நான் உபதேசங்கள் செய்யறவன் இல்லை, என் கதைகளும்

எழுத்தாளர் இரா.முருகன்ஒரு உரையாடல்

 கேள்வி : காளிப்ரசாத்

1) தகவல் தொழில் நுட்ப துறையின் பணியாளர்கள் மீது ஒரு புரிதல் உண்டானது மிகச் சமீபத்தில்தான். அதுவரை அவர்கள் மீது ஒரு விலக்கத்தைத்தான் ஊடகங்கள் /திரைப்படங்கள் பதிவு செய்திருந்தன. பொதுமக்களிடமும் அவர்கள் மீது அமெரிக்க மாப்பிள்ளை போன்ற ஏளனமும், மனதளவில் ஒருவித எதிர்ப்பும் இருந்தனஇன்று அந்த சூழல் மாறியுள்ளதுஉங்களுடைய ஆரம்பகால கதைகளில் (உதாரணமாக சிலிக்கான் வாசல்) அது உருவாக்கும் மன அழுத்தம் அங்கு நிகழும் மனித உரிமை மீறல் குறித்து எழுதியிருக்கிறீர்கள். ஆனால் அது வந்த காலத்தில் அது பொதுச்சமூகத்துக்கான எதிர்நிலை வாதம்தான்அன்றைக்கு அதை எழுத எண்ணியது ஏன்??

பதில்: இரா.முருகன்

நான் சிறுகதை எழுத வந்ததும் இந்தியாவில் ஐ.டி ஒரு துறையாக அசுர வேகத்தில் வளர ஆரம்பித்ததும் கிட்டத்தட்ட  ஓரே காலத்தில்தான். 1984 ல் நான் கவிதையிலிருந்து சிறுகதைக்கு வந்தேன்.  1984 ன் இறுதியில்தான்  ராஜீவ்காந்தியும் கணினியாக்கமும் -ஐடியும்  முறையே இந்திய அரசிலும் இந்தியக் கல்வி, தொழில், நிர்வாகத்திலும் புது வரவாக நுழைந்து ஒரு மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது நிகழ்ந்தது.

 

ஐடி வந்தவுடனே அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. ஏன்னு கேட்டீங்கன்னா  அதில் வருகிற சம்பளம். அது வரைக்கும் பேங்க் ல் வர உத்யோகம்தான் ரொம்ப முக்கியமா இருந்தது. பேங்க் மாப்பிள்ளைதான் வேணும்னு எல்லாருமே பேசிக்கொண்டிருந்த காலம்.  அப்பொழுது பேங்க் சம்பளம் தான் பெரிய விஷயம். ஆனால் ஐடி வந்த பிறகு அதைவிட நாலு மடங்கு பெரிய சம்பளம்லாம் கிடைக்க ஆரம்பித்தது. நான் பேங்க் கிளை அதிகாரியாக ஏழெட்டு வருடம் இருந்து, வங்கி கணினித்துறையில் அடுத்த பதினைந்து வருடம் கணினி மென்பொருள் வடிவமைத்து உருவாக்கும்  டெக்னோ பேங்கராக ஐ.டிக்கு வந்தவன். வங்கி கணினித்துறை போதுமென்று தனியார் ஐடி பன்னாட்டு நிறுவனப் பணிக்கு மாறினேன். அப்பொழுது  1984 லிருந்து 1999 ல் டாட்காம் bust ஆகும் வரைக்குமான பதினைந்து வருடங்கள் அப்படியே  ஏறுமுகமாகவே போனது. அதுவரை அந்த துறைக்கு வெளியில் இருந்தவர்கள் பலர்  அதன் மீதான பொறாமையில் நிறைய கற்பனை செய்துகொண்டு பலவிதமாக  பேசிக்கிக்கொண்டு இருந்தனர். அதை அவ்வாறே சிலபேர் எழுதவும் செய்தார்கள். அதன் விளைவாக பொது மக்களிடம் ஒரு தவறான கருத்தே சென்று சேர்ந்தது. அதுவரை நான் எழுதிய கதைகள் எல்லாமுமே ஐ.டி  வராத கதைகள்தான். என் எழுத்து தனியாகவும் நான் பணிபுரியும் துறை தனியாகவும்தான் இருந்தது. அதற்குப் பிறகுதான் ஐ.டி-யைப் பற்றியும் எழுதத் துவங்கினேன். இந்தத் துறை குறித்து, முக்கியமாக ஐடி ஊழியர்கள் பற்றி, அவர்களுடைய work-life balance பிரச்சனைகள் பற்றி, ஐ.டி துறையில் இருக்கிறவனாக சரியான புரிதலைத் தருவது என் நோக்கமாக இருந்தது.

 

அந்தகாலங்களில் குறிப்பாக  பிறதுறைகளில் ஒய்வு வயது என்பது வேறு. ஆனால்  ஐ.டி கணினித் துறைப் பணியில் நாற்பது வயது எய்துகிறவர்களுக்கு இனி அநேகமாகச் சந்திக்க வேண்டிய தேக்க நிலை, பணி நிரந்தரம் குறித்த கவலைகள் ஏற்பட்டு   ஒரு கலக்கத்தை தந்துவிடும். நம்மை எல்லாரும் முந்திச் சென்று விடுவார்களோ என்று தோன்றும். அதுவரை ஏறுமுகமாக இருந்த வாழ்க்கை சற்று தடுமாறும். இதன்பின்னர் நான் என்னவாகப் போகிறேன் என்கிற குழப்பமும் வந்து சேர்ந்திருக்கும். அது ஒரு இருத்தலியல் பிரச்சனையாக போய் நின்றுவிடும் சாத்தியமும் உண்டு. கடும் வேலையை வாங்கும். 24 மணிநேரமும் வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தது அதன் deadlines மிகவும் விசித்திரமாக இருக்கும். பத்துநாள் வேலைய இன்னும் நாலுபேரை சேர்த்து வச்சு நாலுநாள்ல முடிங்க என்று சொல்லுவாங்க..  இதை பற்றி பேசாமல் அங்கு ஆண்களும் பெண்களும் ஒண்ணா சுத்தறாங்க. ஒழுக்கக் கேடான விஷயங்கள் நடக்கும் என்றெல்லாம் இஷ்டத்துக்கு கற்பனை செய்து, சொல்லி எழுதப்பட்டிருந்த காலங்களில்,   என் கதைகளில் சிலிக்கான் வாசலிலும் லாசரஸ் நாற்பது, இளைப்பாறுதல் போன்ற கதைகளிலும் ஐ.டி .யில் நடுத்தர அல்லது இளைய நிலைகளில் பணிபுரிபவர்களை மையமாக வைத்தது எழுதினேன்.  முதல் இரண்டும், இரண்டும் இந்தியா டுடே தமிழ் இதழிலும், அடுத்துக் கூறியது இலக்கியப் பத்திரிகையான உயிர்மையிலும்  வந்தன. விடுமுறை தராத அந்த விசித்திர  சம்பவங்களை வைத்து 24X7 என்கிற கதையை ஆனந்த விகடன் தொகுப்புக்காக எழுதினேன். இவ்வாறு ஐ.டி யில் இருந்தாலும் பத்து வருடங்கள் ஏதும் அது பற்றி எழுதாமல் இருந்தவன் 1990 களில் ஐ.டி பற்றி எழுத துவங்கி 1998 ல் பார்த்தீர்களானால் ஐந்துக்கு மூன்று ஐ.டி யைப் பற்றியே இருக்கும். அதன்பின் அந்த துவக்ககால அலைகள் அடங்கிய பின்னர்தான் மூன்றுவிரல் என்கிற ஐ.டி .துறை குறித்த எனது முதல் நாவலை 2002இல் எழுதினேன்.

கேள்வி : காளிப்ரசாத்

2) அதன் தொடர்ச்சியாக அடுத்த கேள்வி.. அதேநேரம் இன்று .டி வேலை சலித்து போகிறது என்று எழுத துவங்கி விட்டார்கள். ஐடி வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வருகிறார்கள். இது போன்ற இருத்தலியல் பிரச்சனைகளை இலக்கியவாதிகள் தொடர்ச்சியாக எழுதியும் வந்துள்ளார்கள். இலக்கியத்தில் இந்த இருத்தலியல் trend லும் இயல் வாழ்க்கையில் IT துறை மீதான trend லும்   ஒருசேர இருந்தவர் நீங்கள். மூத்த எழுத்தாளராக இதைப்பற்றிய உங்கள் பார்வையை தொகுத்து செல்ல இயலுமா?

பதில் : இரா.முருகன்

 

இப்பொழுது பெரும்பான்மை அயல்நாடு வாழ் தமிழர் மனநிலைப்படி  அங்கே போய் இருந்து வேலை பார்த்து, பத்து வருஷத்துல போரடிக்குது விவசாயம் பண்ணப்போறேன் வேறு வேலை பண்ணப்போறேன்னு கிளம்ப நினைக்கறதாகச் சொல்றாங்க. ஆனால் எத்தனை பேர் சொல்றபடி செய்யறாங்க? அவங்க நல்ல வேலையில இருக்காங்க நல்லா சம்பாதிக்கிறாங்கதான். வேணாம்னு சொல்லல நல்லா இருக்கட்டும்.  . வேலையில் வரும் திரும்பத்  திரும்ப ஒரே வேலையைச் செய்கிற அலுப்பு- ரெபடிஷன் போரடிக்குதுன்னு சொல்றாங்க. இந்த repeatation எங்கதான் இல்ல? நான்  28 வருஷங்கள் ஐ.டி ல இருந்தாலும் அதுல இரு existential  பிரச்சனை எனக்கு ஒருசில நேரங்களில் தான் தோன்றியது. அது பணி நிமித்தமாக குடும்பத்தை அடிக்கடி வருடக் கணக்கில் பிரிவதால் ஏற்பட்டது.   பழங்கால இலக்கியத்திலேயே வருமே, பொருள் வயின் பிரிதல்,   அதன் ஒரு வடிவம். இந்த ஆட்டங்களுக்கான விதிமுறைகளை மீற முடியாது.

 

நான் என் வாழ்க்கையிலும், கதைகளிலும் உபதேசங்கள் செய்யறவன் கிடையாது. ஒவ்வொரு கதையிலும் நீதி போதனை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உடையவன் அல்ல என்பதும் ஒரு காரணம். ஆனால் சில இடங்களில் அனுபவம் சார்ந்த ஆலோசனைகள் சொல்லியிருக்கிறேன்.  இந்த இருத்தலியல் பிரச்சனையும்தான்  எந்த துறையிலதான் இல்ல?  அதனால நல்ல வருமானம், குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் நல்ல கெளரவமான, பாதுகாப்பான  வாழ்க்கை என அமைத்துத் தரும் துறை எதுவாக இருந்தாலும் அது நல்ல துறைதான். அதுக்குள்ளே இந்த இருத்தலியல் சிக்கலையெல்லாம் போட்டு மொலடோவ் காக்டெயிலாக்கிக் கதையை வாசகர்மேல் பிரயோகிக்க வேணாம்னுதான் நான் சொல்லுவேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன