Vishnupuram thErthal – Part 3விஷ்ணுபுரம் தேர்தல் – பகுதி 3

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 3
————————————————————————

‘என்னடா அம்பி.. படக்கூடாத எடத்துலே கிரிக்கெட் பந்து பட்டு வீங்கிடுத்தா?’

டாக்டர் சதானந்தம் ஒரு கட்டு வெற்றிலையை மேஜை மேல் வைத்து சாவதானமாக மென்று கொண்டிருந்தார்.

‘இல்லே டாக்டர் மாமா.. இது மருந்து சீசா..’

நான் டிரவுசர் பையிலிருந்து வெளியே எடுத்தேன்.

‘தாத்தாவுக்கு… மூணு நாளா..’

அசங்கிய விஷயம். எப்படிச் சொல்வது?

‘கொல்லைக்கு வரலியாமா?’

மவுனமாக சீசாவை நீட்டினேன்.

‘வாயு எல்லாம் கிரமமா பிரியறாரோ..’

நான் முழித்தேன். டாக்டர் வாயால் பர்ர்ர் என்றார்.

இப்படி எல்லாம் கேள்வி வரும் என்று தெரிந்திருந்தால் தாத்தாவையே வரச் சொல்லியிருக்கலாம்.

லீவு நாளில் இது ஒரு தொந்தரவு. தொட்டதற்கெல்லாம் ‘ராமு நீ போ…’

‘தெரியலே டாக்டர் மாமா..’

‘தெரியாதுடா.. கேக்கும்.. பக்கத்திலே நின்னா மூக்கிலே..’

டாக்டர் என்றால் எல்லாம் பேசலாம். ஆனாலும் சதானந்தன் டாக்டர் ஒரு வாக்கியத்துக்கு ஒரு பெரிய சிரிப்பாக, சுற்றி எல்லாம் வெற்றிலைச் சாறு தெறிக்கக் கேட்கிறார்.

எனக்குச் சிரிப்பு வந்தாலும் சிரிக்கக் கூடாது. எம்பசி புத்தகத்தில் செக்கோஸ்லோவேகியா பையன் பட்டாளத்தானோடு நிற்கிற மாதிரி நான் நிற்கிறேன்.

பேசாமல் செக்கோஸ்லோவேகியாவில் பிறந்திருக்கலாம். ஆரஞ்சு பழம் உரித்துச் சாப்பிட்டு விட்டுப் பட்டாளக்காரனோடு கை குலுக்கிக் கொண்டு..

‘வீரபத்ரா..’

டாக்டர் இன்னொரு வெற்றிலையை மடித்து வாயில் அடைத்துக் கொண்டு உள்ளே பார்த்துக் குரல் கொடுக்கிறார்.

அவர் முடிக்கும் முன்னரே கம்பவுண்டர் வீரபத்ரன் கார்பனேட் மிக்சரை நுரை பரக்க அவுன்ஸ் கிளாஸில் ஊற்றிக் கொண்டிருந்தான்.

இந்த கார்பனேட் மிக்சர் கெட்ட ஆஸ்பத்திரி வாடை அடிக்கிற சமாசாரம். கையில் எடுத்துப் போனால் தெருவே ‘வயிறு சரியில்லையா?’ என்று விசாரிக்கும். எத்தனை பேரிடம் தான் சொல்வது…’எனக்கில்லை’..

’கொட்டிப்புடாம எடுத்துப் போடா..’

கம்பவுண்டர் வீரபத்ரன் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு சீசாவை நீட்டினான்.

இப்படி ஜாலியான டாக்டருக்கு இந்த மாதிரி ஒரு உம்மணா மூஞ்சி கம்பவுண்டர்..

நான் வெளியே போகத் திரும்பியபோது ஒரு பெரிய கூட்டம் மாலையும் கையுமாகப் படி ஏறி வந்து கொண்டிருந்தது.

சுபாஷ் பஜார் இரும்புக்கடை ஸ்தானிஸ்லாஸ் நாடார்.. ஓட்டல் ராமுடு ஐயர்..தையல்கார தியாகி குருசாமி..

இன்னும் யார்யாரோ… எல்லோரும் ஒற்றுமையாகத் தொளதொளவென்று காதி வஸ்திராலயத்தில் வாங்கிய கதர் சட்டை போட்டிருந்தார்கள்.

‘டாக்டர்.. ராகுகாலம் முடிஞ்சுடுத்து.. கையெழுத்து போட்டுடலாம்..’

தியாகி என்னைப் பார்த்தார்.

‘தம்பி… டாக்டர் வீட்டம்மாவைக் கொஞ்சம் இங்கிட்டு வரச் சொல்லு..’

உள்ளே கையைக் காட்டினார். டாக்டர் வீடு பின் போர்ஷனில்.

நான் மருந்து சீசாவைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு திரையை விலக்கி உள்ளே போக, புவனா அதட்டலாக ‘என்னடா’ என்றாள்.

மாமி ஊஞ்சலில் உட்கார்ந்து ஆனந்தவிகடன் தொடர்கதை படித்துக் கொண்டே, ‘அவ மேலே பட்டுடாதேடா…’ என்றாள்.

பட்டால் போலீஸ் வருமோ என்னமோ..

‘வரச் சொன்னாங்க..’

நான் வாசலுக்குக் கையைக் காட்டினேன்.

‘என்னடா வயத்துலே கடப்பாறை வச்சுக் கெல்லணுமா.. கொடுக்காப்புளி, ஜவ்வு மிட்டாய்னு கண்டதையும் மொசுக்கினா இப்படித்தான்..’

புவனா மூக்கைச் சுளித்துக் கொண்டு என் கையில் பிடித்த கார்பனேட் மிக்சரை எகத்தாளமாகப் பார்த்தாள். நான் லட்சியமே செய்யவில்லை.

அந்த ‘வானாகி மண்ணாகி’ சைவ சமய இலங்கை ஆசாமி பற்றி அவளிடம் சொல்லலாமா என்று ஒரு நிமிடம் நினைத்தேன். ஊஹும்.. சொல்லப் போவதில்லை. கடப்பாறை வச்சுக் கெல்லினாலும்..

‘யாருடா வரச் சொன்னா?’

மாமி என் பதிலை எதிர்பார்க்காமல் வாசலுக்குப் போக, நான் கூடவே நடந்தேன்.

வாசலில், டாக்டருக்கு மாலை போட்டார்கள், அவர் ஏதோ பேப்பரில் கையெழுத்து போட்டார். தடதடவென்று கை தட்டினார்கள்.

‘மஹாத்மா காந்திக்கு ஜே.. வந்தே மாதரம்..’

தியாகி டெய்லர் இருமலை அடக்கிக் கொண்டு கோஷம் போட்டார்.

‘டாக்டருக்கு ஜே போடுங்கய்யா..’

ஓட்டல் ராமுடு ஐயர் திருத்தினார்.

‘மருத்துவர் வாழ்கன்னு சொல்லலாமா.. பசங்க கை தட்டுவாங்க..’

நாடார் என்னைப் பார்த்துச் சொல்ல, கூட்டமாகச் சிரித்தார்கள்.

‘கிளம்புங்க.. இப்படியே ஊர்வலமாப் போய் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியதுதான்..’

எல்லோரும் சத்தமாகப் பேசிக் கொண்டே படி இறங்கிப் போக, நானும், மாமியும், வீரபத்ரனும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

‘எவ்வளவு சந்தோஷமா இருக்கு.. பாத்துக்கிட்டே இருங்க அம்மா.. டாக்டர் ஐயா ஜெயிச்சு முனிசிபல் சேர்மனே ஆகப் போறார்..’

நான் வீரபத்ரன் முகத்தைப் பார்த்தேன். ஒரு செக்கோஸ்லோவேகியா சந்தோஷம் தெரிந்தது.

************************************************************

வக்கீல் மோகனதாசன் ஆபீஸ் களைகட்டி இருந்தது.

கோர்ட் கட்சிக்காரர்களை விட, சிவப்புத் துண்டு போட்டவர்கள் தான் சாதாரணமாக் இங்கே அதிகம் தட்டுப்படுவார்கள். இப்போது, கருப்புத் துண்டு போட்ட பழக்கடை அறிவரசன், முனியாண்டி விலாஸ் தங்கராஜு, ரிக்‌ஷா நாச்சியப்பன் என்று ஏகக் கூட்டம்.

வக்கீல் வேதாத்திரி ஐயங்காரும் அங்கே தான் இருந்தார். இவர் ஒருத்தர் தான் கூட்டத்தில் கதர் சட்டை போட்டவர்.

நாங்கள் இடம் கிடைக்காமல் படிக்கட்டில் இடித்துப் பிடித்துக் கொண்டு நின்றோம்.

‘உங்களுக்கு என்னடா இங்கே வேலை.. போய் விளையாடுங்கடா..’

யாரோ விரட்டினார்கள்.

‘இவங்கதான் நமக்கு பிரச்சார அணி.. என்ன உடன்பிறப்புக்களே.. உதவி செய்வீங்களா..’

அறிவரசன் போல் அண்ணன் கேட்டுக்கொண்டால் கார்பனேட் மிக்சரைக்கூட கடகடவென்று குடித்து விடலாம்.

‘நண்பர்களே.. இந்த வார்டில் அவங்க டாக்டர் சதானந்தத்தை நிறுத்தியிருக்காங்க.. செல்வாக்கு.. பணம்…நிறையவே இருக்கப்பட்டவர்.. அவரை எதிர்த்து நாம போராடி வெற்றி அடையறது சாதாரணம் இல்லே.. ஆனால் பேரறிஞர் பெருந்தகை சொன்னபடி..’

அறிவரசன் மூக்கால் பேசுகிறது போல், ஆனால் பிரமாதமாக இழுத்து இழுத்து, கணீரென்று பேசினார்.

வேதாத்திரி ஐயங்கார் கடியாரத்தைப் பார்த்தார். அவர் முசாபரி பங்களாவில் பாட்மிண்டன் விளையாடப் போகிற நேரம்..

‘மிஸ்டர் அறிவு அரசு..’ கேண்டிடேட்டை ஃபர்ஸ்ட்லே அனவுன்ஸ் பண்ணிடலாம்.. பிரஸ் ரிப்போர்ட்டர் காத்துண்டிருக்கார்.. ரெண்டு வரி நியூஸ்னாலும் நமக்கு ஸோ இம்பார்ட்டண்ட்.. என்ன நான் சொல்றது?’

அறிவரசன் தோளிலிருந்து நீளமாக தரையைத் தொட்ட துண்டால் முகத்தை மெல்லத் துடைத்துக் கொண்டார்.

‘மதிப்புக்குரிய வழக்குரைஞர் ஐயா அவர்கள் கேட்டுக் கொண்டபடி, நம் வேட்பாளர்.. எந்த அறிமுகமும் தேவையில்லாத, எளிய, தொண்டே தன் மூச்சாக உலவி வரும் நம் இனிய நண்பர்..’

பெரிய சரீரத்தைத் தூக்கிக் கொண்டு பாலுசாமி எழுந்து நின்று வணக்கம் சொன்னான்.

(தொடரும்)

கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, செப்டம்பர் 1993-ல் பிரசுரமானபோது இந்தக் குறுநாவலின் தலைப்பு – விஷ்ணுபுரம்.

என் ‘தகவல்காரர்’ குறுநாவல் தொகுப்பில் (அட்சரா வெளியீடு – 1995) இடம்பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன