அகல்யா தாய்க்குப் பார்க்கக் கொடுத்து வைக்காத அவளது மரணம் – வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து

வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் நான்கில் இருந்து

வாழ்ந்து போதீரே   அத்தியாயம்   முப்பத்தாறு    

          

மலா பாக ருபயீ த்யா, மோதா பாவு. அப்பன் காஹீ தூபா கரீதீ கரூ.

 

ஐந்து நிமிஷம் முன் டோம்பிவிலி ஃபாஸ்ட் லோக்கல் ரயிலில் வந்து சேர்ந்தவன், ரிடர்ன் டிக்கட்டை சிகரெட் பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்தியபடி திலீப்பிடம் சொன்னான்.  ஐந்து ரூபாய் வேணுமாம். போய் நெய் வாங்கி வருவானாம்.

 

நாலு மூங்கில் கழிகளும் தென்னங் கிடுகுமாக சைக்கிளில் வந்த இன்னொருத்தன் வண்டி பிரேக் பிடிக்காமலோ, இல்லை விளையாட்டாகவோ கட்டிடச் சுவரில், சினிமா கதாநாயகி நடிகை நூதன் படம் ஒட்டிய போஸ்டரில் இடுப்புக்குக் கீழ் முட்டி நிறுத்தினான்.

 

ஒன்றும் இரண்டுமாக மூலத்தார் வேட்டி உடுத்தி, வெள்ளைக் குல்லா வைத்த நடுவயசு மராட்டியர்களும் இளைய ஆண்களும் உரக்கப் பேசியபடி வந்து கொண்டிருந்தார்கள்.

 

பாண்டுப் சர்வமங்கள் சாலில்  சாவுச் சடங்கு நடத்திக் கொடுக்க திலீபுக்கு ஒத்தாசையாக வருகிறவர்கள். அவர்கள் எல்லோரையும் திலீப் அறிவான். காமத் ஓட்டலில் சர்வர் விடுப்பில் போக டெம்பரவரியாக வடா பாவ் பார்சல் கட்டுகிறவர்கள்.  எச்சில் இலைகளை எடுத்து இரும்பு வாளியில் ரெண்டு பேராக நீளக் கயிறு கட்டித் தூக்கிப் போய் குப்பை குவிக்கும் பெருவெளியில் வீசி எறிந்து விட்டு பீடி புகைத்தபடி வருகிறவர்கள். விநாயக சதுர்த்திக்கு தாதரிலும் மடுங்காவிலும் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி விளாம்பழம் விற்கக் கடை போட்டு, பக்கத்து நடைபாதைக் கடைக் காரர்களால் வசவும் கேலியும் பெற்று பொருட்படுத்தாமல் வியாபாரம் செய்கிறவர்கள்.  தீபாவளிக்கு பெரிய முறங்களில் உள்ளூரிலோ மராத்வாடா பிரதேச கிராமங்களிலோ அபாயமில்லாத வெங்காய வெடி செய்து அனுப்புவதைப் பரத்தி அதே நடைபாதைகளில் ஒன்று இரண்டு வெடிகளைத் தரையில் எறிந்து பலமாக வெடித்து விற்பவர்கள்.  மகாலட்சுமி கோவில் வாசலில் செருப்பு டோக்கன் கொடுத்து காசு வசூலிப்பவர்கள். இல்லாத நேரங்களில் பிணம் தூக்குகிறவர்கள்.

 

எப்படியோ யார் மூலமோ தகவல் தெரிந்து சாவு விழுந்த மராட்டிய வீடுகளுக்கு எல்லாம் கிரமமாக நடத்திக் கொடுத்துப் பிணம் தூக்கிப் போக வந்து விடுகிறவர்கள். அவர்களை திலீப் வேறு இடங்களிலும் சந்தித்திருக்கிறான். அதெல்லாம் அவனும் போகக் கூடாத இடங்கள் தன். நல்ல வேளையாக அகல்யா வந்தாளோ அதை எல்லாம் விட்டு விலகி வந்தானோ.

 

பய்யா, பைசா கொடு. கொடுத்தாத் தான் நெய் வாங்கிட்டு வர முடியும்.

 

நெய் வாங்கக் காசு கேட்டவன் அண்டர்வேரோடு நின்று கால் சராயை மடித்து தோல்பையில் வைத்து கொண்டிருந்தான்.  மூலத்தார் வேட்டியை பக்கத்தில் இருந்தவன் தன் பையிலிருந்து எடுத்து நீட்டியபடி திலீபுக்காகப் பரிந்து வந்தான்

 

தருவான். அம்மாவைப் பறி கொடுத்த பிள்ளை. உனக்கு அந்த சோகம் தெரியாது

 

திலீப் அவனை விழித்துப் பார்த்தான். எல்லோரும் அவனிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். சினிமாவில் பார்த்தபடி, தொடர்கதையில் படித்தபடி, மேடை போட்டு நீட்டி முழக்கித் தலைவர்கள் பேசுவதைக் கேட்டபடி, எல்லாரும் எதிர்பார்க்கிற படி அவன் இப்போது அழுது புரண்டு கொண்டிருக்க வேண்டும். கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்து சட்டையை நனைக்க, விம்மி விம்மி அழ வேண்டும். பக்கத்தில் இருப்பவர்கள் தேற்றத் தேற்ற, அம்மாவைப் பற்றிய பழைய நினைவுகளில் மூழ்கி அதைத் திடுமெனத் தொடங்கும் மறு பாதியாக, நடுவிலிருந்து பிய்த்து எடுத்த ஒரு வார்த்தையாக, சொல்லத் தொடங்கி விம்மலில் கரைகிறதாக வெளியிட்டபடி இருக்க வேண்டும். எதுவுமே இல்லாவிட்டால், டர்க்கி டவலால் தோளைப் போர்த்திக் கொண்டு சூனியத்தில் பார்வை நிலைக்க விழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்.

 

அகல்யா, ஒரு வாய் காப்பி கொடு. தலையை வலிக்கறது.

 

வாசலுக்கு வந்த அகல்யா அவனைப் பார்க்க, திலீப்  கேட்டான்.

 

அவள் அவனைக் கண்டிப்பது போல் உதட்டைச் சுழித்துக் காட்டி நெய் வாங்கப் போகிறவன் குறுக்கிட, சாவு நடந்த வீட்டு எஜமானியாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

 

அகல்யா தலையை இறுக்கமாக முடிந்தபடி அவசரமாக அவன் பக்கம் வந்தாள். வாழ்க்கை பூரா சர்வமங்கள் சால் குடியிருப்பில் இந்த மாதிரி சமாசாரங்களுக்கு நடுவே குடும்பம் நடத்தி, ஆபீஸ் போய் வந்து, தீபாவளியும் கணேஷ் சதுர்த்தியும் கொண்டாடி, ஞாயிறு பகல் பக்கத்துக் குடித்தனப் பெண்களோடு ஊர் வம்பு பேசி, வடா பாவ் வீட்டிலேயே செய்ய முயன்று கருகலும், எண்ணெய் முறுகலுமாக எதையோ செய்து முடித்துப் பகிர்ந்து சாப்பிட்டு, கூடிய மட்டும் சந்தோஷமாக இருக்கிற பெண். தமிழ்ப் பிராமணத்தியோ, மராத்திக் காரியோ இல்லை. பெண். எல்லா சூழ்நிலைகளிலும் தலையை உயர்த்தி இருந்து, நதியோடு போய், எட்டரை மணி டோம்பிவிலி-தாதர் லோக்கல் போய் விட்டதா என்பது போன்ற கவலைகள் தவிர வேறே இல்லாத பெண்.

 

எதிர்க் குடித்தனத்திலே டாங்க்வாலே மருமகள் ரேகா காப்பி போட்டுண்டு இருக்கா. வடா பாவ் வாங்கி வந்தது இருந்தது, அதையும் ஸ்டவ்லே தண்ணி விட்டு மேலே வச்சு சூடாக்கறா. ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு நான் உள்ளே இருந்து கூப்பிடறேன். நேரே டாங்க்வாலே ப்ளாட்டுக்குள்ளே போயிடுங்கோ.

 

ரேகா எல்லாம் கொடுப்பாள்னா சரி.

 

அகல்யா அவனை மகா ஆச்சரியத்தோடு பார்த்தாள். அம்மாவைப் பறி கொடுத்து விட்டு நிற்கிறவன், பெண்டாட்டியிடம் ஏடாகூடமாக அர்த்தம் வரும் ஜோக் சொல்லுவானா என்ன? அவனுடைய சிந்தனையும் நினைவும் எல்லாம் ஈசுவரனிலும், உயிர் துறந்த ஆத்மாவை நற்கதிக்குக் கொண்டு செலுத்த இயன்றதைச் செய்வதிலும் அல்லவா இருக்கும்.

 

நீங்க எங்கேயும் போக வேண்டாம். சும்மா எதுவும் பேசாமா நின்னுண்டிருங்கோ. நானே வந்து கூட்டிப் போய்க் கொண்டு வந்து விடறேன்.

 

அவள் சொல்லி விட்டுப் போனவள் திரும்பி வந்தாள்.

 

வாசல்லே ஒரு ஷாமியானா பணிய வேண்டாமா? அகல்யா கேட்டாள்.

 

ஷாமியானா? புரியாமல் பார்த்தான் திலீப்.

 

பந்தல்.

 

எதுக்கு?

 

எதுக்கா? நாலு அண்டை அயல் பிராமணா குளிக்கறதுக்கு முந்தி வந்து எட்டிப் பார்த்துட்டு ஓடற கதையா என்ன?

 

வேறே என்னவாம்?

 

என்ன கேள்வி கேட்டாறது. நினைவில்லையா? நிறை சுமங்கலி. கல்யாணச் சாவு

 

அப்பா போயாச்சே. அப்புறம் என்ன சுமங்கலி?

 

அவர் காணாமல் தான் போனார். சௌக்கியமா எங்கேயோ இருக்கார்.

 

அதுக்கும் ஷாமியானாவுக்கும் என்ன சம்பந்தம்? திலீப் புரியாமல் கேட்டான்.

 

அது இருக்கட்டும். அம்மா பெரிய லாவணி ஆர்டிஸ்ட். மகாராஷ்ட்ரா பூரா தெரிஞ்சவா, சீஃப் மினிஸ்டர் வரலாம். உங்க பெரியப்பா. செண்ட்ரல் மினிஸ்டர் வருவார். கூடவே அதிகாரிகள் வரலாம். அப்புறம் உங்க தலைவர் கூட.

 

நிமிர்ந்து பார்த்தான் திலீப். உண்மைதான். அவனுடைய மராத்தி அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமானது.  மராத்திக்காரி அம்மா இறந்து போனாள். அவனுக்குள் கொஞ்சமாவது அவளுடைய மராத்தி ரத்தமில்லையா ஓடுகிறது?

 

முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் நேரம். லாவணி ஆட்டக்காரி, மராத்தியப் பெண்மணி, ஷாலினிதாய்க்கு ஏக புத்ரன் திலீப். மராத்தியன் திலீப். திலீப் மோரே. இந்த வார்டில் போட்டியிடத் தகுதி. அம்மா இறக்க, திலீப்புக்கு கட்சி வேட்பாளர் அருகதை கிட்டும்.

 

சுறுசுறுப்பு தொற்றிக் கொண்டது. புதுசாக வந்து சேர்ந்த ஒரு எடுபிடியிடம்  ஷாமியானா என்று சொல்ல அவன் சரியென்று சொல்லி, வந்த வேகத்தில் சைக்கிளைத் திருப்பி குலை தெறிக்க ஓட்டிப் போனான்.

 

வார்ட் பிரமுகர் மிட்டாய்க்கடை கதம் இந்தத் துக்கச் செய்தியைக் கேட்டு ஓடி வர வேணாமா?

 

ஓரமாகச் சுவரில் சாய்ந்து நின்று சிகரெட்டை ஊதிக் கொண்டிருந்த பிரக்ருதியை ஓடச் சொன்னான். அவனும் மகாராஜா உத்தரவு கொண்ட சிப்பாய் போல் சிட்டாகப் பறிந்தான்.

 

இந்தப் பயல்கள் எல்லோருக்கும் கணிசமாக, எல்லாம் முடிந்து போகும்போது கொடுக்க வேண்டும் என்று தெரியும். சகலத்துக்கும் செலவாகப் போகிற பணத்துக்கு என்ன செய்வது? பெரியம்மா சலுகை காட்ட, பிஸ்கட் பன்றி மனசே இன்றி அனுமதித்த நாலாயிரம் ரூபாய் கைவசம் உண்டு. அது போதுமா? அதுவும் இதெல்லாம் ஒரு நாள் காரியம் இல்லையே. தமிழோ, தெலுங்கோ, மராத்தியோ, பத்து நாளும் அதற்கு மேலும் இல்லையா ஏதேதோ வைதீகமும், விருந்துமாக முழங்குமே.

 

அவனுக்கு விசித்திரமாக இருந்தது. சொந்த அம்மா இறந்து போய் இப்படி அதைப் பற்றித் துக்கமோ வருத்தமோ இல்லாமல், மூன்றாம் மனிதன் மாதிரி, அதை அருகே இருந்து பார்த்து அனுபவப்படும் இழவாக மட்டும் எடுத்துக் கொள்ள எப்படி மனம் வந்தது? அடிப்படையிலேயே ஏதோ தவறு அவனிடம்.

 

இறப்பு சர்ட்டிபிகேட் வாங்கி வந்துடலாமா?

 

யாரோ கேட்டார்கள். நல்ல விதமாக உடுத்து, சட்டையைக் கால் சராய்க்குள் நுழைத்து கச்சிதமாக இடுப்பு வார் கட்டி இருந்தவர். டை மட்டும் தான் குறைகிறது. இருந்தால் பிஸ்கட் சாஸ்திரிக்கு சகலபாடி போல இருப்பான்.

 

நாசுக்கான, மேல் மட்டத்தில், அதிகாரப் பெரும் பரப்பில் நடத்தித் தர வேண்டிய காரியங்களைச் செய்வதே எனக்கு வேலை.

 

வந்தவன் சொன்னான். ஆக, மற்றவர்கள் மூலக் கச்சம் உடுத்தி திலீப்புக்கு சகாயம் புரிய வந்தால், நன்றாக உடுத்தி வேறே மாதிரி உதவி செய்ய வந்தவன் இவன்.  விரட்ட மனம் இல்லை. இவன் வகையில் நாலாயிரத்தில் ஆயிரமாவது போகலாம். போகட்டும். சாவு சர்டிபிகேட் இல்லாமல் எப்படி மயானத்தில் எரிப்பது?

 

முன்பணமாக அவனுக்கு இருநூறு ரூபாய் எடுத்துக் கொடுத்து, இன்னொரு எடுபிடிக்கு பதினைந்து ரூபாய் எண்ணிக் கொடுக்கும்போது உள்ளே இருந்து அகல்யா குரல். போனான்.

 

வேகமா சாப்பிடுங்கோ. அங்கே அம்மா தகனத்துக்குப் போறதுக்காகக் கிடக்கா. இங்கே என்னடான்னா வந்த மூதேவியும் வீட்டுப் பிள்ளையாண்டனும் கொண்டா கொண்டான்னு கொட்டிண்டிருக்கான்னு மூணு பாஷையிலே சொல்வா.

 

அவன் காதில் மட்டும் படச் சொல்லி முன்னால் நடந்தாள்.

 

வடாபாவை வாயில் திணித்துக் கொண்டிருந்தபோது அங்கேயே தேடி வந்த அகல்யாவின் அப்பா, மாப்பிள்ளை என்ன இப்படி ஆகிப் போச்சே என்று உலகத்துத் துக்கம் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி நிறுத்தி திலீப்பிடம் விசாரிக்கும் குரலில் கேட்டார். போய்ட்டா என்றான் அவன் சகஜமாக.

 

எச்சில் கையை கால்சராயில் துடைத்தபடி வெளியே வர, ஒரு வேன் வந்து நிற்பது கண்ணில் பட்டது. கூட்டமாக யாரோ வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

ஓடி, வாசலில் போய் நின்றான். எடுபிடிகள் காந்தி குல்லாவை நேராக்கிக் கொண்டு அவனுக்கு முன்னால் நகர்ந்தார்கள்.

 

வேனிலிருந்து மெல்ல இறங்கி  வந்து கொண்டிருப்பவர்கள் நகரத்துக்கு வெகு தூரம் வெளியில் இருக்கும் புறநகரப் பிரதேசங்களில் இருந்து வரும் பழைய லாவணி கலைஞர்கள். அம்மா செயலாக இருந்தபோது அவர்களில் பலரும் வீட்டுக்கு வந்து போனதை திலீப் மறக்க மாட்டான்.

 

கிராமத்துக் கலைகள் எல்லாம் நசித்துக் கொண்டிருக்க, அந்தக் கலைஞர்கள் சாயாக் கடை வைத்தும், தெருத்தெருவாக பன்னும் பிஸ்கட்டும் சைக்கிளில் கட்டி எடுத்துப் போய் விற்றும், தலையணைக்குப் பஞ்சு அடைத்துக் கொடுத்தும் ஜீவித்துக் கொண்டிருப்பவர்கள். சொற்பமான பெண்கள் இவர்களில் உண்டு. எச்சில் தட்டு அலம்பி, வீட்டு வேலை செய்தும், ஆஸ்பத்திரியில் ஆயாவாக பீத்துணி துவைத்தும், சித்தி வினாயகர் கோவில் வாசலில் ஜவந்திப்பூ மாலை விற்றும் வயிறு கழுவுகிறவர்கள். அம்மாவுக்கு வேண்டியவர்களான அவர்களைப் பார்க்க, திலீபுக்கு மனம் நிறைந்து வந்தது.

 

அவர்கள் ஓவென்று குலவையிட்டுக் கொண்டு வந்தார்கள். அம்மாவின் சடலத்துக்கு அருகே நின்றும் அமர்ந்தும் லாவணிப் பாடல்களைக் குரலெடுத்துப் பாடினார்கள். ஓரிருவர் சுவரில் மோதாமல், ஷாலினிதாய் உடலில் படாமல் சுவடு வைத்து நடனமும் ஆடினார்கள். ஒரு மகத்தான கலைஞருக்கு மற்ற கலைஞர்கள் செய்யும் மரியாதை மட்டுமில்லை, நிகழ்ந்து ஏறக்குறைய நிறைவாக முடிந்த வாழ்க்கைக்கான ஒரு கொண்டாட்டமாகவும் அது இருந்தது என்பதை திலீப் கவனித்தான்.

 

அகல்யா  மறுபடி ஓடி வந்தாள்.

 

பாட்டி ஒண்ணும் சாப்பிட மாட்டேங்கறா. ரேகா கிட்டே சொல்லி ஒரு ஈடு இட்லி வார்த்து வச்சிருக்கு. ஒண்ணாவது கழிச்சு சிராங்காய் காப்பி குடிங்கோன்னா மாட்டேன்னு அடம்.  அவ தான் போயிருக்க வேண்டியவளாம். உங்கம்மா பாவம், தானே போய்ச் சேர்த்துட்டாளாம். நீங்க ஒரு வார்த்தை சொல்லி சாப்பிடச் சொல்லுங்கோ.

 

போனான். பழைய பட்டுப் புடவை வாடையடிக்க கற்பகம் பாட்டி சமையல்கட்டுக் கதவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். தளர்ந்து தான் போயிருந்தாள். ஒரு மத்தியதர மேல்தட்டுக் குடும்பத்தைத் தன்னந்தனியாகத் தாங்கி நிறுத்திய மனுஷி, பாம்பே அழுக்கு சாலில் ஊழியம் செய்து தேய்ந்து போன தளர்ச்சி. அவளுடைய வேர்களை விட்டு அகற்றி நட்டு வேடிக்கை பார்க்கிறதாகத் திலீப் உணர்ந்தான். இவளை இனி  எங்கே இருத்த வேண்டும்? பெரியப்பா வீடு? அகல்யா கவனித்துக் கொள்ள மாட்டாளா? எத்தனை நாள்?

 

ஒரு விள்ளல் இட்லியும், ஒரு மடக்கு காப்பியும் அவளுக்கு ஊட்டி விட ரெண்டு பேர் கண்ணிலும் கண்ணீர். அம்மாவுக்கு அழவில்லையே என்று மனதில் ஆதங்கம் சூழ, திலீப் கீழே வந்தான்.

 

மேக மூட்டமாக இருந்தது. பறவைச் சத்தம். காக்கைகள் அவசரம் என்று குரல் விட்டு, விருட்டென்று மறைய, பழைய கட்டிடங்கள் எழுந்து நிரம்பிய குறுகிய தெருவில் உயரப் பறந்து ஒரு மயில் வந்தது. இன்னொரு மயில், கூட இன்னும் ஒன்று, அடுத்து ஒன்று என மொத்தம் நாலு மயில்கள்.

 

தாழ இறங்கிய அவை, கட்டத் தொடங்கி இருந்த மூங்கில் பல்லக்குக்கு அருகே நின்றவர்களைச் சிறகடித்து அகற்றிக் கிடைத்த வெளியில் ஆடத் தொடங்கின.

 

யாரும் எதுவும் பேசவில்லை. புகைக்கவும், சிறுசொல் சொல்லவும் மறந்து அனைவரும் அந்தக் கம்பீரமான அழகில் லயித்துப் போயிருந்தார்கள்.

 

ஷாலினிதாய்க்குப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை என்பதில் திலீப்புக்கு வருத்தம் மேலெழுந்து வந்தது.

 

கார் வந்து நிற்கிற சத்தம். இல்லை. அது ஒரு ஜீப். உள்ளே இருந்து குதித்த முதல் பாதுகாப்புக் காவலர் தரை வழுக்கிச் சரிந்தார்.  காந்தி குல்லாய் எடுபிடிகள், கெட்ட வார்த்தை வசவோ, வலியால் கத்துவதோ, கடவுளை அழைப்பதோ எதையோ மெல்லிய, தீனமான குரலில் சொல்லிய அவரைப் பத்திரமாகத் தூக்கி நிறுத்தினார்கள். உயரமான, கிளிமூக்கு கொண்ட நபர். மலைப் பிரதேசத்தில் இருந்து வந்தவராக இருக்கும் என்று திலீப் நினைத்தான்.,

 

ஜீப்பில் வந்த மற்றவர்கள் மெல்ல இறங்கித் துப்பாக்கி பிடித்து நிற்க, சைரன் முழங்கி வந்து நின்ற காரில் இருந்து வெளிப்பட்ட, கையில் ஃபைல் வைத்திருக்கும் அதிகாரிகள், சந்திர மண்டலத்தில் நடக்க உத்தேசிப்பது போல் நடந்தார்கள். அடுத்து வந்த காரில் இருந்து திலீப்பின் மினிஸ்டர் பெரியப்பா இறங்கினார்.

 

அவர் எல்லோரையும் பார்த்து, உறைந்த புன்னகையோடு கை கூப்பினார். மயில்கள் அது பாட்டுக்கு ஆடிக் கொண்டிருக்க, உள்ளே இருந்து வந்த லாவணிக் கலைஞர்கள் குல்லா கையில் எடுத்து வணக்கம் சொன்னார்கள்.

 

சாவு வீட்டுக்கு, அதுவும் சொந்த சகோதரனின் மனைவி இறந்து போன துக்கமான நிகழ்வுக்கு வந்திருக்கிற நினைவு வந்தோ என்னவோ பெரியப்பா உதடுகளைக் கோணி சிரிப்பை அழித்தபடி, துக்கம் தாங்காது போனது என்பது போல் தலையைத் தொடர்ந்து இடம் வலமாக ஆட்டியபடி வந்தார்.

 

கொங்கணிப் பெண்மணியின் முலைகள் நடுவே முகம் புதைத்து இப்படித் தலையசைய நேரு நினைவுகளை அவர் கெல்லி எடுத்துக் கொண்டிருந்தது திலீபுக்கு நினைவு வந்தது.

 

சாவு வீட்டில் நல்ல சிந்தனைகளே உன்னைச் சூழ்ந்திருக்கட்டும் என்று மயில்கள் அவனைப் பார்த்துச் சொல்லியபடி ஆடின.

 

அதுகளை யாராவது ஓட்டுங்கோ. கண்ணைக் குத்தி வைக்கப் போறது. நேரம் காலம் தெரியாம அது பாட்டுக்கு ஆடறது.

 

பெரியப்பா ஜாக்கிரதையான இந்தியில் சொன்னார். தில்லி புதுத் துரைத்தனத்து மொழி. லாவணிக் கலைஞர்கள் புரிந்து கொண்டு தலை ஆட்டினார்கள்.

 

அது போயிடும் சாப். மெல்ல கை அசைச்சா போதும்.

 

நாலைந்து பேர் கை அசைத்துக் கால் மாற்றி நின்று முன்னால் சென்று மீள, போங்கடா என்று அதுகள் பாட்டுக்கு ஆட்டத்தைத் தொடர்ந்தன.

 

அப்சரா ஆளி.

 

கூட்டமாக அவர்கள் பாடத் தொடங்கினார்கள். பூம்பூம் என்று முழங்கிய சாவுச் சங்குகள் குரல்களோடு கலந்து ஒலித்தன.  வரட்டியில் பற்ற வைத்த அக்னி சாவு வாடையை விருத்தி செய்து கொண்டு பற்றிப் படர இன்னொரு வரட்டியைக் குல்லாய்க் காரன் ஒருத்தன் தரையில் இட்டான்.

 

மயில்கள் ஒரு வினாடி நின்றன. போகலாம் என்று யாரோ சொன்னது போல் அவை ஒரே நேரத்தில் இறகு வீசிப் பறந்து மேலே உயர்வதை திலீப் பார்த்தான். அவன் மனதுக்குள் அவற்றுக்கு நன்றி சொல்ல, அம்மா போகுமிடத்துக்கு அவளுக்குத் துணை உண்டு கவலைப் பட வேண்டாம் என்று அகவி உயர்ந்த மயில்கள், அடுத்த கணம் பார்வை வட்டத்தை விட்டு நீங்கின.

 

புதுப் புடவை வந்தாச்சா? மராத்தி புரோகிதன் விசாரித்தான்.

 

வாங்க ஆள் போயிருக்கு.  யாரோ சொன்னார்கள்.

 

என்ன நிறம்? சோனியாக நின்ற ஒரு பெண் கேட்டாள். அண்டை வீடு.

 

வெள்ளை.

 

எதுக்கு வெள்ளைப் புடவை?  சுமங்கலியாப் போயிருக்கா. சிவப்புப் புடவை தான் உகந்தது.

 

பக்கத்து, எதிர் குடித்தனப் பெண்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.

 

திலீப் அப்பாவை நினைத்துக் கொண்டான். அவர்கள் அவர் இன்னும் எங்கோ ஜீவித்திருப்பதாக திடமாக நம்புகிறார்கள்.  அகல்யா கூடத்தான். அதை மறுக்க எந்த ஆதாரமும் யாரிடமும் இல்லை. ஷாலினிதாய் மஞ்சளும் குங்குமமுமாகத் தான் சிதை ஏறுவாள்.

 

திலீப் மனசைத் திடப்படுத்திக்கோ. நாம கொடுத்து வச்சது அவ்வளவு தான்.

 

பெரியப்பா அவன் கையைப் பிடித்தபடி சொன்னார். என்னமோ தோன்ற அவர் தோளில் முகம் புதைத்துக்கொண்டான் திலீப். மெதுவாகத் தட்டியபடி, கம்போஸ் யுவர்செல்ப் என்று இரண்டு தடவை சொன்னார் பெரியப்பா.

 

உன் ஆத்துக்காரி எங்கே?

 

அகல்யா வந்து காலைத் தொட்டு வணங்க முற்பட, வேண்டாம் என்று விலக்கினார்.

 

அகல்யாவின் அப்பா எல்லோரையும் இடித்துக் கொண்டு முன்னால் வந்து பெரிதாக வணங்கி, கஷ்டப் படாம போனாளே அதுவே நிம்மதி என்று பெரியப்பாவிடம் சொல்ல அவர் யோசனையோடு பார்த்தார். எங்கப்பா என்றாள் அகல்யா.

 

குளிப்பாட்டிடலாமா?

 

யாரோ கேட்டார்கள்.

 

 

 

வாழ்ந்து போதீரே   அத்தியாயம்   முப்பத்தேழு         

          

மூணு மாசமா ஆர்ட்டிஸ்ட் பென்ஷன் வரலே சாப்.

 

லாவணிக் கலைஞர்கள் பெரியப்பாவை சூழ்ந்து கொண்டு முறையிட்டார்கள். ஷாலினி தாயை விட முதியவளான ஒரு பழைய ஆட்டக்காரி தன் வயதையும் இருப்பையும் பொருட்படுத்தாது மினிஸ்டர் பெரியப்பா காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். அவர் அதிர்ச்சியோடு விலகி செக்யூரிட்டி ஆட்களைப் பார்த்த பார்வையில் என்ன புடுங்கிட்டு இருக்கீங்க என்ற கேள்வி தெரிந்தது.

 

சோபானத்துக்கு, அகல் விளக்கும் பூவுமாகப் புது மணப்பெண்ணைத் தோழிகள் அழைத்துப் போகும் தருணத்தில் பாடுகிற, மங்கலமானதும், குறும்பு நிறைந்ததுமான பாடலை அண்டை அயல் மூத்த பெண்கள் எல்லாக் குரலிலும் பாட, ஷாலினி தாயின் உடலை ஆண்கள் பார்க்காமல் குளிப்பித்தார்கள்.

 

திலீப் தயக்கத்தோடு பெரியப்பாவைப் பார்த்தான்.

 

என்னடா, வேலைக்குப் போறே தானே.

 

ஆமா பெரியப்பா. காலையிலே தான் இங்கே வந்தேன்.

 

பத்தாம் நாள் அங்கேயே செஞ்சுடலாமே. கோவிலும் குளமுமா இருக்கே.

 

செய்யலாம் அம்மா அங்கே வந்ததே இல்லையே.

 

அவன் சொல்லவில்லை. சே என்று போனது திலீப்புக்கு.

 

என்ன மனுஷர். அடுத்தவருடைய துக்கத்தில் கூட அதிகார முகத்தை நுழைக்கப் பார்க்கிறார்.

 

ஆலப்புழையோ கோலப்புழையோ உத்தியோகம் கிடைச்சிருக்கு. தக்க வச்சுக்கறது உன் சாமர்த்தியம்.

 

பெரியப்பா சத்தமின்றி, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்.

 

அரசு அதிகாரி ஒருத்தர் அவசரமாக ஃபைலோடு ஓடி வந்து மினிஸ்டர் காதில் கிசுகிசுத்தது திலீப்புக்கும் கேட்டது –

 

சார், மூத்திரம் ஒழிச்சு வர, கார் ரெடியா தெருக் கோடியிலே வச்சிருக்கு.

 

காருக்குள்ளேயா என்கிற மாதிரி சந்தேகத்தோடு அவன் பார்க்க, அடுத்த தெருவிலே கட்சி பிரமுகர் வீடு என்று விளக்கிச் சிரித்தார் பெரியப்பா. கூடவே, தன் அந்தஸ்துக்கு இவனோடு அபத்தமான நகைச்சுவைக்கெல்லாம் சிரிப்பது சரிப்படாது என்று தோன்றவோ என்னமோ, மூஞ்சியை உம்மென்று வைத்துக் கொண்டு எதிரே நூதன் சினிமாப்பட போஸ்டர் ஒட்டியிருந்த சுவரைக் கூர்ந்து பார்த்தார். கொங்கணி மாமியா முலையைக் காட்டி அங்கே நிற்கிறாள்?

 

புதுப் புடவை, புதுப் புடவை.

 

இன்னும் பாட்டுகள் தொடர வாசலுக்கு வந்த அகல்யா, யாரோ நீட்டிய புதுப் புடவையை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினாள். பூம் பூம் பூம். சங்கு ஊதியவன் நிறுத்தி தொடர்ந்து இருமிக் கோழையைச் சுவரில் துப்பி நூதனை நனைத்து விட்டுத் திரும்பச் சங்கூத ஆரம்பித்தான்.

 

ஆர்டிஸ்ட் பென்ஷன் ரொம்ப குறைவா இருக்கு, மகாராஜ். பாதி மாசம் தான் வருது. அப்போ அதை வச்சு கோதுமையோ அரிசியோ வாங்கறோம். அப்புறம் ஒரு வாரம் சோளம். அதுக்கு அடுத்து கஞ்சி. மாசக் கடைசியிலே விட்டோபா கோவில் வாசல்லே கை ஏந்தறேன். பரிதாபப்பட்டு, உள்ளே வந்து தானம் கேட்கச் சொன்னார் பூசாரி.

 

நான் சாயாக் கடை வச்சுத்தான் பிழைக்கறேன் மகராஜ். லாவணியில் டோலக் வாசிச்சு பாடி, ஷாலினிதாய் கூடவே முப்பது வருஷம் நடிச்சிருக்கேன். பென்ஷன் முப்பது ரூபா வருது. போஸ்ட்மேன் அஞ்சு ரூபா எடுத்துப்பான்.

 

ஷாலினிதாய் நிறைசூலியா ஆடினபோது நான் தான் திரை போட்டு பிரசவம் பார்த்தேன். இந்தப் பையன் மேடைக்குப் பின்னாடி பிறந்தவன் தான்.  அதுக்கு பென்ஷன் வேண்டாம். ஆடின காலுக்கு மூட்டுவலிக் களிம்பு வாங்கவாவது.

 

குரல்கள். கோரிக்கைகள். மன்றாடல். துயரம் பகிர்தல். எல்லாமும் ஆனார்கள் அந்த லாவணிக் கலைஞர்கள்.

 

சால் குடித்தனக்கார ஆண்களும் வீட்டுப் பெண்களும் சிறு பூமாலைகள் சகிதம் வாசல் கதவுக்கு வெளியே பொறுமையாக நின்றார்கள். மினிஸ்டர் பெரியப்பாவும் திலீப்பும் லாவணிக் கலைஞர்களும் நின்ற இடத்தைச் சுற்றி நீண்டது அந்த வரிசை.

 

ஜன்னலில் பாட்டி தலை தெரிந்தது. வாடிப் போயிருந்தாள். குழி விழுந்த கண்கள் பாசமும் ஆவலுமாகத் தன் ஒரே மகனைப் பார்த்துக் கொண்டே இருந்தன.

 

பாட்டி பார்க்கறா பெரியப்பா.

 

அவர் காதில் சொன்னான் திலீப்.

 

அவர் ஆமா என்று சொல்லி, எலக்‌ஷன் பிரச்சாரத்தில் ஓட்டுக் கேட்டுக் கை ஆட்டுகிற மாதிரி ரெண்டு கையும் ஆட்டினார். இதோ வரேன் என்று அவர் முனகியது அவருக்கே கேட்டிருக்காது.

 

பெரியப்பா, மெட்றாஸ் வீட்டிலே அப்பா பங்கை வச்சு எனக்கு ஒரு ஒரு ரெண்டு லட்சம் தர முடியுமா? நான் தொழில் பார்த்துப் பிழைச்சுக்கறேன்.

 

தைரியத்தை எல்லாம் திரட்டி ஒரு வழியாகக் கேட்டு விட்டான் திலீப்.

 

ஏண்டா இந்த வேலைக்கு என்ன? சம்பளம் தரான் தானே பிஸ்கட் சாஸ்திரி.

 

அவன் கேட்டதை எதிர்பார்க்காத மினிஸ்டர் பெரியப்பா கூட்டச் சத்தத்தில் கரைந்து போன குரல் மீண்டும் எழுந்து கம்மக் கேட்டார்.

 

தரார் பெரியப்பா.

 

திலீப் அவசரம் கூட்டிப் பதில் சொன்னான்.

 

மெட்ராஸ் வீடு பத்தி மெல்ல பார்க்கலாம். உனக்குப் பணம் வேணும்னா நான் தரேன். வீடு இருக்கட்டும். நல்ல விலை வரட்டும்.

 

யாரோ மரியாதை தரும் இடைவெளி விட்டு அவர் பார்வைக்குக் காத்திருந்ததை திலீப் ஓரக் கண்ணால் பார்த்தான்.

 

சரி பெரியப்பா என்றான். அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள அவனையறியாமல் மீண்டும் அவசரம் எழுந்தது. அவன் பழகியிருந்தது அப்படித்தான்.

 

உங்கப்பன் விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கான் தெரியுமில்லையோ. அடிக்கடி ஆயிரம் ரெண்டாயிரம்னு வாங்கிண்டு போவான்.

 

பெரியப்பா சொல்லியபடி கையைக் காட்ட, பக்கத்தில் வந்தார் ஒரு அதிகாரி.

 

சார், ப்ளாஸ்க் எடுத்து வரட்டா? பில்டர் காபி.

 

அவர் திரும்ப வாய் பொத்திக் கேட்க, துண்டால் முகம் துடைத்தபடி பெரியப்பா வேண்டாம் என்றார்.

 

ஐயா, பென்ஷன் பற்றி.

 

லாவணிக் கலைஞர்கள் ஏங்கின குழந்தைகளாக பசி என்று வயிற்றைக் காட்டி யாசிக்கும் தோதில் குரலெடுத்து மன்றாடினார்கள். ஷாலினிதாய் இறந்த துக்கத்தில் இதுவும் ஒரு அங்கம் என்று அவர்கள் கருதி இருக்கலாம். எல்லோரும் கஜ்ஜை கட்டி ஆடியவர்கள் தானே. எல்லோரும் கால் ஓய்ந்து, குரல் ஓய்ந்து போனவர்கள் தானே? ஷாலினிதாய்க்கு சித்த சுவாதீனம் இருந்தது என்றால் இவர்களில் எத்தனை பேருக்கு மனமும் உடலும் உபாதை இல்லாமல் உள்ளது?

 

திலீப்புக்குத் தெரியவில்லை.

 

ஒரு பழைய மோட்டார் சைக்கிள் ஓரமாக நின்றது. மினிஸ்டர் பெரியப்பாவின் காவலர்கள் ஓட்டி வந்தவனை நரகத்துக்கு உடனடியாகப் போகச் சொல்லிக் கழுத்தில் கை வைக்க, அவன் சட்டைப் பையில் இருந்து எடுத்த அட்டையைக் காட்டினான். அட்டியின்றி வழி கிடைத்தது. பிரஸ், பிரஸ் என்று ஜபித்தபடி அந்த மனுஷன் முன்னேறி வந்து கொண்டிருந்தான்.

 

பெரியப்பா, தனக்கு மூத்திரம் போக அழைப்பு விடுத்த ஆபீசரைக் கூப்பிட்டார்.

 

இவங்க கிட்டே ஒரு மனு வாங்கி எனக்கு நோட் போட்டு வைக்கணும்.

 

சடசடவென்று கையில் பிடித்த ரெக்சின் பைகளில் இருந்து, ஒவ்வொரு லாவணிக் கலைஞரும் எழுதித் தயாராக வைத்திருக்கும் பெட்டிஷனை அந்த அதிகாரியிடம் கொடுக்க, வனஸ்பதிப் புகை கிளப்பிக் கொண்டு ஒரு தீப்பந்தம் எரிய ஆரம்பித்தது. ஷாலினி தாய்க்கு சொர்க்கத்துக்கு வழி காட்ட நெய்த் தீபச் சுடர் அது என்று மராத்தி புரோகிதன் திலீப்பிடம் விளக்கினான்.

 

அம்மாவுக்கு சகோதரன், அவங்க குடும்பம்?

 

மோட்டார் சைக்கிளில் வந்தவன் உத்தேசமாகக் கூட்டத்தில் பார்த்துக் கேள்வியை எறிந்தான்.

 

ஒருத்தரும் இல்லே. தனி மனுஷி தான் சாகற வரைக்கும்.

 

லாவணிக் கலைஞர்களில் ஒருவர் மனுவை நீட்டியபடி சொன்னார்.

 

சும்மா இருப்பா. ஷாலினிதாய்க்கு ஒரே மகன் இந்தப் பையன் திலீப்.

 

இருமலுக்கு நடுவே ஒரு முதிய பெண்மணி சொன்னார்.

 

கேட்ட உடனே எப்படி மனு கொடுக்கறீங்க எல்லோரும்?

 

ஆபீசர் சிறு சிரிப்போடு விசாரித்தார்.

 

எஜமான், நாளைக்கே நாங்களும் செத்து நரகம் போனாலும் மனுவோடு தான் போவோம்.  வராத பென்ஷன் பாக்கி குடும்பத்துக்காவது போக ஏற்பாடு செய்யச் சொல்லி மனு இதெல்லாம். என் பேரனுக்காவது கிடைக்கட்டும்.

 

மோட்டார் சைக்கிள்காரர் ஓரமாக நின்று திலீப்பை ஏகத்துக்குச் சைகை செய்து அழைத்தார். திலீப்பை மராட்டிய புரோகிதன் உடனே குளித்து வரச் சொன்னான். இந்தோ வரேன் என்று புரோகிதனுக்குக் கையைக் காட்டி மோட்டார் சைக்கிள் காரனிடம் போனான் திலீப்.

 

சொன்ன பேச்சு கேட்க மாட்டியா? நேரமாகுது. நான் அந்தரத்திலே விட்டு போனா அழுகிச் சாக வேண்டி வரும்.

 

புரோகிதன் தன் தலைமை ஸ்தானத்தை உறுதி செய்யும் குரலில் திலீப்பை மிரட்ட, திலீப் பெரியப்பாவை புகல் தேடி நோக்கினான். இந்த வெத்துவேட்டு புரோகிதனிடன் நம் செல்வாக்கு உப்புக்குக் கூட செல்லுபடியாகாது என்று கண்டு கொண்ட பெரியப்பா அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தார்.

 

பாட்டி மறுபடி ஜன்னலில் எட்டிப் பார்த்து விட்டு, மினிஸ்டர் மகன் உள்ளே வருவதைப் பார்த்தோ என்னவோ திரும்பப் போனாள்.

 

அவளுக்கு என்னத்துக்கு இந்தக் கஷ்டம் எல்லாம்.  எட்டு ஊருக்கு விட்டெறியும் அதிகாரத்தோடு இருக்கப்பட்ட மந்திரி மகன் வீட்டில் மிச்ச ஆயுசு முழுவதும் இளைப்பாறாலாமே.

 

திலீப் நினைத்தபடி குளிக்கக் கிளம்ப, மோட்டார் சைக்கிள் காரன் அவன் பாதையில் குறுக்கே விழுந்தான். பிரஸ், பிரஸ் என்று திரும்ப உச்சரித்த அவன் கண்கள் பாதி மூடி இருந்தன. அதிகாரம் மறைமுகமாவது அச்சு யந்திரத்தின் மூலம் இவனுக்கும் பாய்கிறதால் ஏற்பட்ட அந்தஸ்தோ என்னமோ. திலீப் இவனைப் பகைத்துக் கொள்ள மாட்டான்.

 

ஒரு மராத்திப் பத்திரிகைப் பெயரைச் சொல்லிக் கேட்டான் –

 

படிக்கிறீங்களா, ரொம்ப அபூர்வமான ஒண்ணு.

 

அவன் சொல்லும்போது திலீப்பின் சின்ன மாமனார் நினைவு வந்தார்.

 

பதிர்பேணியிலே ஒரு லோட்டா பால் விட்டுண்டு, உள்ளே ஒரு குஞ்சாலாடையும் உதிர்த்துப் போட்டுட்டு சாப்பிட்டா, அடடா, தேவாமிர்தம்.

 

அவர் பத்திரிகை நிருபர் போலத் தான் வாயைக் குவித்து ஆகாரச் செய்தி சொல்லி மகிழ்வார்.  அவர் காமத் ஓட்டலில் டிபன் சாப்பிட்டு வந்து இந்தக் கூட்டத்தில் ஒரு ஓரமாக இருப்பார் என்று திலீப்புக்குத் தெரியும்.

 

எனக்கு எல்லோரோட பெயர், வயசு, இறந்து போனவங்களுக்கு உறவு இதெல்லாம் வேணும். சரியான தகவல் தேவை. பத்திரிகையில் போடணுமே.

 

மராட்டியப் பத்திரிகைக்காரன் முறையிட்டான்.

 

பிழையான தகவல்களாலான சாவுச் செய்தி மராட்டிய மண்ணெங்கும் சொல்லொணா துன்பத்தை விதைக்க வல்லது என்று பொறுப்பு உணர்ந்த குரலில் திரும்பவும் அவன், எல்லோருடைய பெயர், வயது, உறவு என்று சொல்ல, மறுபடி மராட்டிய புரோகிதன் நரகம் பக்கத்தில் தான் என்று வார்த்தை அருளியது காதில் கேட்கவில்லை என்ற பாவத்தில் திலீப் குளிக்கப் போனான்.

 

நான் சொல்றேன் எழுதிக்குங்க.

 

எதிர் ப்ளாட் கோர்படே சீனியர் சங்கு முழங்கும் சத்தத்துக்கு நடுவே சொல்லத் தொடங்கியது பாதி காதில் விழுந்திருக்க, அகல்யா அசதி முகத்தில் தெரிய அவன் பக்கமாக வந்தாள். நேற்று ராத்திரி முழுக்க அவளுக்குத்தான் அலைச்சல்.

 

பாத்ரூம்லே வெதுவெதுன்னு வென்னீர் விளாவி வச்சிருக்கேன். அவ்வளவு தான் ரேகா வீட்டு அடுப்பிலே சூடு படுத்த முடிஞ்சுது. கெரசின் அங்கேயும் காலி. போய்க் குளிச்சிட்டு சடுதியிலே வாங்கோ.

 

அகல்யா டர்க்கி டவலையும் புது மைசூர் சாண்டல் சோப்பையும் கொடுத்தாள்.

 

ரொம்ப கமகமன்னு வர வேணாம். சூழ்நிலையை பார்த்து செய்யுங்கோ.

 

அவள் சொல்லும் போதே, கீழ் வீட்டுப் பெண், கத்தரி கலர் ஃப்ராக் போட்ட நாலு வயதுப் பெண் குழந்தையின் கையைப் பிடித்தபடி வந்தாள்.

 

நேத்து பார்த்தேனே. நானும் சாகரிகாவும் கை காட்டினோம். அம்மா சாகரிகா கையைப் பிடிச்சுக்கிட்டு நர்சரி ரைம் பாடினாளே.

 

குழந்தை ஹம்ப்டி டம்ப்டி ஸாட் ஆன் த வால் என்று பாட ஆரம்பித்தது.

 

வேண்டாம் என்று அடக்கினாள் அதன் அம்மா.

 

குழந்தையை எல்லாம் ஏன் கூட்டி வரணும்? உடம்பு கிடக்கிற இடமாச்சே. குழந்தைகளுக்கு சட்டுனு பிடிச்சுடுமே ஏதாவது சரியில்லேன்னா.

 

மனதில் நினைத்ததை அகல்யாவிடம் சொல்லத் திரும்ப, அவளை அங்கே காணோம்.

 

அம்மாவை இப்போதே நோய் அண்டிக் குவியும் வெற்று சடலமாக நினைக்க ஆரம்பித்தாகி விட்டது.  பிரியமும், பாசமும், அடிப்படைக் கனிவும் எல்லாம் போன இடம் எங்கே?

 

முகம் பார்க்கும் கண்ணாடி மாட்டிய சுவரில் தன் முகம் பார்க்கத் திரும்பினான் அவன்.  யாரோ சாவு வீட்டுக் கண்ணாடியைக் கழற்றி வைத்திருந்தார்கள்.

 

குளித்துக் கொண்டிருக்கும்போது நான்கைந்து பேர் கதவைத் தட்டி அவசரம் என்றார்கள். அகல்யா குரலும் கேட்க, அவன் ஒரு காகிதம் உள்ளே போகும் அளவு கதவைத் திறந்து என்ன என்று அகல்யாவைக் கண்ணில் சோப்பு நுரையோடு  உத்தேசமாகப் பார்த்துக் கேட்க, நூதன் வரா என்றாள்.

 

யாரு நடிகையா?

 

ஆமா.

 

இன்னும் ஒரு தடவை சோப்பைத் தீற்றி முகம் அலம்பினான்.

 

அம்மா, நீ ஏன் கஷ்டப்படணும். நாட்டுப் பொண்ணு தான் போயாச்சே. என்னோடு வந்துடு.

 

மினிஸ்டர் பெரியப்பா குரலை உயர்த்திச் சொல்லுவது கேட்டது திலீப் உடம்பு துவட்டிக் கொண்டிருந்தபோது. அவனுக்கும் கேட்க வேண்டும் என்று சொல்வதாக இருக்கலாம்.

 

போகட்டும், நூதன் வரப் போகிறாள்.

 

குளிச்சு வர இவ்வளவு நேரமா, பாத்ரூம்லே வேறே ஏதாவது செஞ்சிட்டிருந்தியா?

 

மராட்டி புரோகிதன் மணியடிக்கிறது போல் கையாட்டிச் சிரிக்க எடுபிடிகள் ஒரு வினாடி சிரித்து, இன்றைக்குப் படியளக்கப் போகிற மகாராஜன் இவனாச்சே என்று நினைவில் பட,  நிறுத்தி எல்லாத் திசையிலும் பார்த்தார்கள்.

 

புரோகிதன் தன் தலைமையை மீண்டும் நிலை நாட்டிய கர்வம் தெரிய,  ஓங்கி மந்திரம் சொன்னான்.

 

ஜீப் நிற்கும் சத்தம். குதித்து வெளியேறும் அதிகாரிகள். சைரன் பொருந்திய கார். அப்புறம் பெரிய கருப்பு அம்பாசடர். இன்னொரு மந்திரி.

 

இவர் மாநில அரசு அமைச்சர் என்று திலீப்புக்குத் தெரியும். பிராணி நலனோ,  மீன் வளத்துறையோ நிர்வகிக்கிறவர்.  கூடவே போட்டோ கிராபரும் உண்டு.

 

ரெண்டு கையையும் விரித்தபடி வந்த அந்த ஸ்தூல சரீர மனுஷர், செண்ட்ரல் மினிஸ்டர் பெரியப்பாவின் பாதம் தொட்டு வணங்கியபின் சிரமப்பட்டு நிமிர்ந்து நின்று, அவரை அணைத்துக் கொண்டார். ஃபோட்டோகிராபர் இல்லையென்று தலையாட்ட, திரும்பப் பெரியப்பாவை அணைக்க முற்பட பெரியப்பா, மழையில் நனைந்த வைக்கோல் பொம்மை போல நின்றார்.

 

ரொம்ப வருத்தப்படறேன். முதலமைச்சர் சோவியத் யூனியன் போயிருக்கறதாலே. காலையிலே எனக்கு ஓவர்சீஸ் கால் போட்டு.

 

அவர் கையைப் பற்றியபடி துக்கம் பரிமாறி விட்டு, கண்ணால் அவசரம் அவசரம் என்று ஜாடை காட்டிக் கொண்டிருந்த மராட்டிப் புரோகிதர் முன் உட்கார்ந்தான் திலீப்.

 

அவனைப் பாராட்டுகிற தொனியில், நல்லது நீ இப்போ தான் நல்ல பிள்ளை, காயத்ரி ஜபி என்றார் அவர்.

 

சார், எல்லா பெயரும் வாங்கிட்டேன். அகல்யா வயசு என்ன ?

 

பத்திரிகைக்காரன் குறுக்கே புகுந்து கேட்க, அப்புறம் என்று கை காட்டினார் புரோகிதர்.

 

இன்னும் அரை மணி நேரத்துலே எடுத்தாகணும்.  அவங்கவங்க குளிச்சுட்டு சாப்பிடணுமே, ஆபீஸ், ஸ்கூல்ன்னு போகணுமே.

 

அவர் தன் சமூக அக்கறையைப் பங்கு வைக்கத் தவறவில்லை என்பது திலீப்புக்கு பிடித்தது.

 

இந்த நெய்யை மாவிலையாலே எடுத்து விடுங்கோ.

 

புரோகிதர் ஒரு தகர டப்பாவில் டால்டாவை எடுத்துப்  போட்டு, நான்கு சுள்ளிகளைக் கொளுத்தி எரிய வைத்த சிறு அக்னியில் அழுக்குத் துணியால் பிடித்துக் காட்டி உருக்கிக் கொண்டிருந்ததைக் கீழே வைத்தார். அவர் மடித்துக் கொடுத்தது மாவிலை இல்லை என்று திலீபுக்குத் தெரியும்.

 

நூதன் நூதன் நூதன்

 

ஒன்றிரண்டாக எழுந்து நூறு குரல்கள் ஒன்று சேர, அந்தத் தெருவே வாசல்களுக்கு வந்து நூதன் என்று திரும்பத் திரும்ப ஒரு சேர முழங்கியது.

 

கடலில் மிதந்து வருகிற வலைத் தோணி போல கருப்புப் புடவையும் வெள்ளை ரவிக்கையும் உடுத்து நூதன் நடந்து வந்தார். திலீப் பார்த்துக் கொண்டிருக்க, மோசேக்கு வழி விட்ட கடல் போல திரண்டு நின்ற ஜனக்கூட்டம் ரெண்டாகப் பிரிந்து நூதன் போக வழி விட்டது. இலையும் தழையும் பூவுமாகப் பெரியதாகச் சுற்றிய ஒரு மலர் வளையத்தை இருகையாலும் பிடித்தபடி, நூதன் பின்னாள் ஒரு சோனியான பெண்ணும் வந்து கொண்டிருந்தாள்.   பணிப்பெண்ணாக இருக்கலாம்.

 

வரும்போது குறுக்கே நின்று புன்னகைத்த மினிஸ்டர் பெரியப்பாவின் காலைத் தொட்டுக் கும்பிட்டு நிமிர்ந்துரெண்டு வார்த்தை பேசி விட்டு முன்னால் நடந்தார் நூதன். பெரியப்பா முகத்தில் திருப்தி தெரிந்தது.

 

வீட்டு வாசலில் நூதன். அகல்யா ஓடோடியும் வந்து எதிர்கொண்டாள் நூதனை. அவள் முகத்தில் பெருமையும் கம்பீரமும் ஒரு நிமிடம் படந்து விலகியதாக திலீப் நினைத்தான்.

 

அகல்யா அவனைக் கண்ணால் தேடிப் பக்கத்தில் வரச் சொன்னாள். புரோகிதரிடம் சொல்லிக் கொண்டு ஓடலாம் என்று திலீப் பார்வையை உயர்த்த மராத்தியப் புரோகிதர் அங்கே இல்லை. அகல்யா பின்னால், நூதனுக்கு வெகு அருகே எல்லாப் பிரார்த்தனையும் பலித்த எக்களிப்பும் பரவசமுமாக அவர் நின்று கொண்டிருந்தார்.

 

ஷாலினிதாய் அவங்களோட ஒரே மகன். நான் மருமகள்.

 

சுருக்கமாக அறிமுகம் செய்தாள் அகல்யா.

 

நூதன் வினாடிப் பார்வையில் முழுமையான சோகத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்தி திலீப்பிடம் வலது கையை நீட்டினாள். நெஞ்சு படபடக்க, அகல்யாவைப் பார்த்து விட்டு, அந்த நீண்ட விரலகளைத் தொட்டான் அவன்.

 

அங்கீகரித்துச் சோகமாகப் புன்னகைத்து, அடுத்த வினாடி புடவைத் தலைப்பில் கையை மறைத்துக் கொண்டு, மெதுவான குரலில் கூறினார் நூதன் –

 

எவ்வளவு உன்னதமான கலைஞர் அவங்க, ஏக்தம் நல்ல கதிக்குத் தான் போயிருப்பாங்க.

 

நூதன் சொல்லிக் கொள்ளாமல் காருக்கு நடக்க ஆரம்பிக்க, மக்கள் வெள்ளம் திலீப்பை உந்தித் தள்ளியது. ஒரு சுழலில் அகப்பட்ட அவனை ஒரு வினாடி நிறுத்தியவன், அகல்யா வயசு ப்ளீஸ், ரிப்போர்ட்டுக்கு வேணும் என்றான். பதில் சொல்லும் முன் வாசலுக்கு வெகு தூரத்தில் தெருவில் நின்றான் திலீப்.

 

பக்கத்தில் அவன் கட்சியின் பேட்டை பிரமுகர் ஸ்வீட் ஸ்டால்கார பாலகிருஷ்ண கதம் ஜவந்தி மாலையோடு நின்றார்.

 

தலைவர் புணேயிலே ஒரு கல்யாணத்துக்கு .

 

கதம் ஆரம்பிக்க, புரோகிதர் திலீப்பை உரக்க அழைத்தார். அவர் வா என்றால் வரணும். திலீப் ஓடினான்.

 

நேரமாச்சுன்னு சொன்னேனே. நீங்க வரல்லேன்னா நான் போய்ட்டே இருப்பேன்.

 

எங்கே, நூதன் பின்னாடியா?

 

நினைத்தபடி அவரோடு சவ வண்டிப் பக்கம் போய் நின்றான் திலீப். உள்ளே இருந்து ஷாலினிதாய் உடலைச் சுமந்து வந்தவர்கள் வண்டியின் பின் கதவு திறந்து உள்ளே தரையில் இட, எல்லோருடைய அசைவுக்கும் கீழ்ப் பணிந்து ஷாலினிதாயின் தளர்ந்த சரீரம் சமாதானம் சொல்லி ஆடிக் கொண்டிருந்தது.

 

அழு. அழுடா. அழு. அழு. அழு. அழு. அழு. அழு. அழு. அழு. அழு. கிராதகா, அழுடா.

 

திலீப் தலையை ஆட்டிக்  கொண்டான். இல்லை, அழுகை வரவே இல்லை.

 

திலீப் தீயை உரியில் வைத்துத் தூக்கியபடி முன் இருக்கையில் அமர, ஸ்டீரிங்கில் இருந்த மராட்டிப் புரோகிதன் சொன்னான் –

 

என் பிருஷ்டத்துலே தீ வச்சு ராக்கெட் மாதிரி கிளப்பற ஐடியாவா.  சரிப்படாது. பின்னாலே வச்சுட்டு நீ மட்டும் ஏறு.

 

திலீப் மறுபடி சவ ஊர்தியின் முகப்பில் ஏறினான். வண்டி கிளம்பியது.

 

சார், அகல்யா, வயசு?

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன