புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 29 இரா.முருகன்


ஒரு மாசத்துக்குச் சாப்பாட்டுக் கடையை அடைச்சுப் பூட்டிட்டுப் போனா, கால்டர்டேல் ஊரில் பல பேர் பட்டினியால் செத்துப் போயிடுவாங்க. அப்படி இல்லேன்னாலும் தெரிசா கடையில் விற்கும் வறுத்த மீன் எப்படி இருக்கும், கூடவே வறுவல் எவ்வளவு வரும், கொஞ்சம் போல புளிப்பும் கொஞ்சம் போல காரமுமாக அது எப்படி மீனோட வாடையோடு சமாதானமாகச் சேரும்னு எல்லாம் மறந்து விடலாம். இந்தப் படிக்கு வேறு மீனும் வறுவலும் விக்கற பெரிய கடை கால்டர்டேலில் இதுவரை இல்லை. நாம் கடையை ஒரு மாசம் அடைச்சா யாராவது கடை போடலாம். அமேயர் பாதிரியாரே கூட வேறே யாரையாவது தயார்படுத்தி இதைச் செய்யலாம். பாதிரியார் மீன் விக்கக் கூடாதா என்ன?

முசாபர் அலி படித்துக் கொண்டிருந்த மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகையைக் கீழே போட்டான். அச்சு வாடையடிக்கும் காகிதம் பக்கம் பக்கமாகக் கலைந்து விழுந்து கிடக்கத் தலையை ஆட்டியபடி முணுமுணுத்துக் கொண்டான்.

அது விடிந்ததும் மீன் வாங்கப் புறப்பட்டுப் போன கொச்சு தெரசாவுக்குச் சொல்ல உத்தேசித்தது. விடிகாலை உறக்கத்தின் சுவட்டை முழுக்கக் கலைத்தபடி அவளிடம் இதைச் சொல்ல முடியவில்லை. அவன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக ஆன பொழுது, தெரிசா மார்க்கெட்டில் தானோ, அல்லாமல், கொஞ்சம் நடையை எட்டிப் போட்டு பீஸ்ஹால் வளாகத்திலோ மலிவாக மீன் கொள்முதல் செய்து கொண்டு இருக்கிறாள். என்றாலும் சொல்ல உத்தேசித்ததை அந்தப்படிக்கே சொல்லிப் பார்த்து விட்டால் நிச்சயமாக இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது சரஞ்சரமாக எல்லாம் வந்து விழும்.

பிரிட்டீஷ் அரசியல் சிக்கல்களோடு சொந்தக் குடும்பப் பிரச்சனைகளையும் விடியும்போது மனதில் அசைபோடுவது முசாபருக்குப் பழகிய ஒன்று. கொச்சு தெரிசா ஒரு மாதம் போல இந்தியாவுக்கு அதுவும் தென்னிந்தியப் பகுதிக்கு அவளுடைய சொந்த பந்தங்களைத் தேடிப் பிரயாணம் வைக்க முடிவு செய்ததில் இருந்து, கொப்பும் குழையுமாக அவனுக்கு அசைபோட நிறையக் கிடைக்கிறது.

இந்தியா போய் அங்கே மாதாகோவில்களிலும், உள்ளே போக அனுமதித்த அளவு புராதனமான கோவில்களிலும் நேர்ச்சைக் கடன் செலுத்தித் திரும்பி வந்தால் அவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகலாம் என்பது அவளுடைய வாதம்.

அங்கெல்லாம் போவதால் நல்லது ஏற்படும் என்றால் முசாபர் குறுக்கே நிற்கக் கூடிய ஆளில்லை. என்றாலும் குடும்ப வியாபரத்தையும் கணக்கில் கொள்ளணுமே.

காலடியில் போட்ட பத்திரிகை வாசலில் இருந்து மெல்ல அடிக்கும் காற்றில் அறைக்குள் அங்கேயும் இங்கேயும் அலங்கோலமாகப் பறந்தது. பத்திரிகையின் முமு மதிப்பு மனதில் படச் சற்றே சிரமப்பட்டுக் குனிந்து, பொறுமையாகப் பொறுக்கி எடுத்தான். பக்கங்களைச் சீராக நிறுத்தி, முனைகளை நீவி, தாறுமாறாக ஏற்பட்ட மடிப்பெல்லாம் நீக்கி சமனப்படுத்தினான். காலையில் வந்து விழுந்தபோது இருந்த ஒன்றுக்குப் பின் மற்றொன்றாகக் காகிதங்களை அடுக்கிய நீள்சதுர வடிவமைப்பு கிட்டத்தட்டத் திரும்ப எழுந்தது. திருப்தியோடு பத்திரிகையை நீள பெஞ்சில் ஓரமாக வைத்தான். பாதி கிழிந்த பழைய பத்திரிகை இதழ்களின் அடுக்கில் அது சேர்ந்தது.

எல்லாம் உபயோகப்படப் போகிறது. அலைந்து விலை படிந்து வந்து கொச்சு தெரிசா வாங்கி வரப்போகிற மீன் மட்டுமில்லை, மொத்தமாக வாங்கி, நமத்துப் போகாமல் இறுக அடைத்த தகரப் பெட்டிகளுக்குள் வைத்திருக்கிற வறுவல் மட்டுமில்லை, வீட்டுப் பின்பகுதியில் பலகை வைத்து வரிசை செய்து வைத்த சிறு எண்ணெய்ப் பீப்பாய்கள் மட்டுமில்லை, இந்த பத்திரிகைத் துண்டங்களும் பொறித்த மீனும் வறுவலும் விளம்பித் தரும் வியாபாரத்துக்கு வேண்டியவை.

எண்ணெய் சொட்டச் சொட்டப் பொறித்தெடுத்த மீன் துண்டங்களையும், வறுவலையும் வாங்குகிறவர்கள் பத்திரிகையில் கிழித்த காகிதத் துண்டில் வைத்துத் தருவதைத் தான் விரும்புகிறார்கள். பிஷ் அண்ட் சிப்ஸ் கடைகள் எல்லாவற்றிலும் இதுதான் வழக்கம். காகிதம் உறிஞ்சியது போக மிஞ்சிய எண்ணெயோடு சாப்பிடுகிற மீன் ருசியாக இருப்பதோடு வயிற்றுக்கும் கெடுதல் ஏதும் செய்வதில்லை என்பது பரவலான நம்பிக்கை. அதுவும் கார்டியன் பத்திரிகை அளவாக எண்ணெய் உறிஞ்சுவதால் நல்ல வாடையோடு மீன் சாப்பிட முடியும்.

கொச்சுத் தெரிசாவின் மீனும் வறுவலும் கடை இந்தப் பிராந்தியத்திலேயே பழையது. தெரிசாளின் தகப்பன் அந்த்ரோஸ் பதினெட்டு வயதாக இருக்கும்போதே
ஆரம்பிக்கப்பட்ட கடை இது என்பதை முசாபர் அறிவான். சொல்லப் போனால், அந்திரோஸ் அங்கிளுடைய அம்மாவான முழுக்க முழுக்க இந்தியப் பெயரோடு இருந்த பெண்மணி உண்டே. கொச்சுத் தெரிசா கூட அந்தப் பெயரை அமேயர் பாதிரியார் குடும்ப மரம் பற்றிப் பேசும்போது சொன்னாள், வயசான அந்த முதுபெண் இந்தக் கடையில் குந்தியிருந்து வியாபாரம் பார்த்திருக்கிறாளாம்.

பிறந்தது முதல் சுத்த சைவமாக இருந்தவளாம் அந்தக் கிழவி. கல்யாணத்துக்கு அப்புறமே கொஞ்சம் கொஞ்சமாக மாமிச பதார்த்தங்கள் பழகியவளாம். அமேயர் பாதிரியாரைக் கேட்டால் பெயர் தெரியலாம். கொச்சு தெரிசாவைக் கேட்டால், அதெல்லாம் தெரியணும் என்றால், இந்தியாவுக்குப் போய்விட்டு வந்துவிடலாம் என்பாள். அங்கே ஆரம்பித்தது தான் இந்தக் காலைநேர யோசனைகள்.

வாசலில் சைக்கிள் மணிச் சத்தம். தெரிசா சைக்கிள் ஓட்டுவதில்லை. எந்த நிமிஷத்திலும் விழுந்து விடலாம் என்ற நினைப்பு மனசின் அடித்தளத்தில் இருக்க, எல்லாம் ஒழுங்காக, நூல் பிடித்த மாதிரி நேராக நடக்கிறது என்று நம்பிக்கொண்டு அங்கும் இங்கும் சைக்கிளில் அலைந்து திரிய முடியாது என்கிறாள் தெரிசா. ஒரு வினாடி நிலைத்து நிற்பது, அப்படியே நகர்ந்து அந்த நிலைப்பை உடம்பில் தக்க வைத்துக் கொள்வது என்று விழுவது பற்றிய பயத்தைச் சிறகொடித்துப் போடத்தான் சைக்கிள் என்கிறான் முசாபர் அலி.

என்ன சொன்னாலும் அவளுக்கு சைக்கிள் அந்நியமானது. பயித்தாரத் தனமாக அவ்வப்போது நடந்து கொண்டாலும், மெட்காப் லண்டனில் வாங்கி வந்த கார் அவளுக்கு சங்கடம் தராதது. அவள் ஓட்டினால் சுவர் எதிலும் போய் மோதாமல், பர்மா ஷெல் கடையில் பெட்ரோல் போட்டால் சதி செய்து நின்று போகாமல், ஊரில், தேசத்தில் இருக்கப்பட்ட உடனொடுத்த கார்கள் மாதிரி அது உருண்டு போகிறது. மீன் வாங்கப் போவதில் அதற்கு அதிக உற்சாகம் என்கிறாள் தெரிசா.

வாசலில் சைக்கிளை காம்பவுண்ட் சுவரோடு சேர்த்துச் சாய்த்து நிறுத்தி விட்டு அதன் பின் சக்கரத்தில் சங்கிலியைச் செலுத்திப் பூட்டிக் கொண்டிருந்தார் அமேயர் பாதிரியார்.

விடிந்து ரெண்டு மணி நேரமோ, நடுப்பகலோ, ராத்திரி படுக்க ஒரு மணி முன்போ, அவருக்குப் பேச்சுத் துணை வேண்டியிருக்கிறது. சைக்கிளை ஓட்டிக் கொண்டு முசாபர் அலியைத் தேடி வந்து விடுகிறார்.

அவருடைய மந்தையில் இருக்கப்பட்ட ஆடுகளிடம் முறை வைத்து நாளைக்கு ஒருத்தர் என்று பேசினால் என்ன? முசாபர் கேட்டுப் பார்த்து விட்டான்.

கிட்டத்தட்ட மாதத்துக்கு ரெண்டு தடவை ஒரே நபரோடு பேச வேண்டியிருக்கும். ஒரு தடவை பேசுவதே பெரும்பாடு முசாபரே என்று சொல்லி விட்டார் பாதிரியார்.

அந்நிய மதம் ஆச்சே முசாபர் என்று அடுத்த வாதத்தை அவன் முன்வைத்தாலும் அமேயர் பாதிரியார் அதைப் பற்றிப் பெரிசாக அலட்டிக் கொள்ளவில்லை. அப்ரஹாமிய மதம் தானே ரெண்டும் என்பதை அவர் சற்று பெருமையோடு எடுத்துச் சொன்னாலும் முசாபருக்கு அதிலெல்லாம் சிரத்தை என்று ஒன்றுமில்லை.

இந்த அநியாயத்தைக் கேட்டியோ முசாபரே.

படி ஏறி வந்தபடிக்கே பாதிரியார் சொல்ல, அவருக்கான நாற்காலியை தீனி மேசையில் மடித்துக் குறுக்கே போட்டிருந்த துணி கொண்டு தட்டிச் சீராக்கினான் முசாபர். இன்னும் அரை மணி நேரத்துக்காவது பாதிரியாரின் வாய் பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

என் தபால் பெட்டியில் இன்னிக்கு என்ன கிடந்ததுன்னு நினைக்கறே?

காண்டாமிருகத்தின் கொம்பு? இற்றுப் போன ஒற்றை சாக்ஸ்? எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கோவிலைப் பிடிக்காதவர்கள் எதை வேண்டுமானாலும், அந்தத் தபால் பெட்டியில் போட்டு அமேயர் பாதிரியாரைப் பரிகசிக்க நினைக்கலாம்.

பாதிரியார் குப்பாயத்துக்குள் கை விட்டு செத்துப் போன எலியை எடுப்பது போல் இடது கையில் இரண்டே விரல்களால் தூக்கியபடி ஒரு சின்னப் புத்தகத்தை எடுத்து வெறுப்போடு முன்னால் இருந்த சின்ன மேசையில் போட்டார்.

இது என்ன?

இமல்டா உள்ளே சாயா எடுக்கிற சத்காரியம் செய்கிறாளா என்று அவசரமாகக் கிசுகிசுத்த குரலில் அவர் கேட்டார்.

இல்லையே பாதர். அவள் நேற்றும் இன்றும் லீட்ஸ் போக வேண்டி லீவு சொல்லி விட்டாள்.

நல்லதாகப் போச்சு என்றார் அமேயர் பாதிரியார்.

அதில் என்ன நல்லதாக இருக்கு என்று முசாபர் அலிக்குத் தெரியவில்லை. இமல்டா இருந்தாலும் எழுந்ததும் தெரிசாவை எதிர்பார்க்காமல் சுமாரான தரத்தில் சாயா கிடைக்கும். தானே போடலாம் என்றால் டீத்தூள் வேறே இல்லை. மீனோடு டார்ஜிலிங் டீத்தூளும் தெரிசா வாங்கி வரும் வரை வெறும் வென்னீரைக் குடித்தபடி வாய் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். அவன் பாதிரியார் மேசையில் போட்ட புத்தகத்தை அசிரத்தையோடு பார்த்தான்.

முசாபரே, மகா ஆபாசமும் அருவெறுப்புமான புத்தகம் இது. எவனோ சாத்தானுக்கு இஷ்டமான மனுஷ்யன் இதை என் தபாலோடு கொண்டு வந்து போட்டுப் போயிருக்கான். என்ன சொல்ல. மகா தரக் கேடான விஷயம் இது. அந்தப் பாவம் மனுஷனைப் பிடித்த சாத்தான் விலக சாயந்திரம் பிரார்த்தனை செய்ய உத்தேசம்.

முசாபர் இப்போது அந்தப் புத்தகத்தைப் பார்த்தது வித்தியாசமாக இருந்தது. அது சரி, ஆபாசமும் அருவெறுப்புமான புத்தகம் என்று எப்படி இவருக்குத் தெரியு வந்தது? உள்ளே அந்த மாதிரிப் பட்ட படம் எல்லாம் நிறைய இருக்குமோ?

சந்தேகத்தை உடனடியாக அமேயர் பாதிரியாரிடம் கேட்க, அவர் மகா உறுதியாக இல்லை என்று இடவலமாகத் தலையாட்டினார். அப்புறம் எப்படி?

என்ன மாதிரியான தரக்கேடும் நாணக்கேடும் இதெல்லாம்னு தெரிஞ்சுக்க நான் கொஞ்சம் வாசிச்சுப் பார்த்தேன். கல்யாணமான ஒரு ஸ்திரியும் அவளை இச்சித்த அயல் மனுஷன் ஒருத்தனும் அவன் வீட்டுலேயும் அவள் வீட்டிலேயும் அவர்களைக் கட்டியவர்கள் இல்லாத நேரங்களில் கிடந்து, தகாத காரியங்கள் செய்யறாங்க. அதுவும், ஜீவராசிகள் இனப்பெருக்கத்துக்காக சுபாவமா செய்யறது கூட இல்லே. மிருகங்கள் கூட செய்யாது. கற்பனையிலும் நினைக்க ஏலாத அசிங்கம் எல்லாம்.

அவர் சொல்லச் சொல்ல முசாபருக்கு அந்தப் புத்தகத்தை உடனே எடுத்துப் படிக்க வேண்டும் என்ற நினைப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகிக் கொண்டே போனது.

ஏன் முசாபரே, தெரியாமத் தான் கேக்கறேன். முழிச்சிருக்கற நேரம் எல்லாம் ஒரு மனுஷனோ மனுஷியோ இனக் கவர்ச்சியும் சேர்க்கையும் தவிர வேறெதும் நினைக்க மாட்டாங்களா?

அதுதானே என்றான் முசாபர் எதுதானே என்று புரியாமல்.

அந்தப் பெண் காலையில் எழுந்திருந்ததும் எந்த பேஸ்ட் உபயோகிச்சு பல் துலக்குவாள்? அவள் என்ன படிச்சிருக்கா? வென்னீரைக் கொதிக்க வைச்சு சாயா போடுவாளா இல்லே பாலில் டீ இலையைப் போட்டுக் கொதிக்க வைப்பாளா? காலையிலே என்ன சாப்பிட்டுப் பசியாறுவா? அவள் வயிறு எந்தத் தடசமும் உப்புசமும் இல்லாமல் கழிவை எல்லாம் கிரமமாக வெளியேற்றுமா? என்ன நிற உடுப்பு அவளுக்கு இஷ்டமானது? போன கிறிஸ்துமஸுக்கு கிறிஸ்துமஸ் மரம் வீட்டில் வச்சாளா? யாரு அதை அலங்காரம் செஞ்சது? சர்ச்சுக்குப் போவாளா? எந்த சங்கீதம் பிடிக்கும்? ரேடியோவிலே நியூஸ் கேட்பாளா? கார்டியன் படிப்பாளா? அதுன்னு இல்லே, எந்தப் பத்திரிகையாவது தினசரி படிப்பாளா?

அதெல்லாம் தெரிஞ்சுக்க இந்தப் புத்தகத்திலே வழி ஒண்ணும் இருக்கறதாத் தெரியலே பாதர்.

அவன் புத்தகத்தை சிரத்தையில்லாதவன் மாதிரி எங்கேயோ பார்த்துக் கொண்டு கவனமாக எடுக்கும்போது கொச்சு தெரிசா காரை ஓட்டிக் கொண்டு காம்பவுண்டுக்குள் நுழைந்தாள். சீராக முன்னால் போன கார் என்னமோ நினைத்துக் கொண்ட மாதிரி கொஞ்சம் பின்னால் நகர்ந்து அமேயார் பாதிரியாரின் சைக்கிளை இடித்துக் குடை சாய்த்தது.

கேடு கெட்ட இரும்பு வாகனமே.

பாதிரியார் கையை உயர்த்தி ஒரு எட்டு முன்னால் வைத்தார். கொச்சு தெரிசா காருக்குள் இருந்து ஸ்டீயரிங் பிடித்தபடி பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் தன்னைத் திட்டுவதாக அர்த்தம் செய்து கொள்ளக் கூடும் என்றுபட, சத்தத்தை அவசரமாக விழுங்கினார். அடிபட்ட மயில் மாதிரி விழுந்து கிடந்த சைக்கிளைப் பார்க்க அவர் உதடு துடிக்க அழுவது போல் முகம் கோணியது.

அவர் திரும்ப உள்ளே வந்து முசாபர் அலியிடமும் கொச்சு தெரிசாவிடமும், சொல்பேச்சு கேட்காத கார்கள் பற்றியும், அவற்றை உடனே களைய வேண்டியதன் அவசியம் பற்றியும், வாதிக்கனில் இருந்து இங்கே ஆயர்கள் வரும்போது இப்படியான தேவையற்ற பொருட்களைத் துறக்க வேண்டியது முக்கியம் என்று சொன்னதைப் பற்றியுமெல்லாம் சாயா ஆறியது பற்றிக்கூடக் கவலைப்படாமல் பேசுவார். பேசியிருக்கிறார். அந்தக் கேடுகெட்ட கார் முதல் தடவையாகவா அவர் சைக்கிளை இடித்து விட்டு ஏதும் நடக்காத மாதிரி முன்னேறிப் போயிருக்கிறது?

மீனை பூச்செண்டு மாதிரிச் சுமந்து கொண்டு கொச்சு தெரிசா உள்ளே வர, அமேயர் பாதிரியார் சுவாகதஞ் சொன்னார். பாதிரியாரின் வீட்டுக்குள் நுழைந்து விட்டோமா என்று தயங்கியது போல் ஒரு வினாடி தெரிசா பதற்றமாகப் பார்த்து, ஸ்தோத்ரம் என்றாள்.

அமேயர் கையை ஏதோ மாயம் செய்யப் போகிறது போல உயர்த்த, முசாபர் வெகு தந்திரமாகக் குட்டி மேசையில் கிடந்த புத்தகத்தைக் கைப்பற்றி பைஜாமா ஜேப்புக்குள் போட்டுக்கொண்டு உள்ளே போனான். பாதிரியார் புத்தகத்தை இங்கே எடுத்து வந்ததே அவனுக்குக் காட்டிக் கடைத் தேற்ற முயற்சி செய்ய வேண்டி இருக்கலாம் என்று முசாபருக்குத் தோன்றியது. சிருங்கார ரசம் மட்டும் மிகுதியாகச் சொட்டும் கிரந்தங்களை முசாபர் படிக்க மறைமுகமாக வழி செய்வதில் அவருக்கு இஷ்டம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், வேற்று மதத்தான், ஆப்ரஹாமிக பங்காளி, தாயாதி உறவு ஆனவன். இது பாவம் என்று அமேயர் பாதிரியார் எடுத்துச் சொல்வதை விட அவனே உணர்ந்து கொள்ளட்டும். கெட்ட பிறகு அவனை ரட்சிக்கலாம் என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.

அவர் கிடக்கட்டும். புத்தகத்தில் படம் பிடித்துப் போட்டு, நல்லதாக நாலைந்து சம்போகக் காட்சிகள் கண்ணில் பட்டால் இன்றைக்கு சீக்கிரமே மீனும் வறுவலும் கூறு கட்டி விற்பதை முடித்துக் கொண்டு தெரிசாவோடு பேசிக் கொண்டிருக்கலாம். அவளுக்கும் அந்தப் புத்தகத்தைப் படம் பார்க்கத் தரலாம். அமேயர் பாதிரியார் கொடுத்தது என்றால் அவள் கேள்வி ஏதும் கேட்கமாட்டாள்.

ஆனால் அவளுடைய மீன் வாடை நகக் கண்ணிலும் அடிக்கக் கூடியது. விடிகாலையிலேயே அணைத்துப் பிடித்துப் பெரிய பெரிய மீனாக வேறு தூக்கி வருகிறாள். ராத்திரி படுக்கைக்கு வரும்போது அது மிச்சம் இருக்கும். நாற்றம் கொஞ்சம் போல இருந்தால் தான் காமம் என்பது முசாபருக்குத் தெரியும். ஆனால் நாற்றமே காமம் என்று மூக்கைச் சாகடித்து விட்டுப் படுத்துக் களிக்க முடியாதே.

மீனை உள்ளே வச்சுட்டு வா. அவசரமா ஒண்ணு சொல்ல வேண்டியிருக்கு. அதுக்குத் தான் கிளம்பி வந்து விருத்தி கெட்ட என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தாச்சு.

அமேயர் பாதிரியார் சொல்லியபடி எதேச்சையாக மேசையைப் பார்க்க அது வெறுமையாக இருந்ததைக் கவனிக்கத் தவறவில்லை. முசாபர் தவிர யாரும் அந்தப் புத்தகத்தை எடுத்திருக்க முடியாது. போகட்டும். நல்லதுக்குத்தான் அது. சிலுவைப்பாடுகளில் அந்த ஆட்டுக்குட்டி நம்பிக்கை வைப்பது சீக்கிரம் நடக்கட்டும். அப்புறம் இதெல்லாம் சீ என்றுபோய்விடும். எப்போதாவது மனசு சஞ்சலப்பட்டாலும், அங்கே இங்கே தரிகெட்டு அலைந்தாலும், தப்பே செய்தாலும், அவர் இருக்கிறார். கோவில் இருக்கிறது. அங்கே மன்னிப்புப் பெட்டி இருக்கிறது.

கொச்சுத் தெரிசா சோப்பு வாடை அதிகமாக அடிக்கும் கையோடு தேநீர் கொண்டு வந்தபோது முசாபர் உள்ளேயிருந்து சகஜமான முகக் குறிப்போடு திரும்பி வந்து பாதிரியாருக்குத் தேநீர் உபசாரம் அளிப்பதில் மும்முரமானான்.

தெரிசா, மீன் வாங்குவதில் இருக்கும் நுட்பங்கள், பேரம் பேசுவதில் நெளிவு சுளிவுகள், பொறித்தால் எண்ணெய் அதிகமாகக் குடிக்காத மீன் எது, வாடிக்கையாளர்கள் எந்த மீனை அதிகமாக விரும்புகிறார்கள் என்பதை எல்லாம் உற்சாகமாகச் சொல்ல, பாதிரியார் மெல்லத் தேநீர் குடித்துத் திருப்தியடைந்தார்.

அப்புறம் தெரிசாளே, முசாபரே, உங்களுக்குச் சொல்ல ஒண்ணு உண்டு என்றேனே அது இதுதான்.

அவர் பாதிரிக் குப்பாயத்தின் இடுப்புப் பாக்கெட்டில் கை விட, முசாபர் சுவாரசியம் காட்டினான். இன்னொரு புத்தகம் அங்கே இருக்குமோ? இருந்தாலும் தெரிசாவுக்கு அதையெல்லாம் காட்டித் தர ஏன் சைக்கிளேறி வரவேண்டும் அவர்?

பாதிரியார் கையில் எடுத்தது மகாராணி படம் போட்ட தபால்தலை ஒட்டிய நீல நிறக் கடுதாசி உறையை.

தெக்கேபரம்பில் பாதிரியார் வாதிக்கன்லே இருந்து எழுதியது. உனக்கு அவரைப் பத்தி சொல்லியிருக்கேனே.

ஆமா, அவர் எழுதின கடிதத்தை படிக்கக் கொடுத்தீங்களே என்றாள் தெரிசா.

அதேபடி இதையும் வாசிச்சுடு கொச்சே கேட்போம். நான் மூக்குக் கண்ணாடி கொண்டு வரல்லே. இருந்தால் நானே படிச்சிருப்பேன். அப்புறம் உங்க இந்தியப் பெயர்கள் வேறே. வாய் சுளுக்கிக் கொள்ளும். சரிதானே.

தெரிசா உள்ளேயிருந்து மூக்குக் கண்ணாடி எடுத்து வரும்படி முசாபரிடம் சொல்ல அவன் வெகு வேகமாக எழுந்து படுக்கை அறைக்குப் போனான்.

பெட்ரூமுக்கு எதுக்குக் கண்ணாடி போச்சு?

தெரிசா கேடடாள்.

அதானே, அங்கே போக வேண்டியதே போகறதில்லே.

முசாபர் சிரித்தபடி பாதிரியாரைப் பார்த்தான். அவர் இதெல்லாம் காதில் விழவில்லை என்ற பாவனையோடு தேநீர்க் குவளையின் நீள அகலங்களை விரலால் அளந்து கன அளவு கணக்கிடும் மும்முரத்தில் ஈடுபடுத்திக் கொண்டார்.

குசினியில் இருந்து முசாபர் கொண்டு வந்த மூக்குக் கண்ணாடியோடு தெரிசா கடிதத்தைப் பிரித்து உரக்கப் படித்ததன் சாராம்சம் இது –

தெரிசாவும் முசாபிரும் இந்தியா போவதைக் குறித்து தெக்கே பரம்பில் பாதிரியார் மகிழ்ச்சியடைகிறதோடு தன் பிரார்த்தனைகளில் இந்தப் பயணம் சுககரமாக, சந்தோஷமானதாக இருக்கக் கர்த்தரிடம் மன்றாடுவார். அமேயர் பாதிரியார் அனுப்பித் தந்த தெரிசாவின் வம்சாவளி மரம் சுவாரசியமானது. தெரிசா இந்திய விசா வாங்க லண்டன் போகும்போது அங்கே தெக்கே பரம்பில் பாதிரியாரின் கல்லூரித் தோழரும் தற்போது இங்கே லண்டன் பல்கலைக் கழகத்தில் தத்துவம் கற்பிக்கிறவருமான பத்மன் எம் பத்மன் எம்-ரான் பத்மன் எம்-ரான் – த- ரி சேசுவே இப்படியும் சொல்லக் கடினமான பெயரா. பத்மன் லண்டன் விலாசம் இது. வெள்ளைக்குதிரை வீதியில் புண்ணியவாளர்கள் சர்ச் அருகே குடியிருக்கிறார். ஞாயிறு வீட்டில் இருப்பார். அவசியம் அவரை சந்திக்கவும். அவருக்கு கொச்சு தெரிசா வம்சாவளி பழக்கமாக இருக்கக் கூடும். அவரும் அதே ஊர் தான்.

வரும் திங்கள்கிழமை இந்திய விசா வாங்க லண்டன் போறோம். கடையை ஒரு மாதம் பூட்டி வைத்தால் ஊரில் ஆரோக்கியம் மிகுமே தவிரக் குறையாது.

தெரிசா சன்னமாகச் சொன்னாள்.

முசாபர் எப்போதோ மீனும் வறுவலும் சாப்பிட வந்த நெட்டை அமெரிக்கன் போல் தோளைக் குலுக்கிக் கொண்டான். தட் இஸ் த வே தி குக்கி க்ரம்பிள்ஸ் என்று பாட்டு வேறே சீட்டியாக வர, அடக்கிக் கொண்டான்.

அமேயர் பாதிரியார் எழுந்து நின்றார். வாதிக்கனில் போப்பரசர் நடுராத்திரியில் கிறிஸ்து பிறந்த அறிவிப்பை வெளியிடுவதுபோல நிறுத்தி நிதானமாக வார்த்தைகளின் கனம் குரலில் அழுத்தச் சொன்னார் –

நானும் உங்களோடு இந்தியாவுக்கு வரப் போறேன்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன