(நிறைவு பெறாத) தமிழ்ப் படம் -முத்தம்மா டீச்சர் பார்க்க முயன்றது – குறுநாவல் பகுதி

கடற்கரை.

 

சென்னை கடற்கரை உலகிலேயே இரண்டாவது பெரிய, அழகிய கடற்கரை. நாங்கள் சென்னைக்கு இன்பச் சுற்றுலா சென்றபோது, கடற்கரை, திருவல்லிக்கேணி, அண்ணா சமாதி என்று பல இடங்களுக்குப் போனோம். கலங்கரை விளக்கம் என்பது கப்பல்களை வழிப்படுத்தும் விளக்கு அமைந்த, கடற்கரையில் உயர்ந்து நிற்கும் கட்டிடமாகும். அங்கே யாரும் குடியிருக்க முடியாது. வாசலில் எருமை மாடு கட்டிப் பால் கறக்க முடியாது.

 

முத்தம்மா டீச்சர் காம்போசிஷன் நோட்டை மூடி வைத்துவிட்டுக் கடற்கரை மணலில் நடக்கிறாள். கையில் குடை,

 

நாயனா வேலைக்கான உத்தரவை பட்டுவாடா செய்ததும், தொப்பை வைத்த, சிவந்த உப்பிய உதடும், பூனை மயிர் மீசையும் உடைய கதாநாயகன் இங்கே வருவான்.

 

டீச்சர் மணலில் உட்கார்கிறாள்.

 

‘ப்பீப் .. ப்பீப்..’

 

விசில் ஊதிக்கொண்டு காக்கி டிராயரும், தொளதொளப்பான காக்கி சட்டையும் அணிந்த போலீஸ்காரன் மணலில் கால் புதைய நடந்து வருகிறான்.

 

‘யாரும்மா இங்கே தனியா உக்காந்துக்கிட்டு.. வீட்டுக்குப் போ..’

 

ஜோதி அக்கா வீட்டுக்காரன் அவன்.

 

‘வீடு இல்லையே.. உங்க கூட வந்துடட்டா..ரிடையர் ஆகி வ்ர்ற பணம்.. வீடு வித்ததுலே வர்ற பங்கு எல்லாம் கொண்டாறேன்.. ஒரு ஓரமா முடங்கிப்பேன்.. ஜோதி மகளுக்குப் புள்ளை பொறந்தா, பீ தொடப்பேன்.. மூத்திரம் அலம்பி வுடுவேன்.. வாய்ப்பாடு சொல்லித் தருவேன்.. தோசை சுடுவேன்.. கவாப்பு பண்ணுவேன்..’

 

போதும்பொண்ணு மாதிரி மணலில் இரண்டு கையையும் ஊன்றி அளைந்தபடி அவன் முகத்தைப் பார்க்கிறாள் டீச்சர்.

 

‘உனக்கு விசயமே தெரியாதா.. உங்கக்கா எனக்குச் சொல்லியிருக்காளே.. நீ ஒரு மாதிரிப்பட்டவளாம்… படி ஏத்தக் கூடாதாம்.. பணத்தை மட்டும் அப்பப்ப வாங்கிக்கிட்டு போஸ்ட் கார்டுலே நாங்க சுகம்.. நீ சுகமாவோட நிறுத்திடணுமாம்.. இல்லாட்ட நான் எப்பவோ கூட்டிப் போயிருப்பேனே.. இந்த மாப்பிள்ளப் பய ஆரம்பிச்சு வச்சான்.. வாத்தி மேல்கொண்டு போனான்.. நான் காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சிருப்பேனே..’

 

ஜோதி அக்கா வீட்டுக்காரன் லாத்தியைச் சுழற்றிக் கொண்டே சிரிக்கிறான்.

 

‘நான் அப்படிப் பட்டவ இல்லே..நாயனா கிட்டே கேட்டுப் பாருங்க..’

 

முத்தம்மா அழுகிறாள். அவன் சும்மா சிரிக்கிறான்.

 

‘பிரதமர் கிட்டே கேட்டுப் பாருஙக்.. போலந்து போய்ட்டு வந்திருப்பாரு.. ‘

 

அவன் லாத்தியை வீசியபடி நடந்து போகிறான்.

 

‘நான் அப்படிப் பட்டவ இல்லே’

 

முத்தம்மா டீச்சர் பெருங்குரலெடுத்துக் கத்துகிறாள்.

 

அவளுடைய சத்தம் கடல் இரைச்சலில் கரைந்து ஒன்றுமில்லாமல் போக, ஜோதி வீட்டுக்காரன் ஒரு வினாடி திரும்பிப் பார்த்து விட்டு விலகி நடக்கிறான்.

 

முத்தம்மா டீச்சர் திரையில் படகுப் பக்கம் உட்கார்ந்து கொண்டு நாற்காலி வரிசையைப் பார்க்கிறாள்.

 

கையில் மெழுகுதிரிகளோடு தெரசாள் வீட்டுக்காரர் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிறார்.

 

‘உங்க நாயனா இறந்துட்டாரு.. இறங்கி வந்து உன் நாற்காலியிலே உக்காரு.. சடகோப மாமா கூட்டிப் போக வ்ரப் போறார் இப்ப.. கவலைப்படாதே.. தேவனை விசுவாசி.. ரெபக்காளை அழைத்து இந்த மனுஷ்யன் கூடப் போகிறாயா என்று கேட்டார்.. அவளும் சரியென்று சொல்லி..’

 

கணீரென்று தொடரும் குரலை அமுக்கி, ‘பாம் பாம்’ என்று கார் சத்தம்.

 

‘வா.. தேவன் அழைக்கிறார்’.

 

தெரசாள் வீட்டுக்காரர் மெழுகுதிரியைக் கொளுத்திப் பிடித்தபடி தலையசைக்கிறார்,

 

‘பாட்டொன்று பாடலாமா பாடிட்டு வந்துடறேன்..’

 

முத்தம்மா காம்போசிஷன் நோட்டை கடற்கரை மணலில் பரத்தி வைத்து திருத்த ஆரம்பிக்கிறாள்.

 

கடல் ஆழமானது. கடல் பீதியளிக்கக் கூடியது. பெரிய கண்டங்களைக் கடல் கொண்டுள்ளது. லெமூரியாவும் அவற்றில் ஒன்று. எருமைக்காரன் தெருவையும் கடல் கொள்ளும்.

 

முத்தம்மா எழுந்து நிற்கிறாள். கதாநாயகியும் தோழிகளும் படகை நெருங்கி அவள் பக்கம் வருகிறார்கள். கடல் பின்னால் இரைகிறது. அலையடிக்கிறது.

 

’என்ன பண்றே முத்தம்மா?’

 

கதாநாயகி பிரியத்தோடு விசாரித்தபடி அவளுடைய மூக்குக் கண்ணாடியை உருவுகிறாள். தோழிகள் சிரித்தபடி ஆடுகிறார்கள்.

 

இருங்கடி… கவாப்பு மூஞ்சிக்காரன் வந்து பாட்டுப் படிச்ச பின்னாடி தான் ஆடணும்’

 

கதாநாயகி கண்டித்தபடி தூரத்தில் மோட்டார் சைக்கிள் வருகிறதா என்று பார்க்கிறாள்.

 

முத்தம்மா காம்போசிஷன் நோட்டுகளை படகுக்குப் பின்னால் ஒளித்து வைக்கிறாள்.

கடல் ஆழமானது. கடல் பீதியளிக்கக் கூடியது. பெரிய கண்டங்களைக் கடல் கொண்டுள்ளது. லெமூரியாவும் அவற்றில் ஒன்று. எருமைக்காரன் தெருவையும் கடல் கொள்ளும்.

முத்தம்மா எழுந்து நிற்கிறாள். கதாநாயகியும் தோழிகளும் படகை நெருங்கி அவள் பக்கம் வருகிறார்கள். கடல் பின்னால் இரைகிறது. அலையடிக்கிறது.

’என்ன பண்றே முத்தம்மா?’

கதாநாயகி பிரியத்தோடு விசாரித்தபடி அவளுடைய மூக்குக் கண்ணாடியை உருவுகிறாள். தோழிகள் சிரித்தபடி ஆடுகிறார்கள்.

இருங்கடி… கவாப்பு மூஞ்சிக்காரன் வந்து பாட்டுப் படிச்ச பின்னாடி தான் ஆடணும்’

கதாநாயகி கண்டித்தபடி தூரத்தில் மோட்டார் சைக்கிள் வருகிறதா என்று பார்க்கிறாள்.

முத்தம்மா காம்போசிஷன் நோட்டுகளை படகுக்குப் பின்னால் ஒளித்து வைக்கிறாள். கதாநாயகியும் தோழிகளும் விடாமல் தேடிப் பிடித்து ஒவ்வொரு காகிதமாகக் கிழித்துக் கப்பல் செய்து விளையாடுகிறார்கள். முத்தம்மாவும் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

மோட்டார் பைக் சத்தம்.

முத்தம்மா டீச்சர் இருதயம் ஒரு வினாடி நின்று போகிறது. அப்புறம் சந்தோஷத்தில் திக்குமுக்காடுகிறது.

‘பாட்டொன்று பாடலாமா..’

இழைந்து வருகிற குரல்.

கதாநாயகி ஓட ஆரம்பிக்கிறாள். தோழிகளும் ஓடுகிறார்கள். வரிசைக் கடைசியில் குடையைத் தூக்கிக்கொண்டு முத்தம்மாவும் ஓடுகிறாள்.

அவன் துரத்திக் கொண்டு வருகிறான். பவுடர் அப்பிய முகம் மட்டன் கவாப்பு போல ஊதிக் கிடக்கிறது.

கதாநாயகி வளைந்து நெளிந்து அவன் கையில் பிடிபடாமல் ஓட, முத்தம்மாவும் மற்றவர்களும் தாளத்துக்குத் தகுந்தபடி தொம்தொம் என்று குதித்துக் கொண்டு, மார்பைக் குலுக்கி ஓடுகிறார்கள்.

‘பருவச் சிட்டே.. எங்கே நீ போனாலும்..’

கதாநாயகியின் கையைப் பிடித்து இழுக்கப் போகிறான். அப்புறம் அவள் அவனுடைய மார்பில் சாய வேண்டும். கண்ணை மூடி சந்தோஷத்தை அவள் அனுபவிப்பாள்.

‘தேன் உண்ட வண்டாக..’

வேண்டாம் .. அவளுக்கு இதெல்லாம் கிடைக்க வேண்டாம்..’

முத்தம்மா பணம் கொடுத்திருக்கிறாள். அவள் ‘ஆடு’ என்றால் எல்லோரும் ஆட வேண்டும். ‘பாடு’ என்றால் பாட வேண்டும். கர்ணம் அடிக்கச் சொன்னால், கர்ணம் அடித்து வேடிக்கை காட்ட வேண்டும்.

‘போடி.. போய்த் தரையிலே விழுந்து புரளு.. தட்டுவாணிச் சிறுக்கி..’

முத்தம்மா குடையால் கதாநாயகி விலாவில் இடித்துத் தரையில் தள்ளிவிட, அவள் ஈர மண்ணில் புரள்கிறாள்.

முகம் சுருக்கம் தட்டி, முலை வற்றி, தலை நரைத்துக் கிடக்கும் கதாநாயகி. கண்ணாடி போட்டவள். புறங்கையில் சாக்பீஸ் பொடி அப்பியிருப்பவள்.

உருண்டு திரண்ட உடம்போடு, முகம் பளபளவென்று முத்தம்மா.

அவளுக்கு இருபது வயது. காலேஜில் படிக்கிறாள். காரில் கடற்கரைக்கு வந்திருக்கிறாள்.

முத்தம்மா டீச்சர் திரையிலிருந்து பால்கனியைப் பார்க்க, மாப்பிள்ளையைக் காணோம். கதிரேசனையும். அப்புறம் அம்மா, நாயனா, பினாங்கிலிருந்து வந்த தம்பி, எலிசபெத், மரியஜெகம்…

வேறு யாரும் இல்லாத நாற்காலி வரிசையில் கடையில் உட்கார்ந்து தலையைப் பிடித்தபடி முத்தம்மா டீச்சர் மட்டும்..

‘பாட்டொன்று பாடலாமா.. பக்கம் வந்து பேசலாமா..’

(நிறைவு)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன