நைஜீரிய உபசாரம்

 உடைப்பு Things Fall Apart நாவல் கிடைத்தது.

நைஜீரிய எழுத்தாளரான நோபல் பரிசு பெற்ற சினுவா அச்பெ எழுதிய இந்த நூல் சின்னச்சின்ன சம்பவங்கள் மூலம் நகரும் கதையமைப்பு கொண்டது.

அவ்வப்போது நைஜீரியர்கள் பயணம் வைத்து நண்பர்களையும், உறவினர்களையும் சந்திக்கும்போது கோக்கோ கொட்டைகளைத் தின்னக் கொடுத்து உபசரிப்பது நாவலில் சீராக நடக்கிறது. ’காப்பி சாப்பிடுங்க’ மாதிரி ’கோக்கோகொட்டை தின்னுங்க’ உபசாரம் அங்கே பரவலானது.

ஃபூ-ஃபூ என்ற வாழைக்காய்ப்பொடி கரைத்துச் சமைத்த பண்டத்தையும், சர்க்கரை வள்ளிக்கிழங்கு கூட்டையும் பரிமாறி உபசரிக்கிறார்கள். விருந்தினருக்கு உணவாகப் பரிமாறவே வீட்டுக்கு வீடு வள்ளிக்கிழங்கு சாகுபடியாகிறது.

விருந்தாளி தலை தட்டுப்பட்டதும் மரக் கலுவங்களில் மேற்படி கிழங்கும் வாழைக்காய்ப்பொடிச் சத்துமாவும் வேகவைக்க மண் அடுப்பில் ஏறுகின்றன.

கடலுக்கு வெகு தொலைவில் இருக்கும் பிரதேசம் என்பதால் அபூர்வமான பொருளான உப்புக்கட்டிகளைப் பார்த்துப் பார்த்து இட்டுக் கிண்டிக் கிளறி மரவைகளில் நிரப்பி எடுத்து வந்து வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் சாப்பிடுகிறார்கள்.

நைஜீரியாவில் உண்ண நிரப்பும் மரவை, கர்னாடகத்தில் அகழ்வாராய்ச்சி செய்யும்போது கிடைத்த புராதனப் பொருட்களில் ஒன்றை நினைவு படுத்துகின்றது. கருங்கல் சாப்பாட்டுத் தட்டு தான் அது. விஜயநகரப் பேரரசின் பதினாறாம் நூற்றாண்டு காலத்தானது.

கருங்கல்லில் குழித்து பெரிய நீள்சதுரக் குழியில் சோறும் அடுத்திருக்கும் சிறு வட்டக் குழிகளில் வியஞ்சனமும், புளிக்குழம்பும் வைத்து விளம்பிய கல் தட்டு. தட்டின் தாராளமான நீள அகலம் மற்றும் ஆழம் பார்க்கும்போது வயிறு நிறைய, தற்போதைய மூன்று சராசரி ஆட்கள் உண்ணும் ஆகாரத்தை அந்தக்கால மனுஷர் ஒருத்தரே உண்டதாகத் தெரிகிறது. அவர் யாரென்று கேட்கவேண்டாம். It appears a plateful of food was consumed by a single person .

இந்த வரலாறு படைத்த கல் தட்டு – கற்றட்டுக்கு என் ‘மிளகு’ பெருநாவலில் ஓர் இடம் கொடுத்தேன். நம்மாலானது.

ஜூலை 2022 புரவி மாத இதழில் பிரசுரமானது –பத்தி வாதவூரான் பரிகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன