வந்த பைசாசங்களும் இருந்த பைசாசங்களும்

என் நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் இருந்து

மசகு போல் அடர்த்தியான களிம்பு ஏதோ அடையடையாக அப்பிய கிழிந்த பிடவை உடுத்திய இரண்டும் அந்தச் சேலையையே மேலே தலைப்பு உயர்த்தி மார்பை மூடியிருந்தன. அவை பெருத்த முலைகள் என்று கர்ப்பூரத்துக்குத் தோன்றியது.

கழுதைக்குப் பேர் கர்ப்பூரமா, எழுந்திருடா என்று அவன் தலைக்கு வெகு அருகே தலை குனிந்து ஒன்று கிரீச்சிட குமட்டி வாந்தி எடுத்தபடி கிடந்தான் அவன்.

மிகுந்த சிரமத்துடன் கண் திறந்து பார்க்க, தலையில் மயிர் இல்லாமல் முண்டனம் செய்ததாக இரு பைசாசங்களும் தோன்றின. கபாலத்தில் திட்டுத் திட்டாக ஏதோ ஒட்டி அதன் போக்கில் இன்னொரு துர்வாடையைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

கர்ப்பூரம் எழுந்திருடா என்ன தூக்கம் வேண்டியிருக்கு என்று மறுபடி இரண்டு அலாதியான ரூபங்களும் அவன் படுக்கைக்கு அரை அடி மேலே சுற்றிப் பறந்தன.

என்னை நினவு இருக்காடா? முடைநாற்றம் கையிடுக்கிலிருந்தும் கொங்கைகளிலிருந்தும் கசிய கர்ப்பூரனை மிக நெருங்கிப் பறந்த பைசாசம் நாலு வரிசைப் பல்லும் வெளியே தெரியச் சிரித்தது.

இன்னொரு முறை கர்ப்பூரனுக்கு வயிறு எக்களித்து வாயில் வந்தது. சுற்றிவர வாந்தி சால் கட்டி நிற்க நடுவே மல்லாந்து படுத்திருந்தான்.

என்னை விட நீதாண்டா நாறிப் பிடுங்கறே என்று சிரித்தபடி அறை உத்தரத்தில் முதுகால் தட்டிவிட்டு அப்படியே கீழே வந்து கர்ப்பூரனை அணைத்துக் கொண்டு அவன் வாயில் முத்தமிட்டது அந்தப் பைசாசம். அந்த அண்மையும் ஸ்பரிசமும் வாடையும் அவனுக்கு ஏனோ வேண்டியிருந்தன.

அவனுக்கு இதெல்லாம் பழக்கமானதாகத் தெரிந்தது. யார், பூரணாவா? அவன் நம்ப முடியாமல் கேட்டான். இரண்டு பிசாசுகளும் அவனுக்கு நேர்மேலே மிதந்தபடி ஊவென்று ஒலி எழுப்பின.

ஆமாடா, நான் பூரணா அவள் யாருன்னு உனக்குத் தெரியுமே என்று கேட்ட பிசாசு பூரணா என்று நம்ப மனம் மறுத்தது, ஆனால் அந்த வியர்வை வாடையும், உடல் வாடையும் அவள் தான் என்றன.

பக்கத்தில் வந்து வாயில் காட்டிய நான்கு ஒழுங்கில்லாத வரிசைப் பற்கள் மஞ்சள் பற்காரை கெட்டித்து பார்க்கக் கொடூரமாக இருந்தது. அந்த களிம்பு துடைத்த புடைவைக்குள் முழுப் பெண் உடல் இருக்குமா என்று அவனுக்கு ஒரு வினாடி சந்தேகம்.

ஏன், இருந்தால் இப்படியே கலவி செய்வாயா? அந்தப் பிசாசு கூட வந்தது கோபத்தோடு சொன்னது.

கர்ப்பூரன் கபி கபி கபிதாவா என்று நம்ப முடியாமல் கேட்டான். வாய் கோணி மேலே செருக தொண்டையில் ஏதோ அடைத்த மாதிரி பேசவிடாமல் தடுத்தது.

ஆமா கபிதா தான் அதுக்கு இப்போ என்ன பண்ணனும்கறே. அந்தப் பைசாசம் உச்சத்தில் சிரித்தபடி அறைச் சுவரில் முட்டிக்கொள்ளாமல் பறந்தது.

எப்படி எப்படி நீங்க ரெண்டு பேரும் எப்படி திரும்ப. அவன் மிகுந்த சிரமப்பட்டுக் கேள்வியை முடிக்காமல் அந்தரத்தில் விட, இரண்டு பைசாசங்களில் ஒன்று எப்படி மறுபடியும் உயிரோடு இருக்க முடியும்னு கேட்கறியா? அதெல்லாம் உனக்கு எதுக்கு சொல்லணும்?

கதவு காற்றில் திறந்து சத்தத்தோடு மூடிக் கொண்டது. இன்னும் இரண்டு பெண் பைசாசங்கள் உள்ளே பறந்து வந்திருந்தன.

சாரி, நாங்க இங்கே நீண்டநாள் தங்கின பிசாசுகள். நீங்க – உள்ளே வந்தவை இருந்த இரண்டைக் கேட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன