பெரு நாவல் ‘மிளகு’ – A frugal candlelight dinner and a leisurely walk at a silent night

Excerpt from my forthcoming (next week, perhaps) novel MILAGU

எல்லா எறும்பும் இப்படி சாதுவா இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனாலும் ஒண்ணு சொல்லலாம். கடிக்கற எறும்பு கட்டாயம் இறக்கை விரிச்சுப் பறக்காது.

பரமன் சொன்னார் மெல்லத் தாங்குகோல் ஊன்றி நடந்தபடி.

திலீப் ராவ்ஜியின் தோளில் கைவைத்து அணைத்து நின்றார் ஒரு வினாடி.

நான் இங்கே வந்திருக்கேன் என்று முணுமுணுத்தார்.

தெஜாவூ-ன்னு சொல்றது இதுதான் என்று திலீப் ராவ்ஜிக்குக் கூடுதல் தகவலாக மிகுந்த பிரயாசையோடு சொன்னார் பரமன். அவர்கள் கூட்டமாக விருந்தினர் மாளிகைக்குள் பிரவேசித்தார்கள்.

வாசலில் நின்றிருந்த மாளிகைப் பணியாளர்கள் இருவர் திலீப் ராவ்ஜி கொடுத்த அனுமதிக் கடிதத்தைப் படித்துத் திருப்தியடைந்தார்கள்.

இந்த வனப் பிரதேசத்தில் வந்து சிதிலமான பழைய நகரைப் பார்க்க அரசாங்க அனுமதி வேணும் என்று திலீப் ராவ்ஜி மற்றவர்களுக்கு விளக்கினார்.

இவர்களுக்காகத் தயாராக வைக்கப்பட்ட அறைகளைப் பூட்டுத் திறந்து உள்ளே அழைத்தனர்.

மங்கிய இருபத்தைந்து வாட்ஸ் பல்புகள் லைட் ஷேட் அணைப்பு இல்லாமல் ஹோல்டர்களில் நிர்வாணமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. பரமனை ஒரு அறைக்கு இட்டுப்போய் திலீப் ராவ்ஜி கட்டிலில் படுக்க வைத்தார். படுத்ததுமே உறங்கியிருந்தார் பரமன்.

முண்டாசு கட்டிய ஒரு பராமரிப்பு ஊழியர் முதல் அறையின் கோடியில் வைத்திருந்த பாத்திரங்களைச் சுட்டிக்காட்டிச் சொன்னார் –

நீங்க கேட்டிருந்தபடி பத்து பேருக்கு சாப்பாடு தயார் பண்ணியிருக்கு. சாப்பிடறீங்களா?

ரொம்ப சீக்கிரம் சாப்பிடணுமா? கல்பா கேட்டாள்.

ஏழு மணிக்கு அப்புறம் கொசு, ஈசல், எறும்புன்னு படையெடுக்க ஆரம்பிச்சுடும். ஜன்னல் கதவை மூடி வயர்மெஷ் போட்டு மூடியிருக்கு. இருந்தாலும் ஒண்ணு ரெண்டு வாயில் போக வாய்ப்பு இருக்கு என்றார் அந்த ஊழியர்.

ரோம் நகரில் ரோமானியன் போல. சமண ஸ்தலத்துக்கு வந்தால் சமண முனிவர் போல் ராச்சாப்பாட்டை வெகு முன்னரே முடிச்சுக்கணும். பிஷாரடி சொன்னார்.

ராத்திரி எங்க ஆட்கள் யாரும் இங்கே இருக்க மாட்டாங்க. தண்ணி, சாப்பாடு, இதோ இங்கே இருக்கு. கூடுதல் லைட் பல்ப் இங்கே இருக்கு. விளக்குமாறு இதோ ஓரமா இருக்கு. அது கரப்பு வந்தால் அடிக்கறதுக்கு. நாலு அறைக்கும் சேர்த்துப் பொதுவா இங்கே ரெண்டு கழிவறை இருக்கு. கதவு சரியாக சார்த்தாது. கவனிச்சு அட்ஜஸ்ட் பண்ணி உபயோகிக்கணும். சாப்பாட்டுக்கு இப்பவே பணம் கொடுக்கணும். கொடுக்கறீங்களா சார்?

எவ்வளவு தரணும்?

பிஷாரடி ஜோல்னாபையில் இருந்து வேலட்டை எடுக்க, திலீப் ராவ்ஜி அவரைத் தடுத்து தன் பர்ஸை எடுத்தார்.

ஐநூறு ரூபா சாப்பாட்டுக்கு, சமையல், கொண்டு வந்து கொடுக்க முன்னூறு. ஆக மொத்த எண்ணூறு ரூபா என்று கராராகச் சொன்னார் அந்த ஊழியர்.

என்ன கொண்டு வந்திருக்கீங்க? கல்பா கேட்டாள்.

பத்து பேர் தாராளமாக சாப்பிடற அளவு சப்பாத்தி, தேங்காய் துவையல் கொண்டு வந்திருக்கேன் என்றார் அவர்.

சப்பாத்திக்கு கூட தேங்காய்த் துவையலா?

தெரிசா ஒன்றுக்கு இரண்டு தடவை கேட்டுச் சிரித்தாள்.

அதென்ன இந்தப் பக்கத்துலே இப்படித்தான் சிம்பில் சப்பர் மெனு இருக்கும் போலே என்றாள் பகவதிக் குட்டி.

நூறு நூறு வருஷமா இப்படித்தான் இங்கே ராத்திரி போஜனம். சந்தேகம்னா யாரையும் கேட்டுப் பாருங்க என்றார் ஊழியர்.

அதெல்லாம் வேணாம் என்று சொல்லி  திலீப் ஆயிரம் ரூபாய் ஊழியரிடம் அந்த அதியற்புத உணவுக்காகக் கொடுத்தனுப்ப, வாசல் வரை போன அவர் அவசரமாக உள்ளே வந்து மேஜைக்குக் கீழே இருந்து இரண்டு பெரிய பிளாஸ்டிக் போத்தல்களில் கோகோ கோலாவை எடுத்து வைத்து, ’அது கடிக்க, இது குடிக்க’ என்றார்.

நூறுநூறு வருஷம் புராதன பானமான கோகோ கோலாவை மேஜை மேல் வைத்துவிட்டு விடை பெற்றார் அந்த ஊழியர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன