பெரு நாவல் ‘மிளகு’ – prince Venkatalakshman’s battalion on a plundering spree

An excerpt from my forthcoming novel MILAGU

கேலடி — நடு இரவு.

வெங்கட லட்சுமணன்   கேலடியில் இருந்து புறப்படும்போது படையினர் முன்னூறு பேர் அவன் தலைமையில் அணிவகுந்து வருகிறார்கள். அவர்களிடம் லட்சு என்ற வெங்கட லட்சுமணன் எங்கே போகிறார்கள் என்று சொல்லவில்லை. யுத்தம் நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும்.

தாயாரின் ஜெருஸுப்பா அரசுக்கு நெருக்கடி உண்டாக்கி மகன் படையெடுத்துப் போய் போர் நடத்தும் யுத்தம். வீட்டுக்குள் அடித்துக் கொள்ளாமல் வெளிநபர்கள் தூண்டி விட்டு நடக்கும் போரில் பங்குபெற கேலடி ராஜதானியின் வீரர்களும் பங்கெடுக்க வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

சதுரங்கத்தில் ராஜா, ராணி, அமைச்சர், மதகுரு, தளபதி என்று பெயரிட்டு பின்னணியில் பாதுகாப்பாக அணிவகுத்து இருந்து நகர்த்தப்படும் காய்களைப் பாதுகாக்க முன்வரிசையில் நிற்கும் பெயரில்லாத சிப்பாய்கள் பலிகொடுக்கப் படுவது போல் யாரையோ வெற்றி பெற வைக்க இவர்கள் பயன்படுகிறார்கள்.

எங்கே போக வேண்டும் என்பது கூடத் தெரியப்படுத்தாமல் உயிரைப் பணயம் வைத்து எங்கோ அனுப்பப்பட்டு யாரோடோ போர் செய்ய கட்டளையிடப்படுகிற கூட்டம் இது.

நடக்கலாம் என்று படைத்தலைவன் லச்சு என்ற வெங்கடலட்சுமணன் உத்தரவிட அந்த இருநூறு பேரும் வேகமாக அடியெடுத்து வைத்து நடந்தார்கள்.

எங்கே போகவேண்டும் என்று கேட்க வேண்டாமா? ஏன் அந்தக் கேள்வி யாருக்கும் தோன்றவில்லை?

லச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறவனாக படையணி கூட வேகமாக குதிரையேறி நகர்ந்தான். இருநூறு பேரும் இரண்டு இரண்டு பேராக நடக்க சொன்னால் பத்து வினாடியில் நகர்ந்து போய் விடுவார்கள் என்பது மனதில் பட ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து நடக்கச் சொல்லிக் கட்டளை இட்டான் உடனே.

அரண்மனைக்கு நல்ல நாள் பெரிய நாளின்போது யாசகம் வாங்க கோட்டைக் காவலர்கள் யாசகர்களை ஒருவர் பின் ஒருவராக நடக்க வைப்பது நினைவு வர, பழையபடி இரண்டிரண்டு பேராக போகச் சொல்லி லச்சு கட்டளை பிறப்பித்தான்.

அந்த நிமிடத்தில் இருநூறு பேர்ப் படையணியில் அவன் மேல் எழுந்திருக்கும் கோபம் அளவிடமுடியாமல் போயிருக்கும் என்று லச்சுவுக்கும் தெரியும். என்றாலும் குதிரையேறி முன்னும் பின்னுமாக படையணியோடு நடக்க, கட்டளையிட கம்பீரமாகத் தோன்றுவது அவனுக்குப் பிடித்துத்தான் இருக்கிறது.

“ஜெருஸூப்பா செல்வோம்’ என்று மூன்று முறை உரக்கக் கட்டளையிட்டான் லச்சு.

நடந்தா?

நாற்பது கல் நடந்து எப்போது ஜெருஸோப்பா சென்றடைய முடியும்? விடிந்து விடுமே. அந்தக் களைப்போடு எப்படி போரிட முடியும்?

அணியின் வேகம் உடனடியாகக் குறைந்து போனது.

என்ன பயமா ஏன் இரையெடுத்த பாம்பு போல் மெல்ல மிக மெல்ல நடக்கிறீர்கள் அனைவரும்? எப்படி நாற்பது கல் நடப்பது என்ற மலைப்பா? கவலையை விடுங்கள். லெச்சு என்ற வெங்கட லட்சுமணன் என்ற கேலடி பேரரசர் வெங்கடப்ப நாயக்கரின் மூத்த மகன் நடத்திப்போகும் படை களைத்தும் பசித்தும் போர் செய்யப் போகுமா?

போகாது என்று சொல்வது போல் நம்பிக்கை ஏற்படுத்த கிழக்கில் இருந்து எழுந்த மண் படலம் நகர்ந்து அலைந்தது. வரிசையாக ஓடி வரும் சாரட் வண்டிகள் அவை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன