புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 27 இரா.முருகன்


நாலு பக்க ஜன்னலும் மட்ட மல்லாக்கத் திறந்து வீடு முழுக்க வெளிச்சம் நிரம்பிக் கொண்டிருக்க, கற்பகம் சுருண்டு படுத்திருந்தாள்.

நீலகண்டன் போய்ச் சேர்ந்து ஒரு மாதமாகி விட்டது. போன மாதம் இந்தத் தேதிக்கு, இந்த நேரத்துக்குத் தான் அவனை மூங்கில் படுக்கையில் தூக்கிப் போய் எரித்து விட்டு வந்தார்கள்.

நீலகண்டனைக் கவனித்துக் கொள்ளும் மேல் நர்ஸ் லிங்கம் ஊருக்குப் போக லீவு எடுத்திருந்த நாள் அது. நடு ராத்திரிக்கு அப்புறம் எப்போதோ கூடத்துக்கும் பாத்ரூமுக்கும் நடுவில் பாலம் போட்டது போல விழுந்து நினைவு தெளியாமல் நீலகண்டன் போய்ச் சேர்ந்திருந்தான். விடிகாலை பால்காரன் குரல் கேட்டு எழுந்திருந்த கற்பகம் பார்த்ததும் உணர்ந்து கொள்ள அதிகம் கஷ்டப்படவில்லை.

சுற்றிலும் நரகலும் சிறுநீருமாகச் சால் கட்டித் தேங்கியிருக்க அவன் தலைகுப்புறப் படுத்திருந்ததைப் பார்த்ததுமே அவளுக்குப் போதமாகி விட்டது நீலகண்டன் இல்லாமல் போன விஷயம்.

அடுத்த வீட்டிலே பாலைக் கொடுத்துட்டுப் போ. இன்னும் ரெண்டு படி எருமைப்பால் இருந்தா அதையும் நான் சொன்னேன்னு அங்கே கொடுத்துடு. எல்லாம் வேண்டி இருக்கும்.

பால்காரனுக்கு அறிவித்த போது தன்னைத் திடமாக உணர்ந்தாள் கற்பகம்.

எங்கிருந்தோ அசுர சக்தி வந்து மேலே கவிய, பம்பாய்க்கு போன் போட, காம்பவுண்ட் சுவர் மேலே எக்கிப் பார்த்து அண்டை அயலாருக்குப் பதட்டமில்லாமல் தகவல் சொல்ல, வாசல் முன்னறையில் வந்தவர்கள் உட்கார ஏதுவாக, சோபா, நாற்காலியை உள்ளே கூடத்தில் இழுத்துப் போட என்று பரபரவென்று தனியாகவே செயல்பட்டாள் அவள்.

மதியத்துக்கு ஏராப்ளேன் பிடித்து கிருஷ்ணன் வந்து சேர்ந்தாகி விட்டது. செண்ட்ரல் மினிஸ்டர் வீட்டுச் சாவு, அதுவும் அவருடைய அப்பா காலமானார் என்றதால் அதது தன் பாட்டில் சுபாவமாக நடந்து முடிந்தது.

வீட்டு நிர்வாகத்தை மருமகள் கவனித்துக் கொண்டு வேளாவேளைக்குச் சாப்பாடாகவும், காப்பியாகவும் ராத்திரி கனிந்த வாழைப் பழமாகவும் அவளை உபசரித்தாள். அவ்வப்போது ரெண்டு வார்த்தை இதமாகப் பேசினவளும் அவள் தான்.

ஆனாலும் அவளும் தன் ஓரகத்தி பற்றி முழுசாகச் சொல்லவில்லை. ஆட்டக்காரியான அந்த ஓரகத்தி மனம் பிசகாகி சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை போகிற போக்கில் சொல்லிப் பேச்சை மாற்றிவிட்டாள். இருக்கிறதே போதாதா, அந்தத் துக்கமும் எதுக்கு கற்பகத்துக்கு என்று நினைத்திருக்கலாம்.

தம்பி வழக்கம் போல என் மேலே குரோதத்தோட தான் இருக்கான். அவன் பெண்டாட்டிக்கு பென்ஷன் நின்னு போச்சுன்னு டில்லியில் வந்து தர்ணா பண்ண உக்காந்தான். எனக்கு பிரச்சனை உண்டாக்கணும். அதுதான் அவனுக்கு முக்கியம். நான் கார் அனுப்பி கூட்டி வந்து எதமாப் பதமாச் சொல்லி அனுப்பினேன். காலை எடுத்தாலும் மனசிலே வன்மத்தை எடுக்க முடியாதேம்மா.

ரெண்டு பிள்ளைகளும் இன்னும் ஒத்துப் போகாதது பற்றி அழுதாள் கற்பகம். சின்னப் பிள்ளை பரமேஸ்வரனுக்கு ரயில் விபத்தில் கால் போனதற்காக ஒரு பாட்டம் அழுதாள் கற்பகம். நீலகண்டன் போனது நினைவில் பட, அதுக்கு இன்னொரு பாட்டம். அவளுக்கு மாற்றி மாற்றி அழ காரணமும் நேரமும் இருந்தது.

பம்பாய்க்கு வந்துடுங்கோ என்றாள் மருமகள். வந்துடும்மா என்றார் மினிஸ்டர். பம்பாய்லே போய் பிள்ளையோட இருங்கோ என்றார்கள் சாரி சாரியாக வந்து துக்கம் விசாரித்துக் காப்பி குடித்துப் போனவர்கள்.

கற்பகம் எங்கேயும் போக மாட்டாள் என்று எல்லோருக்கும் தெரியும்.

ரெண்டு வாரத்தில் காரியம் எல்லாம் முடிந்து எல்லோரும் புறப்பட்டுப் போய் வீடு வெறுமையாகிக் கிடக்கிறது. இனிமேல் எப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று கற்பகத்துக்குத் தோன்றியது.

மூத்திரம் படிந்த கூடத்துச் சுவர்களும், கதவு இடுக்கில் மலமும், சமையல்கட்டில் தண்ணீர்க் குடத்துக்கு மேல் விழுத்துப் போட்ட நனைந்த அண்டர்வேரும் இந்த வீட்டில் இனி அவளுக்கு ஆயுசுக்கும் பார்க்கவும் சகித்துக் கொள்ளவும் கிடைக்காது. அடிக்காதேடி அடிக்காதேடி இனிமே இப்படிப் பண்ண மாட்டேன் என்று குழந்தை போல வீறிட்டு அழுகிற நீலகண்டனின் யாசிக்கும் குரலும் அவள் பின்னால் சுற்றாது. விக்கிரமாதித்யன் முதுகை விட்டு வேதாளம் இறங்கியாச்சு.

புரண்டு படுத்தாள். மனம் முழுக்க அந்தப் பாழாய்ப் போனவன் தான்.

கழுத்தில் தடவிப் பார்த்துக் கொண்டாள். நீலகண்டன் கட்டிய தாலி தங்கக் கொடியில் கிழங்கு மாதிரி இன்னும் கழுத்தில் தொங்குகிற மயக்கம். பத்தாம் நாள் காரியம் முடிந்து யாரோ உறவுக்கார விதவைக் கிழவி அதை வாங்கிக் கொண்டு சங்கிலியை மட்டும் திருப்பிக் கொடுத்தாள்.

இதுலே தாலிக் குண்டு, கொம்பு எல்லாம் பத்திரமா இருக்கு. சரி பார்த்துக்கோ.

செயினாகவும், காகிதத்தில் மடித்து வைத்த தங்கக் குண்டும், கொம்புமாகப்ப் பார்த்துக் கொள்ள எல்லாம் தான் இருந்தது. அவள் தான் சரியாக இல்லை. நீலகண்டனும் எரிந்து ஒரு குடத்தில் சாம்பலாக அடங்கி, சமுத்திரக் கரையில் கரைந்து ஒன்றுமில்லாமல் போனான்.

ராத்திரியில் எழுப்பி, இருட்டு பயமா இருக்குடி என்று இடுப்பைக் கட்டிக் கொண்டு தூங்க இனி அவன் இல்லை. மேலெல்லாம் மூத்திர வாடை அடிக்க அந்த அணைப்பைத் தள்ளி விட மனசில்லாமல் அப்படியே நித்திரை போய் துணி நனைகிறது தெரிந்து விழித்துக் கொள்கிற காலைப் பொழுதுகளும் இனி இல்லை.

நாசமாப் போறவனே, கட்டிக்கறேன் கட்டிக்கறேன்னு மேலே மூத்திரத்தைப் பேஞ்சு வைச்சுட்டியே. உன் நாறத் துணியைக் கசக்கறதோட என் புடவையையும் இல்லே முக்கி முக்கித் தோய்க்க வேண்டியிருக்கு.

சின்னக் குச்சியால் வலிக்காமல் அடிக்கவும், வலியில் உசிர் போனது மாதிரி தீனமாகக் கூப்பாடு போடவும் நீலகண்டன் இல்லை.

அசுத்தமும் ஆர்ப்பாட்டமும் பிடிவாதமும் மூளை பிரண்டு போனதும் மட்டுமா நீலகண்டன்?

கற்பகம் தூரம் குளித்து நாலு நாள் ஆன உடம்பு மினுமினுப்பும் தேக வாசனையும், வாயில் தாம்பூலமும் தலை கொள்ளாமல் மல்லிகைப்பூவுமாகக் கையில் சுண்டக் காய்ச்சிய பாலோடு வந்து மச்சு உள்ளுக்குள் எட்டிப் பார்த்தது எப்போது? உள்ளே படுத்துக் கொண்டிருந்த, காத்துக் கொண்டிருந்த நீலகண்டன் யார்?

சுடச்சுடப் கொஞ்சம் பசும்பால் குடிச்சுட்டு தூங்கக் கூடாதா? சர்க்கார் உத்தியோகம் உடம்பை உருக்கி இப்படி நோஞ்சானாக்கிடுத்தே. பெலம் வேணாமா எல்லாத்துக்கும்?

அவள் எல்லா எதிர்பார்ப்புகளோடும் அது பற்றி எழுந்த வெட்கத்தோடும், நான் என் அகத்துக்காரனிடம் சுகம் எதிர்பார்க்கிறேன் அதைப் பற்றி யார் என்ன சொல்ல என்று சகலரையும் எடுத்தெறியும் தைரியத்தோடும் விசாரித்தது எந்த நீலகண்டனை?

சுபஹோரை கனிந்து வந்த மார்கழி மாசத்து ராத்திரியில் குளிரக் குளிர கற்பகத்தை ஆலிங்கனம் செய்து பக்கத்தில் கிடத்தி ராத்திரி முழுக்க அவள் மனம் கெக்கலி கொட்டிப் பறக்கச் சுகம் கொடுத்த நீலகண்டன் யார்? அவள் வெள்ளமாகப் பெருகிக் கரைய, ஒரு துளி விடாமல் முழுதும் கொண்ட நீலகண்டன் யார்?

ஆனாலும் நீர் ராட்சசர்ங்காணும். இப்படியா ஒரே ராத்திரியிலே.

கற்பகம் முணுமுணுத்தது எந்த யுகத்தில்? முகத்திலும் உடம்பு முழுக்கவும் திருப்தி எழுதியிருக்க இருட்டில் காலைப் பிணைத்து இறுக்கமாக ஒட்டிக் கொண்டு அவள் யார் காதுமடலைக் கடித்தாள்?

என் ராஜா.

எத்தனை துவைத்தாலும் சிறுநீர்க் கறையும் வாடையும் முழுக்கப் போகாத பஞ்சுத் தலகாணியை அணைத்துப் பிடித்துக் கொண்டு கண் கலங்கினாள் கற்பகம்.

என்னையும் கூட்டிண்டு போயிருக்கக் கூடாதா எழவு பிடிச்சவனே?

படுத்தபடி வெறும் வெளியில் கையெறிந்து திட்டியபோது அழுகை மனதில் முட்டி மோதி முனை முறிந்து சர்வ வியாபகமாகக் குரல் உயர்ந்து அதிர்ந்து நடுங்கி வந்தது.

தனியா விட்டுட்டியேப்பா என்னை பிடிக்கலியா ரொம்ப அடிச்சுட்டேனா வலிக்கறதா கொஞ்சம் பால் எடுத்துண்டு வரட்டுமா என் ராஜா?

அவள் அழுகை சத்தம் பிசிறி விம்மலாக உடைந்து சிதற வாசல் மணியை யாரோ திரும்பத் திரும்ப அடிக்கும் சத்தம்.

அவசரமாகக் கட்டிலில் எழுந்து உட்கார முயற்சி செய்தாள். முடியவில்லை. சட்டென்று ஒரு பயம் கவிந்தது. இப்படியே உடம்பு முடங்கிப் போய், வாசல் கதவும் சார்த்தி இருக்க, நாள் முழுக்க, வாரம் முழுக்க அனங்கமல் கிடந்து உயிர் போய் விடுமா? நாலு நாள் கழித்து கதவை உடைத்து யார்யாரோ உள்ளே வந்து புழுத்து அழுகிய பிணமாக உடம்பெல்லாம் ஈ மொய்த்துக் கிடக்க அவளைச் சுமந்து போய் எறிவார்களோ?

கிழட்டுப் பொணமே. சொல்லிட்டு சாக மாட்டே?

வேண்டாம். இப்போது சாகக் கூடாது. சகல சக்தியும் ஓய்ந்து போய் முழு பலகீனத்தோடு உடம்பு தளர்ந்து கிடந்தபடி உயிர் போக விடமாட்டாள் கற்பகம். அவள் இஷ்டப்படி தான் இருப்பாள். இறப்பாள்.

கையைக் கட்டில் விளிம்பில் பலமாக ஊன்றி உந்த, வாசலில் திரும்ப மணிச் சத்தம்.

இதோ வந்தாச்சு.

அவள் குரல் கணீரென்று ஒலித்தது. எழுந்து மெல்ல வாசலுக்கு நடந்தாள்.

இன்னொரு முறை மணிச் சத்தம். அப்படி என்ன பொறுமை இல்லாமல்?

கீல் சப்திக்க மெல்லப் பின்னால் உருண்டு வந்த கதவைத் திறந்தாள்.

பரமேஸ்வரா நீயா?

அவன் தரையில் வைத்திருந்த கேன்வாஸ் பையைத் தோளில் மாட்டிக் கொண்டான்.

பரமேஸ்வரா அப்பா போய்ட்டார்டா.

கற்பகம் பெருங்குரல் எடுக்க, திலீப் அவளை ஆதரவாக அணைத்துக் கூட்டிக் கொண்டு உள்ளே நடந்தான்.

ஜனனி அவனுக்குப் பின்னால் வந்தாள்.

உங்கப்பா நிர்க்கதியா என்னை விட்டுட்டுப் போய்ட்டார்டா. எரிச்சு கரைச்சு எல்லாம் ஆச்சு. போய்ட்டார்டா பரமேஸ்வரா.

பாட்டி, நான் திலீப்.

நிதானமாகச் சொன்னான்.

கற்பகம் ஆச்சரியத்தால் கண் விரியப் பார்த்தாள்.

பேரன் வந்திருக்கான். எத்தனை வருஷம் கழித்து பம்பாயிலிருந்து வந்திருக்கான். அப்பனைப் போலவே நெடுநெடுவென்று உசரமும், பூஞ்சையுமில்லாத, சதை போட்டுப் பருத்ததும் இல்லாத தேகமுமாக நிற்கிறவன்.

கூட இந்தப் பொண்ணு?

என்னைத் தெரியலியாடி கற்பகம்? உங்க மாமியார்.

அந்தக் குரலைக் கேட்டதும் கற்பகத்தின் துக்கம் எல்லாம் விலகி ஓடிப் பறந்து போனது. திரும்ப கும்மாளி கொட்டி மனம் முழுக்க வந்த மகிழ்ச்சி.

ஏண்டி ஜனனி, கழுதை, நான் தான் வந்திருக்கேன்னு சொல்ல வாய் வராதாடி உனக்கு? தம்பி பின்னாலே எதுக்கு ஒளிஞ்சுக்கறே? இப்போத்தான் வழி தெரிஞ்சுதான்னு நான் திட்டப் போறேன்னு பயமா என்ன?

சந்தோஷத்தை சாலை மறித்துக் கொண்டு திரும்ப மனம் துக்கத்தைத் தொட்டது.

ஏண்டா திலீபா, உங்கப்பன் கால்

குரல் பகீரென்று மேலோங்கி உறைந்து போக கற்பகம் தலையைப் பிடித்தபடி நடுக்கூடத்தில் குத்த வைத்து உட்கார்ந்தாள். நீலகண்டன் மாதிரி அங்கேயே அற்ப சங்கை தீர்ந்து படுக்க வேண்டுமென வினோதமான ஆசை உயர்ந்து வந்தது.

வேண்டாம். பேரன் வந்திருக்கான்.

பேத்தியும் கூடவே வந்து நிற்கிறாள்.

நடுக் கூட்டத்தில் அசுத்தப் படுத்தப் போறியா?

நீலகண்டன் புகைரூபமாக அவளைச் சுற்றிச் சுற்றிச் சிரித்தான். அவன் சுத்தமான வஸ்திரம் அணிந்திருக்கிறான். கையில் குடையும், கூடையில் கேரியரில் அவள் சமைத்துக் கொடுத்த மதியச் சாப்பாடுமாக ஆபீஸ் போகத் தயாராக நிற்கிறான். டிராமில் போகச் சரியான சில்லறை கற்பகம் எடுத்துத் தரவேண்டும். வாங்கிக் கொண்டபடியே உதட்டைக் கவ்விக் கடித்து விட்டுத்தான் கிளம்புவான்.

குழந்தைகள் எல்லாம் வந்திருக்கு. உங்க கடியும் பிடியும் அப்புறம் சாவகாசமா வச்சுக்கலாம். புரியறதா?

நாணத்தோடு சுவரைப் பார்த்தாள் கற்பகம்.

நீலகண்டன் சிரித்தபடி நெருங்கி வந்தான். வரும்போதே சதையெல்லாம் தளர்ந்து தொங்கத் தொண்டு கிழவனானான். வேட்டியைக் களைந்து வீசி விட்டு, தடதடவென்று சமையல்கட்டுக்கு ஓட நில்லு நில்லு என்றாள் கற்பகம்.

பாட்டி, யாரை நிக்கச் சொல்றே?

ஜனனி ஒரு பக்கமும் திலீப் இன்னொரு பக்கமும் அவளை அசைத்து எழுப்ப சுய நினைவுக்கு வந்தாள் கற்பகம்.

ஜனனியின் தோளைப் பிடித்து எழுந்து நின்றாள்.

ஏண்டி சமத்துக் குடமே. பால்காரன் பக்கத்து வீட்டுலே பழக்க தோஷத்திலே பால் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போயிருப்பான். நீ யார்னு சொல்லிட்டு வாங்கிண்டு வா.

ஜனனி கிளம்பிப் போனாள். கூடத்தில் மாடப்புரையில் இருந்த கோலமாவு டப்பாவைத் திறந்து முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்த திலீப் கையில் இருந்து அதைப் பிடுங்கி வைத்தாள்.

திலீபா, நீ ரெண்டு பேர் மூட்டை முடிச்சையும் உள் ரூம்லே கொண்டு போய் வை. வேம்பாவிலே ரெண்டு பக்கெட் தண்ணி ஊத்தி வென்னீர் போடு.

வேம்பாங்கறது என்ன பாஷை பாட்டி?

திலீப் கேட்டான். சின்ன வயசில் லீவுக்கு வந்தபோது தேங்காய் நாரில் தீ மூட்டி பாய்லர் பற்ற வைத்தபடி அவன் கேட்ட கேள்வி இது. இன்னும் பதில் இல்லை.

இன்னிக்கு பாயசம் பண்ணப் போறேன். தாத்தாவுக்குப் பிடிக்கும். முரண்டு பிடிக்காம ரெண்டு பேரும் சமத்தாக் குடிச்சுட்டு என்னோட உக்காந்து நாள் முழுக்கப் பேசிண்டே இருக்கணும்.

கற்பகம் தீர்மானமாகச் சொல்லிக் கொண்டு சமையல் கட்டுக்குப் போனாள்.

அடியே, தஞ்சாவூர்க்காரி நீ சொன்னா ஊரே கேட்கும். உன் பேரனும் பேத்தியும் மாட்டேன்னா சொல்லப் போறா?

நீலகண்டன் திரும்ப வயசு குறைந்து சமையல்கட்டிலிருந்து கக்கத்தில் இடுக்கிய குடையோடு வந்து அவளுக்கு ஒரு முத்தம் கொடுக்க முற்பட்டான்.

ஓய், காலையிலேயே ஆரம்பிச்சுட்டீரா?

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன