இயற்கை மனிதனுக்கு அளித்த செல்வங்களில் மகத்தானவை நிலமும் நீரும் ஆகும். நிலத்தில் வளரும் செடிகொடிகளும், மரங்களும், மனிதனின் பசியைப் போக்க உணவையும், சுவாசிக்க நல்ல காற்றையும் வழங்குகின்றன. நிலத்தின் அடியிலும் இயற்கை பல்வேறு கனிம, படிவ வளங்களை வெகுமதியாகக் கொடுத்துள்ளது. நான் அவற்றில் ஒன்று. என் பெயர் நிலக்கரியாகும்.
முத்தம்மா டீச்சர் காம்போசிஷன் நோட்டு திருத்திக் கொண்டிருந்தாள்.
ஏழாவது வகுப்புப் பாடம். முப்பத்தாறு நோட்டுகளில் நிலக்கரி தன் வரலாறு கூறுகிறது.
கண் மெல்ல இருள்கிறது.
‘நாங்க ரொம்ப ஆசைப்படலே… ஒரு அம்பதாயிரம்.. அப்புறம் பத்திரம் பதியற செலவு..வீடு பழசா இருக்குன்னு பாக்காதீங்க.. இந்தக் கெளட்டு முண்டையைத் தூக்கி வெளியே எறிஞ்சிட்டு, துப்புரவா வெள்ளையடிச்சுக் கொடுத்துடறோம்….அடுத்த வாரம் நாங்க பினாங்கு திரும்பணும்..அதுக்குள்ளே பணத்தோட வந்துடுங்க..’
எலிசபெத் விசுக் விசுக் என்று இடுப்பை ஒடித்து நடந்தபடி வீட்டைச் சுற்றி வருகிறாள். கூடவே, வீடு பார்க்க வந்த யாரோ.
‘இருடி..அவசரப்படாதே.. அக்கா காம்போசிஷன் நோட்டு திருத்தி முடிக்கட்டும்..’
முத்தம்மா டீச்சரின் தம்பி சமாதானப் படுத்துகிற குரலில் சொல்கிறான்.
‘ஆமா.. முப்பது வருசமா நிலக்கரி கதை சொல்றது..நான் சென்ற இன்பச் சுற்றுலா..இந்த மொகரைக் கட்டைக்கு சுற்றுலா…எங்கேயாவது போயிருக்கியாடி?..’
எலிசபெத் இடுப்பில் கை வைத்தபடி கேட்கிறாள். குரலில் எகத்தாளம்.
‘ஒன்னிய மாதிரி ஓடுகாலியாடி..பாத்துப் பாத்து வளர்த்த புள்ளை..மதுரையிலே டீச்சர் டிரயினிங் படிக்கத் தனியா அனுப்பினபோது என் மனசு என்ன பாடு பட்டது தெரியுமா?’
படத்திலிருந்து அம்மா முட்டியைப் பிடித்தபடி மறுபடி இறங்கி வர முயற்சி செய்கிறாள்.
‘வாசல்லே கட்டின எருமையை வித்து பணம் புரட்டின வருத்தம்டி அது..’
நாயனா அவள் கையைப் பிடித்துக் கொண்டு ஒரே முட்டாகச் சிரிக்கிறார்.
‘சும்மா இருங்க.. நீங்களும் போய்ச் சேர்ந்துட்டீங்க..இவனானா சின்னப் பய…ஜோதியெ கடனோ உடனோ வாங்கிக் கட்டிக் கொடுத்தாச்சு..சம்பாதிச்சுக் கொட்ட முத்தம்மாவைத் தவிர வேறே யாரு இருந்தாங்க.. அப்பப் படிக்க வைக்காட்ட இப்படி சம்பாதிக்க முடியுமா..தோசைக் கடையும் போட வேணாம்னுட்டா.. ஜோதி பிரசவம்…தம்பி படிப்பு..நாங்க சாப்பிட.. துணிமணி..இவளுக்குக் கஞ்சிப் பசை போட்ட புடவை..மூக்குக் கண்ணாடி.. குடை.. சம்பளமும் லோனுமா இன்னும் வந்துட்டுத்தானே இருக்கு..எருமை எட்டு வருசத்துலே பால் மரத்துப் போயிடும்..’
அம்மா நீளமாகப் பேசி மூச்சு வாங்க படத்தில் உறைந்து போகிறாள்.
‘நீ ஒண்ணு.. ஜோதியோட மக கல்யாணத்துக்குக் குதிர்ந்துட்டா…அவ வீட்டுக்காரன் போலீஸ் உத்தியோகத்திலே பெரிய வயத்தைத் தவிர வேறே என்னத்தைச் சேர்த்து வச்சான்..முத்தம்மா பணம் வந்தாத்தான் வீட்டுலே சுப காரியம் நடக்கும்..சரி நான் கடுதாசி டெலிவரி பண்ணிட்டு வந்துடறேன்..ஏகமா கல்யாணக் கடுதாசு கொடுக்காம தங்கிப் போச்சு..’
நாயனா சைக்கிள் விடுகிறது போல கையை நீட்டி வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வருகிறார்.
‘என் கல்யாணம் கூட வருதே நைனா.. பத்திரிகை அடிக்க வேணாமா?..’
சைக்கிள் மணிச் சத்தத்தில் முத்தம்மா குரல் அமுங்கிப் போகிறது.
‘என்ன இருந்தாலும் அக்கா பணத்தை எடுத்துக்கிட்டி நான் போயிருக்கக் கூடாது.. தப்புதான்.’
தம்பி மேசை விளிம்பில் உட்கார்கிறான்.
‘அதுனாலே என்ன.. வ்ட்டி வேணா போட்டு இவ மூஞ்சியிலே விட்டு எறிஞ்சிடலாம் .. அதுக்குத்தானே வந்தது..’
எலிசபெத் சொல்லும்போது தெரசாள் மெழுகுதிரிக் கம்பெனி ஒலிபெருக்கியில் மரிய ஜெகத்தின் குரல்..
‘வாருங்கள் … வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே…தேவன் அழைக்கிறான்.. இளைப்பாறுங்கள்..அற்புத சுகமளிக்கும் ஆத்தும சரீர பிரார்த்தனைக் கூட்டம் தொடங்கப் போகிறது . வாருங்கள்..’
‘அயித்தான் கூப்பிடறாரு பாருங்க.. எங்க தெரசாக்கா போனபோது கூட வர முடியாம போயிடுச்சு..வாங்க .. போய்ப் பார்த்துட்டு வரலாம்..’
வயதுக்குப் பொருத்தமில்லாமல் அழுக்கு கவுன் போட்டுக் கொண்டு மேசைக்குப் பின்னால் நிற்கிற எலிசபெத்.
முத்தம்மா டீச்சர் காம்போசிஷன் நோட்டின் அடுத்த பக்கத்தைத் திருப்பினாள்.
நான் தமிழ்நாட்டில் நெய்வேலியில் வெட்டி எடுக்கப் படுகிறேன். பீகாரில் தன்பாதில் பெரிய நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. என்னுடைய பலன்கள் பலப்பல. புகைவண்டிகளில் நீராவி எஞ்ஜின்களில் என்னை எரித்துத்தான் இயங்கத் தேவையான சக்தியைப் பெறுகிறார்கள்.
‘நீராவி எஞ்ஜின் எல்லாம் எப்பவோ ரிடையர் ஆயிடுத்து..நீயும் சீக்கிரம் ஆக வேண்டியது தான்..’
காம்போசிஷன் நோட்டுக்களைக் கட்டி எடுத்து வந்த கொச்சக் கயிற்றில் ஸ்கிப்பிங் விளையாடியபடி எலிசபெத் ஓட்டைப் பல் தெரியச் சிரிக்கிறாள்.