பெரு நாவல் ‘மிளகு’ – ஷராவதி தீரத்தில் ஒரு விழாக்காலக் காலைப் பொழுது

காசிரையின் புன்முறுவலும் அழகிய பெரிய விழிகளும் அதிகாலை வெளிச்சத்தில் அழகாகத் தெரிய சாரட் வண்டி தண்ணீர்த் துறைக்கு வந்து நின்றது. தேரோட்டி அருகமகாவீரன் குதித்து இறங்கினான்.

”காசக்கா, நீங்க சொன்னபடி வெளிச்செண்ணெய், அரப்புப் பொடி, வாசனைப்பொடி, மல்லிகைப் பூ, கருந்துளசி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் பிரம்பு கடகத்துலே தனித்தனியாகப் போட்டுக் கொண்டு வந்திட்டேன். சரியா இருக்கா பாருங்க” என்றான் அவன்.

”சரி நான் பார்த்துக்கறேன். நல்ல காரியம் செய்திருக்கே. உன்னை அருகதேவரும் மகாவீரரும் சேர்ந்து ஒரு மாசம் மதுசாலைக்கு போகாமல் பார்த்துக்கொள்ளட்டும். இப்போ கிளம்பு. ஆண்கள் இன்றைக்கு பகல் வரை வரமுடியாத பிரதேசம் இது”.

அருகமகாவீரன் கண்ணை அகல விரித்து காணாதன கண்டது போல் நாலு திசையும் திரும்பித் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்ததை உடனடியாகத் தடுத்து அவனை அனுப்பிவைத்தாள் காசிரை.

ஸ்னான கட்டத்திற்குள் காசிரை நுழைந்தபோது ஒரே சிரிப்பும் கலகலப்பான பேச்சுமாக ஒரு நூறு பெண்கள் அங்கே களித்திருந்தார்கள். நீண்டு வளைந்து குளம் போல் பாத்தி கட்டி, ஷராவதியை நடை மாற்றி, கிழக்கு திசையில் கொஞ்ச தூரம் வேகமின்றி மெல்ல அசைந்தாடிப் போகவைத்திருக்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் அரபிக் கடலின் முதல் அலைகள் நிலம் தொட்டுப் போக, குளியல் மண்டபம் விடிந்து கொண்டிருக்கும் பொழுதில் வெளிச்சம் பூசி நின்றது.

ஆணில்லாத பெண் ராஜ்யம் என்ற நிலைமை துணிச்சலை ஏற்படுத்த, நீராட்டு கட்டத்தின் படிகளில் மேல்துணி துறந்த பெண்டிர் ஒருத்திக்கு ஒருத்தி முதுகு தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தார்கள். விளையாட்டாக முதுகில் இருந்து முன்னால் படர்ந்த கைகள் விளையாட, சிரிப்பும் கூச்சலும் ஒவ்வொரு வினாடியும் மிகுந்து, அடங்கி, மீண்டும் அதிகரித்துக்கொண்டிருந்தன.

“அக்கா, முதுகு தேய்ச்சு விடவா?” என்று காசிரையிடம் உரிமையோடு ஏழெட்டு சிறுமியர் அவள் அமர்ந்த கல்படிக்கு அடுத்த மேற்படியில் இருந்து, முதுகில் தொட்டு மெல்ல அடித்துச் சிரித்தார்கள்.

இன்னும் கீழிருந்த படியில் அமர்ந்திருந்த தமிழ்ப் பெண்கள் நான்கு பேர் ரம்மியமாகப் பாட ஆரம்பித்திருந்தார்கள். அந்தப் பாட்டின் தாளமும் இசையும் மனம் கவர தண்ணீர்த்துறையே கூடச் சேர்ந்து பாடியது. எண்ணெய் பூசிய தொடைகள் மின்னி தாளம் கொண்டு சிலிர்த்தன –

கும்மியடி பொன்னூர் பூமி முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மி அடி.
நம்மை சூழ்ந்திடும் நன்மைகள் எல்லாம்
உண்மை இதுவென்று கும்மியடி.

காசிரை எண்ணெய்க் காப்பு கொள்ள நிறைய நேரம் பிடித்தது. சிறுமிகளின் தலையில் எண்ணெய் வைத்து வாழ்த்த நிறையப்பேர் காசிரையைக் கோரினார்கள்.

சொல்வனம் இதழில் மிளகு முழு அத்தியாயங்களாக வெளியாகிறது

சொல்வனம் – மிளகு தொடர் ஐந்தாவது அத்தியாயம் திருமதி சரஸ்வதி தியாகராஜனின் இனிய, காட்சியைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் குரலில்

ஒலி வடிவில் பெருநாவல் மிளகு – இங்கே சொடுக்கவும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன