Vishnupuram ThErthal – Part 2விஷ்ணுபுரம் தேர்தல் – பகுதி 2

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 2

அந்த ஆள் பார்க்க வினோதமாக இருந்தான். வயது கிருபாகரன் அண்ணன் புருஷோத்தமனை விட கொஞ்சம் கூட இருக்கலாம். இவனுக்குப் பெரிய மீசை இருந்தது. பட்டையாக நெற்றியில் வீபுதி பூசி இருந்தான். சந்தனம், குங்குமம், ஜெமினி கணேசன் போல தொளதொள பேண்ட். கோயிலுக்குப் போய்விட்டு, ‘காலங்களில் அவள் வசந்தம்’ பாடத் தயாராக நிற்கிற ஜெமினி. கோயில் வாசலிலேயே நிற்கிறான். ஒரு கையில் தொப்பி. கையில் ஏதோ காகிதம். கோபுரத்தை அண்ணாந்து பார்க்கிறான். எழுதுகிறான்.

பக்கத்தில் போனோம்.

‘தம்பிகளா.. நீங்க இந்தத் தெருவா?’

‘ஆமா’

‘இங்கே…டாக்டர் சச்சிதானந்தம் வீடு இருக்குன்னு சொன்னாங்க.. உங்களுக்கு..’

‘சதானந்தம்னு ஒரு டாக்டர் இருக்கார் இந்தத் தெருவிலே..’

‘அவரே தான்.. மாத்திச் சொல்றேன்..அவரே தான்.. எந்த வீடு தம்பி?’

காட்டினோம்.

‘நீங்க எங்கே இருந்து வரீங்க?’

‘இலங்கை தெரியுமா?’

தெரியாமல் என்ன? அங்கே நாள் முழுக்க சினிமா பாட்டு வைத்துவிட்டு, சாயந்திரம் ஆறு மணியானதும், ‘வணக்கம் கூறி விடை பெறுவது மயில்வாகனம்’ என்று முடிப்பார்கள். ‘சொக்கா.. ஆயிரமும் பொன்னாச்சே..’ என்று ரெண்டு வரி டயலாக் ஒலிபரப்பி, யாருடைய குரல் என்று அடையாளம் கண்டு பிடித்த அதிர்ஷ்டசாலிக்கு ப்ரவுன்சன் அண்ட் போல்ஸன் கஸ்டர்டும் – இது என்னமோ தெரியாது- கோபால் பல்பொடியும் மற்றதும் காலக்கிரமத்தில் அனுப்பி வைப்பார்கள். ‘ஸ்ரீலங்கா பத்திரிகையை ஒழுங்காக வாசியுங்கள்’ என்று பாடத்தை ஒழுங்கா படியுங்கடா சத்தம் போடும் சயின்ஸ் வாத்தியார் போல் மணிக்கொரு தடவை அறிவிப்பார்கள். அதை மட்டும் தவிர்த்து விட்டால், ஏறக்குறைய சந்தோஷமான ஊராக இருக்கும்.

’நான் இலங்கையிலிருந்து வரேன்..’

‘இங்கே என்ன பண்றீங்க?’

‘கோயில்கள் பற்றி, சைவ சமயம் பற்றி ஆராய்ச்சி பண்றேன்..’

‘அப்படீன்னா?’

‘அதாண்டா.. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி..’

சீதரன் முந்திரிக்கொட்டை மாதிரி நடுவிலே வெட்டினான்.

‘சபாஷ்.. திருவாசகம் எல்லாம் தெரிஞ்சிருக்கே..’

எப்படித் தெரியாமல் போகும்? நாலு வருஷமாகத் தமிழ்ப் புத்தகத்தைத் திறந்தால் அதுதான் முதல் பாட்டு.

‘தம்பி..’

அவன் குரலை ரகசியம் பேசுகிறதுபோல தாழ்த்தினான்/

‘என்ன அண்ணே?’

நாங்களும் அதே அளவுக்குத் தாழ்த்தி கோஷ்டியாகக் கேட்டோம்.

‘டாக்டர் வீட்டுலே புவனலோசனின்னு ஒரு அம்மா இருக்குதா?’

‘புவனலோசனி வேலுப்பிள்ளைன்னா.. உங்க ஊர் ரேடியோவிலே தானே..’

சதானந்தம் பெயரைத் தப்பாகச் சொன்ன மாதிரி இதுவும் ஆகியிருக்கும் என்ற நம்பிக்கையோடு கிரி கேட்டான். அதானே..

‘இல்லே தம்பி.. அவங்க இல்லே..இது குமரு..’

என்ன குமாரோ.. குமார் இல்லையாம்.. குமரு என்றால் சின்ன வயசுப் பெண்ணாம்.

டாக்டர் சதானந்தம் வீட்டில் குமரு உண்டுதான். புவனா இருக்கிறாள். எங்களுக்கு அக்கா வயசு. டாக்டர் வீட்டு மாமிக்குத் தங்கை. இரண்டு வருஷம் முன்னால் அவளும் அவள் அப்பாவும் இலங்கையிலிருந்து வந்தார்கள். அப்பா இப்போது உயிரோடு இல்லை.

புவனா காலேஜில் படிக்கிறாள். சாயந்திரம் கிருஷ்ணசாமி வாத்தியாரிடம் பாட்டு சொல்லிக் கொள்கிறாள்.

‘பரிபாலய.. பரிபாலய.. பரிபாலய ரகுராமா…’

’உட்காருகிற இடத்தில் சிரங்கு வந்தால் குப்பை மேனி இலையை விழுதாக அரைத்துப் பத்துப் போடணும்’ என்று பக்கத்தில் யாரிடமோ சொல்லிவிட்டு, அதே குரலில் வாத்தியார் பாட்டு சொல்லித் தருகிறார்,

‘அந்தக் குமருவுக்கு லெட்டர் கொடுக்கணுமா?’

சீதரன் கேட்டான்.

இந்த லெட்டர் கொடுப்பது விவகாரமான சங்கதி.

தெருவில் எங்களுக்கு கிட்டத்தட்ட ஏழெட்டு வருஷம் மூத்த செட் ஒன்று உண்டு. கிருபாகரனின் அண்ணன், சீதரனின் மாமா, கிரியுடைய சித்தப்பா என்று .. கஷ்டப்பட்டு மீசை வளர்த்துக் கொண்டிருக்கிறவர்கள் எல்லோரும்.. பக்கத்துத் தெருவிலிருந்து எல்லாம் இவர்களைப் பார்க்க சைக்கிளில் இவர்கள் வயது சிநேகிதர்கள் யாராவது எப்பவும் வருவது வழக்கம்.

இரண்டு மாதம் முன்பு வரை தினசரி சாயந்திரம் கோயில் பக்கத்தில் சைக்கிள் சகிதம் எல்லோரும் ஆஜர்.

புவனா கோயிலுக்குப் போவாள். அப்புறம் அக்பரின் அக்கா மெஹருன்னிசா மஜீத் தெருவில் அத்தை வீட்டுக்குப் போவாள்.

இவர்கள் இரண்டு பேரையும் பார்த்த பிறகு தான் சபை கலையும்.

புவனா தாட்தாட்டென்று தனியாகப் போகும்போது பின்னால் இருந்து சிரிப்பு கேட்கும். மெஹர் கூட அக்பரோ, நானோ போவோம்.

‘அந்தப் பக்கம் பாக்காம வாடா..’

அவள் முக்காட்டைக் கடித்துக் கொண்டு வேகமாக நடப்பாள்.

இரண்டு மாதம் முன்னால், பக்கத்துத் தெருவில் இருந்து வந்த சபையின் கவுரவ உறுப்பினன் எவனோ புவனாவுக்கு ‘லெட்டர்’ கொடுத்தானாம். போஸ்ட்மேன் வேல்சாமி தான் வழக்கமாக எல்லோருக்கும் லெட்டர் தருவார். இது என்ன ஸ்பெஷலோ?

போலீஸ்.. சத்தம்.. சமாதானம்.. தெருவே ஒரு வாரம் லோல்பட்டது.

கிருபாகரன் அணன் மெட்ராஸில் அவன் சின்னாயினா வீட்டுக்குப் போனான். மற்றவர்களும் உறவுக்காரர்களின் அட்ரஸைத் தேடி எடுத்துப் போனார்கள். சாயந்திர சபையின் கௌரவ உறுப்பினர்கள் தலை மட்டும் அவ்வப்போது தட்டுப்படுகிறது.

இந்த ஆள் லெட்டர் கொடுக்க வந்தவன் என்றான் உஷாராக இருக்க வேண்டும்.

இல்லையாம்.. சும்மா தான் கேட்டானாம்.

‘ஆராய்ச்சி பண்ணி என்ன செய்வீங்க?’

பழைய வம்புக்குத் தாவினோம்.

‘புத்தகம் போடுவேன்..’

’போஸ்ட் கார்ட் போட்டா அனுப்புவீங்களா?’

’பார்க்கலாம்..’

அவன் நடந்தான்.

காலக்கிரமத்தில் அனுப்புவான்.

***************************************

‘ராமு.. இன்னமா எழுந்திருக்கலே.. எட்டு மணியாறதே..’

‘அவனுக்கு எவனோ வேலை மெனக்கெட்டு டெல்லியிலிருந்து ஒரு மூட்டை புஸ்தகம் அனுப்பியிருக்கான்..’

ஆபீசுக்குப் போகிற அவசரத்தில் அப்பா. ரசம் மணக்கிற கை படுக்கைக்குப் பக்கத்தில் எதையோ போட்டது.

‘பாக்கு டப்பா எங்கே?’

‘ராமுதான் நேத்து அதுலே வெள்ளரிக்கா விதை தேடித் தேடித் தின்னுட்டிருந்தான்..’

இனியும் படுத்துக் கிடந்தால் டின் கட்டி விடுவார்கள்.

ஓடியே போய் சைக்கிள் பின்னாலிருந்து பாக்கு டப்பாவை எடுத்துக் கொடுத்துவிட்டு, எனக்கு வந்த பொக்கிஷத்தைப் பார்த்தேன்.

கலர் கரலாக ஏழெட்டுப் புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. நாலு வரியில் ஒரு கடிதம்.

செக்கோஸ்லோவாகியா தூதரகத்திலிருந்து அனுப்பி இருந்தார்கள்.

’மிஸ்டர் ராமு’என்று ஆரம்பித்தது. எனக்குத்தான் எழுதியிருக்கிறார்கள்.

சாவகாசமாகப் படித்துக் கொள்ளலாம். முதல் புத்தகத்தைப் பிரித்தேன். சுகமான காகித வாசனை. இதெல்லாம் படிக்கவா, முகர்ந்து பார்க்கவா?

பக்கத்துக்குப் பக்கம் ஏகப்பட்ட படங்கள். தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். கிழவிகள் ஆரஞ்சுப் பழம் உரித்துச் சாப்பிடுகிறார்கள். கிராப்புத் தலையோடு புவனா மாதிரிப் பெண்கள் சைக்கிளில் போகிறார்கள். பெரிய வயலிலிருந்து உருளைக் கிழங்கை லாரியில் ஏற்றுகிறார்கள். தொப்பி போட்ட கிழவர்கள் டிராக்டர் ஓட்டுகிறார்கள்.

இவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பாட்டைப் பாடிக்கொண்டே இதை எல்லாம் செய்வார்கள் என்று தோன்றியது. ஆகாசவாணியில் அடிக்கடி இந்தியில் வரும் தேசபக்திப் பாடல் மாதிரி.

நாலு புத்தகத்துக்கு அப்புறம் படமே மருந்துக்குக் கூட இல்லாமல் ஒரு புத்தகம். புரட்டிப் பார்த்தேன். ஒரு இழவும் புரியவில்லை. இந்தப் புத்தகம் தான் மற்றதை விட வழுவழுப்பு. வாசனையும் இதற்குத்தான் அதிகம். என்ன பிரயோஜனம்? மிஸ்டர் ராமு இதெல்லாம் படிக்க மாட்டார்.

உள்ளே எட்டிப் பார்த்தேன். அம்மா சமையல்கட்டில்.

ஒரே ஓட்டம் வெளியே.

வக்கீல் மோகனதாசன் வாசல் படிக்கட்டில் உட்கார்ந்தபடி ஒரு கூட்டம் பொறாமையோடும் வயிற்றெரிச்சலோடும் என் புத்தகங்களைப் பார்வையிட்டது.

’நீ மொதல்லே தபால் பெட்டியிலே போட்டியே.. அதான் உனக்கு வந்திருக்கு.. எனக்கு மத்யானம் வரும் பாரு..’

கிருபாகரன் சொன்னான்.

அவனை யார் வாடகை சைக்கிளில் போய்த் தபாலில் போட வேண்டாம் என்று கையைப் பிடித்து இழுத்தது? இருக்கிற கைக்காசில் தனக்கு மட்டும் இல்லாமல், ராமானுஜ நாயுடு, மங்கத் தாயாரம்மாள், பங்காருசாமி நாயுடு என்று வீட்டில் இருக்கிற எல்லோர் பெயரிலும் புத்தகம் கேட்டு அனுப்பியிருக்கிறான்.

‘இந்த செக்கோஸ்லோவாகியா எங்கேடா இருக்கு?’

கிரி கேட்டான்.

‘படிச்சுத் தெரிஞ்சுக்கத்தானேடா அனுப்பியிருக்காங்க..’

‘தடிப்புத்தகம் என்னடா?’

‘அவங்க ஊர்லே பாடப்புத்தகம் போல இருக்கு…சாம்பிளுக்கு அனுப்பியிருப்பாங்க..’

‘சகாக்களே… சத்தம் போட வேணாம்..’

வக்கீல் மோகனதாசனின் குமாஸ்தா ஜீவராசன் தோளில் சிவப்புத் துண்டோடு, திண்ணையில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்.

‘அவனுக்கு இருக்கற அறிவுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியா வந்திருக்க வேண்டியவன்.. கட்சி கிட்சின்னு அலஞ்சு இப்படி உருப்படாம போய்ட்டான்..’

அப்பா அடிக்கடி சொல்கிறதுபோல ஜீவராசன் உருப்படாமல் போயிருந்தால் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை வெடிச் சிரிப்பு சிரித்துக்கொண்டு எப்படி இருக்க முடியும்?

ஜீவராசன் ஒரு புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தார்.

’பாத்தியா.. உங்க வயசுதான் இருக்கும் இந்தப் புள்ளைக்கு.. என்ன சிநேகிதமா சிரிக்கிறான் பாரு.’

அவர் காட்டிய படத்தில் ஒரு பையன், லாரி மாதிரி ஒரு வாகனத்தில் இருந்த பட்டாளக்காரனோடு கை குலுக்கிக் கொண்டிருந்தான்.

‘யார் அண்ணே அது?’

பட்டாளக்காரனைக் காட்டிக் கேட்டோம்.

‘சோவியத் போர்வீரன்..’

ஜீவராசன் நரைத்துக் கொண்டிருக்கிற மீசையைத் தடவிக்கொண்டே சிரித்தார்.

‘இந்தப் பையன் என்னத்துக்குக் கை கொடுக்கிறான்?’

’அவன் நாட்டில் வந்து அமைதியை நிலைநாட்டினதுக்காக சந்தோஷப்படறான்..’

அவன் முகத்தில் அப்படி ஒன்றும் சந்தோஷம் தெரியவில்லை. ஒரு வேளை செக்கோஸ்லோவேகியாவில் சிரிக்காமலேயே சந்தோஷப்படுவார்கள் போலிருக்கிறது.

‘இது என்ன அண்ணாச்சி?’

கிரி பொம்மை போடாத புத்தகத்தை இரண்டு விரலால் தூக்கிக் காண்பித்தது, எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. என் புத்தகம். வீட்டுக்குப் போனதும் முதல் காரியமாக அட்டை போட வேண்டும். ராமகிருஷ்ணா மிஷனிலிருந்து வரும் தர்ம சக்கரம் பத்திரிகை சரியாக இருக்கும்.. ஒரு அலமாரி நிறைய இருக்கிறது.. தாத்தா அடுக்கி வைத்திருக்கிறார்..

ஜீவராசன் புத்தகத் தலைப்பைப் படித்தார். அர்த்தம் சொன்னார்.

’SPRING IN PRAGUE… சோவியத் நட்புறவு கலந்த பிரேக்கு வசந்தம்.’

பெரியவனானதும் ‘பிரேக்கு வசந்தம்’ படிக்க வேண்டும்.

(தொடரும்)

’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, செப்டம்பர் 1993-ல் பிரசுரமானபோது இந்தக் குறுநாவலின் தலைப்பு – விஷ்ணுபுரம்.

என் ‘தகவல்காரர்’ குறுநாவல் தொகுப்பில் (அட்சரா வெளியீடு – 1995) இடம்பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன