காரை பெயர்ந்த தரையில் நேர் கோடாகக் கிடக்கும் தண்ணீர்க் குழாய்களைத் தவிர்த்தபடி

குறுநாவல் பகல் பத்து ராப்பத்து   அத்தியாயம் 9

 

’முன்னூற்று முப்பத்தஞ்சு ரூபாய்’.

 

ராமபத்ரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.

 

மொட்டை மாடி அரை இருட்டு.

 

காரை பெயர்ந்த தரையில் நேர் கோடாகக் கிடக்கும் தண்ணீர்க் குழாய்களைத் தாண்டித் தவிர்த்தபடி.

 

ராமபத்ரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.

 

நீளக் கட்டிய பிளாஸ்டிக் கயிற்றுக் கொடியில் உலர்த்தி எடுக்க மறந்துபோன மார்க் கச்சையின் கொக்கி காதில் பிறாண்ட ..

 

யாரோடது இத்தனை பெரிசா..

 

லேசான ஈர வாடையை முகர்ந்தபடி.

 

ராமபத்ரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.

 

வரிசையாகத் தூக்கி நிறுத்திய ராட்சச சிண்டெக்ஸ் தொட்டிகளின் பின்னால் வளைச் சத்தத்தையும் சிணுங்கலையும் காதில் வாங்கியபடி..

 

‘நேரமாயிடுத்து..வத்தக் குழம்பு கொதிச்சு வத்தியிருக்கும்.. குக்கர் வைக்கணும்.. .. சிஞ்ச்வாட் அத்திம்பேர் கலம் சாதம் சம்ப்ரமமா சாப்பிடுவார்.. குழந்தைகள் வேறே சமையல்கட்டுலே டப்பா ஒண்ணு விடாம திறந்து பார்த்து உப்பு பிஸ்கெட்டை எல்லாம் தின்னு தீர்த்தாச்சு.. ராச்சாப்பாடு முடிச்சுத்தான் சகுடும்பம் டோம்பிவிலி போற ஏற்பாடாம்..கையை எடுங்கோ..’

 

‘சத்தம் போடாதேடீ.. ’

 

உடம்பே இத்து விழுந்துடும் போல இருக்கு..சொல்லிண்டே இருக்கேன்.. கை எங்கெல்லாம்..

 

‘அஞ்சே நிமிஷம்..’

 

’அதுவே உங்களுக்கு ஜாஸ்தி’

 

பந்து ஜனம் வந்து நிறைந்த ஃப்ளாட்டிலிருந்து கிளம்பி மேலே ஊர்ந்து வந்த, இடது தோளில் பல்லி விழுந்த யாரோ…

 

ராமபத்ரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.

 

’முன்னூத்து முப்பத்தஞ்சு ரூபாய்..’

 

மனதில் பலமாகக் கவ்விப் பிடித்த முன்னூத்து முப்பத்தஞ்சு ரூபாய் விசாரம்.

 

கோயில் கும்பாபிஷேக வசூல் பணத்தில் குறைகிறது. சாயந்திரத்துக்கு அப்புறமான பட்டுவாடாவில் கை மாறி இருக்கிறது. யாரிடம்?

 

சாயந்திரம்..

 

ஆறு பதினைந்து லோக்கலைப் பிடிக்க வி.டி நெரிசலில், பவுண்டன் பெப்ஸி ஸ்டால் எதிரே பிளாஸ்டிக் கோப்பையைக் கொஞ்சூண்டு கருப்புத் திரவத்தோடு ராமபத்ரனின் பேண்டில் குளிர விசிறியடித்துப் போன குட்டைப் பாவாடைக்கார சிகப்பியை – இன்னும் மனசில் நடக்கிற கால் அவளுக்கு – சபிப்பதில் தொடங்கியது அது.

 

ஏற்கனவே வந்து சேர்ந்து, கம்பார்ட்மெண்டில் அரட்டை போட்டுக் கொண்டிருந்த ஜமா, ‘என்ன ஓய் .. இருட்ட மின்னாடியே இந்தியா மேப்போட வர்றீர்..?’ என்று உற்சாகமாக வரவேற்று உட்கார்த்தி வைக்கக் களை கட்டியது.

 

சாந்தர்ஸ்ட் ரோடு நெருங்கும்போது, காலையில் வராத காரணத்தைத் துருவி விசாரிக்க மழுப்பி, தொடர்ந்து கெல்லியதில் பைகுல்லாவில் புளியோதரை மகாத்மியம் அரங்கேறியது.

 

பரேல் தாண்டியானதும் அவரவர் வசூல் கணக்கைப் பிரித்து வைத்துக் கொள்ள, தகவல் அறிவிப்பு, கூட்டல் கழித்தல் என்று கிரமமாக சூடு பிடித்தது.

 

குர்லா ஸ்டேஷனில் வைத்து நாச்சியப்பன், தச்சு வேலைக்குக் கொடுக்கக் குறைகிறது என்று ஆயிரத்து முப்பது வாங்கிக் கொண்டான்.

 

‘கோயில் பள்ளியறைக் கதவு ஞாயித்துக்கிளமை முடிச்சிருக்க வேண்டியது… விஸ்வகர்மா பூஜைன்னு ஏறக்கட்டி வச்சிட்டான் சார்.. இப்ப முடிச்சிருப்பான்..’

 

பாண்டுப்பில் சடாரென்று நினைவு வர, திருமலாச்சாரி முன்னூறு ரூபாய் கொடுத்தார். கொத்தனார் கணக்கு அவர் வசம்தான். பத்து நாள் முன்னால் செங்கலுக்காக வாங்கிக் கொண்டதில், கணக்குத் தீர்ந்தது.

 

நாகராஜன் தாணாவில் இறங்குவதற்கு முன், துவஜஸ்தம்பத்து மேற்கே சுவர் நெடுக ட்யூப் லைட் போட்டுத் தருவதாகச் சொன்ன ஒரு தெலுங்குக்காரர் தொடர்ந்து ஒரு மாசமாகக் கண்ணில் படாததால், வசூல் பணத்தில் அந்தக் கைங்கர்யத்தை முடித்து விடலாம் என்று எல்லோரிடமும் இருநூறு ரூபாய் வீதம் வாங்கிக் கொண்டு போனான்.

 

அப்புறம் டோம்பிவிலியில்..

 

‘வயத்துக்குக் கொட்டிண்டு போய் மாடியிலே லாந்தக் கூடாதா.. பிராணனை வாங்கறேளே .. தலைக்கு மேலே ஜோலித் தெரக்கு..’

 

அகிலாண்டம் மூச்சிரைக்கப் படி ஏறி வந்தாள்.

 

‘உஷ்.. மெல்லப் பேசுடி.. மனுஷா இருக்கா..’

 

சிண்டெக்ஸ் தொட்டிப் பக்கம் கையைக் காட்டியபடி ராமபத்ரன் படி இறங்கினார்.

 

‘சாப்பிட்டுப் போய் தீபம் பிடிங்கோ ..’

 

மாடிப்படி வளைவில், இடுப்பில் இறுக்க முற்பட்ட கையை வெடுக்கென்று தள்ளினாள்.

 

இல்லாவிட்டாலும், ராமபத்ரன் கஷ்டப்பட்டுத்தான் வளைத்திருக்க முடியும்.

 

‘திருமலை நாயக்கர் மஹால் தூண் மாதிரி..’

 

டைனிங் டேபிள் மடக்கி சுவரில் தொங்க, தரையில் சாப்பாட்டுத் தட்டு.

 

‘என்னது?’

 

அகிலாண்டம் பீங்கான் ஜாடியை நகர்த்தினாள்.

 

‘வழுவழுப்பைச் சொன்னேன்..’

 

‘இந்த எளப்பம் தானே வேணாங்கிறது.. நீங்க மட்டும் அன்னிக்கு கண்ட மேனிக்கு அழியாம இருக்கறதா நெனைப்பா.. கண்ணாடியை முழுசாப் பாருங்கோ.. ஷிண்டேயாத்துக்காரியை விட பெரிசா தொப்பை..’

 

செல்லமாக வயிற்றில் குத்தினாள்.

 

‘புளியோதரை எப்படி இருந்ததாம்?’

 

சம்பிரதாயமாக விசாரித்தார்.

 

‘காலம்பற முக்கி முனகிண்டு மாடியிலே துணி உலர்த்த வந்தா.. இம்லி சாவல் நாக்குக்கு ருஜியா இருந்ததாடி பொண்ணேன்னு கேட்டேன்.. அந்த ஷிண்டே கடன்காரனே பாதியும் மொசுக்கிட்டானாம்.. அவனுக்கா மசக்கை? ..புளிக்காய்ச்சல் போடட்டா?.’

 

அவசரமாக மறுத்தார்.

 

‘மாடியிலே காயப் போட்ட துணியை எல்லாம் எடுத்தாளோ?’

 

மனசு எங்கெங்கோ அலை பாய்கிறது.

 

ராமபத்ரா.. சத் விஷயங்களில் மனசைக் கட்டிப் போடு.. கோயில் கைங்கரியம்.. கும்பாபிஷேக வசூல்.. கணக்கு முன்னூத்துச் சில்லரை ரூபாய் இடிக்கிறது.. நேராக்க வேணாமா?

 

வாஷ்பேசினில் கையலம்பி விட்டு வர, டேப் ரிக்கார்டரில் காத்திரமாக சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் குரலில் மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம்.

 

‘டி.வி போடலாம்னு பார்த்தேன்..’

 

மெல்ல முனகினார்.

 

‘பத்து நாள் பொறுத்துக்குங்கோ.. பாட்டுப் பாடறேன்னு இந்திப் படக் கடன்காரன் ஒத்தொருத்தனும் மாருக்கு நடுவிலே தாடையை வச்சுத் தேய்க்கறதை சாவகாசமாப் பார்த்துக்கலாம்..’

 

‘பத்து நாள் என்ன கணக்கு?’

 

ஃப்ரிட்ஜைத் திறந்து வெற்றிலை எடுத்தார்.

 

‘கொலு ஆரம்பிக்கறதே.. ஞாபகம் இல்லையோ..?’

 

டைனிங் டேபிள் மடக்கப்பட அதுதான் காரணம். டி.வியும் ஓரமாக ஒதுங்கி, துணி போர்த்திக் கொண்டு தூங்கி விடும்.

 

இருக்கிற இடத்தில் கொலு வைத்துவிட்டு, சட்டமாக மேஜை நாற்காலி போட்டுச் சாப்பிட, ஸ்டார் டிவியில், சமுத்திரத்தில் குளிக்கப் போகிற வெள்ளைக்காரிகளை நிதானமாகப் பார்க்க என்று சுகம் கொண்டாட முடியாது.

 

‘கொலுப்படியை எறக்கிக் கொடுத்துட்டு மாடி ஏறுங்கோ.. சினிமா முடிஞ்சிருக்காது..’

 

சாதத்தில் தயிர் குத்தியபடியே விரட்டுகிற அகிலாண்டம்.

 

‘காலம்பர எறக்கித் தரேனே’

 

நைச்சியமாகக் கேட்டார்.

 

‘நாளைக்குப் பாட்டிம்மை.. ஐயர் ஏந்திருக்கறதுக்குள்ளே அமாவாசை போயிடும்..’

 

விழுதாக அவள் புளிக் காய்ச்சலை அவள் தட்டில் போட்டுக் கொண்டதை சின்ன நடுக்கத்தோடு பார்த்தார். இவளுக்கு எதுவும் வாதாபி ஜீரணம் ஆகிவிடும்.

 

‘வயத்தை லவலேசம் வலிக்கறதுடி..கான்ஸ்டிபேட் ஆகியிருக்கு.. புளியோதரை..’

 

‘ஆமா.. நான் கேட்டா கான்ஸ்டிபேட், ஹைட்ராசில்னு ஏதாவது சாக்கு சொல்ல வேண்டியது.. கோயில் கட்டறேன்.. கும்பாபிஷேகம் பண்றேன்னு சுத்த எதேஷ்டமா நேரம் கொழிக்கும்… காண்டிவ்லியிலே சேட்டைப் பார்த்து சிமெண்ட் வாங்கணுமா.. தோ வந்துட்டேன்னு ஓடலாம்..விரார்லே சூவனீருக்கு அட்வர்டைஸ்மெண்ட் தரேன்னானா ஒரு தீத்தாராண்டி… அவனை தட்சணமே தரிசனம் பண்ண குதிச்சுண்டு போகலாம்.. மாடுங்காவிலே சங்கர மடத்துலே சாஸ்திரிகளை குரூப் புக்கிங் பண்ண பையைத் தூக்கிண்டு லோக்கல் பிடிக்க சாடலாம்..ஐயர்வாளுக்கு இதெல்லாத்துக்கும் எம்புட்டு அலைஞ்சாலும் உடம்பு சொன்னபடி சலாம் போட்டுக் கேக்கும்.. ஒரு ஞாயித்துக் கிழமை வீடு தங்கினதுண்டா இந்த மூணு மாசத்துலே…?’

 

ராமபத்ரன் அயிகிரி நந்தினியைப் பெரிதாக்கினார். அபானவாயு விட்டால்கூட அடுத்த ஃப்ளாட்டில் கேட்கும்.

 

‘ஸ்டூலை நகர்த்து..’

 

வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஸ்டூலில் ஏறி பருந்துப் பார்வை பார்க்க, அலமாரி மேல் தட்டில் பச்சை வாழைப்பழச் சீப்பு.

 

இரண்டு பிய்த்துத் தின்றால் நாளைக்கு பிரம்மசௌசம் கலகலவென்று கவலையில்லாமல் ஆகும்.

 

எடுத்தால் இவள் கத்துவாள்.. ‘காலம்பற பூஜைக்கு வச்சிருக்கேன்.. எடுக்காதீங்கோ..’

 

ஒரு பெருமூச்சோடு கொலுப்படிகளை மெல்ல இறக்கிக் கீழே வைக்க பனியன் முழுக்க ஒட்டடை.

 

அகிலாண்டம் பனியனைக் கழற்றி, புடவை முந்தானையால் நெஞ்சிலும் முகத்திலும் துடைத்து விட்டாள்.

 

மெனோபாஸ் தொட்டுவிடும் தூரத்தில் இருந்தாலும், கட்டுக் குலையாத அகிலாண்டம். ராமபத்ரன் இந்திப் படக் கதாநாயகனாகத் தாடையைத் தடவிக் கொண்டு பார்க்க, விலகிப் போனாள்.

 

‘இன்னிக்குப் பேப்பர் எங்கே.. காலம்பறயே சரியாப் படிக்கலே.. ‘

 

‘அலமாரியிலே பாருங்கோளேன்.. எல்லாத்துக்கும் அகிலாண்டம் வரணும்.. அங்கே மேல் தட்டுலே கேலா வாங்கி வச்சிருக்கேன்.. ரெண்டு எடுத்துக்குங்கோ.. நல்ல கான்ஸ்டிபேஷன்.. ஆசமனம் பண்ற மாதிரி தண்ணி குடிச்சா வராம என்ன பண்ணும்..’

 

தரையில் உட்கார்ந்து பேப்பரைப் பிரிக்க, அகிலாண்டம் படுக்கையை இறக்கி வைத்துவிட்டுப் பொம்மைப் பெட்டியைத் திறந்தாள்.

 

‘ஐயா…. வெஸ்டர்ன் ரயில்வேயில் தினசரி தாமதத்தைத் தவிர்க்க, போரிவலியில் ஒரு ஓவர் பிரிட்ஜ் கட்ட வேண்டிய அவசரத்தையும் அவசியத்தையும்..’

 

யாரோ ஜோஷி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்..

 

புளியோதரை சாப்பிடாமலேயே தினசரி ஆபீஸுக்குத் தாமதமாகப் போகிற பேர்வழி..

 

‘கொலு எடுத்து வச்சுட்டு, மொறிச்சுனு துடைக்கப் போறேன்.. தரையெல்லாம் பிசுபிசுன்னு ஒட்டறது… பாயும் தலகாணியும் தூக்கிண்டு வராந்தாவுக்குப் போய்ச் சேருங்கோ..’

 

’வராந்தாவா?’

 

ராமபத்ரன் பேப்பரை மடக்கி வைத்துவிட்டு எழுந்து நின்றார்.

 

‘புதுசாக் கேக்கறேளே .. வருஷா வருஷம் பண்றது தானே.. நவராத்திரி முடியற வரை இங்கே படுக்கை விரிக்க முடியுமா?.. ஒரு பத்து நாளாவது அட்டுப் பிடிக்காம ஆசாரத்தோடு இருந்தா ஒண்ணும் குறைஞ்சுடாது.. லட்சுமணன் வில்லு எங்கே விழுந்து தொலச்சது? பெட்டியிலேயே கிடக்கான்னு பாக்கணும்..’

 

தும்மிக் கொண்டே ராமர் பட்டாபிஷேக செட்டை எடுத்துத் தூசி தட்ட ஆரம்பித்தாள்.

 

‘நாளைக்கு வரச்சே கொஞ்சம் மாடுங்காவிலே எறங்கி சந்தன வில்லையும், கல்ப்பூரமும் வாங்கிண்டு வரேளா? பாலடைப் பிரதமன் பண்ண ரெண்டு பாக்கெட்..’

 

வராந்தாவுக்கு வந்து படுக்கையை விரித்தார். முன்னூத்து முப்பத்தஞ்சு ரூபாய்.. எங்கே போயிருக்கும்?

 

திருமலாச்சாரி கொடுத்தாரா.. கொடுக்கப் போவதாகச் சொன்னாரா ?

 

ஓபராய் நீச்சல் குளத்தில் ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்தா நீந்துவார்கள்?

 

நாளைக்கே கேசவ் ஷெனாயைப் போய்ப் பார்த்து வசூல் செய்து..

 

மாடிக் கொடியிலே யாருடைய துணி.. மேலே புதுசாகக் குடி வந்த மலையாளி நர்ஸ்.. சுநந்தா நாயரா.. என்ன பெயர்.. கருப்புதான்.. உடம்பு…

 

சின்ன கோகலே வாக்கு தத்தம் பண்ணிய அம்பதாயிரம் வந்தால், துவஜஸ்தம்பத்தில் வெள்ளித் தகடு பதித்து விடலாம்..

 

சிண்டக்ஸ் தொட்டி பின்னால் தண்ணீர்க் குழாய் நிறையப் போகுமே.. படுக்க முடியுமோ.. உக்கார்ந்த படிக்கே எப்படி.. யார் அது..?

 

கும்பாபிஷேக சமயம் ஒரு வாரமாவது லீவு போட்டு விட்டு யாக சாலையில் போய் உட்கார்ந்து விட வேண்டும்..

 

இத்தனை வயசுக்கு மேல் வேர்ட் பிராசசிங் படித்து என்ன கிழிக்கணும்?

 

புரண்டு படுத்தார்.

 

சுவரில் கால் இடித்தது. காதில் கொசு பாடியது.

 

இந்தப் பக்கம் நகர்ந்தால் கதவில் கால் தட்டும்.

 

முன்னூற்றுச் சில்லரை சதுர அடியில் இதுக்கு மேல் தோதுப்படாது.

 

அட்ஜஸ்ட் பண்ணிக்கத்தான் வேணும்.. போகிற வரைக்கும்..

 

ஆயிரத்து ஐநூறு சதுர அடி.. பரபரவென்று விரியும் பிரகாரம்.. வினாயகர் சந்நிதி.. சுப்ரமணியர்.. சின்னதா நவக்கிரக சந்நிதி.. பூந்தோட்டம்.. அங்கப் பிரதட்சணம் செய்ய வசதியா கோயில் நடை.. வழுவழுன்னு பாளம் பதிச்சு.. உள்ளே கருங்கல் சுவர் .. தோட்டத்தில் நந்தியாவட்டை.. துளசி.. மாமரம்.. அரச மரம்.. ஜிலுஜிலுன்னு காத்து..

 

அவர் தூங்கியிருந்தார்.

 

(முற்றும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன