந்தாலும் திரும்பியிருக்க மாட்டாள்.

எல்லா நன்மையும் உண்டாகட்டும் பெண்ணே. ஒரு வினாடி இதைக் கேள். கர்த்தர் உன்னில் உண்டு.

அவர் உரக்கச் சொல்ல, அந்தப் பெண்மணி திரும்பிப் பார்த்துக் கறாரான குரலில் ஸ்பானிஷ் உச்சரிப்பில் ஆங்கிலம் கலந்து சொன்னதைப் பாதிரியார் புரிந்து கொண்டது –

தெய்வம் அங்கேயே இருக்கட்டும். அல்லது உசிதம் போல் வேறெங்கும் போய் தங்கிக்கிடட்டும். இன்னும் பத்து நிமிடத்துலே நான் துப்புரவுக் காரியத்தை முடிச்சுக் கிளம்பலேன்னா நாசம். அகதிகளுக்குப் பாலும் முட்டையும் கொடுக்கற டிரஸ்டில் நான் போய் வாங்க ரெண்டுமே இல்லாம தீர்ந்து போயிடும். என்னை வேலை செய்ய விடுங்க பாதிரியாரே. கர்த்தர் உங்களை இறுக்கிப் பிடிச்சுக்கட்டும் ஆயுசுக்கும்.

பாதிரியார் ஆமென் சொல்லும் போது கொச்சு தெரிசாவும் சேர்ந்து கொண்டாள். அந்தப் பெண் தெரிசாவைக் கூர்ந்து பார்த்து விட்டுப் புன்னகையுடன் குப்பைக் கூடைகளை மேசைக்கு அடியிலிருந்து எடுக்க ஆரம்பித்தாள்.

அடுத்த நிமிடம் உள்ளேயிருந்து வந்த இரண்டு அதிகாரிகள் உயரம் கூடிய நாற்காலிகளில் ஏறி உட்கார்ந்தார்கள். துரைத்தனமான உடுப்பும் தோரணையுமாக அவர்கள் மரக் கூண்டின் சதுரம் சதுரமான பலகை அடைப்புகளை விலக்கினார்கள். அவர்களின் பார்வை அமேயர் பாதிரியார் மேல் நிலைக்க அவர் புன்னகை பூத்தார். அவர்களுடைய பிரார்த்தனையைச் செவிமடுத்து நல்ல வாக்குச் சொல்லி ஆசிர்வதிக்கத் தயாராக அவர் நிற்க, மேஜையைத் திறந்து குண்டூசி எடுத்துப் பற்களுக்கு நடுவே கடித்துப் பிடித்தபடி இருந்தார் அதில் ஒருத்தர். யாரோ உத்தரவு இட்டது போல் இரண்டு பேருமே காகிதக் கட்டுகளைப் பிரித்து மேலே இருந்த கோப்புகளை சிரத்தையாகப் புரட்ட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் வந்தனை சொல்லாவிட்டால் என்ன, பாதிரியார் சொல்வார். அவர் கையில் பிடித்திருந்த பத்து பென்ஸ் நாணயத்தால் கூண்டின் வெளியே தட்டியபடி ஸ்தோத்திரம் சொன்னார். அவர்கள் செவியைச் சாத்தானுக்குத் தத்தம் செய்தவர்களாகக் கையில் எடுத்த பணியில்லாத பணியிலேயே மூழ்கி முத்தெடுத்திருந்ததாகக் காட்டிக் கொண்டபடி இருந்தார்கள்.

மன்னிக்கவும் என்றார் பாதிரியார். அவரிடம் தான் மற்றவர்கள் அதைக் கேட்பார்கள். கருப்புத் துணித் திரைச்சீலையிட்ட இதைப் போன்ற ஆனால் சிறிய கூண்டில் அமர்ந்து பெண் பித்து பிடித்துத் தப்பு செய்ததையும், கோழி மாமிசத்துக்காகத் திருட்டும், திட்டுதலும் செய்தது பற்றியும், வயிறும் புத்தியும் நசிக்கக் கள் குடித்தது பற்றியுமெல்லாம் குற்ற ஒப்புதல் செய்து பாவமன்னிப்புக் கேட்பார்கள். ஒருத்தன் மாமியாருக்குக் கொடுக்க உத்தேசித்து எலுமிச்சைச் சாறும் ஜின்னுமாக மதுபானம் கலந்தபோது கக்கூஸ் குழாயிலிருந்து கொஞ்சம் அழுக்கு நீரும் கலந்து எடுத்துப் போனதற்காக வருத்தப்பட்டு மனப் பாரம் சுமந்ததை பாதிரியாரிடம் பகிர்ந்து, இறக்கி வைத்து இளைப்பாறினான். அது ஒரு மழைநாளில். ஜின்னோடும் எலுமிச்சைச் சாறோடும் கழிவறையின் அசுத்தமான தண்ணீரோடும், தான் வெளியேற்றிய வேறு நீரும் கலந்ததாக முழுசாக ஒப்புக் கொண்ட பிறகே மன்னிக்கப் பட்டான் அவன். ஆனால், இந்தியத் தூதரக ஊழியர்கள் மன்னிப்புக் கேட்க கால்டர்டேல் சர்ச் படியேறுகிறவர்கள் இல்லை. இவர்களிடம் ஒரு சுக்கும் அவர்களுக்குக் கெடுதல் செய்யாமல் வெற்று மன்னிப்புக் கேட்டுத்தான் பேச்சைத் தொடங்க வேண்டியிருக்கிறது. என்ன செய்ய?

என்ன வேணும்?

உள்ளே இருந்த அதிகாரிகளில் ஒருவர் பாதிரியாரைக் கேட்க, அவருக்குப் பின்னால் நின்றிருந்த முசாபர் விசாவுக்கு வந்திருப்பதாகப் பெருமையோடு அறிவித்தான்.

நான் உங்களைக் கேட்கவில்லை. பாதிரியாரைத்தான் கேட்டேன்.

அதிகாரி முசாபரைப் பார்த்தபடி நல்ல ஆங்கிலத்தில் சொன்னார். முசாபரை எதற்காவது நல்ல ஆங்கிலத்தில் கண்டிக்க வேண்டும் என்று அவருக்கு மனதில் தோன்றியிருக்கலாம்.

வேறே யாரும் வரவில்லையா?

குண்டூசியைப் பல்லில் இருந்து எடுத்து ஒரு காகிதத்தைத் துளைத்து வைத்துவிட்டு இன்னொரு அதிகாரி இன்னும் நல்ல ஆங்கிலத்தில் கேட்டார்.

கூண்டுக்கு இப்புறம் இருந்த மூவரும் இல்லை என்றார்கள்.

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டு விட்டு வந்திருக்கலாமே. நாங்கள் இன்று விசா வழங்காமல் மற்ற பணிகளை செய்வதாக இருந்தோம்.

அதிகாரி முகம் அதிருப்தியைக் காட்டியது. இந்தியா போன்ற அத்தனை பெரிய நாட்டுக்குப் போய் வர மூன்றே பேருக்கு மட்டும் அனுமதிக் கதவைத் திறப்பதை அவருடைய ஊழியம் தொடர்பான இழுக்காகக் கருதியிருப்பார் போல. மனதில் கோபம் மூண்டெழவோ என்னவோ பேசாமல் இருந்தார்.

நாங்கள் தொலைபேச முயற்சி செய்தோம். இணைப்பு கிடைக்கவில்லை.

தெரிசா சொன்னதை அவர் கேட்டதாகக் காட்டிக் கொள்ளாமல், பாதிரியாரைப் பார்த்து நீங்கள் சொல்லுங்கள், உங்களைத் தான் கேட்டேன் என்றார்.

நானும் இந்த தெரிசா வீட்டில் இருந்துதான் தொலை பேசினேன். சர்ச்சிலும் அதை அடுத்து எனக்கு ஒதுக்கிய வீட்டிலும் தொலைபேசி இல்லை. தேவன் இருந்தாலே போதாதா அங்கேயெல்லாம்?

பாதிரியார் சமாதானமாகச் சொன்னார்.

காண்டர்பரி ஆர்ச்பிஷப் உங்களுக்குத் தொலைபேச விரும்பினால் என்ன செய்வார்?

அதிகாரி ஆக்ரோஷமாகக் கேட்டார்.

காண்டர்பரி ஆர்ச்பிஷப் என்னோடு பேச விரும்பினால் ஆச்சரியமும் ஆனந்தமும் ஒருசேர அடைவேன். அவர் புராடஸ்டண்ட். நான் கத்தோலிக்க புரோகிதன்.

இந்திய அதிகாரி ஹே பகவான் என்று முனகிக் கொண்டார். அதைத் திருப்பிச் சொல்ல வேண்டுமா இல்லை விட்டுவிடலாமா என்ற குழப்பத்தில் பாதிரியார் நின்றார். அவருக்கென்னமோ அந்த அதிகாரி சொன்னது, எல்லோரையும் ஆசிர்வதியும் என்று இந்திய மொழி எதிலோ தெய்வத்திடம் மன்றாடுவதாகப் பட்டது. ஆபிரஹாமிய மதமாக இல்லாவிட்டாலும் மன்றாடலை உபாயமாகக் கடைப்பிடித்துத் தெய்வத்தைக் கூப்பிடுகிற எவனும் சங்கைக்குரியவனே.

முசாபர் ஏதோ சொல்ல வாயெடுத்தவனாக நிற்க, அதிகாரி அவனைச் சுருக்கமாகப் பேசச் சொன்னார். முசாபர் முன் யோசனையோடு தெரிசா காதில் ரகசியமாகக் கேட்டான்.

போன் செய்தால் யாரும் எடுக்கலை. ஒரே ஒரு தடவை எடுத்ததும் துப்புரவு செய்யற பெண் தான். யாரும் வரல்லேன்னாங்க. இதை இவர்கிட்டே சொல்லிடட்டா?

தெரிசா அந்தத் தகவல் ஒலிபரப்பப் தகுந்ததில்லை என்று அவசரமாகச் சொல்ல அவன் பேச ஒன்றுமில்லை என்ற முக பாவத்தோடு தலை குனிந்து நின்றான்.

ஏதாவது பேசணும்னா உங்கள் முறை வரும்போது சொல்லுங்க.

அதிகாரி சலுகை காட்டும் பாவனையில் கொச்சை ஆங்கிலத்தில் சொல்லியபடிச் செருகி வைத்த காகிததில் இருந்து குண்டூசியை உருவினார்.

ஒவ்வொருத்தராக பாஸ்போர்ட்டுகளைக் கொடுங்கள்.

அந்த அதிகாரி கழுத்து டையை இன்னும் இறுக்கிக் கொண்டு பேசினார். இதற்கு மேல் இறுக்கினால் இவருக்கு கல்லறை வளாகத்தில் தான் நாளை விடியும் என்று முசாபர், அமேயர் பாதிரியார் காதில் சொன்னான். தெரிசா அதை ரசிக்கவில்லை.

உங்கள் பாஸ்போர்ட்டை கொடுக்கச் சொன்னேன்.

அந்த அதிகாரி இன்னும் கொஞ்சம் கழுத்து டையை இறுக்க முயற்சி செய்து அது அசாத்தியம் என்று பட்டதுபோல், கை விலக்கி, அமேயர் பாதிரியார் கூண்டுக்குள் நுழைத்திருந்த அவருடைய பாஸ்போர்ட்டை அசிரத்தையோடு பார்த்தார்.

உங்க பாஸ்போர்ட்டா இது ஃபாதர்?

பாதிரியாருக்கு ஒரு வினாடி குப்பாயத்துக்குள் இருந்த அவர் பாஸ்போர்ட் மாறியிருக்கக் கூடுமோ என்று சந்தேகம் எழுந்தது. அல்லது குப்பாயமே வேறு எவருடையதோ?

அவர் நுனிக் காலில் நின்று சற்றே உள்ளே எம்பி, தன் பாஸ்போர்ட்டில் இருந்த புகைப்படத்தைப் பார்க்க முயற்சி செய்தார். அவரே தான். குருத்துவக் கல்லூரியில் படிக்கச் சேர்ந்தபோது எடுத்த படம். முப்பது வருடம் முந்தி எடுத்தது அது. அது படிக்கு இப்போதும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் சாத்தியமில்லை என்று அனுசரணையாகச் சொல்ல ஆயத்தமானார் அவர்.

அதிகாரி அடுத்தபடி கேட்டார் –

மைக்கேல் அண்டொயின் அம்மேயார்னு பெயர் இருக்கு இதிலே

மிக்கேல் அந்த்வான் அமேயர்.

பாதிரியார் சரியான பிரஞ்சு உச்சரிப்பில் தன் பெயரைச் சொன்னார். தேவனுக்கு ஸ்தோத்திரம். இந்த மாதிரியான சந்தர்பங்கள் அபூர்வமாகவே கிடைக்கின்றன.

மிக்கேலோ மைக்கேலோ ரெண்டும் ஒண்ணு தான். கிறிஸ்துவப் பெயர்கள்.

அதிகாரி அவருடைய உற்சாகத்தின் சுவாசத்தை உருவி விட்டபடி தொடர்ந்தார்.

ஃபாதர் அமேயர் என்று ஏன் போடப்படவில்லை இதில்?

நான் தியாலஜி காலேஜில் படித்தபோது எடுத்த பாஸ்போர்ட் இது.

படித்து முடித்ததும் பட்டம் கொடுத்திருப்பாங்களே, அப்போ பாஸ்போர்ட்டில் மாற்றியிருக்கலாமே

ஃபாதர் என்று பட்டம் எதுவும் தரவில்லை.

அப்போ, நீங்க பாதிரியார் என்று எப்படி நம்புவது? போப்பாண்டவரிடம் இருந்து கடிதம் வாங்கி வருவீர்களா?

அமேயர் பாதிரியாருக்கு, இது எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று புரியவில்லை.

இன்னொரு அதிகாரி அவரை ஆதரவாகப் பார்த்தபடி தன் சகாவிடம் ரகசியமாக ஏதோ சொல்ல, அவர் பாஸ்போர்ட் தகவல்களை ஒரு பேரேட்டில் பதிந்து, பாதிரியாரிடம் கேட்டார்

எத்தனை மாதம் இந்தியா போகிறீர்கள் ஃபாதர்?

அமேயர் பாதிரியாருக்கு உலகம் திரும்ப சகித்துக் கொள்ளக் கூடியதாகத் தோன்றியது. கர்த்தரின் சாம்ராஜ்யம் பிரபஞ்சம் முழுக்கப் பரந்தது. இந்தியாவும் அதில் அடக்கம். விசாவும் மற்றதும் தானே வந்து சேரும். அதற்காக அவர் இன்று மாலை நன்றி தெரிவித்துப் பிரார்த்தனை செய்வார்.

ஒரு மாதம் போதுமில்லையா?

அந்த அதிகாரி கேட்டபோது குரல் மென்மையாக இருந்ததை பாதிரியார் கவனிக்கத் தவறவில்லை.

பாஸ்போர்ட்டை சாயங்காலம் வந்து வாங்கிப் போகச் சொன்னார் அதிகாரி. எத்தனை மணிக்கு என்று தயக்கத்தோடு அமேயர் பாதிரியார் கேட்க, இரண்டு மணிக்கு என்றார் அவர். அது பிற்பகல் அல்லவோ. இருக்கட்டும். விசா கொடுக்கப்பட்ட நாட்டில் இரண்டு மணி என்பது மாலை நேரமாக இருக்கலாம். ராத்திரி எட்டு மணிக்கே எல்லோரும் படுக்கைக்குப் போகிறவர்களாகவும் இருக்கக் கூடும். ஜனத்தொகை அதிகமானதுக்கு அதுவும் காரணமோ என்னவோ.

அது பற்றிய கவலைகளை ஒத்தி வைத்துவிட்டு அவர் நிற்க, நீங்கள் போகலாமே ஃபாதர் என்றார் அதிகாரி.

நான் இவர்களுக்கு ஒத்தாசை செய்யவே நிற்கிறேன். தப்பாக நினைக்க மாட்டீர்களே?

அதிகாரி ஒன்றும் சொல்லாமல் கொச்சு தெரிசாவிடம் பாஸ்போர்ட் கேட்டார். வம்சாவளி இந்தியர் என்று முதல் பக்கத்திலேயே கொட்டை எழுத்தில் எழுதியிருந்ததை அவர் ரசித்தார் என்று தோன்றியது.

ஹௌஸ் ஒயிஃப் தானே?

கடை வச்சிருக்கேன். மீனும் வறுவலும் விற்கிற கடை.

அவர் பாஸ்போர்ட்டை ஏனோ முகர்ந்து பார்த்தார். திருப்தி அடைந்தபடி ஒரு மாதம் விசா அளித்ததாகச் சொன்னார். மீனும் வறுவலும் விசாவுக்கு உதவியதாக தெரிசாவுக்குத் தோன்றியது. கூட நிற்கிற அமேயர் பாதிரியாரின் செல்வாக்கும்.

முசாபர் பாஸ்போர்ட்டை உள்ளே நுழைத்தபோது அந்த அதிகாரி வியப்போடு சொன்னது –

பாகிஸ்தான் பாஸ்போர்ட்டா?

ஆமாம்.

உங்களுக்கு இந்தியா போக அனுமதி தர முடியாது

அவங்களுக்கு கொடுத்தீங்களே?

அவன் கொச்சு தெரிசாவைக் காட்ட, என்ன உறவு என்று கேட்டார் அதிகாரி.

மனைவி.

அவங்க இந்திய வம்சாவளி.

நானும் தான். என் முன்னோர்கள் தென்னிந்தியாவில் கடப்பா என்ற ஊர்லே இருந்து பாகிஸ்தான் போனவங்க.

அவங்க இங்கே வந்து அதை நிரூபிப்பாங்களா?

செத்துப் போய்ட்டாங்க. எப்பவோ போயாச்சு.

அப்போ உங்களுக்கு விசா கிடையாது.

எனக்கு வேணுமே.

முசாபர் குரல் உயர்த்தினான்.

அப்ப பாகிஸ்தான் விசா வாங்கிக்குங்க.

நீங்க தருவீங்களா?

அதுக்கு பாகிஸ்தான் கான்சலேட் தான் போகணும்.

பாகிஸ்தான் விசாவோடு நான் எப்படி இந்தியா போவது?

அது உங்க பிரச்சனை. என்னோடது இல்லே.

அமேயர் பாதிரியார் இரண்டு கையையும் தோள் அளவு உயர்த்தி உலகை எல்லாம் ஒரு சுற்றில் ஆசிர்வாதம் செய்தார். மதச் சடங்கை நிறைவேற்ற வாதிக்கனில் இருந்து அனுப்பப்பட்ட புரோகிதர் போல் குருத்துவக் கல்லூரியில் சொல்லிக் கொடுத்த லத்தீன் வாக்கியங்களைச் சொன்னார். அவை மறந்த இடத்தில் எல்லாம் ஆமென் என்று கூட்டிச் சேர்த்து முடித்த பிறகே நினைவு வந்தது, தான் சொன்னது லத்தீன் இலக்கியத்தில் எறும்புகள் மற்றும் வண்டுகள் பற்றிய கவிதை என்று. ஆனாலும் என்ன, எறும்புகளும் வண்டுகளும் கர்த்தரின் சிருஷ்டி தானே. அவற்றைப் பற்றிக் கவிதை சொல்வதும் வழிபாடே.

அதிகாரி திரும்ப குளிர்ந்த முகத்தோடு முசாபரைப் பார்த்தார். நீண்ட நெடுநாள் காணாமல் போயிருந்து திரும்பி வந்த மூத்த சகோதரனைப் பார்த்த மகிழ்ச்சி அவர் உடல் அசைவிலும் புன்னகையிலும் அர்த்தமானது.

பாய் சாப், மூட்டையைக் கட்டுங்க. இந்தியா உங்களை அழைக்குது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன