New Novel ‘1975’ -“சார் ஜாதி இல்லேன்னாலும் அடையாளத்துக்காகச் சொல்றேன். நான் போத்தி. அவர் நாயர். எப்படி எனக்கு அவர் மாமா ஆக முடியும்?”

Excerpt from the novel 1975

மதியம் சாப்பிடப் போகும்போது மேனேஜர் சொன்னார், “நாட்டுச் செக்கு, தறிமேடை, தேனி வளர்ப்பு, எது வேணும் உங்களுக்குன்னு ரீஜனல் ஆபீசிலே கேட்கறாங்க. நாம ஜில்லாவுக்கு லீட் பேங்க். மத்த பேங்க்களையும் முடுக்கி விட்டு லோன் கொடுக்க வைக்கற கடமை நமக்குண்டு. முதல் ஈட்டுலே எதை எடுத்துக்கலாம்னு நினைச்சுப் பார்த்தேன். ஒண்ணும் புரிபடலே”.

“தேனி வளர்ப்பு என்னன்னு பார்க்கலாமே முதல்லே”, நான் மேலே பேசுவதற்குள் அக்கவுண்டெண்ட் சொன்னார், “கேளு நாயர் அப்ளிகேஷன் நேத்துதான் வந்தது. உங்க மாமா இல்லே அவர்?” அவசரமாக மறுத்தேன். “சார் ஜாதி இல்லேன்னாலும் அடையாளத்துக்காகச் சொல்றேன். நான் போத்தி. பாதி பார்ப்பான். அவர் நாயர். எப்படி எனக்கு அவர் மாமா ஆக முடியும்?”

“அட, ஒரு பேச்சுக்கு சொன்னேன். ஐயர் வீட்டுப் பேச்சுலே எல்லாரும் மாமாதான், மாமிதான். அவங்க எல்லாம் சண்டை போட்டா உலகம் எப்படி நடக்கும், சொல்லுங்க” என்றார் அவர் சமாதானமாக.

“சரி, நீங்களும்,கேஷியர் கருப்பையாவும் சாயந்திரம் போய் அவர் என்னத்தை வளர்க்கறார், என்ன வருமானம் கெடைக்கும், எப்போ கிடைக்கும்னு எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வாங்க. அப்ளிகேஷனை அப்புறமா பார்க்கலாம். அக்ரி ஆபீசர் அடுத்த வாரம் வருவார். அவர் கிட்டேயும் கேட்டுக்கலாம். லீட் பேங்க் மீட்டிங் இருக்கு. நான் கிளம்பறேன்”.

சாயந்திரம் ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டு வந்து கேஷியரைப் பில்லியனில் உட்கார வைத்து ஓட்டத் தொடங்கும் முன் அவர் ரகசியம் சொன்னார்: “கீழே அடிபட்டு ஒரு மாசம் படுத்திருந்தேன். கொஞ்சம் மெல்லவே போங்க. கைகால்னா பாத்துக்கலாம். வெதர் சமாசாரமாச்சே”.

அவருடைய ஹைட்ரோசில் பயங்கள் இல்லாமல் செய்ய வண்டியை ஊர்கிற வேகத்தில் நகர்த்திப் போக, நாலாம் கியரில் ஓட்டிப் பழக்கப்பட்ட லாம்ப்ரட்டா ஸ்கூட்டர் விட்டுடுடா என்னை என்று கேவி அழுது, அமுதா டூரிங் டாக்கீஸ் பக்கத்தில் நின்றே விட்டது. “பனி இல்லாத மார்கழியா?” என்று டி எம் சௌந்தர்ராஜன் இலக்கில்லாமல் விசாரிக்கும் பாட்டு முடிந்து நியூஸ் ரீல் போடுகிற சத்தம். சாத்தப்பன் ஊருணிக் கரையில் இருட்டும் காற்றும் கலந்து வந்து கொண்டிருந்தது. இன்னும் இருநூறு மீட்டர் போனால் கேளு நாயர் வீடு.

“வண்டியை உருட்டிட்டுப்போயிடலாமா?:” கேஷியரைக் கேட்டேன். “வேணாம், விட்டுக்கிட்டே போயிடலாமே?” உங்களுக்கு எங்கேயாவது படாத இடத்திலே பட்டு வீங்கிடுச்சுன்னா? ஏற்கனவே அடிபட்டு படுத்திருந்திருக்கீங்க”

“அது இருபத்தைஞ்சு வருஷம் முந்தி, நான் ஏழாம் கிளாஸ் படிச்சபோது”.

முன்னாலேயே சொல்லியிருக்கலாம் இல்லையோ. வண்டியை பேய் உதை உதைக்க அது கூச்சலிட்டுக் கொண்டு புறப்பட்டது.

தென்னோலை வேய்ந்து நிரந்தரமாகப் பந்தல் போட்ட வாசலில் ஸ்கூட்டரை நிறுத்த, நான்கு நாய்கள் பாதையைக் கடந்து ஓடின. வாசல் கதவு மட்ட மல்லாக்கத் திறந்திருக்க உள்ளே கொல்லைப் புறம் வரை தெரிந்தது. ஒருத்தர் கூடத் தட்டுப்படவில்லை வீட்டில் எங்கேயும். “இந்த வீடுதானா?” கேஷியர் மீண்டும் கேட்டார். “ரொம்ப நாள் முந்தி வந்திருக்கேன்” என்றேன். “தேனீக்கு ராத்திரி கண்ணு தெரியுமோ?” அடுத்த கேள்வியை எடுத்து விட்டார் அவர். எனக்குப் பதில் தெரிந்திருந்தால் நான் அப்படியே ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டு திரும்பியிருப்பேன். ரைட் ராயலாக நுழைந்திருப்பேனா.

உள்ளே பூவாடையும், முட்டை அடித்து ஊற்றித் தோசை சுடும்போது ஓரம் கருகின வாசனையும், கூடை போட்டுக் கவிழ்த்து ஓரமாக வாசலில் வைத்த கோழிகளில் இருந்து கிளம்பிய திவ்விய சுகநத வாடையும் சேர்ந்து எழுந்தது. “அம்மாவா”, நான் தான் கூப்பிட்டேன். “அவங்க அம்மா எதுக்கு வரணும்? நாயரைக் கூப்பிடுங்க” என்று மொழிக் குழப்பத்தை விதைத்தார் கேஷியர். “அம்மாவன் அப்படீன்னா மாமன்”, அவருக்குச் சொல்ல, “அவர் மகளை என்ன கூப்பிடுவீங்க?” என்றார் எதேச்சையாக. அவளை எதுக்குக் கூப்பிட?

ஆனாலும் குட்டிப் பிசாசு மாதிரி அவள் தான் உள்ளறையில் இருந்து வெளியே வந்தாள். தலைமுடியை விரித்து விட்டிருந்தாள். கிட்டத்தட்டத் தரை வரை அது தட்டிக் கொண்டே வர, கண்ணை வேறே அகட்டி ஒரு ஐடெக்ஸ் டப்பி கண்மையைப் பூசிக் கருப்பாக்கி வந்து அவள் விழித்தாள். அடி வயிற்றில் பயம் தான் எட்டிப் பார்த்தது. அவள் வேண்டுமானால் காதல் பார்வை என்று நினைத்திருக்கலாம். கேஷியரோடு இருக்கையில் எதுக்கு காதல் பார்வை?

”இப்பத்தான் வழி தெரிஞ்சுதா?” அவள் என்னைச் சம்பிரதாயத்துக்குக் கேட்க, “அப்ளிகேஷன்லே வீட்டு விலாசம் இருந்துச்சு, எடுத்து வர மறந்து தியேட்டர் பக்கம் போயிட்டோம்” என்று படு சீரியஸாக கேஷியர் பதில் சொன்னார்.விதி.

அச்சன் முத்துப்பட்டி போனவர் இன்னும் வரவில்லை. வரும் நேரம் தான். காப்பி எடுக்கட்டா?

எடு என்றேன். அதை எடுப்பானேன், போட்டாப் போறாதோ என்று கேஷியர் அவள் உள்ளே போனதும் கேட்க, சுருக்கமாக மொழி என்றேன். இவரை இந்த நாய், பூனை, பாருகுட்டி, வாத்து, வான்கோழி உலகில் விட்டுவிட்டுத் தப்பிப் போய்விடலாம் என்று தோன்றியது.

இவ்வளவு தலைமுடியோடு இவளைக் கல்யாணம் செய்து கொண்டு எப்படி ராத்திரியில். மனதைத் தறிகெடாமல் க்வாலிட்டி சேஞ்ச், க்வாண்டிட்டி சேஞ்ச் பற்றி எங்கேல்ஸ் சொன்னதை நினைவு கூர்ந்தேன். கெப்ளர் தியரம் அடுத்து நினைவில் வர, திம்சுக்கட்டை போல் கிண்ணென்று கையில் ட்ரேயில் பிடித்த காப்பி டம்ளர்களோடு வந்தாள் பாருக்குட்டி

நாங்கள் வாசல் முன்னறை நாற்காலிகளில் உட்கார்ந்ததுமே ஏதோ கடிக்க உணர்ந்து துள்ளினோம். கேளு நாயர் மற்ற உயிரினஙக்ளோடு, மூட்டைப் பூச்சிச்யும் சிறு அளவில் வளர்த்து வருவதாகத் தெரிந்தது. “அது போன மாசம் நிறைய இருந்து மருந்து அடிச்சுக் கொலை செஞ்சாச்சு. இன்னும் கொஞ்சம் இருக்கு. அதுவும் இன்னிக்கு ராத்திர் போய் ஒழிஞ்சுடும்” தலை கலைத்து வாராமல் விட்ட யட்சிக் களையோடு அவள் சொல்ல, “இன்னிக்கா பௌர்ணமி?” என்று திடீரென்று சந்தேகம் கேட்டார் கேஷியர் கருப்பையா.

நான் அமாவாசை, பவுர்ணமி எல்லாம் இருபத்தைஞ்சு அம்சத் திட்டத்துக்குக் கிடையாது என்று சொல்ல, பாருக்குட்டி எனக்காக நாக்கைத் துருத்திக் காட்டினாள். இன்னும் ஒரு மணி நேரம் அவளுடைய சார்ம் அபென்ஸிவ் ஆன அழகுத் தாக்குதலுக்கு ஆட்பட்டால் என்னை அவள் தலைமுடிக்குள் பிடித்துப் போட்டு இருட்டுச் சிறை பிடிக்க வசதியாக நிற்பேன் என்று தோன்றியது.

”எதுக்கு லோன் வேணும்னு அப்ளை பண்ணியிருக்கீங்க?” என்று கேஷியர் கேட்க, பாருக்குட்டி தொண்டையைக் கனைத்துக் கொண்டு ரேடியோ நாள் முழுக்கப் பாடும் பாடலைப் பாடத் தொடங்கினாள் –

இருபதம்சத் திட்டம் அது
இந்தியாவின் சட்டம்,
நம் இந்தியர்க்கு மட்டும்,
இனி இன்ப வாழ்வு கிட்டும்

இவ்வளவு அபத்தமாக ஒர் அரசு விளம்பரம் எப்போதுமே வெளியானதில்லை. பாருக்குட்டி பாட்டை பாதியில் நிறுத்தி, “லோன் பணத்தை என்ன செய்வீங்கன்னு கேட்டேன்” என்றார். “செலவு செய்வேன்” என்று கச்சிதமாகப் பதில் சொன்னாள் பாருக்குட்டி.

“அது இல்லீங்க, தேனீ வளர்ப்பு எப்படி உங்க வாழ்க்கையை முன்னேற்றும்?”

“இப்படி எல்லாம் துருவித் துருவிக் கேட்டுக் கடன் தரக் கூடாதுன்னு எமர்ஜென்சி அறிவிப்பு இருக்கு. கொஞ்சம் அடக்கி வாசியுங்க” என்று கேஷியர் காதில் சொல்லி அவரை ஃபீஸ் பிடுங்கி விட்டேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன