பொது யுகம் 300 தேடிச் சென்றடைந்த பொது யுகம் 5000 மக்கள்

தினை அல்லது சஞ்சீவனி நாவல் அத்தியாயம் 43 தற்போது திண்ணை இலக்கிய இணைய இதழில் பதிப்பிக்கப் பட்டுல்ள்ளது. அதிலிருந்து ஒரு சிற் பகுதி.

தினை அல்லது சஞ்சீவனி நாவல் அச்சுப் பதிப்பாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் ஜனவரி 2023 பிரசுரமானது

வானம்பாடியின் பயோ தொலைபேசி உள்ளங்கையில் அழைத்தது. காலை நான்கு மணிக்கு குழலனின் அழைப்பு அது. அவனோடு பேசாமல் இரண்டு நாட்கள் அவளுக்கும் குயிலிக்கும் கடந்திருக்கின்றன. எல்லாம் குயிலியும் வானம்பாடியும் ஒரு வாரமாகக் கட்டில் பகிர்ந்து கொண்டதை குழலன் பகடி செய்த பிறகுதான்.

வானம்பாடியின் கட்டிலில் சிறு ஒலி ஏதோ வந்ததில் தொடங்கியது இது. ராத்திரி முழுக்க அவள் புரண்டு படுக்கும் போது வந்த ஒலி என்று ஆறடி தூரத்தில் அடுத்த கட்டிலில் துயின்றிருந்த குயலி சொல்ல, நடுராத்திரிக்கு லேஸர் உபகரணம் பயன்படுத்து வானம்பாடி கட்டிலைப் பிரித்துப்போட்டாள். உள்ளே சிறு ஒற்றுபார்க்கும் கருவி.

எங்கிருந்து வந்த ஒற்றுக் கருவி என்று அறிய வானம்பாடி லேசர் கதிர் அனுப்பியதும் அந்தக் கருவி கர்ப்பூரம் பெயரும் விலாசமும் ஒற்றாடுவதாகச் சொல்லி அமைதியானது.

குயிலி கட்டிலில் கருவி எதுவும் பொருத்தப்படவில்லை என்று லேசர் மற்றும் அல்ட்ரா வயலட் கதிர் அனுப்பி உறுதி செய்யப்பட்ட பின் குழலனிடம் இதைப் பேச காலையில் அழைக்கலாம் என்று இரு பெண்களும் முடிவு செய்து கருவியை முன்னறையில் செயலிழக்கச் செய்து சுவரைப் பார்த்து இட்டனர்.

திரும்பி வந்த வானம்பாடி குயிலியோடு அவள் கட்டிலைப் பகிர்ந்து கொண்டாள். இருவரும் உறங்காத, பின்னிரவு அதிகாலையாக நீட்சி கொண்ட இனிய பொழுது அது.

அடுத்த நாள் காலையில் குழலனிடம் இதைச் சொல்லி அவர்கள் கூடுதலாக எப்படி இன்னும் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்று கேட்க குழலனை அழைத்தாள் குயிலி. தொலைபேசி வேண்டாம் நானே வருகிறேன் என்று உருவம் மறைத்து வந்துவிட்டான்.

வந்ததும் பலகை பலகையாகப் பிடுங்கி எடுத்து அடுக்கப்பட்ட குவியல் வானம்பாடியின் கட்டில் என்று மேலே டர்க்கி டவல், ஸ்டிக்கர் பொட்டு, பேன் சீப்பு அலங்காரங்களோடு அந்தக் குவியல் விளங்கியதிலேயே புரிந்துவிட்டது குழலனுக்கு.

நேற்று எப்படி உறங்கினாய் என்று குறுநகையோடு வானம்பாடியைக் கேட்டான். குயிலி ஒரு சின்னப் புன்னகையோடு வானம்பாடியைக் கட்டி அணைத்துக் கொண்டு சொன்னாள் –

இப்படித்தான் இருந்தோம். அது பதிலாக வரவேண்டும் என்று தானே எதிர்பார்க்கிறாய்? வேறு என்னவாவது தகவல் வேண்டுமா? எப்படி நாங்கள் உறவு கொண்டோம் என்றும் நிகழ்த்திக் காட்டணுமா?

அவள் முகம் சிவக்கச் சொல்ல, வானம்பாடி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் என்று குயிலி முதுகில் தட்டி சிரசில் முத்தமிட்டாள். குழலன் ஒரு நிமிடம் அவர்களை நோக்கிவிட்டு இதெல்லாம் எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லாதது என்பதுபோல் சுவரைப் பார்த்தபடி பேசினான்-

கர்ப்பூரம் வானம்பாடியிடம் ஏதோ எதிர்பார்க்கிறான் ஆனால் குயிலி பற்றி அவனுக்கு அந்த விதமான தகவல் ஆர்வம் இல்லை என்று அவள் கட்டிலில் ஒற்றுக் கருவி பதிக்காததின் மூலம் தெரியவருகிறது. அல்லது வானம்பாடிமேல் அவனுக்குப் புது ஈர்ப்பு வந்திருக்கலாம். நான் இன்றைக்கு இந்த ஒற்றின் பின் யார் எல்லாம் இருக்கின்றார்கள் எதற்கு ஒற்றாடுகிறார்கள் என்று கண்டு பிடித்து விடுகிறேன். நீங்கள் இதைப் பொருட்படுத்தாமல் சேர்ந்து கிடந்து துயிலுக.

இந்த ஆதரவான பேச்சில் நடுவில் வந்த ‘சேர்ந்து’ தான் அதற்கப்புறம் பேச்சு இல்லாமல் ஆக்கியது. குழலன் இன்னொரு பத்து நிமிடம் இருந்து ஒரு காப்பி குடித்து ’சோர்ந்து கிடந்து துயிலுக அது’ என்று பிழை திருத்தம் சொல்லி, குயிலியையும் வானம்பாடியையும் மாறிமாறிப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவன் சொன்னான் –

கர்ப்பூரம் வீட்டில் சஞ்சீவனி மூலத் தகவல் – core information – இருக்கும் என்று யாரோ சந்தேகப்படக்கூடும். அவர்கள் கர்ப்பூரத்தின் வீடு தவிர அவனுக்கு வேண்டப்பட்டவர்கள் என்று கருதப்படும் உங்கள் வீட்டிலும் சஞ்சீவனி ரகசிய மருந்து உண்டாக்கும் வழிமுறை ஆவணத்தைத் தேடிக் கொண்டிருக்கலாம். வேண்டுமென்றே கர்ப்பூரத்தின் பெயரைத் திசைதிருப்பக் கொடுத்திருக்கலாம். ஆகவே இன்னும் கொஞ்ச நாள் கொஞ்சும் நாளாக்கிக் கொள்ள வேண்டாம்.

சொல்லி விட்டு உடனே காணாமல் போனான் குழலன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன